கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 4,852 
 
 

அத்தியாயம் 2.4-2.6 | அத்தியாயம் 3.1-3.3 | அத்தியாயம் 3.4-3.6

பாகம்-2

3.1 காய்

‘ஜல்ஜல்’ என்ற குதிரை வண்டிச் சத்தத்திற்கிணங்க என் இருதயம் தாளம் போட்டது. ஆமாம்! இதோ வீடு வந்து விட்டது! நான் சலுகையுடனும் உரிமையுடனும் அன்பு குலவும் அன்னையின் அரவணைப்பில் சரண் புகும் நேரம் வந்து விட்டது! ஆகா! இந்த ஆனந்தத்திற்கு ஈடு ஏதேனும் உண்டா? பழகிய தெருவிலே அத்தனை முகங்களும் என்னை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கும் காட்சி எனக்கு அத்தனை நாட்களாகக் கண்டிராத மகிழ்ச்சியை ஊட்டியது. வாயிலிலே பக்கத்து வீட்டு ஜானியின் தாயுடன் அம்மா சிரித்த முகத்தோடு நின்றிருந்ததை நான் தூரத்திலேயே கண்டு விட்டேன். வண்டி இன்னும் செல்ல வேண்டிய பத்தடி தூரத்தைக் கூட என்னால் தாங்க முடியாது போல் இருந்தது. வண்டி நிற்கு முன்னரே தடால் என்று குதித்த என்னை, “மெதுவாக இறங்கு சுசி! வண்டி நிற்கட்டும்” என்று தந்தை கடிந்து கொண்டார். எனக்குக் காதிலே விழவில்லை அது.

வாயிலிலே நின்ற என் தாயை, என் இருதய வேதனைக்குத் தஞ்சமாகப் புக எண்ணியிருக்கும் அன்னையை ஓடிப்போய்க் கரை காணாக் காதலுடன் தழுவிக் கொண்டேன்.

“சுசீலா இளைச்சுத்தான் போய் விட்டாள்! இந்த ஆறு மாசத்தில் கறுத்துப் போய் தலைமயிர் எல்லாங் கூடக் கொட்டி இருக்கிறது. பட்டணத்துக் காற்று உப்பங்காற்று. உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் என்று எண்ணியிருந்தேனே!” என்று ஜானியின் அம்மா என்னைப் பார்த்து அபிப்பிராயம் கொடுத்தாள்.

வண்டிக்காரனுக்குக் கூலி கொடுத்த அப்பா சிரித்துக் கொண்டே, “இப்போதுதான் நாலு நாளாய் உடம்பு ஜுரமாக இருந்ததாம். அத்துடன் ரெயிலில் வந்தது வேறு. மற்றபடி அவர்கள் வீட்டில் என்ன குறை?” என்றார்.

அம்மா அன்புடன் என் தலையைக் கோதி விட்டாள். “புக்கத்துக்குப் போயும் இன்னும் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறதே? அதே ஓட்டம், அதே குதிப்பு. அதே பரபரப்பு! அங்கே கூட இப்படித்தான் இருப்பாயா, சுசீ?” என்று முறுவலித்த வண்ணம் கேட்டாள்.

“அதை ஏன் கேட்கிறாய்? அவர்கள் வீட்டிலே எல்லோருமே குழந்தைகள் தாம். இவள் ஓர்ப்படியின் தங்கை ஒரு பெண் இருக்கிறாளே, சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். பரிகாசம், விளையாட்டு எல்லாவற்றுக்கும் அவள் ஒருத்தியே போதும். நேற்று ஸ்டேஷனுக்கு சுசீலாவை வழியனுப்பக் குழந்தைகள், ‘நான் வரேன், நீ வரேன்’ என்று எல்லோரும் வந்து விட்வார்கள். ‘சித்தி நான் எண்ணிக் கொண்டே இருப்பேன். அஞ்சு நாள் ஆனவுடனே வந்து விடுவாயல்லவா’ என்று சின்னக் குழந்தைகூட ஒட்டிக் கொண்டு இருப்பதை எனக்குப் பார்க்க எத்தனை அழகாக இருந்தது தெரியுமா? ஒன்றுமே தெரியாமல் இருக்கிறாளே, அத்தனைப் பெரிய குடும்பத்தில் எப்படி ஒத்துப் போவாளோ என்று நான் கவலைப்பட்டது உண்டு. இப்போது சுசீலாவைப் பற்றி நினைக்கவே எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவள் மைத்துனர், மாமியார், ஏன் மாப்பிள்ளைக்குங்கூடத் தான் அவளை அனுப்புவதில் இஷ்டமில்லை. ஒரு மாசந்தான் வைத்துக் கொள்ளலாம் என்று எல்லோரும் ஒரு வாக்காகத் தவணை கொடுத்திருக்கிறார்கள்” என்று அப்பா பெருமை முகத்தில் மலர்ச்சியைத் தர, என்னைப் பார்த்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டை அப்படிப் புகழ்ந்து தள்ளினார்!

நான் சிரிப்பேனா, அழுவேனா?

அவருக்கு எப்படித் தெரியும் என் வாழ்வு. அந்த மலேரியா மாத்திரை போன்றதுதான் என்று? கார், ரேடியோ, அன்பு செய்யும் கணவன் என்று அவருடைய கண்களுக்கு, ஏன் மேலாகப் பார்ப்பவர்கள் எல்லோருக்குமே என் வாழ்க்கை அழகிய பூங்கொத்துப் போலத்தான் தோன்றியது. ஆனால் நிலத்துடன் சரி; மணமில்லாத காகிதப் பூங்கொத்து என்று எனக்கன்றோ தெரியும்? சுகமாகப் பங்களாவின் மின்சார விசிறியினடியில் வாழ்பவன், சாலையிலுள்ள ஆலமரத்தைத் தேடி வருவானா? வெயிலில் களைத்து வழி நடப்பவனுக்குத் தானே ஆல மரத்தடி அருமையானது? அத்தகைய அருமையுடன் நான் அன்னையிடம் வந்திருக்கிறேன் என்பதை அப்பா அறிந்தால் இப்படிப் பேச மாட்டார். அவரிடம் நான் என் குறையை எப்படித் தெரிவிக்க முடியும்? சாதாரணமாக அவராவது ஆராய்ந்து நுட்பமாகக் கவனிப்பவராக இருந்தாலும் பாதகம் இல்லை. ‘மின்னுவதெல்லாம் பொன்’ என்று சூதுவாதில்லாத உள்ளம் படைத்த அவர், எங்கள் வீட்டு ஆடம்பரத்தைக் கண்டு பிரமித்துப் போயிருக்கும் போது, என் வாழ்வு சாரமற்றது என்று சட்டென்று எப்படி அறிவார்?

ஆனால் அம்மா, பெண் உள்ளத்தின் இயல்பை அறிந்த அன்னை, என்னைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். என் மனப் பெட்டியைத் திறந்து சுமையை அவளிடம் இறக்கி ஆறுதல் பெறுவேன். என் வாழ்க்கை இன்ன விதத்தில் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நிர்ணயம் செய்தபடி தீர்மானிப்பேன்.

“இன்னும் ஒரு மாசத்தில் திரும்ப வேண்டுமா?” என்று விவரமறியாத பாலகிபோல நான் உள்ளூறக் கறுவிக் கொண்டேன்.

புக்ககத்துக்குப் போய்விட்டுத் திரும்பி இருக்கும் புதுச் சுசீலா அல்லவா நான்? என்னைப் பார்க்க அதற்குள் எதிர்ப்புறம். கீழண்டை மேலண்டை வீடுகளிலிருந்து எல்லோரும் வந்து விட்டார்கள்.

“வெறுமேதான் வந்திருக்கிறாளா? கறுத்து இளைத்துப் போயிருப்பதைப் போர்த்தால் சந்தேகம் தென்படுகிறதே!” என்று என்னைப் பார்த்துக் கீழ்க்கோடி வீட்டுக் கோமளம் கண்ணைச் சிமிட்டினாள்.

“நான் அப்போதே சொல்லவில்லையா? வளைகாப்புச் சாப்பாட்டை நமக்குச் சீக்கிரமே கொண்டு வந்து விட்டாள் சுசீலா!” என்று அவள் சந்தேகத்தை அதற்குள்ளாகவே தெளிய வைத்தாள், எதிர்வீட்டு மரகதம்.

இந்தச் சந்தேகம் முதலிலேயே தோன்றாத ஜானியின் அம்மா, “ஏன் மாமி, விஷயம் அப்படியா? காரணத்துடன் தான் கறுத்துப் போயிருக்கிறாளா? என்னிடம் சொல்லக் கூடாது என்று மறைத்தீர்களா?” என்று அம்மாவிடம் சண்டைக்குப் போய்விட்டாள்.

‘நமக்குப் போகாத ஊகம் எல்லாம் எப்படிப் போகிறது இவர்களுக்கு? என்னிடத்தில் எத்தனை ஆசையும் ஆவலும் காட்டுகிறார்கள்?’ என்று அக்கம்பக்கம் அறியாத பட்டணத்து வீட்டிலே இருந்துவிட்டு வந்திருந்த எனக்குப் பழையபடி அந்த ஜனங்களின் சங்கம் அளவற்ற சந்தோஷத்தைக் கொடுத்தது.

அவர்கள் கேட்கும் கேள்விகள் அவ்வளவாக எனக்குப் பிடிக்காமல் இருந்தாலும் முகத்தைச் சுளித்து வெடுவெடுக்காமல் வெட்கம் மேலிட “அதெல்லாம் ஒன்றும் இல்லை… போங்கள் மாமி” என்றேன்.

“இல்லாவிட்டால் நீ சொல்வாயா? நீ மறைத்தால் இது மறைக்கும் காரியம் இல்லையாயம்மா, மறைக்க முடியாது!” என்று என் முகத்தில் வந்து இடித்து மரகதம் ஒரேயடியாக ஊர்ஜிதம் செய்துவிட்டாள்.

அவர்கள் எல்லோரும் சென்ற பிறகு, “என்ன மாமி, பெண் வந்திருக்கிறாளா? கூப்பிடக் கூப்பிடக் குரலே காணோமே” என்று மேற்பக்கத்து வீட்டு ஜன்னலிலிருந்து எனக்குப் பழக்கம் இல்லாததாக ஒரு குரல் வந்தது.

“இதோ இருக்கிறேனே; சுசி, இங்கு வாம்மா!” என்று ஜன்னலருகே நின்று அம்மா என்னைக் கூப்பிட்டாள். மறுபுறத்திலே ஒரு வயசான அம்மாளும், இருபத்தைந்து வயசு மதிக்கக்கூடிய ஒரு பெண்ணும் நின்று என்னைப் பார்த்தனர்.

“இவள் தான் சுசீலா. அஞ்சு வருஷம் சிட்சை சொல்லி வைத்திருக்கிறது. இப்போது எப்படிப் பாடுகிறாளோ? நம் வீட்டில் இருக்குமட்டும் நாமும் ஆசையாக எல்லாம் சொல்லி வைக்கிறோம்! அப்புறம் பெண் குழந்தைகள் நமக்குச் சதமா மாமி?” என்றாள் அம்மா.

அவர்கள் எனக்கு முற்றும் புதியவர்கள். கறுப்பாய் இளவலாய் இருந்த அந்தப் பெண் கைம்பெண்ணானவளாம். சென்னைச் சர்வகலாசாலையிலே சங்கீத டிப்ளோமா பெற்று, இப்போது புதிதாகத் திறந்திருந்த புங்கனூர்ப் பெண் பாடசாலையிலே சங்கீத ஆசிரியையாக இருக்கிறாளாம். இந்த விவரங்களை எனக்கு அம்மா பின்னாடி சொன்னாள்.

“பாட்டு, படிப்பு எல்லாம் கற்றுக் கொடுத்து எங்கள் சக்திக்கு மீறியே தான் இடமும் பார்த்துக் கொடுத்தோம். பெண் குழந்தைகள் என்றாலும் கண்ணைக் காக்காமல் நல்ல இடத்திற்குப் போனால்தானே மனத்துக்குத் திருப்தியாக இருக்கிறது? நாம் தான் ஒன்றும் தெரியாத ஜடமாக இருக்கிறோம். நம் வயிற்றில் பிறந்த அதுகளாவது ஒரு குறையுமில்லாமல் இருக்க வேண்டும் என்ற ஒரே பிடிதான் எனக்கு. மாப்பிள்ளையும் தங்கமான பையன், தேர்ந்த ஜனங்களும் ஆசையும் அன்புமாக வைத்துக் கொண்டு தாங்குகிறார்கள். அதுதானே நமக்கு வேண்டும்?” என்று அம்மா லோகாபிராமமாகப் பேசுவதுபோல் என் வீட்டைப் பற்றிய பெருமை அடித்துக் கொண்டாள். மனத்திலே புளியைக் கரைந்து விட்டது போல் இருந்தது எனக்கு.

இவ்வளவு பரிவான அபிப்பிராயம் அவள் மனத்திலும் தைத்திருக்கும் போது நான் எப்படி உண்மையை உடைத்து, உளுத்த மரம் என்று காண்பிப்பேன்?

“நீங்கள் சொல்வதும் சரிதான். நாம் எத்தனை அரும்பாடுபட்டு வளர்த்தாலும் அந்த அருமை தெரிந்த இடமாக இருக்க வேண்டாமா வாய்க்கும் இடமும்! நான் கேட்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லோரும் பேசியது காதில் விழுந்தது. சாதாரணமாக வரவில்லையே?” என்று அந்த அம்மாள் என்னைப் பார்த்துப் புன்னகை பூத்தாள்.

“அப்படி எதுவும் முன் கூட்டித் தெரிவிக்கவில்லை. போய் ஆறு மாசம் ஆச்சே. மறுதரம் அழைக்க வேண்டாமா என்று தான் அழைத்து வந்திருக்கிறது. இப்போது நீங்கள் கேட்பதையும் அவள் உடம்பையும் பார்த்தால் எனக்கே சந்தேகமாக இருக்கிறது” என்று அம்மாவும் நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

எனக்குக் கோபமாக வந்தது. முகம் ஜொலிக்க, “என்னம்மா இது? நீங்களும் ஆரம்பித்து விட்டீர்கள்? அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று அப்பால் வந்து விட்டேன்.

அப்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. என் மாமியாருக்கு சொந்தக்காரியான கிழவி ஒருத்தி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள் ஒரு நாள். புது நாட்டுப் பெண் அல்லவா நான்? என்னை நமஸ்கரிக்கச் சொன்னார்கள். நான் வணங்கிய போது அந்த பாட்டி, “சீக்கிரமே பிள்ளைக் குழந்தை பிறக்கட்டும்” என்று தன் பொக்கை வாயைக் காட்டி ஆசீர்வதித்தாள். எங்கே அவள் வாக்குப் பலித்து விடுமோ என்று பயப்படுவது போல் இருந்தது. பட்டு அடுத்தாற் போல் கூறிய வார்த்தை.

“மேலே மேலே அகமுடையானுக்குச் சம்பாதனை உயரட்டும் என்று ஆசீர்வாதம் பண்ணுங்கள் பாட்டி. முதலில் அதுதான் வேண்டும்” என்றாள்.

அவளுக்கு முத்தாய்ப்பு வைப்பது போல் என் மாமியார். “ஆமாம்! இது ஒன்றும் பிறக்காத குடும்பம் இல்லை. அங்கும் சரி, இங்கும் சரி இப்போதைக்கு என்ன? நாலைந்து வருஷங்கள் போகட்டுமே” என்றாள்.

இந்தக் கபடற்ற கிராம ஜனங்களுடன் அவர்கள் மனப்பான்மையை ஒப்பிட்டுப் பார்த்து நான் பெருமூச்செறிந்தேன்.

வெகு நாட்களுக்குப் பிறகு அப்பாவுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு அம்மாவின் கையால் பக்குவம் செய்த உணவைப் புசித்த போது எனக்கு அமுதம் உண்ணுவது போல் இருந்தது. வேலை ஏதும் இல்லாமல் அங்கே போவதும் இங்கே இரண்டு வார்த்தைகள் பேசுவதுமாகத் துள்ளித் திரிந்த போது, அதுவரை கண்டறியாத மகிழ்ச்சியைக் கண்டேன். சுசீலா, சுசீலா என்று அங்கேயுந்தான் அடிக்கு ஆயிரம் தடவை கூப்பிட்டார்கள். ஆனால் இந்த வீட்டிலே அதே சுசீலா என்ற வார்த்தைகள் இதுவரை ஒலித்திராதபடி அத்தனை இன்பமாக அல்லவோ ஒலித்தது.

அடுத்த வீட்டுச் சங்கீத வாத்தியாரம்மா சரளா சொன்னாள் ஒருநாள்: “உன் அப்பா ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு சுசீலாவாவது கூப்பிடாமல் இருக்க மாட்டார். ‘அம்மா, சுசீலா கொஞ்சம் தாகத்துக்குத் தண்ணீர் கொண்டு வருகிறாயா?’ என்பார். இல்லாவிட்டால், ‘ஆபீஸ் பையன் வருவான்; கட்டுகளை எடுத்துக் கொடுத்து விடுகிறாயா சுசீலா?’ என்பார். நான் வெகு நாட்கள் வரை உன் அம்மா பேர் தான் சுசீலாவாக்கும் என்று நினைத்திருந்தேன். அப்புறந்தான் மாமி ஒரு நாள் சொன்னாள்” என்று நகைத்தாள்.

இதைக் கேட்கும் போது என் நெஞ்சு நெகிழ்ந்து விட்டது. இப்படி என்னிடம் உவமை கூற முடியாதபடி அன்பு பூண்டிருக்கும் பெற்றோருக்கு, நான் கணவன் வீட்டில் லட்சிய வாழ்க்கையில் மிதந்து கொண்டிருக்கிறேன் என்று பெருமிதம் கொண்டு மகிழ்ந்து போயிருக்கும் பெற்றோருக்கு, என் அவல வாழ்வு தெரிந்தால் எத்தகைய அதிர்ச்சி உண்டாகும்? சுவர்க்க போகத்தில் திளைத்துக் கொண்டு இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பவர் முன்பு ஆயிரமாயிரம் குட்டிப் பிசாசுகளும், கரும்பூதங்களும் தோன்றி நெருக்கினால் எப்படி இருக்கும்? அவர்களுக்கு அளிக்கும் கைம்மாறு?

மனப்பெட்டியை உடைத்து அம்மாவிடம் கதற வேண்டும் என்ற தாபத்துடன் அங்கு அடி எடுத்து வைத்த எனக்கு தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளும், அவர்களுடைய மனப்போக்கும் நான் அவ்விதம் செய்வது சரியா என்ற யோசனையைக் கொடுத்து விட்டன.

அவளால் எப்படிப் பரிகாரம் தேட முடியும்? இன்னும் உண்மையை உள்ளபடி உரைத்தால், அம்மா என் மேலேயே குற்றம் சாட்டுவாளோ என்னவோ? எனக்குள்ளேயே இன்னும் எவ்வித நிர்ணயமும் இருக்கவில்லையே.

ஒருபுறம் சிந்தித்துப் பார்த்தால் தவறு என் மீதும் உண்டு எனவே பட்டது. யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு கெட்டது போல என் ஜீவனற்ற இன்றைய வாழ்வுக்கு என்னுடைய அன்றைய படபடப்பும் காரணமாகத்தானே இருக்கிறது? அன்றிரவு தான் எத்தனை ராட்சஸியாக நடந்து கொண்டேன்! அவருக்கு மட்டும் மனம் புண்படாதா? ரோசம் இருக்காதா? அன்புப் பிச்சை கேட்டு வந்தவரை வெருட்டித் துரத்தினேனே! ஆனால்… ‘பெண் புத்தியே பேதைமை நிறைந்தது’ என்பது என் விஷயத்தில் எத்தனை நிதரிசனமாகி விட்டது! தவறுக்காக உள்ளூற உருகிப் போகும் என்னைக் குற்றம் செய்து விட்ட குழந்தையைத் தண்டிப்பதைப் போல் உடனேயே ஏதாவது தண்டனை கொடுத்து விட்டு அவருடையவளாக அங்கீகரித்திருக்கக் கூடாதா? வெளியிலே யாரும் வித்தியாசமாக நினைக்காதபடி, ‘சுசீ, சுசீ!’ என்று அன்பொழுகத்தான் கூப்பிட்டார். அப்பாவுடன் ஊருக்கு வரும்போது பிறர் வியக்கும்படி பிரிவில் குறைவு காணும்படிதான் பேசினார். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அவர் ஒரேயடியாக அல்லவோ மாறிவிட்டார்? “தொட வேண்டாம் என்னை!” என்று திருநீலகண்டர் மனைவி போல நான் சொன்னதை வைத்துக் கொண்டு ஆணையாக நடக்கிறாரே!

மந்திரவாதியின் கைக்கோலைப் போல் என் போன்ற வெகுளிப் பெண்களை மனக்குறளி ஆட்டி வைக்கிறது. திசை விட்டுத் திசை பாய்ந்து ஓர் இடத்திலே ஸ்திரமின்றி அலைபாயும்படி செய்து விடுகிறது. என் மீது தவறு கண்டு ஒரு புறம் குத்தினால், இன்னொரு புறம் அவரது தப்பை எடுத்துச் சொல்லத் தயாராக வாதம் காத்திருக்கும்.

உண்மையிலே அவருக்கு என் மீது கரை காணாக் காதல் இருந்தால் ஏதோ ஆத்திரத்தில் இரண்டு வார்த்தைகள் கூறினேன் என்பதைக் கொண்டு தனிமையில் என்னிடம் முகம் கொடுத்துப் பேசாமலா இருப்பார்? தனிமையிலே என்னைக் கண்டு விட்டாலோ ஏதோ கர்ணனைக் காணும் குந்தி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது போலத் தம் அழுத்தமான உதடுகளை இறுகப் பொருத்திக் கொண்டு வைத்த கண் இப்புறம் அப்புறம் மாறாமல் அந்தப் பாழாய்ப் போன காரியாலயக் காகிதங்களில் ஒரேயடியாய் லயித்து விடுகிறாரே; என் மீதுள்ள அன்பால் பாகாய் உருகி நைந்த மனம் இப்போது ஒரேயடியாய் நெக்குவிடாப் பாறையாகி விடக் காரணம் என்ன? அவ்வளவு மாபெரும் குற்றமா நான் செய்தேன்? நான் வெகுண்டு விழுந்ததிலும் ஒரு விதத்தில் நியாயம் இருக்கவில்லையா? காதலுக்கு மதிப்புக் கொடுப்பவர், பெண்மையின் சுதந்திரத்தைப் போற்றுபவர் என்றெல்லாம் கனவு கண்டிருந்த என் முன் அவரே சுதந்திரமற்று நடத்தும் வாழ்க்கைக்கு நானும் ஒன்றிப் போக வேண்டும் என்று என்னை நிர்ப்பந்தப்படுத்துவது போல் நடந்து கொண்டால் எனக்கு ஏற்பட்ட அளவில்லாத ஏமாற்றத்தில் வெருட்சி தோன்றியது எவ்வாறு தவறாகும்? அண்ணன், மதனியிடம் அவருக்கு அவர்கள் என்ன செய்தாலும் சரியாகத் தோன்றட்டும். ஆனால் என்னை தன் இருதயத்தில் வைத்துப் போற்றுவதாக அலங்கார வார்த்தைகள் கூறியவருக்கு, என்னை அவர்கள் வேலைக்காரிக்குச் சமமான அந்தஸ்தில் நடத்துவது ஏனோ கண்களில் படவில்லை? காதலை விட நன்றியுணர்ச்சி தானே அதிகமாக அவர் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறது? சிந்தித்துப் பார்த்தால் நான் நடந்து கொண்ட விதம் சரியே ஒழியத் தவறே இல்லையே!

மாபெரும் இலக்கியக் கடலிலே முழுகி ஆராய்ச்சிகள் நடந்துபவனைப் போன்று முடிவு காணாத என் போராட்டங்கள் என் குறைகளைப் பெற்றவளிடம் உடைத்துக் கூறப் போதிய துணிவில்லாமல் ஆக்கிவிட்டன. தாயன்பின் தாளடியிலே மனப் புண்ணுக்கு மருந்து தேடலாம் என்று எண்ணிக் குதூகலத்துடன் புறப்பட்டு வந்த எனக்கு மனப்புண் அதிகமாக வீங்கி வேதனை கொடுத்ததே ஒழிய அதை உடைத்துவிட நடுக்கமாக இருந்தது. உள்ளே ஜுரத்தை வைத்துக் கொண்டு, வெளியே தெரிந்தால் தாய் படுக்கையில் கிடத்தி விடப் போகிறாளே என்று பயந்து வெளியே கள்ளமில்லாதது போல் நடமாடும் குழந்தை போல நானும் மேலுக்குச் சிரித்துப் பேசினேன்.

அடுத்த வீட்டுச் சரளாவையும் என்னையும் சங்கீத ஞானம் நட்புக் கயிற்றால் பிணைத்தது. அவளுக்கு அவ்வளவாகக் குரலினிமை இல்லை. ஆனால் தேர்ந்த சாதகத்தாலும் தெளிந்த ஞானத்தாலும் அந்தக் கலை அவளிடம் ஒளியுடன் விளங்கியது. என் குரலினிமையைக் கண்டு அவள் வியந்தாள். “இவ்வளவு அரிய கலையைக் கற்றுக் கொண்டு அலட்சியமாக இருக்கிறாயே. உன் சாரீரம் யாருக்கும் கிட்டாத பாக்கியமாக்கும்? தொடர்ந்து சாதகம் செய்தால் கலையுலகிலே நீ எப்படிப் பிரகாசிப்பாய், தெரியுமா?” என்று என்னுள்ளே ஆசையைத் தூண்டி விட்டாள். நான் அங்கிருக்கும் போதே அவள் ஒரு நாள் வானொலி நிலையத்துக்குச் சென்று பாடி விட்டு வந்தாள். அம்மா, நான், அவள் தாய் மூவரும் அதைத் தாசில்தார் வீட்டு ரேடியோவில் போய்க் கேட்டு வந்தோம். அப்போது எனக்கு, ‘நாமும் இம்மாதிரி ஒரு நாள் பாடுவோமா? பாடினால் திடீரென்று அவர் வியக்கத்தக்க விதமாக வானொலிப் புத்தகத்தில் “சுசீலா ராமநாதன்” என்ற பெயரைப் பார்த்தால் எப்படி இருக்கும்!’ என்ற புதுக் கற்பனைகள் மனத்தில் எழுந்தது. எனக்கு அநுசரணையாக இருந்த சரளாவின் உதவி கொண்டு நான் என் பழைய வெறுப்பையும் மனநோவையும் மறந்து புது முயற்சியில் ஈடுபடலானேன். நாளடைவில் என் நெஞ்சில் குடி கொண்டு வாதனை கொடுத்த அவரைப் பற்றிய, என் எதிர்காலப் பிணைப்பைப் பற்றிய, எல்லா நினைவுகளும் மெல்ல மெல்ல அமுங்கி, அந்த இடத்தில் என் புது லட்சியம் முன் வந்து நிற்கலாயிற்று.

இந்த நிலையில் தான் அப்பா ஒரு நாள் எனக்கு ஒரு கடிதம் கொணர்ந்து கொடுத்தார். ‘சுசீலா ராமநாதன்’ என்ற அந்த அச்சுப் போன்ற கையெழுத்தைத் தாங்கிய கடிதத்தை அதற்கு முன் அதே வீட்டில் நான் பெற்றுக் கொண்ட போது என் இருதயம் ஒளிமதியைக் காணும் கடல் போலப் பொங்கிப் பூரித்ததே; அப்போது எல்லையற்ற ஆனந்தத் துடிப்பினால் நடுங்கிய கைகள் இப்போது இனமறியாத அச்சத்தாலும் குழப்பத்தாலும் நடுங்கின. அந்த உறைக்குள் அப்பாவுக்கு ஒரு கடிதமும் எனக்கு நாலே வரிகள் கொண்ட ஒரு கடிதமும் அடங்கியிருந்தன. “பிரியமுள்ள சுசி! கோடைக்கு அண்ணா, மதனி முதலிய எல்லோரும் ஊட்டிக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருக்கிறோம். ஆதலால் இந்தக் கடிதம் கண்டவுடனே அப்பாவைக் கொண்டு வந்து விடச் சொல். தனியாக அவருக்கும் எழுதியிருக்கிறேன். சாக்குப் போக்கு எதுவும் கூறிக் கொண்டு வராமல் இருந்து விடாதே. ராமு.”

இதுதான் அந்த ஆங்கிலக் கடிதத்தின் சாராம்சம்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெருமை பிடிபடவில்லை. ஏதோ நான் ஒரு மகாராஜாவுக்கு வாழ்க்கைப்பட்டு மகாராணியாக ஆகிவிட்டது போல் அவர்கள் உச்சாணிக் கொம்பில் பறந்தார்கள். ஆனால் மலைவாசம் அநுபவிக்கப் போகும் மகாராஜாவுக்கும் மகாராணிக்கும் கையாளாக இருக்கத்தான் என்னை அழைக்கிறார்கள் என்ற உண்மை எனக்கல்லவோ தெரியும்?

மாப்பிள்ளையின் உத்தரவைச் சிரமேல் தாங்குவது போல் அவர்கள் என்னைக் கொண்டு விட உடனே யத்தனம் செய்தது எனக்குக் கவலையை ஊட்டியது. அன்றிரவு என் அன்னையிடம் அந்தரங்கமாகப் பேச்சைத் துவக்கினேன். “அம்மா, இப்போது என்னை ஒன்றும் கொண்டு விட வேண்டாம்; இன்னும் இரண்டு மாசம் இருக்கிறேனே” என்றேன்.

என் முகத்தை அவள் ஆச்சரியம் குலவும் விழிகளால் ஏறிட்டுப் பார்த்தாள். “அப்படிச் சொன்னால் நன்றாக இருக்குமா சுசீலா! அவர் ஆசையுடன் அழைத்திருக்கிறார். இன்னும் இரண்டு மாசம் வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வது முறையா?” என்றாள்.

“இல்லை அம்மா, எனக்கு அங்கே போகவே பிடிக்கவில்லை. ஏன் போக வேண்டும் என்றிருக்கிறது” என்றேன் நான், மெதுவாக மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு.

“அழகாய்த்தான் இருக்கிறது. பிறந்த வீட்டிலிருந்து புருஷன் வீடு போக வேண்டும் என்று நினைத்தால் முதலில் அப்படித்தான் இருக்கும். அசடு மாதிரி எதாவது பேசாதே. அவர் என்ன நினைத்துக் கொள்வார் அப்புறம்; நியாயம் தவறி நாமும் போகக்கூடாது பார்!” என்றாள் அவள்.

நான் இன்னமும், “வந்து… இல்லை அம்மா எனக்கு அங்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நானே எல்லா வேலைகளும் செய்ய வேண்டும். என் மாமியாருக்குப் பெரிய மாட்டுப் பெண் தான் அருமை. அவள் வைத்ததுதான் சட்டம். அதற்காகவே என்னை இப்போது அழைக்கிறார்கள்” என்று திருப்திப்படாத சிறுமி போல முணுமுணுத்தேன்.

“வெகு சமர்த்துதான் பெண்! வெளியே சொன்னால் வெட்கக்கேடு! என்னடி கஷ்டம் அங்கே? புக்ககம், பெரிய குடும்பம் என்றால் வேலையில்லாமல் பொறுப்பில்லாமல் திரிந்து கொண்டிருக்க முடியுமா? பெண்ணாய்ப் பிறந்தவள் புருஷன் வீட்டில் ஆடி ஓடி உழைக்கத்தான் வேண்டும். ஜகதுவைப் பார். மாடு, சாணி, சகதி என்று உழலும் போதே புக்ககம் போக மாட்டேன் என்று சொல்ல மாட்டாளே. வந்து பத்து நாட்கள் ஆவதற்குள் துடித்து விடுவாளே. மாப்பிள்ளை கொள்ளை ஆசைப்பட்டுக் கொண்டு எழுதியிருக்கிறார். நீ இங்கே குறளி பண்ணிக் கொள்! முரண்டு கிரண்டு பண்ணி இதற்கெல்லாம் பச்சைக் குழந்தை போல் பிடிவாதம் பிடிக்கலாம் என்று நினைத்துப் பேசாதே சுசீ. அண்ணன் தம்பி என்று இந்த நாளில் இப்படி வித்தியாசம் இல்லாமல் இருக்கிறார்களே என்று நாங்கள் எவ்வளவோ சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். நீ போன மறுநாளே எக்கச்சக்கமாக ஏதாவது சொல்லிக் கொண்டு எங்கள் பேரைக் கெடுத்து விடாதே, ஆமாம்!” என்று என் பேரில் கோபம் கொண்டு அவள் எச்சரித்தாள்.

மாப்பிள்ளை பேரில் உள்ள நல்ல அபிப்பிராயம் என்னைக் கூட நம்ப முடியாதபடி அவ்வளவு தூரம் பசுமரத்தாணி போல் அவர்கள் மனத்தில் உறைந்து போயிருக்கிறதே. அதை நான் எப்படி நெகிழச் செய்வேன்? அப்படி முயன்றும் எனக்கேயன்றோ சாட்டை அடி விழுகிறது? முதலிலேயே என் மீது அம்மா அநுதாபம் கொள்ளாத போது, என் கணவருக்கும் எனக்குமுள்ள உறவை நான் வெளியே சொன்னால் என்னை நம்புவாளா? இன்னும் அசட்டுப் பட்டந்தான் கிடைக்கும்.

அத்தனை நல்ல பிள்ளையாகத் தோன்றி அப்பாவிடம் நல்ல பெயர் சம்பாதித்து விட்ட அவர் மீது என் சீற்றம் அளவிட முடியாதபடி பெருகியது. மேலுக்கு மட்டும் அன்புள்ளவர் போல நடக்கும் அவர் மனத்திலே உண்மையாக என்னதான் இருக்கும்?

என்னவோ பெண்ணுள்ளம் புரியாதது, புரியாதது என்று கதாசிரியர்களும் மன ஆராய்ச்சியாளர்களும் கதைக்கிறார்களே, இந்த ஆணுள்லத்தைப் போலப் புரிந்து கொள்ள முடியாத பொருளே கிடையாது என்று எனக்கு அநுபவபூர்வமாகத் தெரிந்தது. நிலைக்கு நிலை மாறும் என் சஞ்சல உள்ளம் கொண்டு அவருடைய இருண்ட குகை மனத்தைக் கண்டு கொள்ளவே முடியவில்லை!

குழந்தைப் பிடிவாதம் செய்கிறேன் என்று அம்மா அலட்சியமாக எண்ணி அதட்டிவிட்ட போதிலும் என் தைரியம் குன்றவில்லை. தளர்ச்சி அடையாமலே, “அம்மா, நீ நினைக்கும்படி நான் குழந்தைப் பிடிவாதம் செய்யவில்லை. நீ அப்படி, இப்படி என்று புகழ்ந்து கொள்ளும் மாப்பிள்ளையைப் போல் இரும்பு நெஞ்சம் படைத்த மனிதர்கள் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டார்கள். அண்ணா, மதனி இட்டதுதான் அவருக்கு ஆணை. அன்பில்லாத அந்த வீட்டிலே என்னால் இனிச் சிறை வாசம் அனுபவிக்க முடியாது அம்மா!” என்றேன். கண்ணீர் துரத்திக் கொண்டு வந்தது.

“என்னடி சுசீலா இது? நீ எத்தனையோ சமர்த்தாக இருக்கிறாய் என்று மகிழ்ந்து போனேனே நான். அப்பாவானால் ஒரே மாட்டாய், நம் பெண்ணைப் போல உலகிலேயே யாரும் இருக்க மாட்டாள் என்று ஆகாசத்தில் பறந்து கொண்டிருக்கிறார். நீ தலையிலே கல்லைத் தூக்கிப் போடுவது போலல்லவோ சொல்கிறாய்? அன்பில்லாதவனா இப்படி ஒரு மாசம் ஆனதும் கடிதாசு போடுவான்? குடும்பத்தில் இருப்பதென்றால் ஏறவும் தாழவுந்தான் இருக்கும். இதைக் கூடச் சகித்துப் போகாமல் இங்கே இருப்பேன் என்று நீ சொல்வது அழகாயிருக்கிறதாடி சுசீ? அப்படியே கஷ்டப்படுத்தினால் கூட முதல் முதலில் தாழ்ந்து போவதுதான் பெண்களுக்கு அழகு. கொண்டு கொடுத்துச் சம்பந்தம் செய்து பேரன் பேத்தி எடுத்தாச்சு. இப்போது கூட உன் அத்தை பாட்டி என்ன அலட்சியம் பண்ணினாலும் நான் நேருக்கு நேர் என்ன சொல்ல முடிகிறது? போனதும் போகாததுமாக அண்ணா, மன்னி இட்டதுதான் ஆணை என்று நீ சொல்ல முடியுமோ? பொறுமை வேண்டாமோ? கெட்ட பெயர் சம்பாதிக்க நேரமாகாது. நல்ல பெயர் வாங்கத்தான் நாளாகும். வெளியே வாசலில் போய் வரும் புருஷன் சமயத்தில் கோபித்துக் கொள்வான். ஏன்? அடிக்கிறவன் கூட உண்டு. தணிந்துதான் போக வேண்டும். உனக்கே பதற்றம் எப்போதும் அதிகம். அதை நான் சொல்லும் போது உனக்குக் கோபமாக வரும். அத்தை இரண்டு புடவை வாங்கிக் கொடுத்தாளாம். நீ அதை முகத்தில் அடித்தாற் போல் அந்தப் பையனிடம் பொய்யும் புளுகும் சொல்லித் திருப்பி அனுப்பினாயாமே; பெரியவர்கள், பெருந்தலை என்று நாங்கள் இருக்கும் போது நீ செய்த அதிகப் பிரசங்கித்தனம் என் தலையில் அல்லவா வந்து விடிகிறது? இந்த மாதிரியில் தானே நீ அங்கேயும் நடந்து கொண்டிருப்பாய்?” என்று அம்மா பழைய குப்பைகளை எல்லாம் கிளறிவிட்டு எனக்கு இதோபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டாள். என்னிடமுள்ள குற்றங் குறைகளைச் சுட்டிக் காட்டி.

நான் என்ன செய்வேன்? என்றென்றும் சுயேச்சையாக, தாய் தந்தையாருக்குச் செல்லப் பெண்ணாக, அந்த வீட்டிலேயே நடமாடும் பெண்ணாக நான் இருந்திருக்கக் கூடாதா? மண வாழ்வு எனக்கு மனவேதனை நிறைந்த துன்பச் சிறையாகப் போய்விட்டதே. ஆகா! அந்த ஒளியில்லா வானம், ஜயத்தின் பாட்டு எல்லாம் என் வருங்காலத்தை எப்படி அறிவித்திருக்கின்றன! அந்தக் கனவு அன்புக் கரங்கள், பயங்கர உருவம், பேய்ச் சிரிப்பு – இவையெல்லாம் எவற்றின் அறிகுறியோ? உதட்டிலே அமுதமும் உள்ளத்திலே… என்ன இருக்குமோ?

வீட்டுக்கு வேலை செய்ய ஆள், அவசியம் நேரிட்ட போது இச்சையைத் தீர்த்துக் கொள்ளப் பெயருக்கு மனைவி என்று இருந்திருக்குமோ என்னவோ? ஒன்றன்பின் ஒன்றாக ஓயாது வரும் இந்த ஏமாற்றங்களில் நிலைகுலையவா நான் பெண் பிறந்தேன்?

அலைகடலின் நடுவே புயலில் சிக்குண்ட ஓட்டை மரக்கலம் போல ஆதரவின்றி வாழ்க்கைச் சுழலின் நடுவே அகப்பட்டுக் கொண்டு விட்டேனென்று எனக்குத் தோன்றியது. மூச்சு இருக்கும் மட்டும் போராடும் நோயுண்ட ஜீவன் போல நானும் போராடித்தானே ஆக வேண்டும்? வேறு என்ன வழி?

3.2 காய்

“அத்தை வீட்டுக்குள் இனி அடி எடுத்து வைக்கக் கூடாது” என்று சங்கற்பம் செய்து கொண்டேனே, அது தவிடு பொடியாகும் காலமும் வந்தது. புதுவாழ்வின் சுழற்சியிலே உல்லாசமாக மிதக்கப் போகிறோம் என்ற முறுக்கிலே விறைத்து நின்ற காலம் அது. எந்தச் சின்ன வார்த்தையும் பதம் படாத நெஞ்சைக் கடித்தது. பதமிலா மனத்துக்கு வாழ்வானது பாடம் கற்பிக்கும் தினுசே அலாதிதான். எந்த விஷயத்தில் விறைப்பாக நின்றதோ அதிலேயே பணிந்து போகும்படி சாட்டையடி கொடுத்தாற் போலச் சம்பவங்களைக் கொணர்ந்து விட்டு விடுகிறது. வலுவிலேயே அத்தை வீடு செல்லும் நிலைமை எனக்கு வந்தது.

“இங்கிருந்து காரிலே நேராக ஊட்டிக்குப் போவதை விட பெங்களூர் மைசூர் வழியாகப் போகலாமே? நேர் ரோடு அவ்வளவு சுகம் இல்லை” என்று ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தார் என் கணவர்.

எனக்கு அப்போதே பகீர் என்றது.

“மைசூரில் ஒரு வாரம் தங்கிப் பார்த்துவிட்டுப் போகலாம். சுசீலாவுக்கு அத்தை வீடு இருக்கிறது அங்கு. கல்யாணத்தின் போதே வருந்தி வருந்தி அழைத்திருக்கிறாள்” என்று பட்டு புன்னகையுடன் அதை ஆமோதித்தாள்.

வீட்டின் ராணியாயிற்றே அவள்! அவள் அபிப்பிராயத்துக்கு ஏதாவது வெட்டு வருமா என்ன?

லீலா எங்களுடன் வருவதாகத் தெரியவில்லை. ஏனோ என்று நான் சங்கடப்பட்ட போது என் கணவர், “ஏன் லீலா நீ தானே முக்கியமாக வர வேண்டியவள்! வரதனுக்கு ஏற்கனவே நீ வரமாட்டாயோ என்ற கவலை போலிருக்கிறது. ‘லீலாவுக்கும் பரீட்சை முடிந்திருக்கும் என எண்ணுகிறேன்’ என்று நாசுக்காகக் கோடி காட்டியிருக்கிறான். அவனுக்கு அவ்வளவு ஏமாற்றத்தையா கொடுப்பது?” என்று கேட்ட பின் தான் அவள் வர இஷ்டப்படாததன் விஷயம் புரிந்தது எனக்கு. “முதன் முதலாகப் பங்களாவுக்குள் மணப்பெண்ணாகக் காலெடுத்து வைக்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கலாம். அதை இப்போது கெடுப்பானேன்?” என்று அவளைக் கேலி வேறு செய்தார் மைத்துனர்.

எதிராளியின் மனத்தை அறியாமல் பரிகாசப் பேச்சுப் பேசும் போது பெரிய பரிசளித்து விட்டதாகச் சந்தோஷத்துடன் பெருமைப்படுகிறார்கள். ஊரிலே என்னை எல்லோரும், ‘வெறுமே வரவில்லை’ என்று வயிற்றெரிச்சலைக் கிளப்பி விட்டபோது நான் என்ன பாடுபட்டேனோ, அதே நிலையில் லீலா துடித்தாள் என்பது எனக்கு மட்டும் புரிந்தது.

எங்கள் வருகையை அத்தை, அத்திம்பேர், பாட்டி எல்லோருமே ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது.

“அந்த மேனாமினுக்கு ஆட்டி வைத்து விடுவாள்” என்று பட்டுவுக்குப் பட்டம் கொடுத்த அத்தை அவளுடன் குழைந்து குழைந்து பழகினதையும், பட்டு இழைந்து இழைந்து உறவாடியதையும் கண்டு நெஞ்சில் ஒன்றும் நாவில் ஒன்றும் வைத்துப் பேசுவதைக் கலையாகப் பயின்றிருக்கிறார்களோ அவர்கள் என்று கூட நான் பிரமித்துப் போனேன். ஹேமா அந்த ஏழெட்டு மாதங்களில் புது ஆளாக மாறி இருந்தாள். அவள் நடை, உடை, பேச்சு, சிரிப்பு எல்லாவற்றிலும் கல்லூரி மாணவி என்ற முத்திரை இருந்தது. கர்வமும் மிடுக்கும் ஏறியிருந்தன. முன்பு, ‘சுசி, சுசி!’ என்று குழைந்த அவள் இப்போது அவ்வளவாக லட்சியங்கூடப் பண்ணவில்லை. ஆமாம்! ஓரகத்தியின் கைக்குழந்தைக்குப் பால் புகட்டுவதும் தூங்க வைப்பதும் பணிவிடை செய்வதுமாக, என் புடவையிலும் தலையலங்காரத்திலுங்கூடக் கவனம் செலுத்தாதவளாகச் சுற்றிச் சுற்றி வந்த நான் அவள் கண்களுக்கு வேலைக்காரியைப் போல் தென்பட்டிருக்கலாம். பட்டுவின் கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நான் அலைவதைப் பார்த்த வெங்கிட்டு கூட, “என்ன சுசி, இப்போதே ஒரே அம்மாமியாக ஆகிவிட்டாயே!” என்றான்.

தனக்குச் சரிசமமான அந்தஸ்துடையவர்கள் என்று அத்தை பட்டுவிடம் புதுப்புது நகைகளையும் புடைவைகளையும் பற்றிப் பேசினாள். தன் வீட்டில் உள்ள சாமான்களையும் பணம் பெற்ற பண்டங்களையும் அவளிடம் காண்பித்து அபிப்பிராயம் கேட்டாள். நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்க, அவர்கள் வேடிக்கையாக ஊர் சுற்றினார்கள். உற்சாகம் மேலிட்ட அத்தை, “இன்னும் பத்து நாள் நீங்கள் இருந்து விட்டுப் போகலாம். அப்புறம் இந்தப் பக்கம் எப்போது வரப் போகிறீர்கள்?” என்று கூட உபசரித்தாள்.

அப்பப்பா! இந்தப் பணத்துக்கு இத்தனை மதிப்பா? ஆண்கள் சமூகத்தில் இத்தனை ஏற்றத் தாழ்வுகள் இருப்பதாக எனக்குப் படவில்லை. பெண்கள், முக்கால்வாசி நடுத்தரப் பெண்கள், நகையாலும் புடவையாலுமே மதிப்பை அளவிடுகிறார்கள். என்னுடைய அத்தைக்குப் பட்டுவிடம் உள்ள மதிப்பு அவளை விட நெருங்கிய சம்பந்தம் உள்ள அம்மாவிடம் இருக்குமா? டாலடிக்கும் வைரமும், சரிகை நெளியும் பட்டும் அவளிடம் ஏது? மஞ்சள் சரட்டுடன் நூல் புடவையுடனும் என் தாய் இந்த வீட்டுக்கு வந்தால் எத்தகைய மரியாதை கிடைக்குமோ? ஏன்? அத்தைதான் ஆகட்டும், ‘குழந்தை அப்போதே வந்தாள், ஓரிடமும் பார்க்கவில்லை’ என்று என்னை அழைக்கவில்லை. பட்டுவை ஒரு நிமிஷம் வீட்டிலே தங்க விடாமல் அழைத்துப் போவானேன்?

ஊமைக் காயமுற்றிருந்த இருதயத்தில் சுரீரென்று சாட்டையடி கொடுப்பது போல் அன்று கீழே குளித்து விட்டுப் புடவை தோய்த்துக் கொண்டிருந்த என்னிடம் அத்தை, “இந்தப் புடவையைக் கட்டிக் கொள்கிறாயா? எங்கே குப்பையில் போட்டு விட்டாயோ என்று எண்ணினேன்” என்றாள்.

‘குழந்தைப் பெண் தெரியாமல் செய்து விட்டாள், நாமும் பேசிய முறை தவறு தான். பாவம்! இன்னமும் ஓரகத்தியின் குழந்தையை வைத்துக் கொண்டு உழலுகிறாளே’ என்று என்னிடம் அநுதாபம் தோன்றக் கூடாதா?

பாட்டிக்கு என்னிடம் தோன்றிய அநுதாபமே விசித்திரமான முறையில் இருந்தது.

“ஏண்டி பெண்ணே இந்தக் கண்ணாடிக்கல் தோட்டைப் போட்டுக் கொண்டு அவர்களுடன் நடமாடுவது பார்க்க நன்றாக இல்லையே. உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏன் இதெல்லாம் தெரியவில்லை? இல்லை, அகமுடையானிடம் கேட்டுத்தான் நல்லதாகத் தோடு ஒன்று வாங்கி இட்டுக் கொள்ளக் கூடாது? என்னவோ? விடிய விடிய உன் அப்பாவும் சம்பாதிக்கிறான். அக்கா, தங்கை என்று பற்றிக் கொள்வதைத் தவிர காலணாக் கொடுக்கவில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி விட்டான். காது மூக்குக்கூட ஒக்கிடாமல்!” என்று என்னைப் பார்க்கச் சகிக்காமல் அலுத்துக் கொண்டாள்.

ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கும் செல்வருடைய அருமைப் பெண் அல்லவா ஹேமா? காதிலே மாட்டியிருந்த தேர்ச்சக்கரம் போன்ற கொப்பும், கொழுக்கட்டை போன்ற மொண்ணை மூக்கும், மொட்டைக் கைகளும் பாட்டிக்குப் பார்க்கப் பெருமையாக இருந்தன! பணக்காரர்கள் என்ற முத்திரையினால் தலைகீழாக நின்றாலும் அரை நிர்வாணமாக ஆடை அணிந்து கொண்டாலும் நாகரிகமாகப் பட்டு விடுகிறது. நான், இருப்பதைக் கொண்டு அடக்கமாக இருந்தது. இல்லாமையைப் பறையடிக்கும் தோற்றமாகப் பட்டது!

பெண்கள் என்னவோ முன்னேறுவதாகவே சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்தப் புடவை நகை மனப்பான்மை மட்டும் பதினெட்டாம் நூற்றாண்டுப் பெண்களிடத்திலும் இருபதாம் நூற்றாண்டுப் பெண்களிடத்திலும் பெரும்பாலும் ஒரே தன்மையாகவே தான் தோன்றுகிறது. காறையாகவும் காசு மாலையாகவும் இருந்தவை வேறு பல உருவங்களாக அவதாரம் எடுத்திருக்கின்றன. அவ்வளவுதான். இல்லாவிட்டால் அத்தைக்கும் எனக்கும் இடையே இத்தனை பெரிய பிளவு தோன்றுவானேன்? என்னிடம் அழகில்லையா? அறிவில்லையா? குணத்திலுந்தான் என்ன குறைந்து விட்டேன்? இந்த பட்டுதான் என்னை இப்படித் தாழ்வாக நடத்துவாளா? ஹேமா எனக்குப் பதிலாக இங்கே வாழ்க்கைப்பட்டிருந்தால், ‘குழந்தை அழுகிறதே, கொஞ்சம் எடுத்து ஹார்லிக்ஸ் கொடுக்கிறாயா?’ என்று பட்டு சொல்ல முடியுமா?

அன்று வெற்றிலையைச் சுவைத்துக் கொண்டு உல்லாசமாக உட்கார்ந்திருந்த அத்தை பட்டுவிடம், “இந்த வருஷம் அநேகமாக எங்கள் ஹேமாவுக்குக் கல்யாணம் நடந்தாலும் நடக்கும். ஊட்டியில் இருந்தால் கட்டாயம் நீங்கள் வரவேண்டும். இன்னும் இரண்டு மாசங்கூட இல்லாமலா போகப் போகிறீர்கள்?” என்றாள்.

“அப்படித்தான் நினைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். பள்ளிக்கூடம் திறந்து விட்டால் கூடக் குழந்தைகளை மட்டும் அனுப்பிவிட்டு நான் நாலு மாசம் உடம்பைத் தேற்றிக் கொண்டு போகலாம் என்று எண்ணியிருக்கிறேன். பெண் படிக்கிறாள் போல் இருக்கிறதே; கல்யாணமும் பண்ணி விடப் போகிறீர்களாக்கும்” என்று பட்டு கேட்டாள்.

“படித்தால் என்ன? உறவு தான் பையன். அவனுக்கு இந்த வருஷந்தான் படிப்பு முடிந்தது. கட்டிவிட்டால் கவலை விட்டது, பாருங்கள்!” என்றாள் அத்தை.

‘உறவிலேயா? யார் இருக்கிறார்கள்?’ என்று நான் எண்ணி முடிக்கு முன் பட்டு கேட்டு விட்டாள்.

“நாத்தனார் பிள்ளைதான். இந்த ஊரிலேதான் அவர் யூனிவர்ஸிடியில் புரொபஸராக இருந்தார். கொஞ்ச நாளாக உடம்பு சரியாக இல்லை. அதனாலேயே அவ்வளவு அவசரம். பையன் பட்டணத்திலேதான் எஞ்சினியரிங் வாசித்தான்” என்று அத்தை விளக்கும் வரை எனக்கு மூர்த்தியின் நினைவு வரவேயில்லை.

என்னையும் மீறியவளாக, “மூர்த்தியா அத்தை? தெரியவில்லையா மன்னி? அன்றொரு நாள் புடவை கொண்டு கொடுத்தாரே; அப்புறங்கூட அடிக்கடி வீட்டுக்கு வருவாரே” என்று நான் ஞாபகப்படுத்தினேன். என்றாலும் ஏனோ எனக்கு அப்படிப் படபடக்க வேண்டும்?

அங்கே லீலாவுக்கு வரதன், இங்கே மூர்த்திக்கு ஹேமாவா? லீலாவுக்கு இந்தச் செய்தி தெரிந்தால் எத்தனை வேதனையாக இருக்கும்! பெண் என்றாலும் அவளல்லவா பெண்? அவளுந்தான் படிப்பிலும் அழகிலும் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் குணத்திலும் மேன்மை பெற்றவள். என்னுடன் பழகி இருந்தும் ஹேமா இப்போது முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாளே. வெளித் தோற்றத்தை விட்டு, உண்மையான உள்ளத்தைக் கண்டு மதிப்புக் கொடுக்கும் அவளல்லவா உண்மையில் நாகரிகம் அடைந்தவள்? அவளைப் போல் மேக்-அப் ஆடம்பரமும் உடல் தெரியும் ஆடைகளும் இன்றி அடக்கமாக அவள் கல்லூரிக்குப் போய் வரும் அழகு ஒன்றே போதுமே! லீலாவுக்கு இந்தச் செய்தியை நான் தெரிவிக்க வேண்டாமா? அன்பு இல்லாத அந்த வீட்டில் என்னை மகிழ்விக்கும் ஒரே பிராணி அல்லவா அவள்?

ஏன்? என் தாய் கூட அப்போது அன்பிலிருந்து பிறழ்ந்து விட்டதாகத் தோன்றியது. அவள் அநுதாப வார்த்தைகளையும் ஆதரவையும் எதிர்பார்த்திருந்த என் மேல் குற்றத்தை அல்லவோ ஏற்றி வைத்து விட்டாள்? நிதானம் இழந்து விடுவேன் என்று, உள்விஷயத்தை அறியாமலேயே மடக்கி விட்டாளே? அதையும் அறிந்தால் நிச்சயமாக ஊர்ஜிதம் செய்து என்னை இன்னும் எப்படி எல்லாம் கோபித்திருப்பாளோ? புதிதாக ஏதாவது அலங்காரம் செய்து கொண்டால் கண்ணாடியில் கண்டு தனக்குத்தானே, அபிப்பிராயம் சொல்வதைக் காட்டிலும், பிறர் கண்களில் பட்டு அவர்கள் கொடுக்கும் அபிப்பிராயமே உகந்ததாகக் கருதுகிறோமல்லவா? அது போலத்தானோ உள்ளமும்? குழந்தையிலிருந்து வளர்த்து என்னைப் பெரியவளாக்கியிருக்கும் என் தாய்க்கு என் மன இயல்புகள் என்னை விட நன்கு தெரிந்திருக்குமோ? அப்படிப் பார்த்தால், நான் நிதானமின்றி அன்று நடந்து கொண்டு விட்டேன் என்று தானே ஆகிறது? ஒரு துளி விஷம் ஒரு குடம் அமுதத்தையும் விஷமாக்கி விடச் சக்தி வாய்ந்தது போல் என்னுடைய ராட்சசத் தன்மை அவருடைய அத்தனை அன்பையும் முறித்து விட்டிருக்குமோ?

லீலாவிடமிருந்து எப்படியோ சுற்றிச் சுற்றி இந்தச் சஞ்சலத்திற்கே வந்து விட்டேன். குட்டையைக் குழப்பிக் கையை விட்டுத் தேடினால் இன்னமும் கலங்கிப் போகுமே ஒழியத் தேடும் பொருள் அகப்படாது. என் மனத்தை நான் கிளறிக் கிளறி விட்டுக் கொண்டதன் பலன் இன்னும் அதிகான சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தனவே ஒழிய அவர் மனத்தை ஆழம் பார்க்கும் அளவு கோல் எனக்குக் கிடைக்கவில்லை.

லீலாவுக்கு என் சஞ்சலத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. அவள் எனக்கு ஏதாவது பரிகாரம் சொல்லக் கூடும் என்று ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது. என்றாலும் நானாக எப்படிப் பச்சையாக நிலவரங்களை உடைப்பேன்? என்னைப் பற்றி எதுவும் சொல்லிக் கொள்ள வாய் எழாதபடி ஏதோ தடுக்கிறதே!

எல்லோரும் அன்று கண்ணம்பாடி அணைக்கட்டுப் பார்க்கக் கிளம்பினார்கள். கொஞ்சம் தயங்கிய பட்டுவை வெகு சுவாதீனமாக அத்தை, “அணைக்கட்டுப் பக்கம் தண்ணீர்க் காற்று. குழந்தைக்கு ஒத்துக் கொள்ளாது. ஏற்கனவே அதற்கு ஜலதோஷம். மூச்சுத் திணறுகிறது. சுசீலா குழந்தையை வைத்துக் கொண்டு இருக்கட்டுமே. நீங்கள் இந்தச் சமயம் விட்டால் எப்போது வரப் போகிறீர்கள்?” என்று அவளுக்கு இன்னும் தைரியமூட்டும் வகையில் கூறினாள்.

எல்லோரும் போய் விட்டார்கள். வெங்கிட்டு ஊரிலேயே இருக்கவில்லை. ஏதோ விளையாட்டுக் கோஷ்டியுடன் பெங்களூர் சென்றிருந்தான். ஹேமா ‘டென்னிஸ் கிளப்’புக்குக் கிளம்பி விட்டாள். பாட்டி கீழே சமையற்கட்டில் சமையற்காரிக்கு உதவியாக இருந்தாள். நான் மட்டும் அழும் குழந்தையை மடியில் விட்டு ஆட்டியவாறு மாடியில் உட்கார்ந்தேன். மாடிப் படியில் அடியோசை கேட்டது.

“யாரும் இல்லையா?” என்று கேட்டவாறு மூர்த்தி வந்தான்.

“நீங்களா? வாருங்கள். எப்போது ஊரிலிருந்து வந்தீர்கள். அங்கு வீட்டுக்குப் போயிருந்தீர்களா? அவர்கள் எல்லோரும் சற்று முன் தான் அணைக்கட்டுப் பார்க்கச் சென்றார்கள்” என்று விசாரித்து நான் அவனை வரவேற்றேன்.

“நான் இன்று தான் வந்தேன். நீங்கள் எல்லோரும் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று லீலாதான் தெரிவித்தாள். எத்தனை நாட்கள் ஆகின்றன? நீ ஏன் பிருந்தாவனம் பார்க்கப் போகவில்லை? முன்பேயே தான் இந்த ஊருக்கு வந்து இந்த வீட்டையும் ஸ்டேஷனையும் தரிசனம் செய்து விட்டுப் போய்விட்டாய்!” என்று சிரித்த முகத்துடன் கேட்ட மூர்த்தி என்னை உற்று நோக்கினான்.

“அப்போது சௌகரியமில்லை. இப்போது குழந்தை இருக்கிறதே?” என்று பதிலளித்த எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. மீறிக் கொண்டு ஒரு வறட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தேன்.

ஆச்சரியம் விழிகளில் நடமிட அவன் என்னை இன்னும் கூர்ந்து கவனித்தான். நான் தலையைத் தொங்க விட்டுக் கொண்டேன்.

“ராமநாதன் வரவில்லை?” என்று கேட்ட அவன் தொனியிலே சந்தேகம், வியப்பு இரண்டும் கலந்திருந்தன.

“வந்திருக்கிறார்” என்று முணுமுணுத்த நான் தலையை ஆட்டினேன்.

“பின் ஏன் உன்னைத் தனியாக இங்கு விட்டுவிட்டுப் போனார்? ஓகோ! கூட்டத்துடன் இல்லாமல் தனியாகப் போக வேண்டும் என்று…” குறும்புச் சிரிப்புடன் வாக்கியத்தை முடிக்காமலேயே அரைகுறையாக நிறுத்தினான் அவன்.

என் துயரத்தை நெம்புகோல் போட்டு நெம்பி விட்டது போல் ஆயிற்று. விழிக்கடையில் நீர் உந்திக் கொண்டு வந்து விட்டது. குழந்தையைத் தூளியில் போட்டு விட்டு அவன் முகத்தைப் பாராமலே நான் வராந்த ஓரமாகப் போய் நின்று கொண்டேன். மழையில்லாது காய்ந்து கிடக்கும் பயிர் ஒரு சொட்டு நீர் வந்தாலும் விட்டு விடுமா? யாருமே எனக்கு அநுதாபமாக இருக்கவில்லை என்ற ஏக்கம் நெஞ்சை நிரப்பிக் கொண்டிருந்த போது அவனுடைய அநுதாபம் என்னை இளக்கிவிட்டது.

மீண்டும் அவன், “என்ன சுசீலா, முகம் ஏதோ மாதிரி இருக்கிறதே. உடம்பு சுகமில்லையா?” என்று வினவினான்.

“ஒன்றுமில்லை” என்ற என் குரல் எனக்கே தழுதழுத்திருந்தது. அவன் பாராதபடி, திரும்பிக் கண்களில் துளித்திருந்த நீரைத் துடைத்துக் கொண்டேன். பதற்றம் தெரிய, “என்ன விஷயம் சுசீலா? ஏதோ… மனஸ்தாபம் போல…” என்று முடிக்காமலேயே நாவைக் கடித்துக் கொண்டான் மூர்த்தி. நான் அந்த அரை நிமிஷ நெகிழ்ச்சியிலிருந்து சமாளித்துக் கொண்டு விட்டேன்.

“ஏதும் இல்லை. ஆமாம், நீங்கள் லீலாவை என்று பார்த்தீர்கள்? உங்களுக்குக் கல்யாணமாமே?” என்று சட்டென்று பேச்சை மாற்றினேன்.

இந்தச் சமயத்தில் பாட்டி வந்தாள். “மூர்த்தியா வந்திருக்கிறாய்? எப்போது ஊரிலிருந்து வந்தாய்? நீ வந்தது தெரியவே இல்லையே! வெகு நேரமாச்சா என்ன?” என்று விசாரித்தாள்.

“இல்லை, இப்போதுதான் வந்தேன். அவர்கள் யாருமில்லையா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்களும் வந்துவிட்டீர்கள்” என்று அவன் பதில் கொடுத்தான்.

“குழந்தை தூங்குகிறதாடி சுசீலா? கீழே போய்க் கொஞ்சம் பாலைப் பார்த்துக் காய்ச்சி வை” என்று எனக்கு உத்தரவிட்டு அவள் தன் பேத்திக்குக் கணவனாக வரப் போகும் மூர்த்தியிடம் பேச உட்கார்ந்தாள்.

‘சாதாரணமாகத்தான் சொன்னாளாக்கும்’ என்று அப்போது நினைத்தேன். அவள் எண்ணம் பிறகு தான் தெரிந்தது.

“ஏண்டி நீ சிறிசு. அவன் வந்தால் அவர்கள் இல்லை என்று பேசாமல் கீழிறங்கி வந்து என்னிடம் தெரிவிப்பாயா? அவனுடன் வராந்தாவில் நின்று கொண்டு என்ன பேச்சு வேண்டியிருந்தது? புக்ககத்துக்குப் போயும் இது தெரியவில்லையே இன்னும்! அவன் யார், என்ன? இதெல்லாம் நினைப்பில்லையே உனக்கு! என்னவோ உன் அம்மாவும் பெண் வளர்த்து விட்டாள். நியும் புக்ககம் என்று வந்து விட்டாய்!” என்று அன்றிரவு என்னைத் தனிமையில் சமையலறையில் கோபித்துக் கொண்டாள். பந்தடி மட்டையை ஒய்யாரமாக வீசிக் கொண்டு தன்னந்தனியே வெளியே போய்விட்டு வந்த ஹேமா சற்றும் கூச்சமோ நாணமோ இன்றி என் கணவரிடமும் மைத்துனரிடமும் கடகடவென்று சிரித்துக் கொண்டு பேசுவது பாட்டியின் கண்களுக்கு விகற்பமாகப் படவில்லை. வீட்டிற்குள் என் விதியை நொந்து கொண்டு கிடக்கும் நான் மூர்த்தியிடம் இரண்டு வார்த்தை பேசியது விகற்பமாகப் பட்டுவிட்டது! பணம் பண்ணும் வித்தைகளில் இதுவும் ஒன்று போலும்!

3.3 காய்

மறுநாள் காலை வாசல் தோட்டத்துக் காம்பவுண்டில் சரத் துணிகளைப் பிழிந்து நான் உலர்த்திக் கொண்டிருந்தேன். மூர்த்தி சைக்கிளைச் சார்த்தி விட்டு உள்ளே வந்தான். “அவர்கள் இதற்குள் எங்கும் போய்விட மாட்டார்கள் என்று வந்தேன். இருக்கிறார்கள் அல்லவா?” என்று கேட்டான். என்னிடம் பாட்டியின் சூடு இன்னும் என் உள்ளத்தில் பச்சையாகவே இருந்தது. எனவே இருக்கிறார்கள் என்ற பாவனையில் தலையை மட்டும் ஆட்டினேன். அவன் உள்ளே சென்றான். சற்றைக்கெல்லாம் அறையில் ஏதோ வேலையாக இருந்த என்னை மூர்த்தி, “சுசீலா!” என்று வந்து கூப்பிட்டான்.

‘இது ஏதடா சங்கடம்?’ என்று எண்ணிக் கொண்ட நான், “என்ன?” என்று கேட்டவாறு திரும்பினேன்.

என் கணவரும் அருகில் நின்றார்.

“நான் சொல்லவில்லையா நேற்று? இன்று என்ன திட்டம் போட்டிருக்கிறார், தெரியுமா?” என்று கேட்டு அவன் சிரித்தான்.

அவரும் நகைமுகத்துடன் தான் மௌனம் சாதித்துக் கொண்டு நின்றார். என்றாலும், முன்பு போல் அவர் விழிகள் என் உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கவில்லை. அவர் புன்னகையிலே இயற்கையான ஜீவன் இருந்ததாக்வே எனக்குப் படவில்லை. மூர்த்தியின் கேள்வியில் மகிழ்ச்சி தாங்காமல் அகம் மலர்ந்து விடவில்லை எனக்கு.

“என்ன திட்டமாம்?” என்றேன் பல்லைக் கடித்துக் கொண்டு.

எங்கள் இருவருக்கும் ஏதோ மனவேற்றுமை இருக்கிறது என்பதை எங்கள் பாவனை அவனுக்குப் புலப்படுத்தியே இருக்கும். நான் என்ன செய்வேன்! அகத்தின் நிலையை முற்றும் மறைத்துக் கொண்டு நடிக்க எனக்குத் தெரியவில்லையே! என்ன தான் நான் முயன்றாலும் அநுதாபம் கிடைக்கும் சமயங்களில் கட்டுக்கு மீறிச் சாயையைத் தெரிவித்து விடுகிறதே முக பாவம்.

“பார்த்தாயா மூர்த்தி? எனக்குத் தெரியும், நான் வந்து அழைத்தால் அவள் வரமாட்டாள் என்று. அதனாலேயே அவள் வழியில் குறுக்கிட வேண்டாமென்று நான் நேற்றுப் பேசாமல் போனேன்” என்றார் அவர்.

இந்த வார்த்தைகளில் எத்தனையோ அர்த்தம் பொதிந்து கிடக்கின்றது என்பது எனக்குத்தானே தெரியும்.

“நீங்கள் கூப்பிட்டீர்கள், நான் வரவில்லை. எப்படியும் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்க வேண்டும். மன்னிக்கு அப்புறம் எப்போது சமயம் வாய்க்குமோ? எனக்கு அப்படியா? நாளைக்கே ஹேமாவுக்குக் கல்யாணம் என்றால் வருவேன். பிரமேயம் இருக்கிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தான் விட்டுக் கொடுத்தேன்” என்று மனத்தாங்கள் எதுவுமே இல்லாதவள் போல நான் சாதாரணமாக பதில் அளித்தேன்.

என்றாலும் அவர் வார்த்தைகள் எனக்கு உள் அர்த்தத்தை அறிவுறுத்தியதைப் போல, அவருக்கு சுரீர் என்று அவருடைய மதனி என்னைப் பாவிக்கும் விதத்தை அறிவுறுத்தியிருக்க வேண்டும்.

நாங்கள் ஏதோ குட்டிச் சண்டை போட்டுக் கொண்டு முகத்தைத் தூக்கிக் கொண்டிருக்கிறோம் என்று மூர்த்தி நினைத்திருக்கிறான். எங்கள் மனத்தாங்கலைத் தீர்த்துச் சமாதானம் செய்து வைக்கும் பெருமை முகத்தில் கொப்பளிக்க அவன், “என்ன சுசீலா? அதற்குள்ளே நீ இப்படிப் பிரமாதமாகச் சண்டை போடுகிறாயே அவரிடம்?” என்று என்னை நோக்கிக் கேட்டுவிட்டு அவரிடம் “போனால் போகட்டும், இன்று பகல் கிளம்பி நீங்கள் மட்டும் சுசியை அழைத்துக் கொண்டு ஊரை ஒரு சுற்றுச் சுற்றிக் காட்டுங்கள். அப்புறம் அணைக்கட்டுக்கும் போக நேரம் இருக்கும்” என்றான்.

எதிலும் பட்டுக் கொள்ளாதவர் போல, “எனக்கு என்ன? நான் எப்போதும் ‘ரெடி’ தான்” என்று ஒப்புக் கொண்டார் அவர்.

மூர்த்தியிடம் நான், “நீங்களும் வருவீர்கள் அல்லவா?” என்றேன். ஏதோ யோசியாமல் கேட்டேன். அவ்வளவுதான்.

“வெகு அழகுதான்! காசிக்குப் போயும் கர்மம் விடவில்லை என்பது போல, அவர் குறைபட்டுக் கொள்ள வேண்டுமா? நேற்றே, தனியாகப் போக வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டு பேசாமல் இருந்திருக்கிறார். நான் எதற்கு!” என்று கபடமற்ற குழந்தை போல் அவன் நகைத்தான்.

“நீ வந்தால் தான் பொழுது போக்கு இன்னும் ரஸனையாக இருக்கும். நீயும் வா அப்பா. சுணங்கி விடாதே. ஹேமாவையும் கூப்பிட்டு விடுகிறேன்” என்று அர்த்தபுஷ்டியுடன் அவனைப் பார்த்து புன்னகை செய்தார். மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல் ஒரு விநாடியில் ஒளி குன்றிய அவனை நான் கவனித்துக் கொண்டிருக்கையிலேயே அங்கு ஹேமா வந்தாள்.

“என்ன, மூவரும் இங்கே தனியாக ரகசியக் கூட்டம் நடத்துகிறீர்கள்? நானும் பங்கு கொள்ளலாமா?” என்று கேட்டவாறு நின்றாள்.

“பங்கு கொள்ளலாமா என்றா கேட்கிறாய்? உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்” என்று என் கணவர் முடிக்குமுன் அவள் “ஓகோ! தனிமையில் என் மண்டையைப் போட்டு உருட்டிக் கொண்டிருந்தீர்களாக்கும்! இந்த மூர்த்திக்கு எல்லோரிடமும் என் மண்டையைப் போட்டு உருட்டாமல் போனால் பொழுதே போகாது. என்னைப் பற்றி என்ன சொல்கிறான்” என்று நாளைக்குக் கணவனாக வரப்போகும் அவனை அவள் வலுச்சண்டைக்கு இழுத்தாள்.

“பார்த்தீர்களா? நான் பாட்டுக்குத் தெய்வமே என்று கிடக்கிறேன். என்னைக் குற்றம் சொல்வதைத் தவிர வேறு எதுவுமே அவளுக்குப் பேசத் தெரியாது” என்றான் மூர்த்தி.

“அடடா! இப்போதே நீங்கள் உப்புக்கு உதவாததற்கெல்லாம் வலுச் சண்டை போடுகிறீர்களே!” என்று கடகடவென்று ஒலிக்க, நகைத்த என் கணவர், “என்ன ஹேமா, இன்று பிருந்தாவனம் போகலாமா? நீ இல்லாமல் மூர்த்தி வரமாட்டானாம்!” என்று அழைத்தார்.

“ஐயையோ! என்னால் இன்று பிருந்தாவனத்துக்கும் வர முடியாது, கோகுலத்துக்கும் வர முடியாது. ‘டென்னிஸ் மாட்ச்’ இன்று. ‘ஸெமி பைனல்ஸ்’ நான் ஆட வேண்டும்” என்று நாசுக்காகத் தோளை அசக்கிய ஹேமாவின் ஸாடின் சோலிக்கு மேல் பட்டும் படாமலும் நின்றிருந்த நைலான் புடவை தோள் பட்டையை விட்டு நழுவியது.

“போக வேண்டும் நான். பத்மினி காத்துக் கொண்டிருப்பாள்” என்று உடலை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டுக் கொண்டு அவள் டக் டக்கென்று பாதரட்சை ஒலிக்க மச்சுப் படியில் இறங்கிச் சென்றாள்.

மூர்த்தி பேசவே இல்லை. முகம் கறுக்க ஏதோ யோசனையில் ஆழ்ந்தவனைப் போல் நின்றான். அவன் தோளைப் பிடித்து அவர் குலுக்கினார். “என்னப்பா? ஒரேயடியாய் இந்த உலகத்துச் சிந்தனையை விட்டே ஓடிப்போய் விட்டாயே! அவள் வராமல் எங்களுடன் வர மாட்டாயாக்கும்!” என்றார் சிரித்துக் கொண்டே.

அவன் சமாளித்துக் கொண்டவனாக, “உங்களுக்கு ஏதும் இடைஞ்சல் இல்லை என்றால் வருகிறேன்” என்றான்.

பட்டு, அத்தை, பாட்டி எல்லோரும் பிரமித்து நிற்கும்படி நான் அவருடன் காரில் ஏறிக் கொண்டேன். பின்புற ஆசனத்தில் மூர்த்தி அமர்ந்து கொண்டு, ஒவ்வொரு கட்டிடத்தையும், இது இன்னது, அது இன்னது என்று சொல்லிக் கொண்டே வந்தான். முதன் முதலாக அவரருகில் அமர்ந்து கொண்டு அழகு வாய்ந்த அவ்வூரின் விசாலமான வீதிகளில் உல்லாசப் பவனி வரும் எனக்கு ஏனோ மனம் விம்மவில்லை. வாழ்வின் முதற் படியில் காலை எடுத்து வைக்கும் போது ஒன்றன் பின் ஒன்றாக அந்த ஏமாற்றங்கள் நிகழ்ந்திராமற் போனால் அப்போது எனக்கு மேக மண்டலத்திலே சஞ்சரிப்பதைப் போலல்லவா இன்பம் கொடுக்கும்? இப்போதே அவர் உள்ளத்தை வலுவிலே சென்று இடித்துப் பார்க்க எனக்குப் பயமாக இருந்தது. கற்பாறை கொண்டு மூடப் பெற்றிருக்கும் இருட் குகையாக இருந்தால் நான் இடித்தும் என்ன பயன்? வீணாக இருதயம் வலிக்கும். இருளைக் கண்டு இன்னும் துயருண்டாகும். அதற்கு இந்த ஊசலாடும் நிலையே மேலானதல்லவா? அவர் என்னுடன் தனிமையை இன்னும் விழைந்து விரும்பவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறதே! அம்மாவின் அபிப்பிராயத்தை ஒட்டி, நானே ஆத்திரப்பட்டுத் தவறு செய்தேன் என்று அவர் நினைக்கிறாரா? என்னை “மன்னித்து விடுங்கள். அறியாமல் தவறு செய்து விட்டேன்!” என்று அவர் காலில் போய் நான் விழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?

இதற்கு என் பெண்மை இடம் கொடுக்க மறுத்தது. ஆண்மைக்கு அத்தனை அகம்பாவமும் அழுத்தமும் இருக்குமானால் நான் எவ்விதத்திலும் நடந்து கொண்டது சரியே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, வீணே ஏன் சரணாகதி அடைய வேண்டும்? என் சுதந்திரத்திலும் சுக சௌகரியங்களிலும் சற்றும் அக்கறை கொள்ளாத அவரிடம் நான் உணர்ச்சி வசப்பட்டுச் சரணாகதி அடைந்து விட்டேனானால் இன்னமும் அவர் ஆணவத்திற்கு உரம் கண்டு விடும் அன்றோ. அவர் கைப் பொம்மையாக ஆகும் அந்த நிலைக்கு நான் சற்றும் இடம் கொடுக்கக் கூடாது.

வெளியே என் பார்வையைச் செலுத்தினேன். அணைக்கட்டின் வாயிலில் கொணர்ந்து வண்டியை நிறுத்திய அவர், “உள்ளே நடந்து செல்லலாமா? அல்லது காரிலேயே போய் விடலாமா?” என்று கேட்டார்.

“நடக்கலாமே, என்ன சுசீலா? காரிலே போவது எனக்கு அவ்வளவு சுகமாகத் தோன்றவில்லை” என்றான் மூர்த்தி.

“ஓ நடக்கலாம்” என்று கூறியவாறே நான் இறங்கினேன்.

மூவரும் அணைக்கட்டின் மீது நடந்தோம்.

அளவு கடந்த ஆர்வத்துடன் தன் நாயகனைச் சேர விழைந்து ஓடிவரும் நங்கை காவேரியை மனித சக்தியும் மலையின் பலமும் சேர்ந்து குறுக்கே மறித்துத் தடுத்தன. ஆத்திரம் தாளாத அணங்கு ஒருபுறம் அகம் விம்ம, முகம் துடிக்க, வானத்தையும் வையத்தையும் ஒன்று சேர்த்து விடுபவள் போல் விரிந்து பரந்து நின்றாள். அப்படியே முழுக்கவும் மடங்கியிருப்பதால் கற்புக்கரசி கண்ணகியின் கோபத்தைப் போலக் காவேரியின் சீற்றமும் வையத்தையே அழித்து விடும் போல எனக்குத் தோன்றியது. இப்படி அறிந்துதான் கண்ணறைகள் விட்டிருந்தார்கள் போலும்! கொஞ்சமேனும் தப்ப வழி கிடைத்ததே என்று எத்தனை மகிழ்ச்சி அவளுக்கு! தன் முழு பலத்தையும் பிரயோகித்து ஆவேசம் கொண்டவளாக இன்னும் நீளநெடு வழியை மனத்திலே எண்ணி, ஆழி இறைவனைக் கலக்க விரைந்தாள். காதலின் கொந்தளிப்பையும் ஆவலின் துடிப்பையும் மகிழ்ச்சியின் ஆரவாரத்தையும் ஒருங்கே கண்ட நான் என்னை மறந்தவளாக நின்று விட்டேன். நடுவே கார்கள் போயின, மனிதர்கள் சென்றார்கள். மூர்த்தி அவரிடம் என்ன என்னவோ விளக்கிக் கொண்டு நடந்தான். எதுவும் என் கவனத்தில் நிற்கவில்லை. அந்தப் பக்கம் பார்க்கும் போது காவிரி மங்கையின் குமுறும் உள்ளத்தை இதமாக அணைத்து ஆறுதல் கூற வேண்டும் போல என் இருதயம் எழும்பியது. அவளுடைய துடிக்கும் அலைகளை என் கைகளால் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. இந்தப் பக்கம் நோக்கும் போதோ அவள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் நானும் பங்கு கொள்ள வேண்டும் போல் ஆவல் எழும்பியது. அவள் செல்லும் வழியிலே உற்ற தோழியாக ஓட வேண்டும் போல ஆசை கிளம்பியது.

என்னை விட்டுப் பேசிக் கொண்டே வெகு தூரம் சென்று விட்ட மூர்த்தியும் என் கணவரும் திரும்பிப் பார்த்திருக்கிறார்கள். “சுசீலா, சுசீலா!” என்று அவர்கள் கத்தியது எனக்குக் காதில் விழவில்லை. அவர் திரும்பி அருகில் வந்து, கல்லோடு கல்லாகச் சாய்ந்து நின்ற என்னை, “என்ன சுசீலா, இங்கேயே நின்றுவிட்டாய்? பிருந்தாவனம் பார்க்க வேண்டாமா?” என்று அழைத்த பிறகு தான் சுய உணர்வு பெற்றேன்.

படிக்கட்டுகளின் வழியாக அணைக்கும் கீழே இறங்கிய போது உண்மையாகவே எனக்குப் பூவுலகை விட்டு எங்கோ வந்து விட்டதாகத் தோன்றியது.

கண்களைப் பறிக்கும் வர்ண விளக்குகளின் ஒளியிலே காவேரி எப்படி எல்லாம் திகழ்ந்தாள்! ஒரு புறத்திலே தோகை மயிலைப் போலச் சிவப்பும் நீலமுமாக ஒளிவிட்டுக் கொண்டு ஆடினாள். இன்னொரு புறத்திலே அன்னமென நடந்து சென்றாள். மற்றொரு புறத்தில் பட்டாடைகளைப் பூண்டு கொலுவிருக்கும் அரசி எனத் திகழ்ந்தாள். பிறிதொரு பக்கம் சலசலவென இனிய சங்கீதம் பாடி மக்களை மகிழ்வித்தாள். பல வண்ணப் பூக்கள் நிறைந்த சோலையிலே ஒளிப் பிழம்புக்கு முன் தோழிமார்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு ஆடிக் களித்தார்கள்.

அவள் ஆடும் இடத்திலே எனக்கும் இவ்வுலகின் இன்னல்களை எல்லாம் மறந்து ஆட ஆசை உண்டாயிற்று. அவள் நடை பயிலும் இடத்திலே அந்த அழகையே பார்த்துக் கொண்டு ஆயுள் முழுவதும் கழித்து விடலாம் எனத் தோன்றியது. வண்ண மலர்ச் சோலையிலே அவள் தோழிகளுடன் கூடிக் களிப்பதைக் கண்டதும் நானும் ஒரு நீரூற்றாகி அவள் தோழிமார்களில் ஒருத்தியாகி விடமாட்டேனா என்று மனம் துடித்தது. அவள் கொலு வீற்றிருக்கும் போது சாமரம் வீசும் பணிப்பெண் போல் திகழும் நீரூற்றாக இருக்கும் பாக்கியமாவது எனக்குக் கிடைத்திருக்கலாகாதா என்ற ஏக்கம் உண்டாயிற்று.

நங்கையின் களிக்கூடத்தை அலங்கரித்த விளக்குகளுக்குத்தான் எத்தனை பெருமை, எத்தனை பூரிப்பு! வான மண்டலத்தை அழகு செய்த நட்சத்திரங்களைக் கண்டும் வெட்கமுறாமல் “எங்களுக்குச் சமமாவீர்களா நீங்கள்?” என்று பெருமிதத்துடன் கேட்பது போல் மின்னின. மக்களை மகிழ்விக்கும் மங்கைக்குக் களைப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டோ என்னவோ, வாயுதேவன் தன் குளுமையான கரங்களால் விசிறியபடி இருந்தான்.

வாய் ஓயாமல் எதை எதையோ அவரிடம் விளக்கிக் கொண்டு வந்த மூர்த்தியாகட்டும், அவராகட்டும், என்னைக் கவனிக்கவே இல்லை.

கொலு மண்டபம் போல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மண்டபத்தண்டை வந்த பின் தான் அவர்களும் என்னைக் கவனித்தார்கள். நானும் இரண்டாம் முறையாக என் நினைவுக்கு வந்தேன்.

“என்ன இது? நான் பாட்டுக்கு வளவள என்று பேசிக் கொண்டே வந்திருக்கிறேன் உங்களை மறந்து? என்ன சுசீலா? இவன் ஏதடா இது, சளசளவென்று குறுக்கிட்டு விட்டான் என்று சபித்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டான் மூர்த்தி.

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இங்கு வந்ததுமே எனக்கு பூலோகத்திலிருந்து வேறு எங்கோ தவறி வந்து விட்டதைப் போல பிரமை தட்டிவிட்டது. பேச்சே எழாமல் சக்தியை நாக்கு இழந்து விட்டது” என்றேன் பரவசமாக.

“நல்ல வேளை ஊமையாகி விடவில்லையே? எங்கே இந்த மண்டபத்தில் கொஞ்சம் சிரித்துக் கொண்டு நில்லுங்கள்” என்று கூறிய மூர்த்தி தோளில் மாட்டியிருந்த ‘காமிரா’வை எடுத்தான்.

அவர் நின்றார், நானும் பக்கத்தில் போய் நின்றேன். “இன்னும் கொஞ்சம் நெருங்கி. நீங்கள் சரியாக இருக்கிறீர்கள். சுசீலா தலையை நிமிர்த்திக் கொள். உம், சாய்க்காதே! கொஞ்சம் புன்னகை!” என்றெல்லாம் அவன் சொன்ன போது, புது மணப் பெண்ணைப் போல எனக்கு வெட்கமாக இருந்தது.

அவர் அருகில் நெருங்கி நெருங்கி அவருடைய ‘கோட்’ என் புடவையுடன் உராய்ந்து விட்டது. நான் அணையிட்டுத் தடுத்திருந்த மன நெகிழ்ச்சி கட்டுக்காவலை உடைத்துக் கொண்டு மீறிவிடும் போலக் கொந்தளித்தது. வலிமை பொருந்திய அவருடைய கரங்களின் அணைப்பிலே அடங்கிச் சிறு குழந்தை போல அவருடைய நெஞ்சிலே தஞ்சம் புக என்னுள் தாபம் கிளம்பியது. இந்த வேளையில் மூர்த்தி, “சிரித்த முகம் கொஞ்சம்!” என்று உத்தரவிட்ட போது, நான் சிரித்தேனா அழுதேனா என்று கூட எனக்குப் புரியவில்லை.

ஒரு வழியாகப் படம் பிடித்தானதும் மூர்த்தி, “நீங்கள் இங்கேயே சற்று இருங்கள். நான் போய் ஹோட்டலில் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன். இங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாம்” என்றான்.

அதற்குள் அவர், “வேண்டாம், இங்கே நீ சுசீலாவுடன் பேசிக் கொண்டிரு. நான் போய் வாங்கிக் கொண்டு வெளியே போய் அப்படியே காரையும் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறி அவனுடைய பதிலை எதிர்பார்க்காமலே நடந்தார்.

அசந்து போனவன் போல மூர்த்தி எங்கள் இருவரையும் மாறி மாறி நோக்கினான். நானோ அவன் பார்வைக்கு அகப்படாமல் கீழே தரையை வருடிக் கொண்டிருந்தேன். ஆம், அவருக்கு என்னுடன் தனிமையில் இருக்கப் பிடிக்கவில்லை. அதற்காகவே பயந்து கொண்டு திரும்பிப் பாராமல் ஓடுகிறார்!

என் நெஞ்சம் வெடித்து விடும் போல் இருந்தது. உண்மையில் அவர் மட்டும் அன்று அந்தப் பொழுதிலே என்னுடன் தனிமையில் இருந்திருந்தாரானால் அவர் காலடியில் விழுந்து நான் கதறியிருப்பேன். என் ஆராய்ச்சிகளை எல்லாம் ஒரு புறமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு நான் செய்த பிழையை மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் பெருக்கியிருப்பேன். மூர்த்தி தான் போவதாகச் சொன்ன போது, அந்த நிமிஷத்துடன் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாத மௌன வாழ்வின் முடிவு சமீபித்து விட்டது என்றே எண்ணினேன். என் நெகிழ்ந்த நெஞ்சுக்கு அவர் மட்டும் அப்போது சற்று வழிவிட்டிருந்தாரானால் அது மெழுகென உருகி ஓடியிருக்கும். அவர் அவ்விதம் செய்யவில்லை. தனிமை தம்மை உணர்ச்சிகளுக்கு ஆளாக்கிவிடக் கூடும். கல் மனத்தைக் கரைத்து விடக் கூடும் என்று ஏகாந்தத்தின் இலக்குக்குள் அகப்படாமல் ஓடுகிறார்.

ஏன் இப்படி ஓட வேண்டும்? மனிதர்கள் குற்றம் செய்வதில்லையா? அவரை விட நான் எவ்வளவோ சிறியவள். அநுபவம் முதிராதவள். தவறு என்னிடம் இருந்தாலும் அவர் உள்ளத்தில் காதல் நிரம்பி இருக்குமானால் மன்னித்து விட மாட்டாரா? மூர்த்தியின் தூண்டுதலுக்காக என்னை அழைத்து வந்திருக்கிறார்.

“சுசீலா!” என்ற மூர்த்தியின் குரல் என்னை உலுக்கியது.

நிமிர்ந்தேன். எங்கே பார்த்தாலும் ஜகஜ் ஜோதியான ஒளிமயம், சோவென்று நீரின் சப்தம், எல்லாம், ‘இந்திரலோகம் போன்ற இடத்திலே இருக்கிறோம். எதிரே மூர்த்தி கூப்பிடுகிறான்’ என்று எனக்கு நினைப்பூட்டின.

“என்ன சுசீலா இது? ராமநாதனுக்கும் உனக்கும் ஏதோ விளையாட்டுச் சண்டைதானாக்கும் என்று நினைத்தேனே! எனக்கு இப்போது மிகுந்த கஷ்டமாக அல்லவோ இருக்கிறது? நீ பாட்டுக்குப் பேசாமல் உம்மென்று இருக்கிறாய். அவரோ நான் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளக் கூடாதே என்று மாதிரி ஏதோ அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு எனக்காக உன்னிடம் பேசுகிற தோரணையில் பாவனை செய்கிறார். என்ன விஷயம் சுசீலா? நேற்று உன்னை விட்டு அவர் இங்கு வந்திருக்கிறார் என்று அறிந்த போதே எனக்கு ஏதோ போல் இருந்தது. ஏதோ தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் என்று தமாஷ் செய்கிற மாதிரியில் நான் இன்று இங்கு வரத் தூண்டினேன். ஆனால் நான் நினைத்தது போல் படவில்லையே?” என்று அவன் கேள்வி மேல் கேள்வி கேட்டு விட்டான்.

அவனே வெகுளியான சுபாவம் படைத்தவனாயிற்றே. மனத்தில் பட்டதை அப்படியே ஒளிவு மறைவின்றி என்னிடம் கேட்டு விட்டான். ஆனாலும் எங்கள் விஷயத்தில் அவனுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? ‘பெரிய மனஸ்தாபமாக இருந்தால்தான் நமக்கு என்ன?’ என்று லேசாகக் கவனிக்காமல் இருந்து விடலாமே!

கண்கள் நீரைக் கக்கி விடாதபடி உணர்ச்சியை விழுங்கிக் கொண்டேன்.

என்ன பதில் சொல்வது அவனுக்கு? வயசு வந்த ஆண்பிள்ளை அவன். யாருமே எங்களைச் சிரத்தை கொண்டு கவனிக்காத சூழ்நிலை. ஏன் இப்படி அவர் எங்களை விட்டு விட்டுப் போக வேண்டும்? மனைவியிடம் சந்தேகம் கொள்ளும் குறுகிய மனப்பான்மை கொண்டவர் அல்ல என்று அவனுக்குப் பெருமையாகத் தெரிவிக்கவா?

என் மௌனத்தைக் கண்டு மூர்த்தி என் எண்ணங்களை அறிந்து கொண்டு விட்டான் போலும்!

மீண்டும் அவன், “நான் விஷமமாகக் கேட்கிறேன் என்ரு நினைக்கிறாயே? உன்னை நான் மஞ்சு போல் எண்ணிக் கொண்டிருக்கிறேன் சுசி. முதல் முதலாக உன்னைப் பார்த்த போதே எனக்கு என்னவோ தனியாக உன் மீது அப்படி ஓர் அபிமானம் தோன்றி விட்டது. அதுவும் மஞ்சு இறந்த பிறகு, நீதான் அவள் என்றே நான் எண்ணியிருக்கிறேன். உங்கள் விவகாரங்களில் நான் தலையிடுவது தவறு என்று உனக்குத் தோன்றலாம்” என்று கூறிய போது தொண்டை கரகரத்தது அவனுக்கு.

“நான் எப்போது உங்கள் வீட்டுக்கு வந்தாலும் வாடிய முகத்துடன் நீ சமையலறைக்குள்ளிருந்து வரும் காட்சியைத் தான் காண்பேன். மனத்துக்குள் நீ ஏதோ கஷ்டப்படுகிறாய் என்று நேற்று அறிந்த போது எனக்குத் திடுக்கென்றது. சுசி, உன்னை நான் முதன்முதலாக ஊருக்கு அழைத்துப் போன போது பார்த்ததற்கும் இப்போதைய தோற்றத்திற்கும் எத்தனையோ மாறுதல் காண்கிறேன். ராமநாதன் உன்னிடம் அன்பாகத் தானே இருக்கிறார்?” என்று நேரான கேள்வியில் வந்து அவன் முடித்தான்.

‘நமக்கும் இப்படி ஒரு மூத்த சகோதரன் இருந்தால்?’ என்று ஏங்கியிருந்த எனக்கு அப்போதே “அண்ணா” என்று கதற வேண்டும் போல் இருந்தது. ஆனால் ஏனோ சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

என்ன தான் அன்பு மனத்துடன் ஆதரவு காட்டினாலும், என் கணவருக்கும் எனக்கும் இடையே இருந்த மனஸ்தாபங்களை லீலாவிடம் தெரிவிக்கவே கூசிய நான், அவனிடம் தெரிவிக்க முடியுமா? ‘அவர் என்னிடம் அன்பாக இருக்கவில்லை’ என்று அவனிடம் நேரடியாகக் கூறக் கூட முடியாமல் என்னுள் ஏதோ ஒன்று தடுத்தது.

எப்படியே மனத்தைக் கல்லாக்கிக் கொண்டேன். எல்லாவற்றையும் மீறிக் கொண்டு சிரித்தேன். சமயங்களில் நடிப்புக் கலை மிகவும் தேவையாக இருக்கிறதே?

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. எதை எதையோ நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆமாம், உங்களுக்கு இந்த வருஷத்தில் கல்யாணமாமே? நேற்று நான் கேட்க வாயெடுத்தேன்; பாட்டி வந்து விட்டாள்” என்று பேச்சைச் சமத்காரமாக அவன் பக்கம் திருப்பினேன்.

“நிஜந்தானா சுசீலா?” என்று அவன் கேட்டான்.

நான் இன்னும் சத்தமாக ஒலிக்கும்படி நகைத்தேன். “என்ன நிஜந்தானா? அதை நான் அல்லவா கேட்க வேண்டும்? எனக்கு ஓர் அண்ணா இல்லையே என்று எப்போதும் ஒரு குறை உண்டு. அது தீர்ந்ததும் இப்போது எனக்குச் சந்தோஷம் கிட்டவில்லை. ஏன் தெரியுமா?”

அவன் வாய் திறக்கவில்லை. நான் மீண்டும், “எனக்கு உள்ள இன்னோர் ஆசை, காதல் மனம் பார்க்க வேண்டும் என்பது. அதுவும் எனக்குத் தெரிந்த காதலர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அந்த ஆசை வேறு பாழாகும் போல் இருப்பதால், எனக்கு இப்போது எதுவுமே பிடிக்கவில்லை” என்றேன்.

“ஐயோ, நீ மஞ்சுவைப் போலவே பேசுகிறாய், சுசி. அவள் இப்படித்தான் அடிக்கடி சொல்லுவாள்” என்று அவன் நெகிழ்ந்த குரலில் கூறிய போது எனக்கு ஏன் அவ்விதம் பேசினோம் என்று இருந்தது. பாவம்! பழைய நினைவுகளில் அவனுக்குக் கண்களில் நீர் கூடத் துளிர்த்து விட்டது. “கடைசி முறையாகக் கூட அவள் இப்படித்தான் என்னைக் கேலி செய்தாள். உன் புடவைகளை என் பெட்டியில் பார்த்துவிட்டு, ‘வரப்போகும் மன்னிக்கு வாங்கியிருக்கிறாயா அண்ணா? சிவப்பாக இருந்தால் ‘ஸெலக்‌ஷன்’ முதல் தரம். எனக்கு வெகு நாட்களாக ஆசை அண்ணா. ஏதாவது இடைஞ்சல் இருந்தால் நானும் உதவி செய்யட்டுமா? எனக்கு அவள் யார் என்று சொல்ல மாட்டாயா?’ என்றெல்லாம் கூறிய அவள் இப்போது இல்லையே! இருந்தால் தோண்டித் துளைத்து என்னிடமிருந்து விஷயத்தை அறிந்து கொண்டு அப்பா அம்மாவிடம் நானாச்சு என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டையிடக் கிளம்பி விடுவாளே!” என்று அவன் நெடு மூச்செறிந்தான்.

என் மனங்கூட இளகிவிட்டது. அவன் வருத்தத்தை இன்னும் ஏதாவது பேசிக் கிளப்ப வேண்டாம் என்று நான் கவனத்தை எதிரேயுள்ள நீரூற்றுகளில் செலுத்தினேன்.

அப்போது அங்கே ஒரு காட்சியைக் கண்டேன். இரண்டு பெண்களும் இரண்டு ஆடவர்களும் படியேறி மண்டபத்துக்குள் வந்தார்கள். அதில் ஒரு ஜோடி. காதலர்களோ தம்பதிகளோ தெரியவில்லை; சற்றும் நாணமோ கூச்சமோ இன்றி அவனும் அவளும் இடைகளில் கை கொடுத்துக் கொண்டு உல்லாசமாக நடந்து வந்தனர். பெண்கள் இருவரும் சாயலில் சகோதரிகள் என்று தெரிந்தது. சற்றும் லஜ்ஜையின்றி அவர்கள் இருவரும் அணிந்திருந்த ஆடைகள் உடம்பெல்லாம் தெரியும்படி இருந்தன. ‘அடக்கத்துக்கும் மரியாதைக்கும் அழகுக்கும் பேர் போன நம் பாரதப் பெண்கள் இப்படி உடைகள் அணியும் காலமும் வந்துவிட்டதே!’ என்று குன்றிப்போன எனக்கு அவர்களைப் பார்க்கக் கூட வெட்கமாக இருந்தது. தனியாகத் தென்பட்ட ஆடவன், அவர்களை விதம் விதமான கோணங்களில் நிறுத்தி வைத்துப் படம் பிடித்தான். என் கவனத்தை அவர்களிடமிருந்து நான் திருப்பிய போது, மூர்த்தியும் அவர்களைக் கவனித்திருக்கிறான் போல் இருக்கிறது. “ஹேமாவும் வரவர இந்தப் பாணியில் தான் உடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்” என்று அருவருப்புடன் முணுமுணுத்தான்.

“வெகு நேரமாகி விட்டதோ?” என்று கேட்டவாறே கையில் உணவுப் பொட்டலங்களுடன் என் கணவர் படியேறி வந்தார். பட்டப்பகல் போன்ற வெளிச்சத்தில் அவரைக் கண்டுவிட்ட, தனியான அந்த ஆடவன் “ஹல்லோ!” என்று விளித்துக் கொண்டே அவரை நோக்கி வந்தான்.

“ஓ! அடடா! சற்றும் எதிர்பாராத சந்திப்பாக இருக்கிறதே! எங்கே இப்படி?” என்று முகம் மலர, அவர் அவன் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

“இவர்கள் பம்பாயிலிருந்து நம் பக்கத்துப் பங்களாவுக்கு ஸீஸனுக்கு வந்திருந்தார்கள். நேற்றுத்தான் இங்கு வந்தோம். நீங்கள் நேராக அங்கே வருவீர்கள் என்று அல்லவோ எதிர்பார்த்தேன்? ஆட்களிடம் கூடச் சொல்லிவிட்டு வந்தேன். இங்கே எப்போது வந்தீர்கள்? உன் மனைவி வந்திருக்கிறாளா?” என்று அவன் விசாரித்தான்.

“நாங்கள் வந்து ஒரு வாரம் ஆகிறது. நாளைக்கே அங்கே புறப்படலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். இதோ என் சுசீலா!” என்று என்னைக் காட்டிப் புன்னகை செய்த அவர், சற்றுத் தயங்கி, “இவர் அவளுக்குக் கஸின், மிஸ்டர் மூர்த்தி” என்று அவனையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

சந்தேகத்துடன் நான் அவனைப் பார்க்கையிலேயே அவன் என்னை ஏற இறங்க நோக்கிவிட்டு, “ஓகோ! ரொம்ப அழகாக இருக்கிறாளே!” என்று புன்னகை செய்தான்.

உடனே நினைவு வந்தவர் போல் மூர்த்தியிடம் என் கணவர், “மூர்த்தி இவர் தாம் மிஸ்டர் வரதன். லீலாவைக் கைப்பிடிக்கக் காத்திருக்கும் வரதன்” என்று சற்று அழுத்தமாகவே கூறி நகைத்தார்.

– தொடரும்…

– நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது – 1953.

– பெண் குரல், முதல் பதிப்பு: 2011, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *