பொய்மான் கரடு





அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4
அன்று சாயங்காலம் செங்கோடக் கவுண்டன் சின்னம நாயக்கன்பட்டிக்குப் போனான். கொல்லனிடம் செப்பனிடக் கொடுத்திருந்த மண்வெட்டியை வாங்கிக்கொண்டு, ஹரிக்கன் லாந்தரில் மண்ணெண்ணெய் வாங்கிப் போட்டுக் கொண்டு, இன்னும் சில சில்லறைச் சாமான்களும் வாங்கி வருவதற்காகப் போனான். ஹரிக்கன் லாந்தரைச் சில்லறைச் சாமான் கடையில் வைத்துவிட்டுக் கொல்லன் உலைக்குப் போய்ச் செப்பனிட்ட மண்வெட்டியை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான்.

அன்றைக்கெல்லாம் அவன் மனமாகிய வண்டு செம்பவளவல்லியின் முக மண்டலத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு சமயம் கண்ணீர் ததும்பிச் சோகமயமாயிருந்த அந்தப் பெண்ணின் முகமும், மற்றொரு சமயம் மலர்ந்த புன்னகையுடன் குதூகலம் ததும்பிக் கொண்டிருந்த அவள் முகமும் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன. ஊரார் பேச்சைப் பொருட்படுத்தாதவன் போல் அவளிடம் செங்கோடன் வீம்பாகப் பேசியிருந்தபோதிலும் அவன் மனநிலையில் சிறிது மாறுதல் ஏற்பட்டுத்தான் இருந்தது. செம்பவளத்துக்கும் தனக்கும் திருமணத்தைக் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான்.
இதே ஞாபகமாகச் சின்னம நாயக்கன்பட்டி வந்தவனுடைய கவனத்தை அந்த ஊர்ச் சாவடிச் சுவர்களிலும் சாலை மரங்களிலும் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்கள் ஓரளவு கவர்ந்தன. அந்த வர்ண விளம்பரங்களில் ஒரு பெண் பிள்ளையின் முகம் முக்கியமாகக் காட்சி அளித்தது. அந்த முகம் அழகாயும் வசீகரமாயும் இருந்தது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். அப்படி வசீகரமாவதற்காக அந்த சினிமாக் கன்னிகை முகத்தில் எத்தனை பூச்சுப் பூசிக் கொண்டிருக்கிறாள், கண்ணிமைகளையும் புருவங்களையும் என்ன பாடுபடுத்திக்கொண்டிருக்கிறாள், உதடுகளில் எவ்வளவு வர்ணக் குழம்பைத் தடவிக் கொண்டிருக்கிறாள் என்பதெல்லாம் செங்கோடனுக்கு எப்படித் தெரியும்? ‘செம்பவளம் பார்த்ததாகச் சொன்னாளே, அந்த சினிமாவில் வரும் மோகனாங்கி என்னும் பெண் இவள்தானோ? ‘மோகனாங்கி’ என்ற பெயர் இவளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; நான் கூட இந்த சினிமாவை ஒரு தடவை பார்த்துவிட வேண்டியதுதான், இரண்டே காலணாக் காசு போனால் போகட்டும்! இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தக் கூடார சினிமா இந்த ஊரில் நடக்குமோ, என்னவோ விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது…’
இப்படி நினைத்துக் கொண்டே சில்லறைக் கடையை நோக்கிச் சாலையோடு போய்க் கொண்டிருந்த செங்கோடன் ‘பொய்மான் கரடு’க்குச் சமீபமாக வந்தான். அங்கே இருந்த அரசமரத்தின் அடியில் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சி அவனை அப்படியே திகைத்து ஸ்தம்பித்து நிற்கும்படி செய்து விட்டது. அரசமரத்தின் கீழ்க் கிளையொன்றில் ஒயிலாகச் சாய்ந்துகொண்டு ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். சுவர்களில் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்களில் கண்ட கன்னிதான் அவள் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. உண்மையில் அப்படியல்ல. ஆனால் அந்த சினிமாக் கன்னியைப் போலவே இந்தப் பெண்ணும் குறுக்கு வகிடு எடுத்துத் தலைவாரிப் பின்னிச் சடையைத் தொங்கவிட்டுக்கொண்டும், மேல் தோள்வரையில் ஏறிச் சென்றிருந்த ரவிக்கை தரித்துக் கொண்டும், காதில் குண்டலங்கள் அணிந்து கொண்டும், நட்சத்திரப் பூப்போட்ட மெல்லிய சல்லாச் சேலை அணிந்து கொண்டும், நெற்றியில் சுருட்டை மயிர் ஊசலாட, எங்கேயோ யாரையோ பார்த்து, எதையோ நினைத்துக் கொண்டிருந்தவள்போல் நின்றபடியால், அவளே சினிமா விளம்பரத்தில் உள்ள பெண் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. பார்த்தது பார்த்தபடி பிரமித்துப் போய்ச் சிறிது நேரம் நின்றான்.
அந்தப் பெண் தன்னைப் பார்த்து ஒரு பட்டிக்காட்டான் விழித்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தாள்.
“என்னப்பா, பார்க்கிறாய்?” என்று அவள் கேட்டாள்.
செங்கோடனுடைய காதில் கிணுகிணுவென்று மணி ஒலித்தது. பூங்குயில்களின் கீதம் கேட்டது.
எங்கிருந்தோ ஒரு முரட்டுத் தைரியம் அவனுக்கு ஏற்பட்டது.
“வேறு என்னத்தைப் பார்க்கிறது? உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
அந்தப் பெண்ணுக்குப் பொங்கிவந்த கோபம் ஒரு கணத்தில் எப்படியோ மாறியது. அவள் முகம் மலர்ந்தது. பல் வரிசை தெரிந்தது.
அதைப் பார்த்த செங்கோடனும் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு புன்னகை புரிந்தான்.
“என்னப்பா, சிரிக்கிறாய்?” என்று அவள் கேட்டாள்.
“பின்னே, அழச் சொல்கிறாயா?” என்றான் செங்கோடன்.
“பாவம், அழ வேண்டாம்! உன் பெண்சாதி தேடிக் கொண்டு வந்துவிடப் போகிறாள்!”
“எனக்குக் கலியாணம் இனிமேல்தான் ஆகவேண்டும். எத்தனையோ பேர் பெண் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தான் இதுவரையில் சம்மதிக்கவில்லை!” என்று செங்கோடன் சொல்லிவிட்டு அர்த்தபுஷ்டி நிறைந்த பார்வையை அந்தப் பெண் மீது செலுத்தினான்.
ஆனால் அந்த அர்த்தம் அப்பெண்ணின் மனத்தில் பட்டதாக அவள் காட்டிக்கொள்ளவில்லை.
“ரொம்ப சரி; நீ சம்மதம் கொடுத்துக் கலியாணம் நிச்சயமாகிறபோது எனக்குக் கட்டாயம் கலியாண கடுதாசி போடு” என்றாள்.
“கடுதாசி கட்டாயம் போடுகிறேன். ஆனால் பெயரும், விலாசமும் தெரிந்தால் தானே கடுதாசி போடலாம் உன் பெயர் என்ன?” என்று செங்கோடன் கேட்டான்.
“பெரிய வம்புக்காரனாயிருக்கிறாயே? என் பெயர் குமாரி பங்கஜா. உன் பெயர் என்ன?”
‘குமாரி பங்கஜா’ என்று அவள் சொன்னது ‘ராஜகுமாரி பங்கஜா’ என்று செங்கோடன் காதில் விழுந்தது. ‘அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்; நினைத்தது சரியாய்ப் போயிற்று’ என்று மனத்தில் எண்ணிக் கொண்டான்.
“உன் பெயர் என்ன? சொல்லமாட்டாயா?” என்று மறுபடியும் குமாரி பங்கஜா கேட்டாள்.
“சொல்லுவதற்கு என்ன தடை? என் பெயர் ராஜா செங்கோடக் கவுண்டன்” என்றான்.
குமாரி பங்கஜா குலுங்கச் சிரித்தாள். “வெறும் ராஜாவா? மகாராஜாவா?” என்று கேட்டாள்.
“என்னுடைய பத்து ஏக்கரா காட்டிற்கு நான் தான் ராஜா, மகாராஜா, ஏக சக்ராதிபதி எல்லாம்!” என்றான் செங்கோடன் பெருமிதத்துடன்.
“சரி, போய், உன்னுடைய ராஜ்யத்தைச் சரியாகப் பரிபாலனம் பண்ணு! இங்கே நடு ரோட்டில் நின்றால் என்ன பிரயோஜனம்?” என்றாள் குமாரி பங்கஜா.
“ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் போய் விடுகிறேன்” என்றான் செங்கோடன்.
“அது என்ன கேள்வி?”
“சுவரிலே, மரத்திலேயெல்லாம் சினிமாப் படம் ஒட்டியிருக்கிறதே, அதிலே ஒரு அம்மா இருக்காங்களே, அது நீதானே?” என்று கேட்டான்.
“சேச்சே! அந்த மூவன்னா தேவி நான் இல்லவே இல்லை! நான் சினிமாவிலே நடித்தால் அவளைக் காட்டிலும் நூறு பங்கு நன்றாக நடிப்பேன்” என்றாள் பங்கஜா.
“சேச்சே! போயும் போயும் அந்தக் கேவலமான தொழிலுக்கு நீ போவானேன்?” என்றான் செங்கோடன்.
“எதைக் கேவலமான தொழில் என்று சொல்லுகிறாய்?”
“சினிமாவில் நடிக்கிறதைத்தான் சொல்கிறேன். சினிமாவில் நடித்தால் மானம், மரியாதையை விட்டு….”
“இதற்குத்தான் பட்டிக்காடு என்று சொல்கிறது” என்றாள் பங்கஜா.
இத்தனை நேரமும் அவளுடன் சரிக்குச் சரியாகச் சாமர்த்தியமாகப் பேசிக்கொண்டு வந்த செங்கோடன் இப்போதுதான் பிசகு செய்துவிட்டதாக உணர்ந்தான். சினிமா விஷயமாகச் செம்பா கூடத் தன்னை இடித்துக் காட்டியது நினைவுக்கு வந்தது. ஆகையால், முதல் தர அரசியல்வாதியைப் போல் தன் கொள்கையை ஒரு நொடியில் மாற்றிக் கொண்டான்.
“எனக்குக்கூட சினிமா என்றால் ஆசைதான். இன்று இராத்திரி இந்த ஊர்க் கூடார சினிமாவுக்குப் போகப் போகிறேன்” என்றான்.
“அப்படியா? இந்த முக்கியமான செய்தியைப் பேப்பருக்கு அனுப்பிப் போடச் சொல்ல வேண்டியதுதான்” என்றாள் குமாரி பங்கஜா.
“பேப்பரிலே போட வேண்டியதில்லை; உனக்குத் தெரிந்தாலே போதும்!” என்றான் செங்கோடன்.
“எனக்கு ஏன் தெரிய வேணும்?”
“என்னை அங்கே பார்க்கலாம் என்பதற்காகச் சொன்னேன். நீயும் இன்றைக்கு இராத்திரி சினிமாவுக்கு வருவாயல்லவா?”
“நான் வராமல் சினிமா நடக்குமா? கட்டாயம் வருவேன்.”
“அப்படியானால் அங்கே உன்னை அவசியம் பார்க்கிறேன்.”
“டிக்கெட்டுக்குப் பணம்?”
“அதைப்பற்றிக் கவலைப்படாதே, டிக்கெட்டு நான் வாங்கி விடுகிறேன். இரண்டே காலணாவுக்குப் பஞ்சம் வந்து விடவில்லை.”
குமாரி பங்கஜா வந்த சிரிப்பை அடக்கி கொள்ள முடியாதவளாய் வேறு பக்கம் பார்த்து வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.
இதற்குள் அங்கே ஊர்ப் பிள்ளைகள் ஏழெட்டுப் பேர் கூடிவிட்டார்கள்.
அதைப் பார்த்த பங்கஜா இனி அங்கே நின்று அந்தப் பட்டிக்காட்டானோடு விளையாட்டுப் பேச்சுப் பேசக் கூடாதென்று மேடையிலிருந்து கீழிறங்கி நடக்கத் தொடங்கினாள்.
அவளோடு நாமும் போவோமா என்று செங்கோடன் ஒரு நிமிஷம் யோசித்தான். வீட்டுக்குத் திரும்பிப்போய் சினிமாவுக்குப் பணம் கொண்டு வரவேண்டிய அவசியத்தை உத்தேசித்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.
குமாரி பங்கஜா ஐம்பது அடி தூரம் போனபிறகு “சினிமாக் கூடாரத்திலே அவசியம் சந்திக்கிறேன்” என்று ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கூவினான்.
பங்கஜா திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள்.
அந்தப் புன்னகையில் செங்கோடனுடைய உள்ளம் சொக்கித் தன்னை மறந்து லயித்தது.
அந்த நிலையில் அவன் சில்லறைக் கடைக்குச் சென்றான்.
“என்னப்பா, செங்கோடா, அந்த அம்மாவுடன் நெடு நேரம் பேசிக்கொண்டு நின்றாயே? என்ன பேசினாய்?” என்றான் கடை முதலாளி.
“என்னத்தைப் பேசுகிறது? வெறுமனே க்ஷேம சமாசாரந்தான் பேசிக்கொண்டிருந்தோம்.”
“அந்த அம்மாளை முன்னாலேயே உனக்குத் தெரியுமா என்ன?”
“நல்ல கேள்வி! ரொம்ப நாளாய்ப் பழக்கமாயிற்றே!”
கடைக்குச் சாமான் வாங்க வந்த இன்னொரு மனிதரிடம் கடை முதலாளி, “கேட்டீர்களா, முதலியார், நம்ம ஊர்ப் பஞ்சாயத்து மானேஜர் புதிதாக வந்திருக்கிறார் அல்ல? அவருடைய தங்கை – ஒரு படித்த அம்மாள் – வந்திருக்கிறாள் அல்ல? அந்த அம்மாளுக்கும் நம்ம செங்கோடனுக்கும் வெகு நாளாய்ச் சிநேகிதமாம்!” என்று சொன்னார்.
“ஆமாம்; வெகுநாளாகச் சிநேகிதம்” என்று செங்கோடன் சொல்லிவிட்டு ஹரிக்கன் லாந்தரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான். மேலே அவர்கள் இன்னும் ஏதாவது அந்த அம்மாளைப் பற்றிக் கேட்டால் தன்னுடைய குட்டு உடைந்துவிடும் என்று கொஞ்சம் அவனுக்குப் பயம் இருந்தது.
அத்தியாயம் – 5
அன்றைக்குச் செங்கோடன் தரையில் நடக்கவில்லை. வானத்தில் பறந்து கொண்டிருந்தான்; கடலில் அலைகளுக்கு மத்தியில் மிதந்து கொண்டிருந்தான்; மேகக் குதிரைகளில் சவாரி செய்தான்; மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை தாவினான். தேர் திருவிழாக்களுக்குப் போவதற்காக அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு, சட்டைப் பையில் எட்டணாக் காசையும் எடுத்துப் போட்டுக் கொண்டு தலையில் ஜோராக முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயே சினிமாவுக்குக் கிளம்பிச் சென்றான்.
பொய்மான் கரடு ஓரமாகப் போன சாலைக்கு அரை மைல் கிழக்கே செங்கோடனுடைய கேணியும் காடும் குடிசையும் இருந்தன. அந்தச் சாலைக்கு அரை மைல் மேற்கே சின்னம நாயக்கன்பட்டிக்கு வந்திருந்த ‘டூரிங் சினிமா’வின் டேரா இருந்தது. செங்கோடன் அங்கே போய்ச் சேர்ந்தான். கொஞ்ச நேரம் கூடாரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். குமாரி பங்கஜா வந்திருக்கிறாளா என்று பார்ப்பதற்காகத்தான். ஆனால் அவளுடைய தரிசனம் கிட்டவில்லை. சினிமாப் பார்ப்பதற்காக வந்திருந்த சில ஸ்திரிகள் அங்குமிங்கும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அருகில் சென்று செங்கோடன் உற்றுப் பார்த்தான். அவர்கள் இவனை சற்று ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார்கள். ஒருவருக்கொருவர் செங்கோடனைப் பற்றிப் பரிகாசமாகப் பேசிக் கொண்டார்கள். அவர்களில் ஒருத்தி அவனைப் பார்த்து, “என்ன மச்சான்! புகையிலை இருக்குதா?” என்று கேட்டாள். “தூ! பட்டிக்காட்டு ஜன்மங்கள்!” என்று செங்கோடன் முணுமுணுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
சினிமாப் பார்க்க வந்தவர்கள் எல்லாரும் டிக்கட் வாங்கத் தொடங்கினார்கள். செங்கோடன் மட்டும் காத்துக் கொண்டிருந்தான். முதல் மணி அடித்தாகி விட்டது. அப்படியும் அந்தக் குமாரி பங்கஜாவைக் காணவில்லை. ஒருவேளை அவள் வந்ததைத் தான் கவனிக்கவில்லையோ என்னவோ, டிக்கட் வாங்கிக்கொண்டு கூடாரத்துக்குள் போய்விட்டாளோ என்னவோ என்ற சந்தேகம் செங்கோடன் மனத்தில் உதித்தது. உடனே அவசரமாகச் சென்று இரண்டேகாலணா கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டான். அப்போது கூட ஒருவேளை வெளியில் வந்து கொண்டிருக்கிறாளோ என்று பார்த்துக் கொண்டே விரைவாக நடந்து கூடாரத்துக்குள் சென்றான். இரண்டு மூன்று இடத்தில் அவன் நுழையப் பார்த்த இடங்களில் அவனுடைய டிக்கட்டைப் பார்த்துவிட்டு, “முன்னுக்குபோ!” “முன்னுக்குப்போ!” என்றார்கள். செங்கோடனும் எட்டி எட்டிப் பார்த்துவிட்டு, முன்னுக்குப் போனான். இரண்டே காலணா டிக்கட் வாங்கிய ஜனங்கள் அதற்குள் கொட்டகையில் நிறைந்துவிட்டார்கள் செங்கோடன் எல்லாருக்கும் முன்னாடி சென்று திரைக்குச் சமீபத்தில் உட்கார்ந்து கொண்டான். இவ்வளவு நேரம் கழித்து வந்தும் படத்துக்கு இவ்வளவு அருகாமையில் தனக்கு இடம் கிடைத்தது பற்றி மனத்திற்குள் சந்தோஷப்பட்டான்.
‘அதிர்ஷ்டம் வரும்போது அப்படித்தான் வரும்’ என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அதிர்ஷ்டம் பூரணமாகவில்லை என்பது நினைவு வந்தது. உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பி எழும்பி நாலாபுறமும் பார்வையைச் செலுத்தினான். குமாரி பங்கஜாவை எங்கும் காணவில்லை.
திரையில் படம் ஆரம்பமாயிற்று. செங்கோடன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பார்க்கையில் திரையில் வந்த ஒவ்வோர் உருவமும் செங்குத்தாக வளர்ந்து பூதாகார வடிவமாகத் தோன்றியது. பேசுவதற்கோ, பாடுவதற்கோ வாயைத் திறந்தபோது பூதம் வாயைப் பிளப்பதுபோலவே இருந்தது. ஆயினும் இதுதான் சினிமாவில் தமாஷ் என்று செங்கோடன் நினைத்துக் கொண்டான். மற்றவர்களைக் காட்டிலும் நாலு மடங்கு சிரித்தான். எட்டு மடங்கு கையைக் கொட்டினான். சினிமாவில் வந்த உருவங்கள் சொல்லும் வார்த்தையை இவனும் திருப்பிச் சொல்லத் தொடங்கினான். பக்கத்திலிருந்தவர்கள் அவனை அடக்கப் பார்த்தார்கள். “இந்தக் குடிகாரனை வெளியில் பிடித்துத் தள்ளு” என்றது ஒரு குரல். “அது யார் குடிகாரப்பயல் இங்கே வந்தது? நான் பிடித்துத் தள்ளுகிறேன்” என்று சொல்லிவிட்டுச் செங்கோடன் சுற்று முற்றும் பார்த்தான்.
கூடார சினிமாக்களில் சுமார் ஆயிரத்துச் சொச்சம் அடி படம் காட்டியதும் படத்தை நிறுத்திவிட்டு விளக்குப் போடுவார்கள். முதல் தடவை விளக்குப் போட்டதும் செங்கோடன் ‘படம் முடிந்துவிட்டது’ என்று எண்ணிக் கொண்டு எழுந்தான், பக்கத்திலிருந்தவர்கள் “உட்காரு உட்காரு!” என்று இரைந்தார்கள்.
“இன்னும் கொஞ்சம் படம் பாக்கி இருக்கிறதா?” என்று செங்கோடன் கேட்டான்.
“அட பட்டிக்காடு! ஆயிரம் அடிதான் ஆகியிருக்கிறது இன்னும் பதினேழாயிரம் அடி பாக்கியிருக்கிறது” என்றார் ஒரு சினிமா ரசிகர்.
“என்ன ஐயா, விளையாடுகிறாய்? பதினேழாயிரம் அடியை எவனாலே தாங்கமுடியும்? கடோத்கசனாலே கூட முடியாதே” என்றான் செங்கோடன்.
இப்படிச் சொல்லிக்கொண்டே அவன் பின்னால் பார்த்தபோது, சினிமாக் கூடாரத்தின் அந்தப் பக்கத்து ஓரத்தில், குமாரி பங்கஜா உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவளுக்குப் பக்கத்தில் இரண்டு ஆண் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் அவர்களை அவன் பொருட்படுத்திக் கவனிக்கவில்லை.
“ஐயோ! பாவம்! அவ்வளவு தூரத்திலே போய் உட்கார்ந்திருக்கிறாளே! படம் ஒன்றுமே தெரியாதே! தாமதித்து வந்ததனால் அங்கேதான் இடம் கிடைத்ததுபோல் இருக்கிறது” என்று எண்ணி அநுதாபப்பட்டான். அவனுக்குப் பக்கத்திலேயிருந்த ஓர் ஆள் அவனுடைய ஆர்ப்பாட்டம் பொறுக்காமல் எழுந்து போய்விட்டான். அந்த இடம் காலியாக இருந்தது. செங்கோடன் சட்டென்று தன் தலையிலிருந்த முண்டாசை எடுத்து விரித்து அந்த இடத்தில் போட்டான். குமாரி பங்கஜா இருந்த இடத்தைப் பார்த்துக் கையினால் சமிக்ஞை செய்து கொண்டே, “வா! இங்கே இடம் இருக்கிறது, வந்து விடு!” என்றான். குமாரி பங்கஜா அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை; அவள் காதில் இவன் அழைப்பு விழுந்ததாகவும் தோன்றவில்லை. ஆனால் இவனுக்குப் பக்கத்திலிருந்தவர்கள் அத்தனை பேரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். “அந்தப் பட்டிக்காட்டான் தலையில் அடித்து உட்காரவை” என்றது ஒரு குரல்.
மறுபடியும் விளக்கு அணைந்தது; கூடாரம் இருண்டது; திரையில் படம் ஓடத் தொடங்கியது. செங்கோடனுக்கு இந்தத் தடவை படம் பார்ப்பதில் உற்சாகம் மிகக் குறைந்துவிட்டது. உண்மையில், படத்தின் பேரில் அவன் மனம் செல்லவே இல்லை. குமாரி பங்கஜா வெகுதூரத்தில் படம் தெரியாத இடத்தில் உட்கார்ந்திருக்கிறாளே என்ற கவலை அவனைப் பிடுங்கித் தின்றது.
அடுத்த தடவை விளக்கு எரியத் தொடங்கியதும், செங்கோடன் தன் தலைக்குட்டையை நன்றாகத் தரையில் இரண்டு பேருக்கு இடம் காணும்படி விரித்துவிட்டு எழுந்து போனான். கூடாரத்தின் பின்னால் சென்று குமாரி பங்கஜா உட்கார்ந்திருந்த இடத்திற்குள் நுழையப் பார்த்தான். அங்கே காவலுக்கு நின்றவன் அவனைத் தடுத்தான்.
“எங்கே போகிறாய்?” என்றான்.
“அந்த அம்மாவிடம் பேசவேண்டும்” என்றான் செங்கோடன்.
“இங்கே பேச முடியாது. சினிமா கொட்டகையிலே பேச்சு என்ன வந்தது? வெளியில் வந்த பிறகு இஷ்டம் போலப் பேசிக்கொள்!”
“என்ன ஐயா! இப்படி ஏறுமாறாய்ப் பேசுகிறாய்! அங்கே திரைக்குப் பக்கத்தில் இடம் சௌகரியமாயிருக்கிறது. அந்த அம்மாளிடம் சொல்லி அழைத்துப் போக வந்தேன். நீ உள்ளேயே விடமாட்டேன் என்கிறாயே!”
அந்த ஆசாமி செங்கோடனை ஏற இறங்கப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, “ஆமாம் அப்படித்தான்! உள்ளே விடமுடியாது! போ!” என்று சொன்னான்.
“என்ன ஐயா, யாரைப் பார்த்தாலும் ஒரே இளிப்பா இளிக்கிறீங்க! சினிமா என்றால் இப்படித்தானோ? என்னிடம் டிக்கட் இருக்கிறது, ஐயா!” என்று செங்கோடன் எடுத்துக் காட்டினான்.
“கோபித்துக்கொள்ளாதே அப்பனே! நீ வைத்திருக்கிற டிக்கெட் இரண்டே காலணா டிக்கெட்; அந்த அம்மாள் ஒன்றே கால் ரூபாய் ஸீட்டில் உட்கார்ந்திருக்காங்க! நீ கூப்பிட்டால் வருவாங்களா, அப்பா! ஆமாம், நீ என்னத்துக்கு இவ்வளவு சிரமப்படுகிறாய்? உனக்கு அந்த அம்மாளைத் தெரியுமா?” என்றான்.
செங்கோடன் காதில் மற்றதெல்லாம் விழவில்லை. ஒன்றேகால் ரூபாய் டிக்கெட் என்பதுமட்டும் நன்றாக விழுந்தது. அவன் மனத்தில் ஏற்பட்ட ஆச்சரியம் அவனுடைய வாய் அகலமாகப் பிளந்ததிலிருந்து தெரிந்தது.
“என்ன ஐயா, நிஜமாகச் சொல்கிறாயா? அல்லது கேலி செய்கிறாயா? இவர்கள் எல்லாரும் தலைக்கு ஒன்றே கால் ரூபாய் கொடுத்துவிட்டா இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்?” என்றான் செங்கோடன்.
“இவர்கள் எதற்காக டிக்கெட் வாங்குகிறார்கள்? ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள்தான்!” என்று தணிந்த குரலில் சொன்னான் ‘கேட்’ ஆசாமி.
ஓசி டிக்கட் என்றால் என்னவென்று செங்கோடனுக்குத் தெரியவில்லை.
“அப்படி ஒரு டிக்கட்டா! அதிலே எனக்கும்தான் ஒன்று கொடேன்!” என்றான் செங்கோடன்.
“நான் கொடுக்க முடியாது. அந்த அம்மாளுக்கு வலப் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறார், பாரு! அவர் இந்த சினிமாவுக்கு மானேஜர். அவரை நாளைக்குக் கேளு. இப்போது உன் இடத்துக்குப் போ!”
“அந்த அம்மாளுக்கு இடப்பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறாரே, அவர் யார் தெரியுமா?”
“அவர் இந்த ஊர்ப் பஞ்சாயத்துச் சபையின் மானேஜர்…. போ! போ! படம் ஆரம்பித்தாகிவிட்டது.”
“இது என்னடா வம்பாயிருக்கிறது! வலது பக்கத்திலே ஒரு மானேஜர், இடது பக்கத்திலே ஒரு மானேஜர்!” என்று முணுமுணுத்துக்கொண்டே செங்கோடன் தன் இடத்துக்குப் போய் சேர்ந்தான். படம் ஆரம்பித்த பிறகு இருட்டில் தட்டுத் தடுமாறிப் போய்ச் சேர்ந்தபடியால் பலரும் அவனைத் திட்டினார்கள். ஆனால் அதெல்லாம் அவன் கவனத்துக்கு வரவேயில்லை. தன்னைச் சினிமாவுக்கு வரச்சொல்லிவிட்டு அந்தக் குமாரி பங்கஜா எங்கேயோ தூரத்தில் இரண்டு ஆண்பிள்ளைக்கு மத்தியில் உட்கார்ந்திருப்பதைப் பற்றியே யோசனையாயிருந்தது.
நடுவில் அவகாசம் கிடைத்தபோதெல்லாம் பக்கத்திலிருந்தவர்களை விசாரித்து, சினிமாவில் குறைந்த விலை டிக்கட் வாங்குகிறவர்கள் திரைக்குப் பக்கத்தில் உட்காருவார்கள் என்றும், அதிக விலை டிக்கட் வாங்குகிறவர்கள் தூரத்தில் உட்காருவார்கள் என்றும் செங்கோடன் தெரிந்து கொண்டான். இந்த ஏற்பாடு தலைகீழ்ப் பாடமாகவே அவனுக்குத் தோன்றியது.
படத்தில் சுவாரஸ்யமான கட்டம் ஒன்று வந்தது. செம்பவளவல்லி சொன்னாளே, அந்தக் கட்டந்தான். கண்ணீர் விட்ட கதாநாயகியைக் கதாநாயகன் தேற்றிச் சமாதானம் செய்யும் இடம். செங்கோடன் அதில் கவனத்தைச் செலுத்தியிருந்தபோது, திடீரென்று படம் நின்றது. ஒரு கணம் ஒரே இருட்டாயிருந்தது. அடுத்த கணம் பின்னால் எங்கேயோ வெளிச்சமாய்த் தெரிந்தது. ‘நெருப்பு!’, ‘நெருப்பு!’ என்ற கூக்குரல் கிளம்பியது. உடனே கூடாரத்திற்குள் இருந்தவர்கள் விழுந்தடித்து ஓடத் தொடங்கினார்கள். பெண் பிள்ளைகள் ‘ஐயோ!’ ‘ஐயோ!’ என்று கத்தினார்கள். குழந்தைகள் வீரிட்டு அழுதன.
செங்கோடன் எல்லோரையும் போல் எழுந்து நின்றான். வெளியே ஓட எத்தனித்தான். சட்டென்று ஒரு ஞாபகம் வந்தது. நெருப்பு பின்னாலேதான் பிடித்திருக்கிறது. குமாரி பங்கஜா அங்கே தான் இருக்கிறாள்! செங்கோடனின் தலை சுழன்றது!
அத்தியாயம் – 6
‘நெருப்பு’ என்ற சத்தத்தைக் கேட்டு மூளை குழம்பி நின்ற செங்கோடனுக்குச் சட்டென்று தான் செய்ய வேண்டியது இன்னதென்று புலப்பட்டுவிட்டது. சினிமாப் பார்த்தவர்கள் எல்லாரும் கூடாரத்திலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தார்கள் அல்லவா? செங்கோடன் அதற்கு மாறாகக் கூடாரத்தின் பின்பக்கம் நோக்கி ஓடினான். வழியில் அங்கங்கே நின்று கொண்டிருந்த ஜனங்களை இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடினான். வழியில் இருந்த மரச் சட்டங்கள் முதலிய தடங்கல்களைத் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஒரே மூச்சில் ஓடிப் பின்புறத்தில் நாற்காலிகள் போட்டிருந்த இடத்தை அடைந்தான். ‘நெருப்பு’ என்ற கூச்சல் எழுந்ததும் மின்சார இயந்திரத்தை நிறுத்திவிட்டிருந்தார்கள். ஆகையால் கூடாரத்துக்கு வெளியே இருந்த விளக்குகளும் அணைந்து போயிருந்தன. எங்கேயோ ஒரு மூலையில், டிக்கட் விற்பனை செய்யப்பட்ட இடத்தில், நெருப்புப் பற்றி எரிந்ததனால் உண்டான மங்கலான வெளிச்சம் தெரிந்தது. அந்த இடத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட ஜனங்கள் கும்பல் கூடி நின்று ‘காச்சு மூச்சு’ என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இடம் செங்கோடனுடைய கவனத்தை ஒரு கணம் கவர்ந்தது. ஆனால் ஒரு கணம் மாத்திரந்தான்; உடனே அவன் இத்தனை அவசரமாய் ஓடி வந்ததன் காரணம் இன்னதென்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவன் நின்ற இடத்தில் அங்குமிங்குமாகச் சிலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் பெண் பிள்ளைகளும் இருந்தனர். புருஷர்களும் இருந்தனர். அவர்களில் குமாரி பங்கஜா இருக்கிறாளா? அவளை அந்த இருட்டில் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? ஆனால் அப்படித் தேடிக் கண்டுபிடிக்கும் சிரமம் செங்கோடனுக்கு ஏற்படவில்லை. ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒரு ஸ்திரீ அவன் மீது முட்டிக் கொள்ளவே, செங்கோடன் அவளுடைய தோள்களைப் பிடித்து நிறுத்தி முகத்தை உற்றுப் பார்த்தான். அதிர்ஷ்டம் என்றால் இதுவல்லவா அதிர்ஷ்டம்? கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுமில்லாமல் பக்தன் மேலேயே வந்து முட்டிக்கொண்டது! அவள் குமாரி பங்கஜாதான் என்று அறிந்ததும் செங்கோடன் பரவசமடைந்தான். அவளைக் காப்பாற்றுவதற்கு வழி என்ன? தூரத்தில் தெரிந்த நெருப்பு அப்போது குப்பென்று பற்றிப் பெருநெருப்பாவது போலத் தோன்றியது. செங்கோடன் மீது முட்டிக்கொண்ட பங்கஜாவோ அவன் இன்னான் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், “ஐயோ! ஐயோ! என்னை விடு” என்று அலறினாள். “நான் தான் ராஜா செங்கோடக் கவுண்டன். பயப்படாதே! உன்னை நான் காப்பாற்றுகிறேன்!” என்று சொல்லிக்கொண்டே, சிறு குழந்தையைத் தூக்குவதுபோல் செங்கோடன் குமாரி பங்கஜாவைக் குண்டு கட்டாகத் தூக்கிக் கொண்டு கூடாரத்திலிருந்து வெளிப் பக்கம் நோக்கி ஓடினான். குமாரி பங்கஜா கால்களை உதைத்துக் கொண்டாள். கைகளினால் அவனுடைய மார்பைக் குத்தித் தள்ளினாள், கீழே குதிக்க முயன்றாள். ஒன்றும் பலிக்கவில்லை; செங்கோடக் கவுண்டனுடைய இரும்புக் கைகளின் பிடியிலிருந்து அவள் தப்ப முடியவில்லை.
கூடாரத்துக்கு வெளியில் அவளைக் கொண்டு வந்ததும் செங்கோடன் தானாகவே அவளைக் கீழே இறக்கிவிட்டான். “பயப்படாதே! நான் இருக்கும்போது பயம் என்ன?” என்றான். அதற்குப் பதிலாக குமாரி பங்கஜா அவனது வலது கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள்.
மிக்க பலசாலியான செங்கோடனுக்கு அந்த அடியினால் கன்னத்தை வலிக்கவில்லை; ஆனால் நெஞ்சில் கொஞ்சம் வலித்தது. அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கன்னத்தைத் தடவிக்கொண்டே நின்றான்.
திடீரென்று கூடாரத்துக்கு வெளியே விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கின.
தன் எதிரில் நின்றதும், தன் கன்னத்தில் அறைந்ததும் குமாரி பங்கஜா தான் என்பதைச் செங்கோடன் இன்னொரு தடவை நல்ல வெளிச்சத்தில் பார்த்துச் சந்தேகமறத் தெரிந்து கொண்டான். அதைப்பற்றி அவளைக் கேட்க வேண்டும் என்று மனம் விரும்பியது. “உன் உயிரைக் காப்பாற்றினேன். உன்னுடைய பூப்போன்ற மேனியில் நெருப்புக் காயம் படாமல் தப்புவித்தேன். அதற்கு நீ எனக்கு கொடுத்த பரிசு கன்னத்தில் அறைதானோ?” என்று கேட்க அவன் விரும்பினான். ஆனால் நாவில் வார்த்தை ஒன்றும் வரவில்லை. பங்கஜாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே பிரமை பிடித்தவன் போல நின்றான்.
அப்போது தான் குமாரி பங்கஜா அவனை உற்றுப் பார்த்தாள். “ஓகோ! நீயா? நீதானா இப்படிப்பட்ட அக்கிரமம் பண்ணினாய்? இப்படிப் பண்ணலாமா?” என்றாள்.
செங்கோடன் அதற்குப் பதில் சொல்வதற்குள் “பங்கஜா! பங்கஜா!” என்ற குரல் கேட்டது.
“இதோ இருக்கிறேன், அண்ணா!”
திடுதிடுவென்று ஏழெட்டுப் பேர் ஓடி வந்து அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.
“இந்தத் தடியன்தானா கலாட்டா ஆரம்பித்தது?”
“ஆமாம்; இவனேதான்!”
“குறவனைப்போல் விழித்துக்கொண்டு நிற்பதைப் பார்!”
“படம் ஆரம்பித்ததிலிருந்து இவன் குட்டி போட்ட பூனை மாதிரி அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான். அப்போதே சந்தேகப்பட்டேன்.”
“ஏண்டா தடியா! படம் பார்க்க வந்தாயா? கலாட்டா பண்ண வந்தாயா?”
“போலீஸ் கான்ஸ்டேபிள்! இங்கே சீக்கிரம் வாருங்கள்! இந்த ரௌடியை அரெஸ்ட் செய்யுங்கள்!”
“பங்கஜம்! இன்று சாயங்காலம் உன்னிடம் கயவாளித்தனமாகப் பேசினான் என்று சொன்னாயே. அந்த மனிதன் இவன்தானே?”
இப்படியெல்லாம் அவனைச் சுற்றி யார் யாரோ, என்னென்னவோ பேசிக்கொண்டது செங்கோடனுடைய காதில் விழுந்தது. ஆனால் அவனுடைய மனத்திலே ஒன்றும் பதியவில்லை; அவர்களுடைய பேச்சு அவனுக்குப் புரியவும் இல்லை. தன்னைப் பற்றியா இப்படியெல்லாம் பேசுகிறார்கள்? தன்னை எதற்காக ‘அரெஸ்ட்’ செய்ய வேண்டும் என்கிறார்கள்? தான் செய்த குற்றம் என்ன? ஒரு பெண்பிள்ளையை நெருப்பிலிருந்து காப்பாற்றியது குற்றமா? இதென்னடா வம்பாயிருக்கிறதே? பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்ததே?
அப்போது குமாரி பங்கஜா யாரோ ஒருவனுடைய கையைப் பிடித்துகொண்டு, “ஸார், இப்படிக் கொஞ்சம் தனியே வாருங்கள்! ஒரு விஷயம்” என்று சொல்லி, அவனை அப்பால் அழைத்துக் கொண்டு போனதைச் செங்கோடனுடைய கண்கள் கவனித்தன. துரை மாதிரி உடுப்புத் தரித்த அந்த மனிதன் யார்?- யாரோ பெரிய உத்தியோகஸ்தன் போல் இருக்கிறது. எதற்காகப் பங்கஜா அவனை அவ்வளவு அருமையாக அழைத்துப் போகிறாள்? அவனிடம் இரகசியமாக என்ன விஷயம் சொல்லப் போகிறாள்? போகும்போது அவள் தன்னை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்துவிட்டுப் போனதன் காரணம் என்ன? தன்னைப்பற்றி அந்த மனிதனிடம் ஏதோ சொல்லப் போகிறாள் போலிருக்கிறது. நல்லது சொல்லப் போகிறாளோ, அல்லது கெட்டது சொல்லப் போகிறாளோ?
இதற்குள் ஒரு போலீஸ் கான்ஸ்டேபிள் அங்கே வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் செங்கோடனுடைய மார்பு பதைபதைத்தது. நெஞ்சு தொண்டைக்கு வந்தது. உடம்பு வியர்த்தது. சிவப்புத் தலைப்பாகை ஆசாமிகள் இருக்குமிடத்துச் சமீபத்திலேயே செங்கோடன் போவது கிடையாது. ஆகா! போலீஸ்காரர்கள் பொல்லாதவர்கள். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் பணம் பறிக்கப் பார்ப்பார்கள். செங்கோடனுக்கோ பணம் என்றால் உயிர். ஆகையால் எங்கேயாவது அவன் போகும் சாலையிலே போலீஸ்காரன் நின்றால், செங்கோடன் சாலையை விட்டு இறங்கித் தூரமாக விலகிப்போய் ஒரு பர்லாங்கு தூரத்துக்கு அப்பால் மறுபடியும் சாலையில் ஏறுவான்.
இப்போது ஒரு போலீஸ்காரன் தலையில் சிவப்புத் தொப்பியும் குண்டாந்தடியுமாகச் செங்கோடனை நெருங்கி வந்து கொண்டிருந்தான். தப்பித்துக்கொண்டு ஓடலாமென்று பார்த்தால் சுற்றிலும் ஜனக்கூட்டமாயிருந்தது. ஆனால் எதற்காக அவன் ஓடவேண்டும்? அவன் செய்த குற்றந்தான் என்ன? அதைத்தான் தெரிந்து கொள்ளலாமே?
அந்தப் போலீஸ்காரனுடைய ஒரு கையில் குண்டாந்தடி இருந்தது. இன்னொரு கையில் ஒரு ஹரிக்கன் லாந்தர் இருந்தது. அது செங்கோடனுடைய ஹரிக்கன் லாந்தர். டிக்கட் வாங்கிய இடத்தில் அவன் விட்டுவிட்டு வந்த லாந்தர். ‘அது எப்படி இந்தப் போலீஸ்காரன் கைக்கு வந்தது? ஆ! இதில் ஏதோ மர்மம் இருக்கிறது; நமக்கு ஏதோ ஆபத்து அதன்மூலம் வரப்போகிறது!”
போலீஸ்காரன், “விலகுங்கள்! விலகுங்கள், ஐயா!” என்று மற்றவர்களை அதட்டி விலக்கிக்கொண்டே செங்கோடனின் அருகில் வந்தான்.
“ஏண்டாப்பா! என்ன கலாட்டா பண்ணுகிறாய்?” என்று அவன் செங்கோடனைப் பார்த்துக் கேட்டான்.
செங்கோடனுக்கு வார்த்தை சொல்லும் சக்தி வந்தது. ஒரு முரட்டு தைரியமும் பிறந்தது.
“என்னைக் கேட்கிறீர்களா? நான் ஒரு கலாட்டாவும் பண்ணவில்லை. கலாட்டா என்றால் கறுப்பா, சிவப்பா என்றே எனக்குத் தெரியாது!”
“பின்னே எதற்காக இங்கே இவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறது?”
“எல்லாரும் சினிமாப் பார்க்க வந்தவர்கள் போலத் தோன்றுகிறது. வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்!”
“வெகு கில்லாடித்தனமாய்ப் பேசுகிறாயே? ஒண்ணாம் நம்பர் ரௌடி போல் இருக்கிறதே!” என்றான் போலீஸ் கான்ஸ்டேபிள்.
பக்கத்தில் நின்றவர்கள் தலைக்கு ஒன்று சொல்லத் தொடங்கினார்கள்.
“இந்தத் திருட்டுப் பயலை விடாதீர்கள், ஸார்!”
“இருட்டிலே இவன் ஒரு பெண்பிள்ளையின் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான்!”
“கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தானா? அல்லது கழுத்தையே அறுக்கப் பார்த்தானா?”
“முழிக்கிற முழியைப் பார்த்தால் தெரியவில்லையா, எது வேணுமானாலும் செய்யக்கூடியவன் என்று!”
“நீங்கள் எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் கலாட்டாவே பெரிய கலாட்டாவாயிருக்கிறது!” என்றான் போலீஸ்காரன்.
இதற்குள் குமாரி பங்கஜா சற்று முன் கையைப் பிடித்து அழைத்துப் போன மனிதர் திரும்பி வந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது தூரத்தில் பங்கஜாவும் வந்து தனியாக நின்றாள்.
“இதோ சினிமா மானேஜர் வந்துவிட்டார்! அவரையே கேளுங்கள்!” என்றான் கூட்டத்தில் ஒருவன்.
சினிமா மானேஜர் வந்து போலீஸ்காரன் காதில் ஏதோ சொன்னார். அவன் உடனே, “நீங்கள் எல்லோரும் உள்ளே போங்கள்! படம் மறுபடியும் காட்டப் போகிறார்கள்!” என்றான்.
“நெருப்பு அணைந்துவிட்டதா, ஸார்! சேதம் ஒன்றும் இல்லையே?” என்று ஒருவன் கேட்டான்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த ஹரிக்கன் லாந்தரில் எண்ணெய் ஆகிப்போய் விட்டது. அணையும்போது திரி ‘குப்’பென்று எரிந்தது. அதைப் பார்த்துவிட்டுத்தான் யாரோ ‘நெருப்பு’ ‘நெருப்பு’ என்று கூச்சல் போட்டுக் கலாட்டா பண்ணிவிட்டார்கள். உள்ளே போங்கள்! படம் ஆரம்பமாகப் போகிறது.”
உண்மையாகவே படம் ஆரம்பிப்பதற்கு அறிகுறியாகக் ‘கிணுகிணு’வென்று மணி அடித்தது.
எல்லோரும் அவசர அவசரமாக உள்ளே போனார்கள்.
செங்கோடன், போலீஸ்காரன், சினிமா மானேஜர், குமாரி பங்கஜா இவர்கள் மட்டும் பாக்கி இருந்தார்கள்.
“அடே! உன் பெயர் என்ன?” என்று போலீஸ்காரன் அதட்டிக் கேட்டான்.
“என் பெயர் செங்கோடக் கவுண்டன். எதற்காகக் கேட்கிறீர்கள்?”
“சொல்லுகிறேன், அவசரப்படாதே! இந்த லாந்தர் யாருடையது?”
“என்னுடையதுதானுங்க!”
“இதை நீ எங்கே வைத்துவிட்டு வந்தாய்?”
“டிக்கட் வாங்குகிற இடத்திலே விட்டுவிட்டு வந்தேன். ஏனுங்க? இதை யாராவது களவாடிக் கொண்டுபோகப் பார்த்தானா?”
“இந்த ஓட்டை லாந்தரை எவன் களவாடப் போகிறான்?”
“உங்களுக்கு இந்த ஊர் சமாசாரம் தெரியாதுங்க. நீங்கள் இந்த ஊருக்குப் புதிதுபோல் இருக்கிறது. இந்த ஊரிலே ஒட்டை லாந்தரையும் திருடுவாங்க! உங்களையே கூடத் திருடிக்கொண்டு போய்விடுவாங்க!”
“அடே, அதிகப் பிரசங்கி! வாயை மூடுகிறாயா இல்லையா?” என்று சொல்லிக்கொண்டு போலீஸ்காரன் தன் கையிலிருந்த தடியை ஓங்கினான்.
செங்கோடனுடைய கோபம் எல்லை கடந்தது. அடுத்த நிமிஷம் அவனுக்கும் போலீஸ் ஜவானுக்கும் துவந்த யுத்தம் ஆரம்பமாயிருக்கும். நல்லவேளையாக குமாரி பங்கஜா அச்சமயம் குறுக்கிட்டாள்.
“கான்ஸ்டேபிள் ஸார்! அவர் மேலே ஏன் கோபித்து கொள்ளுகிறீங்க! அவர் மேல் குற்றம் ஒன்றுமில்லையே?” என்றாள்.
“இவ்வளவு பெரிய இடத்திலேயிருந்து சிபாரிசு வந்த பிறகு நான் என்ன செய்கிறது?” என்றான் போலீஸ்காரன்.
சினிமா மேனேஜர், “ஆமாம், கான்ஸ்டேபிள்! இன்றைக்கு இங்கே ஒன்றும் வேண்டாம். மறுபடியும் ஏதோ கலாட்டா என்று எண்ணிக்கொண்டு சினிமா பார்க்கும் ஜனங்கள் கலைந்துவிடுவார்கள்! இவனுடைய லாந்தரை இவனிடம் கொடுத்துவிடுங்கள்!” என்றார்.
“விஷயத்தைச் சொல்லிக் கொடுப்பது நல்லது” என்றாள் பங்கஜா.
“அவசியம் சொல்ல வேண்டியதுதான். அப்பனே! இந்த லாந்தரை நீ அணைக்காமல் டிக்கட் கொடுக்கும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டாய். யாரோ ஒருவன் சுருட்டுப் பற்ற வைப்பதற்காக லாந்தரின் கண்ணாடியைக் கழற்றித் தூக்கி இருக்கிறான். அப்போது திரி ‘புஸ்’ என்று எரிந்து பக்கத்தில் உள்ள தட்டிப் பாயில் பிடித்துக் கொண்டது. அதனால் தான் இவ்வளவு காபராவும்!” என்றார் சினிமா மானேஜர்.
“இந்தா அப்பா! உன் லாந்தரை வாங்கிக் கொள். வேற எங்கேயும் வைக்காமல் உன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு பாக்கி சினிமாவையும் பார்த்து விட்டுப் போ!” என்றான் போலீஸ்காரன்.
செங்கோடன் கைநீட்டி லாந்தரை வாங்கிக் கொண்டான். சினிமாக் கொட்டகையிலிருந்து வெளியேறும் திசையை நோக்கி விடுவிடு என்று நடக்கத் தொடங்கினான்.
“அவர் ஏன் போகிறார்? பாக்கி சினிமா பார்க்கவில்லையா?” என்று குமாரி பங்கஜா கேட்டது செங்கோடன் காதில் விழுந்தது. வெட்கத்தினாலும் கோபத்தினாலும் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்த செங்கோடன் குமாரி பங்கஜாவைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இன்னும் சற்று வேகமாக நடந்தான்.
“கவுண்டர் கோபித்துக்கொண்டு போகிறார்போல் இருக்கிறது!” என்றான் போலீஸ் சேவகன்.
கான்ஸ்டேபிளின் சிரிப்புடன் இன்னும் இருவரின் சிரிப்புச் சத்தமும் கலந்து கேட்டது.
செங்கோடன் மனத்தில் மிக்க கோபத்துடனேதான் போனான். ஆனால் அந்தக் கோபமெல்லாம் செம்பவளவல்லியின் பேரில் பாய்ந்தது.
“சும்மா இருந்தவனைக் கிளப்பிவிட்டுக் ‘கட்டாயம் போய் இந்த அழகான சினிமாவைப் பார்த்துவிட்டு வா’ என்று சொன்னாள் அல்லவா? அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நானும் புறப்பட்டு வந்தேன் அல்லவா? இரண்டே காலணாவைத் தண்டமாகத் தொலைத்தேன் அல்லவா? பெண்பிள்ளையின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்த எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!” என்று செங்கோடன் தன் மனத்திற்குள் சொல்லிக் கொண்டான்.
– தொடரும்…
– பொய்மான் கரடு (குறுநாவல்), முதற் பதிப்பு: 1951.