பெண் குரல்





அத்தியாயம் 3.1-3.3 | அத்தியாயம் 3.4-3.6 | அத்தியாயம் 4.1-4.3
3.4 காய்

கானகத்தினிடையே வளைந்து வளைந்து செல்லும் பாதையில் கார் வரும் போது நான் தலை சுற்றலால் கண்களையே திறக்கவில்லை. நாங்கள் உதகமண்டலத்தை வந்தடையும் சமயம் இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். அலுத்து ஓய்ந்து போயிருந்த நான் வந்து படுத்ததுதான் தாமதம் கண் அயர்ந்து விட்டேன். காலையிலே எழுந்து வெளியே நோக்கிய போதுதான் அழகும் சாந்தமும் பொலியும் தன் கருணை முகத்தைக் காட்டிப் புன்னகை புரியும் இயற்கை யன்னையின் மடியிலே நான் வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். கதிரவனின் ஒளியிலே வைரம் இழைத்தாற் போன்று பனித் திவளைகளால் மூடப்பட்டு மின்னிய பசும் புல் தரை, மனிதனுடைய கைகள் கொண்டு வெட்டி விடப்பட்டவை போல அழகாக வளர்ந்து நின்ற கோபுர விருட்சங்கள், பள்ளங்களிலும் மேடுகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாரி இறைத்தாற் போன்று காணப்பட்ட வீடுகள், மங்கையொருத்தி தன்னுடைய கூந்தலை மலர்ச் சரங்களுக்கிடையே வளைத்து வளைத்துச் சுற்றிக் கட்டி இருப்பதைப் போல மலைகளைச் சுற்றி வளைந்தும் நெளிந்தும் செல்லும் தார் ரஸ்தாக்கள் எல்லாம் நாங்கள் இறங்கியிருந்த வரதனுடைய பங்களாவிலிருந்து கண் கவரும் காட்சிகளாகத் தென்பட்டன. வாசலிலே தோட்டத்தில் வண்ண வண்ண மலர்களைத் தாங்கிய செடிகளும் கொடிகளும் மனத்திலே புத்தொளியைப் பரப்பின. தோற்றத்திலே அவ்வளவு பெரிதாக இல்லாது போனாலும், வீடு முழுவதும் சோபாக்களும் மேஜைகளும் நிலைக் கண்ணாடிகளுமாக மேல் நாட்டுப் பாணியிலே அலங்கரித்திருந்தது. கீழே கால் வைத்தால் ஓசைப்படாத மெத்தென்ற விரிப்புகள், அலங்கார ஜாடிகளில் அழகழகாகச் செருகி வைத்திருந்த பூங்கொத்து, மாசுமறுவற்றுப் பளபளக்கும் ஸ்நான அறைகள் எல்லாம் எனக்கு எங்கோ ஒவ்வாத இடத்தில், நான் நடக்கவே கூசும் இடத்தில் வந்திருப்பதாக அறிவுறுத்திக் கொண்டிருந்தன.
‘வரதன், எம்.ஏ.’ என்ற பலகையைத் தாங்கி நிற்கும் ராஜபோக மாளிகை, பளபளக்கும் புதுக் கார், ஆடம்பர வாழ்க்கை, எல்லாவற்றையும் லீலாவுக்குச் சொந்தமாக்கி விடப் பெரியவர்கள் நிச்சயித்திருப்பது பார்ப்பதற்குத் தவறாக இல்லை. ஏன், வரதனுக்கு மட்டுந்தான் என்ன குறைவு? சுக வாழ்வைக் காண்பிக்கும் சற்றே தடித்த உடற்கட்டு, சோபை பெற்ற சிவந்த மேனி, எப்போதும் கலகலவென்று சிரித்துக் கொண்டே இருக்கும் சுபாவம். எல்லாம் அவனை லீலாவுக்குத் தகுதியற்றவன் என்று கூற முடியாமல் செய்தன. ஆனால், புனிதமான காதல் உணர்ச்சியில் பண்பட்ட இதயத்துக்கு, எப்பேர்ப்பட்ட அமரலோக வாழ்வும் துச்சந்தானே? லீலாவைக் குற்றம் கூறுவதற்கு இடமே இல்லை.
“லீலாவைக் கைப்பிடிக்கக் காத்திருக்கும் வரதன்” என்று என் கணவர் கூறி நகைத்த போது மூர்த்தியின் உள்ளத்திலே ஏற்பட்ட அதிர்ச்சியை நான் எப்படி கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்? ஒரு விநாடி தூக்கி வாரிப் போட்டது போல அவன் திடுக்கிட்டுப் போய் விட்டான். அப்புறம் சமாளித்துக் கொண்டான் என்றாலும் வரும் போது அவனிடம் காணப்பட்ட உற்சாகம், கலகலப்பு எல்லாம் குன்றிப் போய்விட்டன.
மூர்த்தி உள்ளதை உள்ளபடி கள்ளமில்லாமல் கூறும் வெகுளி தான், என்றாலும் இந்த வரதன் என் முன்னேயே, “ரொம்ப அழகாக இருக்கிறாளே!” என்று கூறியது என் மனசுக்குப் பொருந்தவேயில்லை. அன்று லீலா அவர் முன் என்னை எப்படி எல்லாமோ வர்ணித்தாள். ஆனால் அவள் என்னைப் போல் ஒரு பெண். எனக்கு உவப்பாக இருந்தது. மூர்த்தி என்னுடன் சகஜமாக அளவளாவினான் என்றாலும் அந்தப் பாணி எனக்குக் குற்றமில்லாததாகவே தொனித்தது. அதுவும் அவன் சமய சந்தர்ப்பம் அறிந்து மரியாதையாகப் பழகுவான். என் மாமியார், பட்டு, எல்லோரும் இருக்கும் சமயம் அவன் வீட்டுக்கு வருவானே, “என்ன சுசீலா?” என்று கேட்டுக் கொண்டு தடதடவென்று வர மாட்டான். போகும் போது மட்டும், “நான் வரட்டுமா?” என்று வாசற்படியண்டை நின்று கேட்டு விட்டுப் போவான். இப்படிப் பழகியதில் அவன் எனக்கு அந்நியனென்ற கூச்சம் மனதில் ஏற்படவில்லை. அவன் கூறியது போல், சகோதரன் மாதிரி பாவித்த எனக்கு நாளடைவில் வேடிக்கையாகப் பேசவும், கேலி செய்யவுங் கூடச் சகஜ பாவம் வளர்ந்து விட்டது.
இப்போது வரதன், “என்ன சுசீலா? அதற்குள் எழுந்து விட்டாயே?” என்று எடுத்த எடுப்பில் கேட்டுக் கொண்டு வந்தது எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடிவிட்டேன். வீட்டிலே யாரும் என்னைப் பிரத்தியேகமாகக் கவனிக்கா விட்டால் கூட அவன் விடமாட்டான் போல் இருந்தது. என்னைப் பற்றி ஏதாவது கேட்டு அவர்கள் சம்பாஷணைக்குள் என்னை இழுத்து விட்டான். அடிக்கொரு தடவை அவர் முதுகில் இரண்டு ‘ஷொட்டு’க் கொடுத்து, “என்னப்பா ராமு? உன் ‘மிஸஸ்ஸை’ நீ கவனிக்கவே மாட்டாய் போல் இருக்கிறதே!” என்று வேறு கேட்டு என் வயிற்றெரிச்சலைக் கிளப்பினான்.
“நான் என்ன அவளைக் கவனிப்பது? அவள் அல்லவா என்னைக் கவனிக்க வேண்டும்?” என்று என்னைப் பாராமலேயே அவர் அசட்டுச் சிரிப்புச் சிரித்து வைத்தார். வந்த முதல் நாள் காலை எல்லோருமே ஊர் சுற்றக் கிளம்பினோம். எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, நகரின் உல்லாச நந்தவனத்திற்கு வந்தோம். வாயிலில் காரை விட்டு இறங்கி உள்ளே பத்தடி கூட நடந்திருக்க மாட்டோம். நளினி எதற்கோ பிடிவாதம் பிடித்துத் தொம் தொம் என்று குதித்து அழுதாள். கைக்குழந்தை வேறு பசியோ, தூக்கமோ, கையிலே பிடிபடாமல் கத்தியது. நளினியின் முதுகில் இரண்டு அறை வைத்த பட்டு “சுசீலா, இவை இரண்டையும் சற்று வீட்டுக்கு அழைத்துக் கொண்டு தொலையேன், முன்னாடி. இந்த லட்சணத்துக்குத்தான் நான் இவர்களை அழைத்துக் கொண்டு எங்கேயும் புறப்படுவதில்லை” என்றாள். முன்னால் வரதனுடன் பேசிச் சென்ற அவர் என்னைக் கவனித்தாரோ இல்லையோ? நான் திரும்பியே பார்க்காமல் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வரதனுடைய வண்டியில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.
‘வெளியே கிளம்பி அவமானப்படுவதைக் காட்டிலும் இனிமேல் வீட்டுடனேயே இருந்து விடுவது மேல்’ என்றும் தீர்மானித்துக் கொண்டேன்.
வீடு வந்த பின் கைக் குழந்தைக்குப் பாலைக் கொடுத்துத் தூங்க வைத்தேன். நளினியும் சாப்பிட்டு விட்டு விளையாடினாள். அவர்கள் பகல் ஒரு மணிக்கு வீடு திரும்பினார்கள். சமையலுக்கு ஆள் இருந்தாலும் கூட, உதவியாக மேற்பார்வை செய்ய நான் வந்து விட்டதும் நல்லதாகவே இருந்தது. வந்ததும் வராததுமாக முணுமுணுத்த மைதிலுக்கும் சுகுமாருக்கும் முன்னாடியே சாப்பாடு போட்டேன். மற்றவர்கள் சாவகாசமாக வட்ட மேஜையைச் சுற்றி உணவருந்த அமர்ந்தார்கள். நான் பரிமாற வந்தேன். வரதன் என்னைக் கண்டதும், “என்ன, உட்காரவில்லையா சுசீலா? அந்தத் தடியன் எங்கே? பரிமாறுவதற்கென்ன?” என்றான் வெகு சகஜமாக.
நான் பதிலே பேசவில்லை. யாருமே வாய் திறக்கவில்லை. ஏதோ எல்லோருடனும் நான் வார்த்தையாடினாலும், மைத்துனர், கணவர், அவன் எல்லோருக்கும் சமமாகச் சாப்பிட உட்கார எனக்குப் பயமாக இருந்தது. அதுவும் என் ஆயுளில் நான் மேஜையில் உணவு உட்கொண்டதில்லை.
“வெகு அழகாக இருக்கிறதே, நீ பரிமாற வருவது! டேய் சுப்பு! மடையா! இன்னொரு தட்டு கொண்டாடா! நீயும் உட்கார் சுசீலா” என்று ஆடம்பரமாக இரைந்து விட்டு அவன் என்னை வற்புறுத்தினான்.
எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது. “வேண்டாம், பிறகு சாப்பிடுகிறேன்” என்றேன். கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போன்று.
பக்கத்திலே ஒன்றையும் கவனியாதவர் போல் அமர்ந்திருந்த என் கணவரின் முதுகிலே சுவாதீனமாக ஒரு குத்து விட்டான் வரதன். “டேய்! வாயிலே கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? ‘தேவி, நீயும் போஜனத்திற்கு அமரலாமே’ என்று உபசாரம் பண்ணடா. நீ அல்லவோ சொல்ல வேண்டும்? அதனால் தான் அவள் பேசாமள் நிற்கிறாள்?” என்று அவரைக் கடிந்து கொண்டான்.
“அப்…பா!” என்று அவர் முதுகைத் தடவிக் கொண்டார்.
“இந்த இரண்டு நாட்களில் நீ குத்திக் குத்தி என் முதுகு வலி கண்டு விட்டது. ஆள் ஒருவன் அகப்பட்டேன் என்று இப்படியா குத்துவது? ரொம்ப ரொம்பக் கெட்ட வழக்கமப்பா. நாளைக்கும் இதே கைதானே ஞாபக மறதியாக வரும்? மறதியாகப் பக்கத்தில் லீலா இருக்கும் போது இப்படி ஒரு குத்து விட்டாயானால் அவ்வளவுதான்! ஜாக்கிரதை வேண்டும்!” என்று நாசுக்காகப் பேச்சை வேறு திசையில் திருப்பினார் அவர்.
“டேய் பிருகஸ்பதி! போதும் உன் உபதேசம். உனக்கு இத்தனை குத்து விழுந்தும் எருமை மாடு போல உனக்கு உறைக்கவில்லையே! பெண்டாட்டியிடம் ஜாக்கிரதையாக இருப்பது பற்ரி எனக்கு உபதேசம் செய்ய வந்து விட்டான், உபதேசம்! எத்தனை நேரமாக அவள் தயங்கிக் கொண்டு நிற்கிறாள்! இன்னமும் தான் ஆகட்டும், வாயைத் திறக்கிறானா பாரேன்!” என்று வரதன் விடாப்பிடியாக அவருக்கு இன்னொரு குத்து விட்டான்.
இதற்குள் சுப்பு மேஜை ஓரத்தில் எனக்குத் தட்டுக் கொணர்ந்து வைத்தான். எனக்கு உள்ளூற நடுக்கம் கண்டு விட்டது.
நாற்காலியை விட்டு எழுந்து நின்ற அவர், “நீங்களும் சாப்பிட உட்காரலாமே!” என்று நாடக பாணியில் காலியாகக் கிடந்த மற்றொரு நாற்காலியைச் சுட்டிக் காட்டிக் கூறிய போது என் மைத்துனர் உட்பட எல்லோரும் என்னைப் பார்த்து ‘கொல்’லென்று சிரித்தார்கள். என் முகத்தில் குப்பென ரத்தம் ஏறியது. நம்மை நடுவில் வைத்துக் கொண்டு எல்லோரும் அவமானம் செய்கிறார்களே என்று கோபம் வந்தது.
நல்ல வேளையாக, பட்டு என்னை விடுவிக்க முன் வந்தாள்.
“நன்றாக இருக்கிறது, நீங்கள் அவளைப் படுத்தி வைப்பது! நீ போம்மா சுசீலா! நான் தான் அவளை முன்னேயே சாப்பிட்டு விடு. அப்புறம் நீங்கள் ஆளுக்கு ஒன்றாகக் கேட்பீர்கள். பரிமாறுகிறவனுக்கு ஒத்தாசை வேண்டும் என்றேன். தவிர, இப்படியெல்லாம் நீங்கள் கூத்தடித்தால் அவள் எப்படி உட்காருவாள்? அவளுக்கு வழக்கம் இல்லை” என்று ஒரு போடு போட்டாள்.
நான் என் வாழ்வில் ஒரே ஒரு தடவை அவளுக்கு மனமாற நன்றி செலுத்தினேன். தைரியம் கொண்டவளாக கொண்டு வந்ததைப் பரிமாறினேன்.
“ஏது ஏது பட்டு, அவள் உட்கார்ந்தால் கூட நீ வேண்டாம் என்பாய் போல் இருக்கிறதே! வழக்கம் எப்படி வரும்? நாலு நாள் பழகினால் தானே வருகிறது” என்றான் வரதன். ஆனால் அது அத்துடன் நின்று விட்டது. அலையடங்கிய சமுத்திரம் போல் கலகலப்பு ஓய்ந்தது. பாதிச் சாப்பாடின் போது என் கணவர், “வெந்நீர் இன்னும் கொஞ்சம் சூடாகக் கொண்டு வா சுசீ?” என்றார். நான் கொண்டு வந்து வைத்தேன்.
தம்ளரை உதட்டில் வைத்துக் கொண்ட அவர், ‘சுருக்’கிட்டுக் கீழே வைத்து விட்டு, “எவ்வளவு சூடு?” என்றார்.
“அதிகமா?” என்று கேட்ட நான் தம்ளர் வெந்நீரை எடுத்து ஆற்றப் போனேன்.
“வாய் கொப்புளித்து விடும்” என்றார் அவர்.
அத்துடன் அது நின்றுவிட்டால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.
“எனக்குத் தெரியும், அவள் கொண்டு வந்து வைக்கும் போதே ஆவி வருவதைக் கவனித்தேன். வைத்து விட்டுத் தன் கையை உதறிக் கொண்டாள். இப்படியா குடிக்க வெந்நீர் கொண்டு வைப்பது? இதெல்லாம் இன்னுமா ஒரு பெண்ணுக்குத் தெரியாது? அப்படியே தூக்கிக் குடிப்பவர்களாக இருந்து வாயில் விட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று கேட்ட பட்டு என்னை முறைத்துப் பார்த்தாள். இதை என்னால் பொறுக்க முடியவில்லை. அவர் கேட்டார், நான் பதில் கூறினேன். சூடு அதிகம் என்று அவர் என்னைக் கோபிக்கலாம். அடிக்கவும் அடித்திருக்கலாம். எனக்குச் ‘சுருக்’கென்று தைக்காது. இவள் ஏன் குறுக்கே வந்து விழ வேண்டும்? நான் வேண்டுமென்று செய்வேனா? அவருக்கு நாக்கு புண்ணானால் எனக்கு அந்தப் பொறுப்பு இல்லையா?
நான் எந்த வேலை செய்தாலும் குற்றம் கூறுவது அவள் வழக்கந்தான். ஒவ்வொரு நாளும் என் மாமியாருக்கும் அவளுக்கும் உணவு பரிமாறும் போது கலாசாலைப் பரீட்சை போல எனக்கு நெஞ்சம் அடித்துக் கொள்ளும். அத்தனை பயந்து பயந்து செய்தாலும் அவர்கள், ‘கடுகு வெடிக்கவில்லை, உளுத்தம் பருப்புத் தீயவில்லை, கஞ்சி வடியவில்லை’ என்று ஏதாவது சொல்லாமல் இலையை விட்டு எழுந்திருக்க மாட்டார்கள். ஆயிரம் புருஷர்களுக்கு அன்னம் படைத்து விடலாம், சர்வாதிகார மனப்பான்மை கொண்ட இரண்டு பெண்களைச் சமாளிப்பது கஷ்டம். இத்தகைய அவர்கள் வழக்கத்தால் என் மனம் காய்ந்துதான் போகிறது என்றாலும், இன்று வந்த இடத்தில் என்னை அவர்களுக்குச் சமமாக மதிக்கும் வரதனுக்கு முன்னிலையில் என் கணவரையும் வைத்துக் கொண்டு, அவர் கடுகடுக்காத போது வலிய அவள் குற்றம் கூறியதை என்னால் சகிக்க முடியவில்லை.
“நான் கொண்டு வைத்துவிட்டுக் கையை உதறிக் கொண்டேனோ? நாக்குப் பொத்துப் போகும்படியாகவா இருக்கிறது? இதோ, தொட்டுப் பாருங்கள். அவருக்கு வாய் வெந்து போக வேண்டும் என்று நான் காரியம் செய்ததைப் போலவே பேசுகிறீர்களே; உங்களுக்கு இருக்கும் பொறுப்பு எனக்கு இல்லையா? குற்றத்துக்கு எதுவும் இடமில்லாமல் போனாலும் இப்படி எதையாவது மிகைப்படுத்திப் பொய்யாவது சொல்ல வேண்டுமா?” என்று படபடத்த கேள்விகள் என் கொதிக்கும் உள்ளத்திலிருந்து எழுந்தன.
இத்தகைய வார்த்தைகளை நான் கேட்க அவள் பொறுப்பாளா? அவள் வேண்டுமானால் என்னை எதுவும் சொல்லலாம். எப்படியும் நடத்தலாம். என்னை ஏனென்று கேட்பார் இல்லை. உள்ளம், உணர்வு எல்லாம் எனக்குக் கல்லாகி விட வேண்டும். அவள் அப்படியா? அவள் சொற்படி கேட்கும் கணவர் உண்டு, அளவற்ற மரியாதை செலுத்தும் மைத்துனர் உண்டு, மருமகள் மீது அன்பு மழை பொழியும் மாமி உண்டு, இவற்றுக்கு மேல் அன்னை உண்டு, செல்வம் உண்டு, செழிப்பு உண்டு. வீட்டின் சர்வாதிகாரிணி கலத்திலே கையை உதறிவிட்டுக் கோபத்தால் ஜொலிக்கும் முகத்துடன் என் கணவரைப் பார்த்தாள். “பார்த்தாயா ராமு? இப்போது நான் இவளை என்ன சொன்னேன்? தப்புச் செய்தால் ‘இப்படிச் செய்தாயே அம்மா?’ என்று கேட்டது தவறா? விடு விடு என்று வாயில் வந்ததைக் கொட்டுகிறாளே! நான் பொய் சொல்லுகிறேன் என்று ஒரேயடியாக அடித்து விட்டாளே! எனக்கு என்ன மதிப்பு இருக்கிறது அப்புறம்?” என்று உதடுகள் படபடக்க முறையிட்டாள்.
இரு தரப்பிலும் உள்ளே குமைந்து கிடக்கும் புகைச்சல் வெளியே கிளம்பி விட்டது. ‘அப்புறம் போக முடியாமல் இருபுறமும் நகர முடியாமல் நடுநிலையிலே தவிக்கும் அவர் எந்தப் பக்கம் சாய்காலாக நிற்கிறார் என்று பார்க்க வேண்டும். உண்மையிலே அவர் காதல் உள்ளம் படைத்தவரா என்று அறியச் சந்தர்ப்பம் நேரிட்டிருக்கிறது’ என்று அவர் முகத்தை ஆதரவுடனும் ஆவலுடனும் நோக்கி நின்றேன்.
தராசின் தட்டு ஒரு புறமும் தாழவில்லை. மௌனமாகவே அவர் கலத்தை விட்டு எழுந்தார். வரதன் சும்மா இருக்கக் கூடாதா?
“ஏன் பட்டு, சமத்துவம், சமத்துவம் என்று பெண்கள் கோஷமிடும் போது நீ மட்டும் இப்படிப் பத்தாம் பசலியாக இருக்கிறாயே! வெந்நீர் கொண்டு வைத்தால் அது சூடா, இல்லையா என்று பார்த்து விட்டுக் குடிப்பதற்கு என்ன இந்தத் துரைக்கு? அதைக்கூட அவள் பார்த்து வைக்க வேண்டுமாக்கும்! மனைவி அன்பு மேலிட்டுச் சிசுருஷை செய்கிறாள் என்று நினைக்க வேண்டுமே ஒழிய, அவளை இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்று ஆணவத்துடன் நிர்ப்பந்தப்படுத்துவது சரியல்ல. என்னைக் கேட்டால், சமயம் நேரும் போது கணவனும் அதே போல் மனைவிக்கும் பணிகள் செய்ய வேண்டும் என்பேன்” என்று குட்டிப் பிரசங்கம் நிகழ்த்தி விட்டு எழுந்தான்.
கை கழுவி விட்டு வந்த என் கணவர் இம்முறை அவன் முதுகில் தட்டிக் கொடுத்து, “பரவாயில்லை, இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயே. பிழைத்துப் போவாய்” என்று நகைத்தார். அவன் உள்ளூற மகிழ்ந்து கொண்டதை முகம் காட்டியது. என் மைத்துனர் ஒன்றையுமே காதில் போட்டுக் கொள்ளாதவர் போன்று மௌனச் சாமியாராக வயிற்றைத் தடவியவாறு ஏப்பம் விட்டார். பட்டுவுக்கு முகம் நாலுபடி வெண்கலப் பானையைப் போல் உப்பியிருந்தது. அவளுடைய முறையீட்டை என் கணவர் எடுத்துக் கொண்டு என்னைத் தண்டிக்கவில்லை என்ற மனத்தாங்கல் உள்ளே இருப்பது வெளியே நன்றாகத் தெரிந்தது.
எனக்கோ, வரதன் முன்னிலையில் அவள் என்னை மட்டம் தட்டியதும், அவர் அதைக் கேட்டுக் கொண்டு எனக்குப் பரிந்து அரை வார்த்தைக் கூடப் பேசாமல் இருந்ததும், மனப்புண்ணிலே அதிகமாகத் தைத்தன. அவனுக்குக் கூடப் பொறுக்கவில்லை. அவர் பொறுத்து விட்டார்! உள்ளுக்காக இல்லாவிட்டாலும் ஊருக்காகவாவது பால் குடிக்க வேண்டாமா! அவருக்கே அவமானமாக இல்லையா? ஆனால் அவளுக்கு உரம் கொடுத்து, ‘ஏண்டி அதிகப்பிரசங்கி’ என்று கண்டிக்காமலிருந்தாரே என்னை? அந்த மட்டும் பெரிதுதான்.
அன்று ஏதேதோ கடிதங்கள் வந்தன. அவர்கள் பேச்சுக்களைக் கேட்டும், என் கணவர் தம் உடைகளைத் தனியே எடுத்து வைத்துக் கொள்வதைக் கண்டும் எனக்கு யாரோ நெஞ்சை அமுக்கிப் பிழிவது போல இருந்தது. காரியாலயத்திலே இருவரும் ஒரு வாரமாக இல்லாமல் இருந்ததே மிக மிக நெருக்கடியைக் கொணர்ந்து விட்டதாம். எனவே அவர் மறுநாளே போகிறார்!
அவர் என்னிடம் ஆதரவு காட்டிப் பரிந்து வரவில்லை. அன்பு மழை பொழிந்து ஆறுதல் காட்டவில்லை. என்றாலும் அவர் இருக்கும் வீட்டிலே நான் இருந்தேன். என் கண் முன் அவர் நடமாடிக் கொண்டிருந்தார். இனி அதுவும் இல்லை. சூரியன் இல்லாத வானம் போல, அச்சில்லாத தேர் போல என் வாழ்க்கை இந்த அழகிய ஊரிலே கழிய வேண்டும். குழந்தைகளுக்குத் தாதியாக, கூப்பிட்ட குரலுக்கு ஏவலாளியாக நான் உணர்ச்சியற்று உழைக்க வேண்டும்!
அவர் நெஞ்சம் கல்தானா? இருதயமே இல்லையா? என்னுடைய இந்த வாழ்க்கைக்கு முடிவே இல்லையா? நான் செய்து விட்ட தப்புக்கு, அதைத் தப்பு என்றே வைத்துக் கொண்டாலும், வாழ்வையே பலி கொடுக்க வேண்டுமா?
இருதயத்துள்ளே ஒரு பிரளயம் வந்து விட்டது போலக் குமுறியது. இரவு என்னுடன் தூங்கும் சுகுமாரும் மைதிலியும் வழக்கம் போல, “கதை சொல்லு, சித்தி” என்று கேட்ட போது, ஒன்றும் அறியாக் குழந்தைகளிடம், “கதையுமாச்சு கிதையுமாச்சு!” என்று ஒருநாளும் இல்லாமல் எரிந்து விழுந்தேன்.
வெளியே ஹாலிலே பட்டு, மைத்துனர், வரதன், அவர் நால்வரும் சீட்டாடிக் கொண்டிருந்தனர். சிரிப்பொலியும், சீட்டுக் கலைக்கும் சப்தமும் வரதனின் வெண்கலத் தொண்டையும் அவ்வீட்டையே கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருந்தன. கடிகாரத்தில் மணி பத்து அடித்து விட்டது. தூங்கி விட்ட குழந்தைகளைச் சரியாகக் கட்டிலில் நகர்த்தி விட்டேன். ஆயிற்று, இந்தச் சீட்டாட்டம் இன்னும் சற்றுப் பொழுதிலே ஓய்ந்து விடும். அப்புறம் அவர் பூனை போல் அடிமேல் அடி வைத்து ஓசைப்படாமல் கதவைத் திறந்து கொண்டு வருவார். என்னைப் பார்த்தாலே எங்கே நெஞ்சம் நிலைகுலைந்து விடுமோ என்று முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்வார். நான் விளக்கை அணைக்காமல் உட்கார்ந்திருப்பது தெரிந்தால், “இன்னும் படுத்துக் கொள்ளவில்லையா? விளக்கை அணைத்துவிட்டால் தேவலை” என்பார். அவரது மன உறுதி என்னைக் கல்லாக்கிவிடும். ஏதேனும் வாயைத் திறந்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தேனானால் அதைக் கூட மென்று விழுங்கி விடும்படி செய்து விடும் அவரது அசையா நெஞ்சம்.
பெண்கள் தங்கள் சாகசப் பேச்சிலும் மயக்கும் கண் வீச்சிலும் மோகனப் புன்னகையிலும் முற்றும் துறந்த முனிவர்களையும் நிலைகுலையச் செய்திருக்கிறார்கள் என்பதை நான் அறியாதவள் அல்ல. தூய்மையான அகக் காதல் இல்லாத இடத்தில் கீழ்த்தரமான மனப்பான்மைக்கு எழுச்சி கொடுக்கும் வண்ணம் எழும் முயற்சிகள் அவை. கணவன் – மனைவி என்ற புனித உறவுக்கு அஸ்திவாரம் இல்லாமல் எழும் உடற் கலப்பிலே வெறுப்புற்றுத் தானே என்றே நான் வெகுண்டு தள்ளினேன்? அவரிடம் நான் வேண்டி விழையும் அகக் காதலுக்கு என்ன என்ன சாதனைகள் செய்ய வேண்டும் என்பதை நான் அறிந்திலேனே!
ஜன்னல் திரையை அகற்றிவிட்டுக் கண்ணாடி கதவைத் திறந்தேன். மலைக்காற்றுச் சில்லென்று உள்ளே நுழைந்தது. என் உடல் சிலிர்த்தது.
புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு நான் வெளியே நோக்கினேன். பின் நிலாக் காலம் போல் இருக்கிறது. மலை மங்கை அந்தகாரத்தில் மறைந்து கிடந்தாள். வெளியே எங்கும் நிசப்தம் நிலவியது.
எங்கும் சூனியம். ‘இப்படித்தான் வாழ்வும். இப்படித்தான் உன் வாழ்வும்!’ என்று என்னுள்ளே சோக்குரல் பரவி ஒலித்தது. இதயம் எழும்பியது. சாளரத்தண்டையில் அமர்ந்த நான் விம்மி விம்மி அழுதேன். என் சிந்தனையிலிருந்து அந்த வீடு, ஆடம்பரம் அவர்களுடைய ஆட்டக் கலகலப்பு எல்லாம் அகன்று விட்டன. என் சூனிய உலகின் சோகச் சிறையிலே ஒன்றி எத்தனை நேரம் கண்ணீர் பெருக்கி இருப்பேனோ!
அறைக் கதவைத் திறந்து கிரீச்சென்று சார்த்தும் சப்தம் எனக்கு ஆழ்கடலின் அடியிலிருந்து வந்தது போல் இருந்தது. கட்டிலில் போய் உட்கார்ந்த அவர் தலையிலே கையை வைத்துக் கொண்டு நெடு மூச்செறிந்தது, டிக் டிக் கென்று நின்றுவிடும் போல் கட்டுக் கடங்காமல் துடித்த என் இருதயத்தை சம்மட்டிக் கொண்டு அடிப்பது போல் இருந்தது. என் அருகிலே எழுந்து வந்த அவர் அடுத்த விநாடி கண்ணீர் கறை படிந்த என் முகத்தை உற்றுப் பார்த்தார். “சுசீலா!” என்ற அவர் குரல் நடுங்கியது.
கல் நெஞ்சமும் கலங்கி விட்டதா? ஏன் இபப்டி என் உடல் சிலிர்க்க வேண்டும்? ஏனென்று பதில் வரவில்லை. விம்மல் உந்தியது.
தழுதழுத்த குரலைச் சமாளித்துக் கொண்டு, அவர் “என் வாழ்விலே நான் மகத்தான தவறுதல் செய்து விட்டேன் சுசீலா!” என்றார்.
தேளின் விஷத்தினால் நெறி ஏறித் துடிதுடிப்பவன் ஆவலுடன் மருந்தின் இதத்தை எதிர்பார்க்கும் போது கால கூட விஷம் உடலில் ஏறி விட்டால் எப்படி இருக்கும்? அவர் முகத்தை நடுநடுங்க ஏறிட்டுப் பார்த்தேன்.
“உன்னைக் கைப்பிடித்து மணம் செய்து கொண்ட போது, ‘என்னைப் போலப் பாக்கியவான் யாரும் இல்லை!’ என்று பெருமிதம் கொண்டிருந்தேன். மண மயக்கத்திலே மாபெரும் தவறு செய்கிறேன் என்பதை நான் அப்போது அறியவில்லை சுசீலா! என்னை மன்னித்து விடு. தீர விசாரியாமல், ஆலோசியாமல் நான் உனக்கும் எனக்கும் தீங்கிழைத்துக் கொண்டு விட்டேன். மன்னித்து விடு. இதை விட உனக்குச் சந்தோஷம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ள முடியாது சுசீலா.”
நெடுமலை ஒன்றிலிருந்து கிடுகிடு பாதாளத்தில் தள்ளி விடப்பட்டது போல் இருந்தது எனக்கு. இந்த வீழ்ச்சியில் ஏற்பட்ட ஆத்திரம் என் நெகிழ்ச்சி யாவும் அவருடைய உருக்கத்தில் ஓடுவதற்குப் பதிலாகப் பாறையாகக் கெட்டிப்பட்டன. நான் அவருடைய வாழ்விலே புகுந்து விட்டது அவருடைய அண்ணா மதனி இணைப்பிலே பிளவு காண ஏதுவாகி விட்டது என்பதை எத்தனை உருக்கமாகச் சொல்லுகிறார்! என்னைக் கைப் பிடித்த போது என் ராட்சசத்தனம் தெரியவில்லையாம்! அவருக்கு என் மீது ஏற்படும் அன்பு, நான் அவருடைய மதிப்பைப் போற்றுவதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது! சே! எத்தனை சுயநலப் பிராணி இவர். கோழை. ஆம் கோழை தான். இல்லாவிட்டால் அண்ணாவை விட்டு என்னுடன் சுதந்திரமாக வாழ்க்கை நடத்த விழைய மாட்டாரா? காரும் பங்களாவும் சீரும் சிறப்பும் வேண்டாமே! அவர்களிடம் மனத்தாங்கல் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள மாட்டவே மாட்டார். ஆனால் இந்தப்புறம் நான் சீற்றம் கொண்டு வெகுளுவேன். அவர் மேல் பாய்ந்து விழுவேன் என்பதற்காக இந்த உருக்கம்! இந்தத் தியாகங் கூட அதனால்தான். என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால், அவர்கள் இட்ட கோட்டை மீறி வரமாட்டார். வெறுப்பு என் வைராக்கியத்தை எழுப்பியது. விருட்டென்று விளக்கை அணைத்தேன். ஜன்னல் கதவைச் சாத்தித் திரையைத் தள்ளிவிட்டு என்றும் இல்லாத உறுதியுடன் படுத்துக் கொண்டேன்.
3.5 காய்
மனோகரம் கமழும் மாலை வேளை. ஜோடியாக ஆடவரும் பெண்டிரும் மனத்தைக் கவரும் ஆடைகளை அணிந்து உல்லாசமாக மலைப்பாதையிலே கவலையற்றவர்களாகச் சென்றார்கள். செல்வர்களான சுகவாசிகளின் ஒய்யார வாழ்க்கையைப் பறையடித்துக் காட்டும் வண்ணம் ரஸ்தாவில் இப்படியும் அப்படியுமாகப் போகும் விதம் விதமான கார்கள் தங்கள் அழகை மாலை வெயிலில் மிகைப்படுத்திக் காண்பித்தன. ஆதவனின் அந்திப் பொன்னிறத்திலே ஒன்றிப் போயிருந்த மலையரசி ஜன்னலிலே அமர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி நகைப்பது போல் இருந்தது. வரதன் பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்த வீட்டின் அந்த ஜன்னலிலே அதுவரை யாரும் சோகத்தைக் கக்கியிருக்க மாட்டார்கள். இனி மேலும் யாரும் வரப் போவதும் இல்லை. ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்த்தால் கடவுள் அருள் வள்ளல்தாம். கஷ்டத்தையும் கொடுக்கிறார், அப்படி ஒரு துயரம் நேரிட்டால் நாம் எப்படிச் சமாளிப்போம் என்று பீதி கொண்டிருக்கும் போது தாங்குவதற்குச் சக்தியையும் அளிக்கிறார். எப்படிச் சகித்துக் கொள்கிறோம் என்றே அந்த சமயத்தில் புரிவதில்லை. பின்னால் கூட, ‘நாமா அந்த மலையைத் தாங்கினோம்’ என்ற ஆச்சரியம் எழும்.
நான் பயந்தது இப்போது எனக்கு லபித்து விட்டது. அவர் மனத்திரைக்குள் என்ன இருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டாம். ஆராய்ச்சிகள் செய்து குட்டையைக் குழப்பி விட வேண்டாம். என் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார். காதலைத் தெய்வீகமாகப் போற்ற மாட்டார். ஏதோ அவர் இஷ்டப்படி, இழுக்கும் இடத்தில் எல்லாம் நீண்டு கொடுக்கும் ரப்பரைப் போல, நானும் இருப்பேன் என்று என்னைக் கேவலமாக நினைத்து விளையாட்டு போல் மணந்து கொண்டு விட்டார். இப்போது அவருக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம்! படுகுழியில் விழுவோமோ, விழுவோமோ என்ற திகிலிலிருந்து விழுந்து விட்டேன் என்று தீர்ந்து விட்டது. என் போன்ற அதிசய வாழ்வு எந்தப் பொண்ணுக்காவது கிட்டி இருக்குமா? “ஐயோ பாவம்! புக்ககம் படு கர்நாடகம், அவன் ஓர் அம்மா பிள்ளை, ரொம்பவும் கஷ்டப்படுகிறாள் பெண்” என்று ஜகதுவிடம் தோன்றும் அநுதாபங்கூட என்னைக் கண்டு யாருக்கும் தோன்றாது. நாகரிகப் போர்வையும், ஆடம்பர வாழ்வின் முகமூடியும் இவர்களது உண்மைத் தோற்றத்தை வெளியே காண்பிக்க மாட்டா. என் அவல நிலையும் வெளியே தெரியாது!
இதுதான் என் தலைவிதி என்று எத்தனை தீர்மானமாக உறுதி கொள்ள முயன்றாலும், என்னை அறியாமலே இருதயத்தின் ஒரு மூலையிலே வானம் குமுறுவது போலக் குமுறிக் கொண்டிருந்தது. எந்தத் திசையில் செலுத்தலாம் மனத்தை என்று யார் யாரையோ சிந்தித்துப் பார்த்தேன்.
ஊர் நினைவு வந்ததும் சரளா என்னுள் வந்தாள்.
அப்புறந்தான் எனக்கு ஞாபகம் வந்தது. புங்கனூரோடேயே என் சங்கீத அபிவிருத்தியை மூட்டை கட்டி விட்டேனே.
வீட்டிலே அப்போது யாருமே இல்லை. பெரிய குழந்தைகள், மைத்துனர், பட்டு எல்லோரும் கூனூர் ரோஜாத் தோட்டத்துக்குச் சென்றிருந்தனர். வரதனும் எங்கோ போயிருந்தான். விளக்கேற்றி விட்டு இரண்டு பாட்டுப் பாடலாம் என்ற எண்ணத்துடன் அறையை விட்டு வெளியே வந்தேன்.
அவ்வளவு ஆடம்பரமாக எல்லாவிதச் சுக சௌகரியங்களும் நிரம்பியிருந்த அந்த வீட்டிலே சுவாமியறைப் படமோ, குத்துவிளக்கோ ஒன்றையும் காணவில்லை. செல்வமும் சுகமும் இருந்து விட்டால் கடவுளின் நினைப்பு அநாவசியம் போலும்! நான் இருந்த அறை அலமாரியில் நான்கு மெழுகுவர்த்திகள் என் கண்களில் தென்பட்டன. எப்போதாவது மின்சார ஓட்டம் தடை பெற்று விளக்கு அணைந்து விட்டால் அவசரத் தேவைக்காக அவற்றை வாங்கியிருக்க வேண்டும். ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தேன். தீப ஒளியை ஒரு நிமிஷம் என்னை மறந்து உற்று கவனித்தேன். முழுவதும் பிழம்பாகத் தெரியவில்லை. அடியிலே நீலம். நடு மையத்திலே சந்திரனின் மையத்தைப் போன்ற கருமை. நுனியிலே கொழுந்துச் சிவப்பு. இத்தனையும் தாங்கிக் கொண்டு ஒளி சுடர் விட்டெரிந்தது. படாடோபமாகக் கண்ணைப் பறிக்காமல் அடக்கமாக மனத்துக்குச் சாந்தியையும் குளிர்ச்சியையும் இதனாலேயே தான் தீபச்சுடர் அளிக்கிறது என்று அறிந்து கொண்டேன்.
‘இன்னல், கவலை, சோர்வு ஆகியவை இருந்தாலும் இந்த ஒளியைப் போல அன்பின் சுடரால் தாங்கப்படும் வாழ்வைக் கொடு, தேவி!’ என்று என்னையும் அறியாமல் உள்ளம் பிரார்த்தித்துக் கொண்டது.
பிறகு நான் என் மனத்தை விட்டுத் துன்பங்களை எல்லாம் மறந்து பாடினேன். ஒரு பாட்டு, இரண்டு பாட்டு என்று என் மனம் முழுவதும் அதில் லயித்தது, சாந்தி கண்டது. யாருமே என்னைத் தடுப்பார் இருக்கவில்லை. தன்னிச்சையாகத் தோன்றிய கீதங்களை எல்லாம் நான் இசைத்துக் கொண்டிருக்கும் போதே, நான் பார்த்துக் கொண்டிருந்த மெழுகுவர்த்தி அணைந்தது. ஜன்னல் கதவு திறந்திருக்கிறது. ‘காற்று அணைத்து விட்டது போலிருக்கிறது’ என்று எண்ணியவளாகச் சார்த்துவதற்காக எழுந்தேன். திரும்பிய நான் திகைப்பூண்டை மிதித்தவள் போல மருண்டு நின்று விட்டேன். அறை வாயிற்படியிலே இரு கைகளையும் பக்கத்துக்கு ஒன்றாக வைத்த வண்ணம் புன்னகை மலர்ந்த வதனத்துடன் வரதன் நின்றான்! எத்தனை நேரமாக இருக்கிறானோ? “மிக நன்றாகப் பாடுகிறாயே சுசீலா! பக்க வாத்யம் இல்லாமல் ரேடியோவில் யார் பாடுகிறார்களோ என்று நான் எண்ணிக் கொண்டே வந்தவன், நீ பாடுகிறாய் என்று தெரிந்து கொண்டதும் அதிசயப்பட்டுப் பிரமித்து விட்டேன்! இவ்வளவு இனிமையான சாரீரமும் சங்கீதத் திறமையும் படைத்தவள் நீ என்று எனக்கு இதுவரை யாருமே சொல்லவில்லையே!” என்றான்.
வெட்கமும் பயமும் என்னைச் சூழ்ந்து கொண்டன. அசையவும் மறந்தவளாகத் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்றேன்.
“எத்தனை வருஷம் சிட்சை சொல்லிக் கொண்டிருக்கிறாய்? யாரிடம்?” என்று அவன் கேட்டான்.
நான் கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல முணுமுணுத்தேன்.
“இன்னும் இரண்டு பாட்டுக்கள் பாடுகிறாயா? அதற்குள் ஏன் எழுந்து விட்டாய்? நான் வந்து விட்டேன் என்றா? நானும் ஓரளவு சங்கீதம் பயின்றிருக்கிறேன். கொஞ்ச காலமாக வீணை கூடச் சாதனை செய்து வருகிறேன். நீ இவ்வளவு உயர்தரமாகப் பாடுவாய் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டதே இவ்வளவு நாளாக” என்றான் அவன். பலவந்தமாக ஒரு சிறைக்குள் அகப்பட்டுவிட்டது போல் இருந்தது எனக்கு. வீட்டிலே யாரும் இல்லை. ‘இவன் சொல்லுகிறபடி பாடலாமா? திடீரென்று பட்டுவும் மைத்துனரும் வந்து விட்டால் என்ன நினைத்துக் கொள்ள மாட்டார்கள்? ஆனால் ஏன் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டும்? அவனுக்கும் இந்தக் கலையிலே ஞானம் இருக்கிறது. என்னை மதித்து, விரும்பி இரண்டு பாட்டுக்கள் பாடச் சொல்லும் போது நான் மறுக்கலாமா?
நான் புக்ககம் வந்து அத்தனை நாட்களிலே என்னைப் பாடு என்று யாருமே அதுவரையில் சொன்னதில்லை. பெரும்பாலும் விவாகத்துக்குப் பெண் பார்க்க வருகிறவர் பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா? என்று கலை ஆர்வம் உள்ளவர்களைப் போல் காண்பித்துக் கொண்டு பெண்ணைப் பரீட்சை செய்து பார்ப்பதுடன் சரி, கணவன் வீடு வந்து விட்டால் அவள் பாட்டு, ஆட்டம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட வேண்டியதுதான். குழந்தையின் வளர்ச்சிக்குத் தாயின் அரவணைப்புத் தேவையாக இருப்பது போல, கலை வளர்ச்சிக்குப் பிறருடைய உற்சாகத் தூண்டுதல் தேவை. அது இல்லாவிட்டால் உள்ளே இருக்கும் கலை சோம்பு உறங்கி மங்கி விடும். மனைவி கற்றிருக்கும் அருங்கலையைப் போற்றி வளர்க்கும் கணவன்மார்கள் நம் சமூகத்தில் மிகக் குறைவு. அப்படியே அவன் ஆர்வம் உள்ளவனாக இருந்தாலும் சூழ்நிலை சரியாக இருப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை ரஸிகத் தன்மையைத் தொட்ட கையைக் கூடக் கழுவிக் கொண்டு பிரமன் அவரைப் படைத்திருக்க வேண்டும். அவரைச் சார்ந்தவர்களும் சங்கீதத்தை வீசையாக அளக்கும் ஞானந்தான் படைத்திருந்தார்கள்.
ரேடியோ வைத்திருக்கிறார்களே, அது பெருமைக்குத்தான். கடனே என்று அது ஏதாவது அழுது கொண்டிருக்க, அவர்கள் சுவாரசியமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். தூண்டுதல் இல்லாவிட்டால் பாடவே முதலில் மனம் எழும்புவதில்லை. இரண்டாவதாக எனக்கு அந்த வீட்டிலே எங்கே ஓய்வு இருந்தது?
இப்போது வரதன் என் கானத்தை ரஸித்துக் கேட்டிருக்கிறான். உற்சாகத்துடன் இன்னும் இரண்டொரு பாட்டுக்கள் இசைக்கத் தூண்டுகிறான். என் கலை தளிர்த்து வளர இதுதானே தேவை? நான் ஏன் பாடக் கூடாது?
மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு நான் என்ன பாட்டுப் பாடலாம் என்று யோசனை செய்தேன். அதற்குள் அவன், “இரு சுருதிப் பெட்டி கொண்டு வருகிறேன்” என்று போனான்.
நான் இதுதான் சமயமென்று கூடத்துக்குள் வந்து உட்கார்ந்து கொண்டேன். நடுவே அவன் சுருதிப் பெட்டியைக் கொண்டு வந்து வைத்தான். எனக்குக் குரல் நடுங்கியது. அவசர அவசரமாக ஒரு பாட்டைப் பாடி முடித்து விட்டு எழுந்தேன்.
“நான் சொல்லாமலே நீ பாடிக் கொண்டிருந்தாயே, அந்த இனிமை இப்போது குன்றி விட்டது. நான் முட்டாள்தனம் பண்ணினேன். தெரியாமல் வெளியிலேயே நின்றிருக்க வேண்டும்!” என்று அவன் நகைத்தான்.
சங்கோசத்தின் பிடியிலேயே சிக்கிக் கிடந்த நான் தலையைக் குனிந்து கொண்டு மௌனம் சாதித்தேன்.
“நீ இப்போது பாடினாயே, அந்தப் பாட்டை நான் வீணையில் அப்பியசித்து வருகிறேன். இதோ வாசிக்கிறேன். எப்படி இருக்கிறதென்று சொல், பார்க்கலாம்!” என்று என் பதிலை எதிர்பாராமலே அவன் வீணையைத் தூக்கிக் கொண்டு வந்தான்.
அடி மனத்தில் அச்சம் துடித்தது எனக்கு.
சுருதி கூட்டிக் கொண்டு அவன் நான் பாடிய கீதத்தை அதே மாதிரியில் வீணையில் இசைத்தான். அவ்வளவு உயர்தரமாக அவன் வாசிப்பான் என்பதைச் சிறிதும் எதிர்பார்த்திராத எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. “என்னைக் கேலி செய்வது போல வாசித்து விட்டீர்களே!” என்று மெல்ல திகைத்தேன்.
“இல்லை, சரணத்தின் அடியில் நீ நிரவல் செய்தாயே? அந்தக் கற்பனை, புது மாதிரியாக இருந்தது. எனக்கு அது வரவில்லை. எங்கே அந்த அடியை மட்டும் கொஞ்சம் இன்னொரு தரம் சொல்லிக் காட்டேன்” என்றான் வரதன்.
என் அச்சத்தினூடே இந்தப் புகழ்ச்சி சற்று உற்சாகத்தையும் ஊட்டியது.
“சும்மா வேடிக்கை செய்கிறீர்கள். நான் பாட மாட்டேன்” என்று கொஞ்சம் பிகுவாகவே உள்ளே ஓடி வந்து விட்டேன்.
நல்ல வேளையாக அப்போது பட்டுவும் மைத்துனரும் வந்து விட்டதை அறிவித்தபடியே சுகுமாரும் மைதிலியும் கட்டியம் கூறிக் கொண்டு குதித்தோடி வந்தனர்.
வீணையும் கையுமாக அமர்ந்திருந்த வரதனை மைத்துனர், “ஏதேது வரதா, வீணை கீணை எல்லாம் வாங்கி வாசிக்கிறாயா, என்ன?” என்று வியப்புடன் வினவினார்.
“ஏதோ பொழுது போக்காகக் கற்றுக் கொண்டேன். அடுத்த வாரம் வானொலியில் முதல் தடவையாக என் குரல் கூடக் கேட்கும்” என்று என்னிடம் கூறாத சங்கதியைக் கூறிவிட்டு அவன் வீணையைக் கீழே வைத்தான்.
“சுசீலா!” என்று என்னைக் கூப்பிட்டுக் கொண்டு நேராக உள்ளே வந்தான் பட்டு.
“வரதன் வந்து வெகு நேரம் ஆகிவிட்டதா? டென்னீஸ் மாட்சுக்குப் போவதாகச் சொல்லிப் போனானே?” என்று கேட்டாள்.
“எனக்கே எப்போது வந்தார் என்று தெரியாது. நான் வேலையை முடித்துக் குழந்தையைத் தூங்கப் பண்ணி விட்டு வரும்போது இங்கே பாடிக் கொண்டிருக்கிறார்” என்றேன். பின் என்ன சொல்லுவது?
“சரிதான். இனிமேல் சொல்லி வைக்கிறேன். அவன் சற்றுக் கபடமற்றுப் பழகுவான். இருந்தால் கூட பார்க்கிற பேருக்கு நன்றாக இருக்காது, பார். அதிகமாக அவனுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாதே” என்று இதமாக என்னைக் கண்டித்து வைத்தாள். “ஆகட்டும் மன்னி” என்று நான் தலையை ஆட்டினேன்.
அவளுக்கு அதற்குள் புத்தி எப்படிப் போய் விட்டது? இந்தச் சங்கடத்துக்காக அவளால் வீட்டிலே தங்குவதும் சாத்தியம் இல்லை. என்னை அழைத்துச் செல்லவும் முடியாது. வரதனைக் கட்டுப்படுத்துவதும் இயலாத காரியம்.
கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் அதிகமாக இருக்கும் இடத்திலே தான் எப்படியாவது சிறிய இடைவெளி ஏற்படுவது வழக்கம். வரதனுடன் நான் பேசுவதைப் பற்றி அவள் எச்சரிக்கை செய்தாள். ஆனால் சமயத்தில் அந்தக் கட்டுப்பாட்டின்படி நான் ஊமையாகி விடுவது சாத்தியமாக இருக்கிறதா? வேற்று ஆண்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும் கிராமத்துச் சூழ்நிலையாக இருந்தாலும் சரி. இந்த இரண்டுங் கெட்டான் நிலையில் நான் என்ன செய்வேன்! சாளரக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு முதல் நாளைப் போல இரவின் கரிய நிறத்தை வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். மணி பத்து பத்தரை இருக்கும். அறை விளக்கை அணைத்திருந்தேன். என் மனத்தின் மூலையில் புதையுண்டிருந்த பொருமல் மெள்ள மெள்ளத் தனிமையில் தலை தூக்கியது. முன்னாள் நான் அப்படி உட்கார்ந்திருந்ததும், அவர் வந்ததும், பேசிய சொற்களும் படலம் படலமாக என் முன் அவிந்து, ஆடும் நாகத்திற்கு ஊதும் இசை போல அந்தப் பொருமலுக்கு ஆவேசம் கொடுத்தன.
மனித வாழ்விலே எதிர்பாராத விதமாக விபத்துகள். நோவ் நொடிகள் முதலிய எத்தனையோ அதிர்ச்சிகள் நேரிடுகின்றன. அதெல்லாம் விதியின் செயல். தடுக்க முடியாதவை என்கிறார்கள். அப்படி என் நிலையும் விதியின் செயலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அற்ப நிகழ்ச்சியில் உண்டான அர்த்தமற்ற பயத்தில் ஆரம்பித்து, இன்று ஆதரவே இல்லாத அவல நிலையில் அல்லலுறும் வரை எப்படி வந்தேன் நான்? உலகத்திலேயே இல்லாத அதிசயமாக, என்றோ ஆதரவு காட்டிய அண்ணன் மதனியிடம் காட்டும் நன்றியுணர்ச்சிக்காக மனைவியின் உணர்ச்சிகளைத் துச்சமாகக் கருதுவாரா இவர்? யாரும் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள்.
நீர்த் திரையிட்ட விழிகளை நிலைநிறுத்தி அசையாமல் இருளை நோக்கினேன். கீழே இருந்த ரஸ்தாவில் வரிசை வரிசையாகத் தென்பட்ட முனிசிபாலிடி விளக்குகள் மலையரசிக்கு அழகாக மாலையிட்டது போல் காணப்பட்டன. வானத்திலே சந்திரன் இல்லை. நட்சத்திரங்கள் இல்லை. மரம் செடி கொடிகள் கூட அசையாமல் நின்றன. வீட்டைச் சுற்றிச் சென்ற நடைப்பாதையில் முன்புற வழியாக ஏதோ ஓர் உருவம் வருவதுபோல் தோன்றியது.
‘யார் இந்த வேளையில் இந்த வழியாக வருபவர்?’ என்ற அச்சத்துடன் நான் ஊன்றிக் கவனித்தேன். ஓவர் கோட்டும் தலையில் தொப்பியும் அணிந்த ஆண் உருவந்தான். ‘திருடன் இப்படியும் வருவானோ?’ என்று ஒரு கணத்துக்குள் என்ன என்னவோ எண்ணிவிட்ட எனக்கு சட்டென்று ஜன்னலைச் சாத்திவிட்டு உள்ளே வந்து விட வேண்டும் என்று தோன்றவில்லை. சற்றும் நான் எதிர்பாராத விதமாக ‘டார்ச்’ விளக்கின் ஒளி நடை பாதையில் விழுந்தது. மேகத்தின் நுனியிலே காணும் வெள்ளி விழும்பியது. ‘விளக்கைப் போட்டுக் கொண்டு வரும் இந்த ஆள் திருடனா இல்லையா என்று பார்த்து விடுவோமே? திருடனாகத் தோன்றினால் ஒரே கூச்சலில் வீட்டில் உள்ளவர்களை எழுப்பி விடலாமே’ என்று குழந்தை போல் எண்ணமிட்டேன். டார்ச் விளக்கின் ஒளி என் மீது விழுந்தது. கூடவே, “இன்னும் நீ தூங்காமலா ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறாய், சுசீலா? குளிர் காற்று உள்ளே வரவில்லை?” என்று வரதன் குரல் கேட்டது.
நான் ஒரு விநாடி வெலவெலத்துப் போனேன். “நீங்களா?” என்று குழறியிருக்கிறேன்.
“ஏன்? திருடன் எவனாவது உள்லே வருகிறான் என்று பயந்து விட்டாயாக்கும்!” என்று அவன் நகைத்தான். பின் “எனக்கு இரவின் அமைதியிலே அசைவற்று நிற்கும் இந்த மலைமோகினியின் வனப்பைக் காண்பதிலே ஒரு பைத்தியம். அதோ அந்த முனையிலிருந்து பார்த்தால் ஆகா!” என்றான் பரவசமாக.
நான் ஆறுதலாக மூச்சு விட்டேன். “நீங்கள் கேட்பது போலத் திருடன் என்று தான் எண்ணினேன். கத்துவதாகக் கூட எண்ணி விட்டேன்!” என்றேன்.
“நல்ல வேளை!” என்று அவன் நிறுத்தினான்.
நான் ஜன்னல் கதவைச் சார்த்துவதற்காக கொக்கியைத் தள்ளினேன்.
“இந்த மலையரசி தினம் தினம் இப்படி இருள் துகிலில் மறைந்து கொண்டு காதலன் வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் சிந்துவதைக் கண்ணுறுவதுடன் அன்றி, நிஜ மங்கை ஒருத்தியும் அதே நிலையில் இருப்பதை இப்போது பார்க்க நேரிட்டிருக்கிறது.”
என்னைத் தூக்கி வாரிப் போட்டது. பரந்த நோக்கு, பரந்து நோக்கு என்றால் அதற்கும் இன்னதுதான் பேசலாம், பேசக்கூடாது என்று எல்லை இல்லையா? நான் திகைத்து நிற்கையிலே அவன் தொடர்ந்தான்.
“ஆனால் இந்த மலை மங்கையின் தாபம் வீண் போகாது. செம்பொன்மயமான பிரகாசத்துடன் கதிரவன் தன் இருதயக் கதவைத் திறந்து அவளை ஏற்றுக் கொள்வான். சிந்திய கண்ணீர் அத்தனையும் புல் தரையிலே முத்துக்களென ஒளி விடும்படி அவள் உவகை கொள்வாள்.”
இந்தச் சித்திரச் சொற்கள் என் கருத்தைக் கவர்ந்தன. வர்ண விசித்திரங்களைக் கண்டு பிரமித்து மனத்தை மயக்க விடும் குழந்தை போல, அவனுடைய ரஸிக உள்ளம் என்னைப் பிரமிக்கச் செய்தது.
“உம், அப்புறம்?” என்று நான் கேட்பது போல என் நிலை அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
“நாயகனது ஒளியிலே ஒன்றிப் பகலெல்லாம் எனக்கு நிகர் யாரும் இல்லை என்று இறுமாந்து கிடப்பாள். மறுபடியும் அவன் அவளிடம் விடைபெற்றுக் கொள்ளும் காட்சி இருக்கிறதே, அதை நீ கவனித்திருக்கிறாயா?” என்று அவன் கேட்டான்.
“இல்லை, நான் கவனித்துத்தான் என்ன பிரயோசனம்? இம்மாதிரி எல்லாம் எனக்குப் பேச வராதே?” என்று பதில் அளித்த என்னை மனத்தின் உள்ளே குதிரையோட்டி கடிவாளத்தைப் பிடித்து இழுப்பது போல ஏதோ ஒன்று பின்னுக்கு இழுத்தது. “சுசீலா! ராமநாதனுக்கும் உனக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளை நான் நேற்று இப்படி வரும் போது கேட்க நேரிட்டுவிட்டது. பட்டு உன்னை இப்படி அடிமை போல் நடத்துவதை அவன் அநுமதித்திருப்பதே எனக்குச் சரியாகத் தொனிக்கவில்லை. அப்போதிலிருந்து எனக்கு உன்னைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. உண்மையில் நான் அநுதாபம் கொண்டு பொறுக்காமல் கேட்கிறேன். அவன் உன்னை எப்போதும் இப்படித்தான் நடத்துகிறானா?”
ஆயிரம் தேள்கள் ஒரே சமயம் என்னைக் கொட்டின. வானத்துக் கருமேகங்கள் என் மீது வந்து மோதின. உடலும் உள்ளமும் காந்தின.
பளாரென்று ஜன்னல் கதவைச் சார்த்தித் திரையை இழுத்து விட்டேன். படுக்கையில் வந்து வீழ்ந்தேன்.
உள்ளூறப் புண் இருக்கும் போது அவ்வளவாகத் தெரியாத வேதனை பிறர் கண்களில் பட்டு அவர்கள் கேட்கும் போது உயிர் போகும்படி நோகிறதே. அன்று மூர்த்தி கேட்டான். ஏதோ மழுப்பினேன். இந்த வரதன் – பாம்பைப் போன்றவனா, பழுதையைப் போல் அபாயமற்றவனா என்று எனக்குத் தெரியாத வரதன் – எங்கள் வாழ்க்கைச் சகடத்தின் அச்சு முறிவது போன்று நிகழ்ந்த பேச்சு வார்த்தைகளைக் கவனித்திருக்கிறான். அவர் என்னைச் சிறையிலே தள்ளி ஆயுட்காலம் முழுவதும் துன்புறுத்தட்டும். ஆனால் இந்தச் சித்திரவதை, வரதன் போறவர்களுக்குத் தெரியக் கூடாதே! அவன் அநுதாபம் எனக்கு ஆறுதலுக்குப் பதில் வெடிக்கும் வேதனையை அன்றோ கிளப்பி விடுகிறது? அத்துடன் இப்படிக் கூறக்கூட எனக்குக் கூச்சமாக இருக்கிறது. என்னை எப்படி வேண்டுமானாலும் அவர் கொடுமை செய்வதைப் பொறுத்துக் கொள்ள எனக்குச் சக்தி இருக்கிறது. ஆனால் அவர் என் முன்னேயே பிறரின் அவமதிப்புக்குள்ளாவதைப் பொறுக்காமல் உள்ளம் குமுறுகிறதே. பெண்ணுள்ளத்தை அளவிட இயலாத பலவீனத்தின் கோளாறா இது? அல்லது வாழையடி வாழையாகப் பத்தினிப் பெண்களின் பண்பாட்டில் ஒளியுறும் பாரத நாட்டிலே பிறந்ததற்கு உரித்தான மேன்மைக் குணத்தின் கோளாறா?
3.6 காய்
வரதன் கூறியது உண்மைதான். தன் காதலியைப் பிரிந்து அடி வானத்திலே மறையும் போது கதிரவன் என்ன என்ன ஜாலங்கள் செய்கிறான்! ஒரேயடியாக மறைந்து விட்டால் அவள் எங்கே சோர்ந்து விடுவாளோ என்ற எண்ணம் போலும் அவனுக்கு! ஒரு விநாடி தன் ஒளி முகத்தைக் காட்டுவான். பின்னர் கொஞ்சம் மேகத் திரைக்குள் மறைந்து பின்னே செல்வான். மறுபடியும் ‘இதோ இருக்கிறேன்’ என்று தன் பொற்கதிர்களால் அவளை அணைத்துக் கொள்வான். பெண்களை மயக்கும் இந்தக் கொஞ்சல் வித்தை அவனுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது! இந்த ஜால வித்தையை அறியாத மலையரசி, காதலன் தன்னுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தைக் கண்டு பரவசம் அடைந்தவளாக மெய் மறந்து விடுவாள். உள்ளே மறைந்தவன் வருவான் என்று அகம் துடிக்க அவள் நிற்கும் போதே அவன் போயே போய் விடுவான். ஏக்கமும் நிராசையும் சூழ்ந்தவனாக அவன் கரிய கங்குல் கொண்டு தன்னை மறைத்துக் கொள்வான்.
சில நாட்களில் மலை மோகினியை ஏளனம் புரிவது போல, வான வீதியிலே அவள் ஒளி நாயகன் இருந்த இடத்திலே சந்திரன் ஆயிரமாயிரம் நட்சத்திரக் கன்னிகையர் சூழப் பவனி வருவான். அப்போது எனக்குச் சட்டென்று வரதனின் அநுதாபம் நெஞ்சிலே ஈட்டி போல நினைவுக்கு வரும். நான் முகங் கொடாமல் அன்று படாரெனக் கதவைச் சார்த்தியும் கூட அவன் என்னிடம் எந்த மாறுதலையும் காட்டவில்லையே! எவ்விதச் சங்கடமும் இன்றி முன்போலவே அவன் நடந்து கொண்டானே ஒழிய அந்தச் சம்பவத்தைப் பற்றியோ, அம்மாதிரியான விஷயங்களைப் பற்றியோ அவன் பேசவே இல்லை. ‘உண்மையாக ஏதோ அநுதாபம் கொண்டும் கேட்டிருக்கிறானே ஒழிய, விகற்பமாக எண்ணுவது தவறு. ஆடவர் எவருடனும் இன்னமும் கலகலப்பாகப் பழகி இராததனாலே, கெட்டிப்படாத மனத்தில் ஏற்படும் சலனந்தான் இது’ என்று தைரியத்தைக் குவித்துக் கொண்டேன்.
அவன் குரலெடுத்துப் பாடும் போது, பெருந்தொண்டை கொண்டு நகைக்கும் வரதனா இது என்று எனக்குப் பிரமை தட்டி விட்டது. விரிசல் ஏதும் இல்லாத அவன் சன்னக்குரல் வெகு சுலபமாக மூன்று ஸ்தாயிகளிலும் மனத்திற்கு ரஞ்சகம் ஊட்டும்படி சஞ்சாரம் செய்தது. அநேகமாக மாலை ஆறு மணிக்கு மேல் அவன் வெளியே போவதே இல்லை. பட்டுவும் மைத்துனரும் வீட்டில் இருந்தால், தான் பாடுவதுடன் நின்று விடுவான். இல்லாவிட்டால் என்னிடம் ‘அது இப்படி, இது இப்படி’ என்று ராக விஸ்தாரங்களையும் லட்சணங்களையும் பற்றி ஏதாவது பேசுவான். என்னையும் இரண்டொரு பாட்டுக்கள் பாடச் சொல்லுவான். எனக்குத் தெரியாத விஷயங்களை நான் இந்தப் புதுக் கலை நட்பின் மூலம் அவனிடமிருந்து அறிந்து கொண்டேன். மனச் சஞ்சலம் மாறி ஏற்பட்ட உற்சாகத்தில் அவனிடமிருந்து இரண்டொரு பாடல்களைக் கூடக் கற்றுக் கொண்டேன். இந்த வரம்பை மீறி அவனும் என்னிடம் ஏதும் அநாவசியமாகப் பேசவில்லை. நானும் அவர்கள் சீட்டுக் கச்சேரி கலைந்து விட்டது என்று அறிந்தவுடனேயே விளக்கை அணைத்து ஜன்னல் கதவைச் சாத்தி விடுவேன்.
அன்று பட்டுவும் மைத்துனரும் மட்டும் ஏதோ படம் பார்க்கச் சென்றிருந்தனர். குழந்தைகள் வாசல் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். வரதன் வீணையில் புதிய பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டிருக்க, சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். என்ன தான் துணிச்சலை வருவித்துக் கொண்ட போதிலும், அவனுக்கு நேர் எதிரே சரிசமமாக உட்கார்ந்து வார்த்தையாட என் மனம் கூசியது.
மைதிலியும் சுகுமாரும் உள்ளே வந்து, “சித்தப்பா வந்துட்டா! வரப் போறார்னு நீ சொல்லவேல்லியே சித்தி? சித்தப்பா வந்துட்டா!” என்று சந்தோஷக் கூச்சலோடு என் கையைப் பிடித்து இழுத்தனர்.
“யார் ராமுவா வருகிறான்? இப்ப ஏதுடா வண்டி?” என்று கேட்ட வரதன் வீணையைக் கீழே வைத்தான்.
“நிஜம்மா கீழேயிருந்து தெருவிலே ஏறி வரா. நளினி அதுக்குள்ளே ஓடிப் போயிடுத்து” என்று கைகளை ஆட்டி அவர்கள் விளிக்கிறார்கள். அதற்குள் அவரே கூடத்துக்குள் நளினியைக் கையில் பிடித்துக் கொண்டு நுழைந்தார். கையில் இருந்த சிறிய தோல் பெட்டியைக் கீழே வைத்த அவர், “என்ன வரதா இது? வீணை கீணை எல்லாம் நீயா வாசிக்கிறாய்? தெரியவே தெரியாதே எனக்கு!” என்று வியப்புறும் விழிகளுடன் நோக்கினார்.
“இப்போது ஏதடா வண்டி? சொல்லாமல் கொள்ளாமல் ‘அவளை’ நினைத்து எப்படி வந்து குதித்தாய்?” என்று வினவினான் வரதன்.
“கோயம்புத்தூர் வரை வரவேண்டி இருந்தது. இவ்வளவு தூரம் வந்தோமே, இங்கும் வந்துவிட்டுப் போகலாம் என்று இரண்டு மணி பஸ்ஸில் நினைத்துக் கொண்டு கிளம்பினேன். உங்களைத் திகைக்க வைக்க வேண்டும் என்று தான் சொல்லாமல் கொள்ளாமல் வந்தேன்” என்று அவர் புன்னகை புரிந்தார்.
‘திகைக்க வைக்கவா? நிஜமாகவே திகைக்க வைக்கவா?’ என்று என் மனம் ஏனோ ஒரு விநாடியில் துள்ளிக் குதிக்க வேண்டும்!
சற்றைக்கெல்லாம் அவருக்காக நான் காபித் தம்ளரை மேஜை மேல் கொண்டு வைத்த போது வரதன் சிரித்துக் கொண்டே, “நீ மகா அதிர்ஷ்டசாலி அப்பா! இப்படிக் குறிப்பறிந்து பணி செய்யும் மனைவியை நான் எங்கெங்கும் கண்டதில்லை. பாரேன்! நீ வந்து இன்னும் அவளிடம் அரை வார்த்தைக் கூடப் பேசவில்லை. சிறிதும் நன்றியில்லாமல் என்னிடம் வளவளவென்று ஏதேதோ கதை அளந்து கொண்டிருக்கிறாய். அவள் உன் மீது எத்தனை கவனமாக இருந்திருக்கிறாள்! சுசீலா, நீ ஆனாலும் இந்த மடையனுக்கு இத்தனை இடம் கொடுக்கக் கூடாது. சற்றும் கண்டிக்க மாட்டேன் என்கிறாய்” என்றான்.
“ஏண்டா வளவளவென்று நீ அளந்தாயா! நான் கதை பேசினேனா? நீ என்ன சொன்னாலும் சுசீலா என்னைக் கண்டிக்க மாட்டாள்” என்று என்னைப் பார்த்து முறுவலித்த வண்ணம் அவர் காபித் தம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டார்.
“சுசீலா, நீ இவ்வளவு பட்சபாதம் செய்யக் கூடாது. நான் தடியன் போல் உட்கார்ந்திருக்கிறேன். அவனுக்கு மட்டும் காபி கொண்டு வந்தாயே. அவன் இதற்குள் எத்தனை கப் உள்ளே விட்டிருக்கிறானோ? பஸ் அடியிலேயே இந்திர பவனில் நுழையாமலா வந்திருப்பான்? அவனுக்கு நெஞ்சு உலர்ந்தா கிடக்கிறது? உண்மையில் எனக்குத்தான் இப்போது நெஞ்சு உலர்ந்திருக்கிறது. உம், என்ன இருந்தாலும் சொந்தக்காரி என்று ஒருத்தி இருந்தால் அந்த மாதிரியே வேறுதான்!” என்று அவன் குறைபட்டுக் கொண்ட போது, அவர் மட்டும் அல்ல, நானும் ‘பக்’கென்று சிரித்து விட்டேன்.
“என்னை மடையன் என்று அடிக்கொரு சஹஸ்ரார்ச்சனை செய்கிறாயே, உன்னைப் போல வடிகட்டின மடையன் யாருமே இருக்க மாட்டார்கள். ஏதோ வருஷம் ஒரு முறையாவது எதையாவது சாக்கு வைத்துக் கொண்டு லீலாவைப் பார்த்துவிட்டுப் போகிறாயா? நீ இங்கே, ‘நமக்கு என்று சொந்தக்காரி இல்லையே’ என்று நெடுமூச்சு விடுகிறாய். அவள் என்ன சொல்கிறாள் தெரியுமா?”
அவர் நிறுத்தும்போது எனக்கு ஏன் படபடக்க வேண்டும்? மூர்த்தியின் சமாசாரம் அவருக்குத் தெரிந்து விட்டதா? அதையா அவனிடம் சொல்லப் போகிறார்? வரதன் பதிலே கூறாமல் அவர் முகத்தைப் பார்த்தான்.
“இன்னும் எம்.ஏ.க்குப் படிக்கப் போகிறாளாம்! அப்புறந்தான் கல்யாணம் என்றும், ‘இன்னும் இரண்டு வருஷம் பேசக் கூடாது’ என்றும் அம்மாமியிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டாள். நீ என்னடா என்றால், இங்கே ‘சொந்தக்காரி வரவில்லையே’ என்று ஏங்குகிறாய்!” என்றார் என் கணவர்.
“அப்பாடா! படிக்கட்டுமே! இப்போது பரீட்சை முடிவு வந்து விட்டதா என்ன?” என்று பரந்த மனத்தினனாக வரதன் கேட்டான்.
“அழகாய்த்தான் இருக்கிறது! அது வந்து எத்தனை நாட்களாய் விட்டன? லீலா முதல் வகுப்பில் தேறியிருக்கிறாள். ஒரு சந்தோஷக் கடுதாசியாவது எழுதிப்போடு. ஆமாம் வீணை கீணை எல்லாம் தடபுடலாக இருக்கிறதே! எத்தனை நாட்களாக அப்பா இந்தத் துறையில் இறங்கியிருக்கிறாய்?”
“திடீரென்று வானொலியில் என் குரல் கேட்டதும், அப்போது நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்பட வேண்டும் என்று எத்தனை நாட்களாக நான் கோட்டை கட்டியிருந்தேன் தெரியுமா? அத்தனையும் சுசீலாவால் பாழாய்ப் போய்விட்டது. நான் ஏதாவது வாயைத் திறந்தாலே உள்ளே ஓடிவிடுபவள், வீணையையும் சுருதிப் பெட்டியையும் பார்த்துவிட்டு, யார் பாடுவார்கள் இங்கு என்று என்னிடம் வாயைத் திறந்து கேட்டு விட்டாள். அவளே கேட்கும் போது நான் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டி வந்து விட்டது.”
எனக்கு ஒரு விநாடி திக்பிரமையாக இருந்தது. குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுபவனா அவன்? அவள் பாடுவதை நானா கண்டுபிடித்துக் கேட்டேன்?
“ஆமாம், சுசீலா நன்றாகப் பாடுவாளே? நன்றாகக் கற்றுத் தேர்ந்தவள். அதனால் கேட்டிருக்கிறாள். ஓகோ! நீ ரேடியோவில் வேறு பாடுகிறாயா? ஆனால் சுசிலா உன் வித்தையை வெளியிட்டிருக்காமல் போனால் நாங்கள் நீ நினைத்தது போல் ஆச்சரியப்படவும் மாட்டோம். திடுக்கிடவும் மாட்டோம். எத்தனையோ தடியர்கள் எருமை மாட்டுத் தொண்டையை வைத்துக் கொண்டு பாடுகிறார்கள். வெளியிடங்களில் நடக்கும் கிரிக்கெட் வருணனையைத் தவிர நான் ரேடியோவில் செய்திகள் கூடக் கேட்பதில்லை. விடிந்தால் சமாசாரங்கள் பத்திரிகையில் வந்து விடுகின்றனவே. எனவே நீ பாடியிருந்தாலும் ஆடியிருந்தாலும் சொல்லாமற் போனால் யாருமே கவனிக்கப் போவதில்லை. எனக்கு என்னவோ பெண்கள் பாடினாலாவது கேட்கச் சற்று இனிமையாக இருக்கிறது. எருமைக் கடாவைப் போல இடிக்குரலை வைத்துக் கொண்டு நாமெல்லாம் பாட ஆரம்பிப்பது என்பது சகிக்க முடியாததாக இருக்கிறது” என்று தம்முடைய அபிப்பிராயத்தைச் சற்றும் ஒளிவு மறைவின்றிக் கூறி விட்டார் அவர்.
“சகிக்க முடியாததா? நீ ரஸிக்கும் லட்சணம் அவ்வளவுதான். நல்ல தேர்ந்த ஞானத்துடன் குரல் வசதியுடன் இருந்தால் ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன? யாருமே பாடலாம். உங்களுக்கெல்லாம் அனுபவிக்கத் தெரியவில்லையே என்று அநுதாபமாக இருக்கிறது எனக்கு. அதுவும் சுசீலா இந்தக் கலையை இத்தனை ஆர்வத்தோடு கற்றுத் தேர்ந்திருக்கும் போது, நீயே இப்படிப் பேசினால் அவளுக்கு எப்படி இருக்கும்? மனைவிக்காகவாவது நீ சங்கீதத்தை அநுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் அப்பா!” என்றான் வரதன்.
“ஓகே! எனக்கு நீ உபதேசம் செய்வதும் ஒரு விதத்திற்கு நல்லதாகத் தான் போயிற்று. லீலா இருக்கிறாளே, அவளுக்கு இது விஷயமாக அ, ஆ கூடத் தெரியாது. என்றாலும் அநுபவிப்பது என்றாயே, அதிலே எனக்கு அக்காவாகத்தான் இருப்பாள். எனவே இனிமேல், ‘அவன் எந்தத் தொண்டையில் கத்தினாலும் கேட்டுப் புகழ்வதற்கு முன் கூட்டியே கற்று வைத்துக் கொள்!’ என்று எச்சரிக்கை செய்து வைக்கிறேன்!” என்று நகைத்தார் என் கணவர்.
“கிடக்கட்டும். ‘மனைவியை அப்படி நடத்துவேன், இப்படி நடத்துவேன்’ என்று நீ தம்பட்டம் அடித்ததெல்லாம் கல்யாணம் ஆகும் வரை தான் போல் இருக்கிறது. நடைமுறையில் ஒன்றையும் காணவில்லை. முதலில் அவள் சங்கோச மனப்பான்மையைப் போக்கித் தாராளமாக எல்லோருடனும் பழகும்படி நீ அவளை ஆக்கவில்லையே? நான் ஏதாவது கேட்டால் நாலு மைல் ஓடுகிறாள்!” என்று என் நடத்தையை மிகைப்படுத்தி அவரைக் குற்றம் சாட்டினான். சில நாட்களுக்குள்ளேயே என்னைத் தூண்டித் துளைத்து அவன் அவ்வளவு சகஜமான முறையிலே பாடவும், அபிப்பிராயங்கள் கூறவும் வைத்திருக்கிறான்? இத்தனை மோசமாக அவன் பழகத் தெரியாத இயல்பை ஏன் மிகைப்படுத்த வேண்டும்?
என் கணவர் என்னை நோக்கி, “அப்படியோ சுசீலா? ‘கேட்ட கேள்விக்குக் கூடப் பதில் சொல்லாமல் ஓடும் வழக்கத்தை விட்டுவிடு’ என்று எத்தனை முறை கூறியிருக்கிறேன் உனக்கு?” என்று முகத்தைச் சுளிக்காமல் கடிந்து கொண்டார்.
குழந்தை போல் எனக்குக் கோபம் வந்தது. “ஒரேமுட்டாகப் புளுகுகிறீர்களே? கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் தான் இருந்தேனாக்கும்?” என்று கேட்டுவிட்டு உள்ளே வந்து விட்டேன்.
அவ்வளவு சீக்கிரம் உதகை வாசம் எனக்கு முடிந்து விடும் என்று நான் வரும் போது எண்ணியிருக்கவில்லை. அவரைக் கண்டதும் பட்டு, “நல்லவேளை! நீ கோயம்புத்தூர் வந்தாலும் வருவாய் என்று அண்ணா தெரிவித்த போதே, ‘இங்கு வரச் சொல்லி எழுதுங்கள்’ என்றேன். நீ போகும் போது, சுகுமார், மைதிலி, ஏன் சுசீலாவையுங் கூட அழைத்துப் போய்விடு. பள்ளிக்கூடம் திறந்து விடுகிறார்கள். நீ அங்கே இருக்கும் போது பாவம், அவள் இங்கே இருப்பானேன்? ஏதோ ஆசைக்குக் கொஞ்ச நாள் இருந்தாச்சு” என்று என்னை நோக்கிப் புன்னகை செய்தவாறு மொழிந்தாள்.
எத்தனை கருணை! எத்தனை அன்பு!
உண்மையில் அந்த நினைப்புடனா அவள் என்னை அனுப்புகிறாள்? இல்லவே இல்லை என்று கூறியது என் உள் மனம்.
வரதன் என்னிடம் சுதந்திரம் கொண்டு வேடிக்கையாகப் பேசுவதும், அவர்கள் இல்லாத சமயங்களில் அவன் விகற்பமாக நினைத்துக் கொள்ளாமல் வீட்டிலே தங்குவதும் அவளுக்கு சுருக்கென்று உறுத்தியிருக்கின்றன. எல்லாம் நன்மைக்குத்தான். எனக்கும் அவன் போக்கு அவ்வளவு உவப்பாக இருக்கவில்லையே?
அவனுடன் பேசிப் பழகியதன் பலனாக என் உள்ளக் குமுறலுக்கு மேலாக இப்போது புதிய தாபம் தளிர்த்திருந்தது.
அவர் மட்டும் ரஸிக உள்ளம் படைத்திருந்தால் வரதனைப் போலக் கலை ஆர்வமும் மனத்தில் உள்ளதை உடனே வெளியில் உரைக்கும் சுபாவமும் அவருக்கு இருந்தால் எப்படி இருக்கும்?
இப்படிக் கற்பனை செய்து பார்த்த போது என் உள்ளம் விம்மியது.
அவருக்கு என்னிடம் காதல் இல்லையே என்று நான் ஏன் ஏங்க வேண்டும்? என் கலை அவரைக் காந்தம் போல் இழுத்து விடாதா தானாகவே? அப்போது அவர் எனக்காக எது வேண்டுமானாலும் செய்யும் நிலையில் இருக்க மாட்டாரா? அவருடைய உள்ளத்தின் தன்மைக்கும் என் உள்ளத்தின் இயல்புக்கும் சிறிதும் பொருத்தம் இல்லை. ஒன்றை ஒன்று தெய்வீகமாகக் கவராவிட்டாலும் நடைமுறைப் பழக்கத்தில் கூட இணைப்புள்ளதாக ஆகாது. நான் என்ன முயன்றும் பயன் இல்லை. பாலுடன் தேன் சேருமே அல்லாது புளிநீர் இணைந்து போகுமா? அதற்கு உப்பும் காரமும் ஆகிய அதன் இயல்பை ஒத்த பண்டங்களே சேரும்.
அத்தனை நாட்கள் நான் அறியாத புது உண்மையை வரதன் எனக்கு அறிவுறுத்தி விட்டான்.
மேலும், ஆதரவு கிடைக்க வேண்டிய இடங்களிலிருந்து எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அநுதாபமும் ஆதரவும் வரும் திசைகளை நம்பி நான் செல்லுவது கூடாது. அவை சாவுக்குப் பயந்து சமுத்திரத்தில் ஓடுவதைப் போன்று அபாயகரமானவை என்று எனக்குள்ளே ஏதோ ஒன்று கூறியது. வாழ்வு ஒரு மாயச் சுழல் என்று வேதாந்திகளும், அப்பாவுங் கூடத்தான் ஒருநாள் கூறியிருப்பது எனக்கு நினைவு இருக்கிறது. அது எத்தகைய உண்மை! இந்த சுழலிலே நான் என் சுயமதிப்பையும் தன்னம்பிக்கையையும் இழந்து விடாமல் சுழன்று சுழன்று முன்னேற வேண்டும். பொன்னை நெருப்பிலிட்டு உருக்கித்தானே கண்கவரும் அணிகள் செய்கிறார்கள்? சாணையிலே உடலைக் கொடுத்துத் துன்புற்ற பின் தானே வைரம் ஜகஜ்ஜோதியாகப் பளபளக்கிறது. உலக நாடக அரங்கிலே முன்னேறிப் பிரகாசிக்கும் மேதைகளின் வாழ்க்கை முழுதுமே சோதனையாக இருக்கும் என்பது தெளிந்தறிந்த உண்மையாயிற்றே! கஷ்டங்களில் தலை குனியாமல் நிற்பவர்கள் தாமே சோதனைகளில் தேறிப் பிரகாசிக்கின்றனர்? சோதனையிலே நானும் தளராமல் தலை நிமிர்ந்து போராடினால் முடிவிலே எனக்குப் பலன் கிட்டுமோ, என்னமோ?
அழகிய அந்நகரை விட்டு நான் பிரியும் போது எனக்கு உயிர்த்தோழி ஒருத்தியை விட்டுப் பிரிவது போல் இருந்தது. என் கணவர் அறியாத என் உள்ளத்தை வனப்பு மிகுந்த கோபுர விருட்சங்கள் உணர்ந்து விட்டன போல் இருந்தது. அன்று கணவன் வீடு செல்லு முன் மரமே, செடியே, மானே, கண்ணே என்று விடை பெற்றுக் கொண்ட சகுந்தலையைப் போல நானும் வருத்தத்துடன், ‘இயற்கையன்னையின் பரிபூரண அருளைப் பெற்ற மலைத் தோழியே, நான் இன்னொரு முறை வரும் போது என் துயரமெல்லாம் ஓடிப் போயிருக்குமோ என்னவோ?’ என்ற நம்பிக்கையை நானே வரவழைத்துக் கொண்டு வண்டியில் ஏறிக் கொண்டேன்.
வரதன் தொணதொணவென்று பேசிக் கொண்டே எங்களுடன் மலையடிவாரம் வரையிலும் வந்தான். முதல் முதலாக என் கணவருடன் உயர் வகுப்புப் பெட்டியில் நான் ஏறிக் கொண்ட போது, அன்று நான் மூர்த்தியுடன் பிரயாணம் செய்ததும், அப்போது நான் கட்டியிருந்த மனக்கோட்டைகளும் சிறிதும் புதுக்கருக்கு அழியாமல் என் மனக் கண் முன் எழும்பின. எதுவுமே பேசாமல் சிந்தனையில் லயித்துப் போயிருந்த என்னை அருகிலே அமர்ந்திருந்த சுகுமாரும் மைதிலியும், “சித்தி, நேற்றே கதை சொல்லாமல் ஏமாற்றி விட்டீர்கள். இன்றைக்குச் சொல்லாமல் போனால் விடமாட்டோம்!” என்று விரலை ஆட்டிச் சுவாதீனமாகப் பயமுறுத்தினார்கள்.
என் பொட்டல் வாழ்க்கையிலே பசுமை ஊட்டிய அந்தக் குழந்தைகளின் கள்ளமற்ற அன்பு என்னைக் கட்டுப்படுத்தியது. தங்களுடைய தாயும் தந்தையும் என்னை அவமதிப்புக் கண் கொண்டு பார்ப்பதை இப்போது அறியாமல் இருக்கும் குழந்தை மனம் மாசும் மருவும் ஒட்டிக் கொள்ளாமல் அதே நிலையில் வளர்ச்சியடையக் கூடாதா?
என்னை அவர்கள் நெருக்கியது, அவர் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. “லீலா சித்தியை ஒரு நாள் கூட இப்படித் தொந்தரவு பண்ணியதில்லையே! அவளைக் கண்டால் பிடிக்காதோ உங்களுக்கு?” என்று சிரித்துக் கொண்டே குழந்தைகளைக் கேட்டார்.
ஆறு வயது நிரம்பியிருந்த மைதிலி மழலை மாறாத சொல்லில் என் கணவரைப் பார்த்துத் தன் சிறு கையை விரித்து இடித்துவிட்டு, “லீலா சித்திக்கு, ‘தொந்தரவு பண்ணாதே!’ன்னு எரிஞ்சு விழத்தான் தெரியும். உன்னைக் கண்டாலும் பிடிக்கலே எனக்கு! லீலா சித்தியைக் கண்டாலும் பிடிக்கலே! எங்க சுசீலா சித்திதான் நல்லது! எனக்கு இந்தச் சித்தியைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்று அபிப்பிராயம் கொடுத்துவிட்டு என்மேல் இடித்துக் கொண்டு சாய்ந்தாள். என்னை அறியாமல் நான் அவளைத் தழுவிக் கொண்டேன். அதைக் கண்ணுற்ற அவர் முகத்தில் இனந்தெரியாத சோகத்தின் சாமை பரவியது.
சட்டென்று ஞாபகம் வந்தவரைப் போல, “மூர்த்தி வந்திருந்தான் ஒரு வாரம் முன்பு! சொல்ல மறந்து விட்டேனே! அவன் மேல்நாட்டுத் தொழிற்சாலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் போகிறான். முதலில் பர்மிங்ஹாம் போவதாகச் சொன்னான்” என்றார்.
‘ஓகோ! அதனால் தான் லீலா எம்.ஏ.க்குப் படிக்கிறாள் போலும்!’
நான் வெகு ஆவலுடன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, “அப்படியா? என்னிடங் கூட அவன் அப்படிப் பிரஸ்தாபிக்கவில்லையே” என்றேன்.
“உன் அத்திம்பேருங் கூட வந்திருந்தார். எங்களிடம் எல்லாம் சந்தோஷத்துடன் தெரிவித்து விடைபெற்றுக் கொண்டான். அம்மா ஒருநாள் அவனுக்கு விருந்து கூட வைத்தாள். ‘பொழுது விடிந்தால் விமானம் விழுந்து நொறுங்குகிறது. ஜாக்கிரதையாகப் போய்த் திரும்பி வர ஆசீர்வாதம் பண்ணுங்கள் மாமி!’ என்று சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்தான். சிரிக்கப் பேசிப் பழகும் நல்ல பையன்!” என்று தெரிவித்தார் அவர்.
எனக்கு இந்தச் செய்தி மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. லீலாவும் அவனும் புறப்படும் முன்பு எப்படியும் சந்தித்து மனம் விட்டுத் தங்கள் தங்கள் யோசனைகளைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள்! என்னைக் கண்டதும் அவள் அகத்தில் பொங்கும் மகிழ்ச்சியை அடக்க முடியாத சிரமத்துடன் முகம் சிவக்க – அத்தனை சமாசாரங்களையும் எப்படிச் சொல்லுவாள். இந்த அசட்டு வரதன் அவளை நினைத்து நெடு மூச்செறிவதை நான் சொல்லி எப்படி நகைப்பேன் என்ற கற்பனையில் ஆழ்ந்து விட்டேன்.
மறுநாள் காலை நான் வீட்டுக்குள் காலெடுத்து வைத்த போது லீலா நான் எதிர்பார்த்தபடி மகிழ்ச்சி அலைமோத என்னை வந்து தழுவிக் கொள்ளவில்லை. நானாக அவளைத் தேடிக் கொண்டு சென்ற போதும் அவள் முகம் எனக்கு அளவற்ற ஏமாற்றத்தை ஊட்டியது. புத்தகம் ஒன்றை மார்பின் மீது வைத்துப் பார்த்துக் கொண்டு கட்டிலில் படுத்திருந்த அவள் வாடி வதங்கிய மலரைப் போல் காட்சி அளித்தாள்.
“என்ன அக்கா? உடம்பு சுகம் இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே நான் உள்ளே பிரவேசித்தேன்.
“சுசீலாவா? என்னது, இது? திடீர் வருகையாக இருக்கிறதே! ராமு உன்னை அழைத்து வரப் போவதாகச் சொல்லவே இல்லையே! என்ன மலை வாசம் எப்படி இருந்தது?” என்று கேள்விகளை அவள் அடுக்கினாள்.
“நன்றாகத்தான் இருந்தது உம். மூர்த்தி வந்து போனாராமே?” என்று அவள் காதோடு கேட்ட நான் குறுநகை செய்தேன்.
நான் இப்படிக் கேட்டதும் அவள் விழிகளில் அலாதி ஒளி தென்படும். பேச்சு நெகிழ்ந்து வரும் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தேன். அவள் மாறாத நிலை எனக்கு முற்றும் மாறுதலாகத் தோன்றியது.
“ஆமாம்” என்று அவள் தலையை ஆட்டிவிட்டு, “குழந்தைகள் வந்தாயிற்றாக்கும்! வீட்டு எஜமானிக்கும் எஜமானருக்கும் இன்னும் மலைவாசம் விடவில்லையோ?” என்றாள் குத்தலாக.
மூர்த்தியின் பேச்சை எடுத்தாலே பூரித்துப் போகும் அவள், திடீரென்று இப்படி ஒளியிழந்தவளாக அசுவாரஸ்யமாகப் பதிலளிப்பானேன்? இருவருக்கும் அதற்குள் மனத்தாங்கள் ஏற்படும் வழியில்…
“மூர்த்தி பர்மிங்ஹாம் போகிறார். நீங்கள் எம்.ஏ.க்குச் சேரப் போகிறீர்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டேன்? அவர் வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்? பாவம்! வரதன் உங்கள் பேச்சை எடுத்தாலே வாயெல்லாம் பல்லாக மகிழ்ந்து போகிறார்!” என்றேன்.
“மகிழ்ந்து கொண்டு இருக்கட்டும். பாவம் என்று நீ வக்காலத்து வாங்கிக் கொண்டு வருகிறாயாக்கும்! சுசீலா! இனிமேல் என்னிடம் இந்த விஷயங்களைப் பற்றியே பேசாதே. எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மணம் செய்து கொள்வதே இல்லை என்று தீர்மானித்து விட்டேன்!” என்று அவள் ஆத்திரத்துடன் மொழிந்தது என்னைத் திடுக்கிடச் செய்தது.
“என்ன லீலா இது? நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள்? காதல் பூஞ்சோலையில் உல்லாசமாக அடியெடுத்து வைத்த நீங்கள் மனம் வெதும்பிப் பேசும்படி மூர்த்தி என்ன செய்து விட்டார்?” என்று நகைத்த வண்ணம் கேட்டேன்.
“என்ன செய்து விட்டார் என்றா கேட்கிறாய் சுசீ? நீயும் எனக்கு இதைத் தெரிவிக்காமல் இருந்து விட்டாய். இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கு இல்லை. என்னிடம் பிரேமை, காதல் என்று கதைத்து விட்டு, அவருக்காகக் காத்திருக்கும் மாமா பெண்ணை மணக்கப் போகிறார்! இன்று நேற்றுப் பேச்சில்லையாம் இது. என்னிடம் இப்போதுங் கூட அவர் தெரிவிக்கவில்லையே! நினைக்க நினைக்க நான் ஏமாந்து போனேன் என்று நம்பவே முடியவில்லை சுசீ!” என்றாள் படபடப்புடன்.
“அடாடா! நீங்கள் மிகவும் பொறுமையில்லாதவர். உங்களுக்காகத் தவமிருக்கும் வரதனைப் பற்றி நீங்கள் மட்டும் அவரிடம் பிரஸ்தாபித்தீர்களா?” என்று திருப்பிக் கேட்டு அவள் கன்னத்தில் இடித்தேன்.
“நான் எதற்காகச் சொல்ல வேண்டும்? வரதனை மணந்து கொள்வதாக நான் ஒரு நாளும் எண்ணியிருக்கவில்லையே! அவருக்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்கத் தயாராக இருந்தேனே! வீணாகப் பிரஸ்தாபித்து ஏன் அவரைச் சஞ்சலத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்றல்லவா நான் மௌனமாக இருந்தேன்? தயங்கினால் தானே நான் அவரிடம் கூறி வருத்தப்பட வேண்டும்? அவர் அப்படியா?”
“ஏன்? அவரும் உங்களைப் போல எண்ணி இருக்கக் கூடாதா?”
“அப்படி எனக்காக எதையும் துறக்கத் தயாராக இருப்பவர்தாம். வருங்காலச் செல்வ மாமனார் ஆதரவில் இப்போது மேல் நாடு செல்கிறாராக்கும்! திரும்பி வந்த போது பெண்ணைக் கொடுக்கத்தானே ஆயிரக்கணக்கில் செலவு செய்து கூடவே வந்து விமான நிலையம் வரை அனுப்பிவிட்டுப் போகிறார் உன் அத்திம்பேர்? ‘உங்கள் மகளை நான் மணக்கவில்லை’ என்று மறுப்பவர், இப்போது அவர்கள் பண உதவியை வெறுமே பெற்றுக் கொண்டு செல்வாராக்கும்! இந்த வாக்குறுதியே எனக்கு அவர் நேர்மையற்றவர் என்று காண்பிக்கப் போதுமானதாக இருக்கிறதே! சுசீலா, நீ எப்படி நினைப்பாயோ? என் வரைக்கும் ஆண்கள் ஏமாற்று வித்தையில் கை தேர்ந்தவர்கள்!” என்று பொங்கும் சினத்துடன் லீலா முடித்தாள்.
“உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தன?” என்று திகைத்தவளாக நான் கேட்டேன்.
“தெரிந்தது என்ன? தாம் உதவி செய்வதைப் பற்றி உன் அத்திம்பேர் நொடிக்கு நூறு தடவை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாரே. அப்புறம் பேச்சு வாக்கில் ராமுவுந்தான் கூறினான். எனக்கு அப்போதே இடிவிழுந்தது போல் ஆயிற்று. இப்போதும் அவர் வாயிலாக உண்மையைத் தெரிவிக்கவில்லையே எனக்கு!”
எத்தகைய ஏமாற்றம் இது! மூர்த்தியும் உண்மையில் இந்தக் கும்பலில் சேர்ந்தவன் தானா? அன்று அவ்வளவு உருக்கமாகப் பேசினானே! நடிப்புத்தானா? படித்துப் பட்டம் பெற்ற லீலா, வெளி உலகம் தெரிந்து நாலு பேருடன் பழகவும் விவாதிக்கவும் அறிந்த, நாகரிகம் பெற்ற லீலா, மூர்த்தியின் நயவஞ்சகத் தன்மைக்கு இலக்காகி விட்டாள். அதுதான் அன்று அத்தை அவ்வளவு தீர்மானமாகக் கூறினாள்.
இப்படி ஒரு கும்பல் உலகத்தில் இருந்து வருவது என்னவோ உண்மை. சகுந்தலா துஷ்யந்தன் கதை ஒன்றே போதாதா, இதைத் தெளிவாக்க! உலகத்தில் இந்தக் காதல் தோன்றிய நாள் முதலாகவே இந்த ஏமாற்று வித்தையும் தோன்றியிருக்க வேண்டும்.
‘அதுவும் இந்த மக்களிடந்தான் இது அதிகமாகக் குடி கொண்டிருக்கிறது. வெளித் தோற்றத்துக்கு ஆண்மையும் உறுதியும் உடையவர்களாகத் தோன்றும் எல்லா ஆண்மக்களும் நெஞ்சில் பேடிகளாகவே இருக்கிறார்கள். உள்ளே உள்ள புரையை மறைக்கவே இந்த வெளி வேஷம், ஆடம்பரம் எல்லாம்.’
‘பெண்மை, அழகு, இளமை இந்த மூன்றும் எந்த ஆண்மகனையும் தமக்கு அடிமை ஆக்கி விடுகின்றன. இப்படி அடிமையான ஆண்மகன் தான் செய்வது என்ன என்று புரியாத நிலையிலேயே தன் மனங் கவர்ந்த மங்கையிடம் பழகுகிறான். சர்வ சுந்தரனாகவும் லட்சியவாதியாகவும் காட்சியளிக்கிறான்.’
‘பொறுப்பேற்கும் காலம் வரும்வரையில் தான் இந்தப் பகட்டெல்லாம். பெறுப்பேற்கும் காலம் வந்தாலோ அல்லது முடிவைத் தீர்மானிக்கும் அவசியம் நேர்ந்தாலோ அப்போது தான் அவன் உண்மைச் சொரூபம் வெளிப்படுகிறது.’
‘என்ன செய்யலாம், எல்லாமே அவன் படைப்பின் விளையாட்டுப் போலும்!’
இப்படியெல்லாம் ஓடிய எண்ண அலைகள் ஒருவாறு அடங்கிய பின் லீலாவுக்கு ஆதரவாக ஏதேனும் கூற வேண்டும் என்று நினைத்த போது என் நாத் தழுதழுத்தது.
“நீங்கள் சொல்வது முற்றும் உண்மை. பெண் சட்டென்று எதையும் நம்பி விடுவதனால் ஆண்கள் அவர்களைச் சுலபமாக ஏமாற்றி விட முடிகிறது” என்றேன்.
என் உள்ளத்திலிருந்து அநுபவபூர்வமாக வரும் வார்த்தைகள் இவை என்று லீலா அறிவாளோ என்னவோ?
– தொடரும்…
– நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது – 1953.
– பெண் குரல், முதல் பதிப்பு: 2011, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட், சென்னை.
நன்றி: https://www.projectmadurai.org/