பேசிய இதயம்
கதையாசிரியர்: ராம்ஈஷ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 15,156
அவன் யாருமற்ற இடத்திலே கீழே வீழ்ந்துக் கிடந்தான். அவன் இதயம் பேசியது (துடித்துக்கொண்டிருந்தது). இந்த பாழும் பழி உணர்ச்சி ஒரு மனிதனை எப்படி மிருகமாக்குகிறது. கண நேரத்தில் உணர்ச்சி வயப்பட்டு அவன் செய்யும் ஒரு தவறு அவனை இந்த நிலைமைக்கு கொண்டு விடுகிறது.
அன்று இவன் குழுவிற்கும் வேறொரு குழுவிற்கும் ஒன்றுக்கும் பிரயோசனமே இல்லாத ஒரு காரணத்திற்கு வாய்த்தகராறு. அது சற்றே வலுத்து கைக்கலப்பில் முடிந்தது. இந்த தகராறின் காரணமாக பிறிதொரு நாளில் கீழே விழுந்து கிடக்கும் இவன் குழுவில் ஒருவன் இறக்க அதற்கு பழி தீர்த்துக் கொண்டான். அதே பழி அவனைச் சுற்றியது. அதன் பலன் இன்று இவனும் வீழ்ந்துக் கிடக்கிறான்.
இதயம் பேசிற்று. என்ன அமைப்பு இது? என்ன உணர்ச்சி இது? உயிரை விடவும் பெரியதா இந்த பழி உணர்சிகள். ஒரு மனிதனின் செய்கையில் முக்கிய பங்கு வகிக்கும் மூளையின் மற்றொரு நிலையான ஆழ்மனதிற்கு தெரியாதா உயிர் பெரிதென்று.
ஆழ்மனதிற்கு பயிற்சியே இன்று இல்லாமல் போனது ஏன்?. தான் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களில் நல்லது எது? கேட்டது எது? என பிரித்துணர்ந்து அறியும் திறமை எங்கே போயிற்று இந்த மூளையின் ஆழ்மனதிற்கு. அல்லது சுற்றி நடக்கும் தவறான விஷயங்களையே அதிகமாக பார்த்து கேட்டு அதையே இந்த மூளையும் ஈர்த்து ஆழ்மனதில் சேமித்து வைக்கிறதோ!
தன்னை ஒருவன் தாக்க வரும்போது கூட தன்னை பாதுகாத்துக்கொள்ளக் கூட கட்டளையிடாமல், பழி தீர்க்க அவனைத் தூண்டிய ஆழ்மனதையும் மூளையையும் என்ன சொல்வது. ஆழ்மனது கட்டளையிட இதயமே இல்லாத இந்த மூளையும் கட்டளையைச் செய்து முடித்ததின் விளைவு இதோ இவன் உயிர் இழந்துக் கொண்டிருக்கிறான். ஆழ்மனதுக்கும் மூளைக்கும் பெருமிதம் தாங்கள் முடித்த அந்த வேலைக்கு.
இதயத்தின் உயிரை, புலம்பலை சற்றும் பொருட்படுத்தாமல் மூளை தன் கடைசி நேரக் கட்டளைகளை உடலுறுப்புகளுக்கு அனுப்பி தானும் சிறிது சிறிதாக செயலிழந்துக் கொண்டிருந்தது. இருந்தும் யாராவது இந்த உயிரைக் காப்பாற்றி விட மாட்டார்களா என்ற ஆதங்கத்துடன் இதயம் தன்னால் இயன்றவரை ஏற்றம் இறக்கமாக துடித்து தன் கடைசி நேரப் பணியினை செய்து உயிரை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தது.
இதயத்தின் இந்த விசும்பல் கீழே விழுந்திருந்த மனிதனின் குரலாக “அம்மா” என்ற ஈனஸ்வரத்தில் வெளிவந்தது. அந்த குரல் அந்த வழியே வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தவர்களின் காதில் விழும் என்று நம்புவோமாக.
தொடர்புள்ள சிறுகதைகள்
வெள்ளை நிறத்தொரு பூனை
எஸ்.மதுரகவி
July 26, 2026
அகல் விளக்கு
மு.வரதராசன்
July 26, 2026
‘ள்’ என்பதனால்
திசேரா
July 23, 2026