பிரியம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 9,412 
 
 

கதிரேசனுக்கு எழுபது வயசு பூர்த்தியாகி விட்டது. வயசானவர் என்பதற்கு அடையாளமாக சுகர், பிரஸர், மூட்டு வலி எல்லாம் நிரந்தரமாக வந்து விட்டது.

அதனால் முன்பு மாதிரி எதற்கெடுத்தாலும் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போவதை நிறுத்திக் கொண்டார். முடிந்த வரை பூஜை, புனஸ்காரம் என்று ஓய்வாகவே இருந்தார்.

பேரன், பேத்திகளுக்கு தொடர்ந்தாற் போல் நான்கு நாட்கள் ஸ்கூல் லீவு. கதிரேசனின் ஒரே மகன் அரவிந்தனும், மருமகளும் கேரளாவில் ஆழப்புழை படகு வீட்டிலிருந்து, திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில் வரை, நண்பர்களோடு சேர்ந்து சகல வசதிகளும் உள்ள ஏர் கண்டிஷன் பஸ்ஸில் ஒரு டூர் போய் வர திட்டமிட்டார்கள். ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாதென்று, கூடவே ஒரு சமையல்காரரையும் கூட்டிக் கொண்டு போவதென்று ஏற்பாடு.

கதிரேசனுக்கும் நீண்ட நாட்களாக திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயிலுக்குப் போய் வர வேண்டும் என்று ஆசை.

ஹாலில் உட்கார்ந்து எல்லோரும் ஆர்வத்தோடு ‘டூர் புரொக்கிராம்’ பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

கதிரேசனும் ஆவலோடு அந்த இடத்திற்குப் போனார். அவரைப் பார்த்தவுடன்

“அப்பா!…நாங்க நாலு நாள் லீவில் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு டூர் போகிறோம்!…வயசான காலத்தில் உங்களால் அலைய முடியாது!….வீண் கஷ்டம் எதற்கு?…இங்கும் பூட்டியிருக்கும் வீட்டில் பூட்டை உடைத்து திருடுவது சகஜமாகி விட்டது!….நீங்க வீட்டை பத்திரமாப் பார்த்துக்குங்க!….ஒரு நாலு நாள் தானே?…ஒரு நல்ல ஓட்டலாப் பார்த்து சாப்பிட்டுக் கொள்ளுங்க!…..”என்று அருமை மகன் அரவிந்தன் சொன்னான்.

“ மாமா!….நாம மாதம்பட்டியில் கட்டற பண்ணை வீட்டு வேலையை வர வர அந்த இன்ஜினீயர் சரியா மேற்பார்வை பார்க்கறதில்லே!…..இருபது கிலே மீட்டர் தானே!…மெதுவா பைக்கில் ஒரு நடை போய் அங்கு வேலை நடப்பதைப் பார்த்திட்டு வந்திடுங்க! உங்களுக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்!…” என்று மருமகளும் மாமனாரிடம் பிரியமாகச் சொன்னாள்!

– புதுகைத் தென்றல் ஆகஸ்ட் 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *