பிராப்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,134 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

பேரூர் வந்து, பேருந்தை விட்டு மெல்ல இறங்கிய மீனாட்சி கோயில் வாசலில் கண்ட கூட்டத்தை கண்டு மிரண்டாள். எப்படி வாகன நெரிசலை கடந்து கோயில் வாசலை அடைவது என்று திகைத்தவள் பக்கத்தில் ஒரு குடும்பம் இவளைப்போல் பாதையை கடக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. அதில் பன்னிரெண்டு வயது மதிக்கத்தகுந்த பையன் இவளை பார்த்தவன் தன் அப்பாவின் கையை மெல்ல கழட்டி விட்டு விட்டு இவள் அருகே வந்து “ஐ வில் ஹெல்ப் யூ” பாட்டி என்று அவள் கையை பிடித்துக்கொண்டு தன் குடும்பம் கடக்கும்போது இவளையும் கடக்க வைத்தான்.பின் தன் தந்தையை கூப்பிட்டு ஆங்கிலத்தில் ஏதோ கேட்க அவன் தந்தை இவள் அருகில் வந்து நீங்க எங்க போகணும்மா? என்று கேட்டார். நான் ‘தர்ப்பணம்’ செய்யணும் அதுக்குத்தான் வந்திருக்கேன்,சொன்னவளை உங்களோட யாரும் வரலையாம்மா என்றவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெறும் புன்னகையை சிந்தினாள்.

ஆற்றை நோக்கி செல்லும் பாதையை காட்டி நீங்கள் இது வழியா போய் ஆற்றுக்கு முன்னாடி இடது புறம் ஒரு பாதை திரும்பும். அங்கதான் காரியம் எல்லாம்
பண்றாங்க, நாங்க வேணா கூட வரட்டுமா? கேட்டவருக்கு இது வரைக்கும் பண்ண உதவியே போது. ரொம்ப நல்லா இருப்பேள். உங்க பையனா? ரொம்ப நல்ல பையன் பிறர் கஷ்டப்ப்டும்போது உதவனும்னு நினைக்கிறானே, அதுவே நமக்கு கடவுள் கொடுக்கற வரம். சரி நீங்க போங்கோ என்றவள் மெல்ல அவர் காட்டிய பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.

கூட்டம் அவளை தள்ளிக்கொண்டு சென்றது. அவரவர்க்கு அவசரம். மனிதன் இறக்கும் வரை அவனை தொல்லையாக நினைப்பவர்கள், அவன் போய் சேர்ந்தவுடன் அவனுக்கு காரியம் செய்வதற்கு கூட அவசரம்தான்.இங்கு வந்து ரொம்ப நாளாயிடுச்சு, கல்யாணம் ஆகி மூணாவது மாசம் வந்திருக்கோம். நினைக்கும்போது அவள் முகத்தில் மெல்ல புன்னகை வந்தது.மீனாட்சி என்று தன் காதில் வந்து கூப்பிடும்போது இவள் உடம்பு ஒரு வித கூச்சத்தால் நெளியும், அது ராமகிருஷ்ணனுக்கு வேடிக்கையாக இருக்கும். ஒவ்வொரு முறையும் அவள் காதருகே வந்து மீனாட்சி என்று மெல்லிய குரலில் கூப்பிட்டு இவளை நெளிய வைப்பான்.இவள் பொய் கோபத்துடன் முறைப்பாள். இப்பொழுது நினைத்த பொழுது கூட அவள் உடல் தானாக சிலிர்த்தது.

அப்பா !.. ஐமப்து வருடங்கள் ஆகியிருந்தாலும் அந்த தாம்பத்யத்தின் தாபம் மட்டும் நம்மை விட்டு போவதில்லை. நாம் உயிரோடு இருக்கும் வரை நம்மை நினைத்து நினைத்து சந்தோசப்படுத்தும், கண்களில் தானாக நீர் வழிவதை துடைத்துக்கொண்டாள்.

காரியம் செய்யும் இடத்தில் இவளை போல நிறைய பேர் நின்று கொண்டிருந்தனர்.

ஐயர்களும் அவரை சுற்றி குடும்பமாக நிறைய பேர் உட்கார்ந்திருந்தனர். மற்றொரு குடும்பம் தயாராக அவர்கள் பின்னால் அடுத்து உட்கார தயாராக இருந்தது. இவள் என்ன செய்வது என்று தடுமாறினாள். கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து மந்திரம் சொல்லிக்கொண்டிருந்த ஐயர் இவளை பார்த்து அம்மா “இங்க வாங்கோ” என்று அவளை அழைத்து இங்க உட்காருங்கோ, இன்னும் இரண்டு பேருக்கு செய்யணும். முடிச்சுட்டு உங்களுக்கு செய்யறேன். என்றவரை நன்றியுடன் பார்த்துவிட்டு அவர் காட்டிய இடத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

அரை மணி நேரம் ஓடியிருந்தது. இப்பொழுது மீனாட்சியை உட்காரச்சொல்லி உங்க கணவர் பேரையும், அவர் பரம்பரையில் காலமான ஆத்மாக்களையும், இவளின் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த ஆத்மாக்களுக்கும், மந்திரம் சொல்லி தர்ப்பணம் செய்து பிண்டங்களை ஆற்றில் விட சொன்னவர், அவள் நிலையை உணர்ந்து ஒரு பையனை அழைத்து இந்த பாட்டி கூட போய் இந்த பிண்டங்களையெல்லாம் ஆத்துல விட்டிடு.என்று சொன்னார்.மீனாட்சி நன்றியுடன் கை குவித்து உங்களுக்கு எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க, என்று தன் கையில் வைத்திருந்த பையை எடுத்து பிரித்தாள்.நீங்க எவ்வளவு கொடுக்கணும்னு
நினைக்கிறீங்களோ அதை கொடுங்க. காசு வேணாம்னு சொல்லியிருப்பேன், ஆனா இந்த மாதிரி காரியங்களுக்கு தட்சணையின்னு ஒண்ணு நீங்க கொடுத்தால்தான் அதுக்கு உங்களுக்கு பலன் இருக்கும் அதனாலதான் கேட்கிறேன். சொன்னவரை ரொம்ப நன்றி, இந்தாங்க என்று அதிகமாகவே கொடுத்தாள்.

காத்திருந்த அந்த பையன் மீனாட்சி கூடவே வந்தான். ஆற்றில் நின்று அவள் கை தொட்டு கொடுத்தவைகளை இவனே ஆற்றில் இறங்கி கரைத்து விட்டான்.
மீனாட்சி தன்னை விட்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் காலமான தன் கணவன் ராமகிருஷ்ணனை நினைத்து வணங்கினாள்.கணவனின் தாய் தந்தையையும்,அவளின் தாய் தந்தையையும் நினைத்து கை கூப்பி வணங்கினாள்.

மெல்ல ஆற்றை விட்டு மேலே வந்தவள் அந்த பையனை பார்த்து உனக்கு எவ்வளவு வேணும் என்று பையை பிரித்து கேட்க பையன் ஒரு நிமிடம் அவள் முகத்தை பார்த்து எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுப்பேளா? என்று கேட்டான்.அவள் திகைத்து நின்றாள் எங்கப்பா திடீருன்னு இறந்துட்டாரு. எங்க வீட்டுல நாங்க மூணு குழந்தைங்க, நான் தான் பெரியவன், ஏழாவது படிச்சுட்டு இருந்தேன். அப்பா இங்கதான் காரியம் எல்லாம் பண்ணிட்டிருந்தாரு. அவர் இறந்துட்டதால நான் படிப்பை விட்டுட்டு இங்கவந்துட்டேன்.ஏதாவது கிடைச்சுதுண்ணா சாயங்காலம் வீட்டுக்கு எடுத்துட்டு போய் கொடுப்பேன்.நிரந்தரமா ஏதாவ்து கிடைச்சாத்தான் எங்க குடும்பம் நிம்மதியாய் இருக்கும், சொல்லிக்கொண்டே போனவனை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தாள்.அவள் கணவன் ராமகிருஷ்ணன் சொல்லிக்கொண்டே இருக்கும் வார்த்தைதான் நினைவுக்கு வந்தது.

“பிறருக்கு உதவறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது முடிஞ்ச அளவுக்கு உதவிடணும்”.

சொன்னபடியே தங்களுக்கு பிள்ளை செல்வம் கிடையாது என்று தெரிந்தவுடன் ஒரு பிள்ளையை தத்து எடுத்து வளர்த்து படிக்க வைத்து, தங்களிடம் தேவையான பணம் இருக்கிறது, நீ வைத்துக்கொள் என்று சொன்னாலும்,கேட்காமல் அமெரிக்காவில் இருந்து இவர்கள் இருவருக்கும் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறான். கணவன் இறந்த இந்த மூன்று வருடங்கள் வாழ்ந்த தனிமை வாழ்க்கையை வெறுத்து ஏதாவது இல்லத்துக்கு போகலாம் என நினைத்தவள், அதற்கு முன் இவருக்கு ஒரு காரியம் செய்ய வந்தவளுக்கு மீண்டும் உதவ ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.

“பேருந்தில்” அவள் தோள்மீது தன்னை மறந்து தூங்கிக்கொண்டு வரும் அந்த பாலகனை வாஞ்சையுடன் பார்க்கிறாள்

dhamodharan பிறந்த வருடம் 1966, “கோவை மருத்துவ மையம்” (KMCH) கோயமுத்தூர். துணை மருத்துவமான ‘செவிலியர்’ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். 1. இவரது சிறுகதை “நிலம் விற்பனைக்கு அல்ல” இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 2. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” இவரது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. இலக்கிய அங்கீகாரம் 3. “குவிகம்” இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *