பதவி!




கையடக்க தொலைபேசி ரொம்ப நேரமாகவே அடித்துக் கொண்டேயிருக்கின்றது.

இருந்தும் காலைப் பொழுதே அவனுக்கு ரொம்ப மனம் அழுத்தம் நிறைந்து நிம்மதியின்றித் தான் விடிந்தது. அவன் நிம்மதியாய் தூங்கி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. சுய சிந்தனையைக் கடன் கொடுத்ததாலும் பொய்யும் புரட்டும் நிறைந்த வீட்டு அங்கத்தவர்களாளும் பிரச்சனைகள் தலைக்கு மேல் ஏறி விட்ட நிலையில் நியாயம் தெரிந்தும் தன் முன்னைய நிலைப்பாட்டையும், வீட்டாரையும் காட்டிக் கொடுக்க முடியாத கௌரவ சிக்கலாளும் தடுமாறி நிற்கும் வாழ்க்கை பிரச்சனையை சரி செய்து கொள்ள முடியாமல் ஏதேதோ கதைத்து மழுப்பி மழுப்பி நம்பி வந்தவள் மேல் பழியைப் போட்டு விட்டு தப்பிக்க முயன்று தோற்றுப் போன தருணத்தில் ரொம்பவே இதயம் வலிப்பதை உணர்கின்றான்..
ஆமாம்!. காந்தன் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணுக்கு சம்மதம் தெரிவித்து, கொடுக்கல், வாங்கல் பேசி முடித்து திருமணத்திற்குத் தயாராகி ஊருக்கும் உறவுகளுக்கும் தெரிய மாப்பிள்ளை கோலம் புகுந்து காயத்திரி என்ற பெண்ணை தாலி கட்டி, தாரமாய் ஏற்று வாழ்க்கையை ஆரம்பித்தான்.
ஆனால் அலுவலக காதலியான சாமந்தி இவனை வாழ விடக் கூடாது என்ற எண்ணத்தில் முழு மூச்சாய் செயற்பட்டாள். சாமந்தியின் தொல்லையை சமாளிக்க முடியாதவன், நம்பி வந்தவளை வதைக்க ஆரம்பித்தான். மூன்று மொழிகளும் சர்வ சாதாரணமாய் நுணி நாக்கில் புரளும் காயத்திரிக்கு, சாமந்தி காந்தனுக்கு அனுப்பும் குறுந்தகவள்களைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு பெரிய சிரமம் இருக்க வில்லை.
இதைப் பற்றி காயத்திரி காந்தனிடம் கேட்ட போது, சாமந்தி தனக்கு நெருங்கிய தோழி என்றும், அவளுக்கு என்ன தேவை என்றாலும் செய்துள்ளேன்,. இனியும் செய்து கொண்டேதானிருப்பேன். அதைப் பற்றி நீ பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கூறி காயத்திரியின் வாயை அடைத்தான்.
சாமந்தி வேறு சமூகத்தைச் சேர்ந்தவள்!. அதனால் காந்தன் காதலிக்கும் விடயம் வீட்டாருக்குத் தெரிந்தும், அவளை காந்தன் கட்டினால் ஊரும் உறவுகளும் தன் குடும்பத்தை மதிக்காது, என்ற காரணத்தினால், காயத்திரியை பெண் பார்த்து, ஒரு பெண்ணின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி சீரழித்து விட்டார்கள்.
மாப்பிள்ளை என்ற நாமத்தில் வாழ்வதாய் எண்ணி, காயத்திரி உட்பட, அவளின் வீட்டாரையும் அதிகாரத்தினால், அடக்கியாள முற்பட்டான்.
தனதும் வீட்டாரினதும் தவறுகள் வெளியே தெரியாதிருக்க பெரிதும் முயற்சித்தான்.
காயத்திரியை தடித்த சொற்களால் வேதனைப் படுத்தினான். அவளின் சொத்துக்களை அபகரிக்க நினைத்த அந்த குடும்பத்திற்கு, சின்னஞ் சிறுசுகள் வாழட்டும், என நினைத்து வழி விட மனசு வரவில்லை.
இவர்களின் வஞ்சக வார்த்தைகளையும், அநாகரீகமான செயற்பாடுகளையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காயத்திரி அந்த வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள். அவள் வெளியே வந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. எல்லை மீறிய கோபங்கள் எந்த ஒரு கெடுதலான முடிவுக்கும் இட்டுச் செல்லலாம். பிரச்சனைகளால் தன்னால் அவர்கள் நிம்மதியும், அவர்களால் தனது வாழ்க்கை நிம்மதியும், பாதித்துவிடக் கூடாது. காந்தன் நினைத்தால் மட்டும் தான், எல்லார் நிம்மதியையும் காப்பாற்ற முடியும்.
அவனின் பொய்யும், சாமந்திக்காக செய்யும் திருட்டு செயற்பாடுகளும், தலைத் தூக்கி நிற்கும் தருணத்தில், ஞாயம் தேடி நிற்பதில் அர்த்தம் இல்லை என நினைத்தே வெளியே வந்தாள்.
அவள் கட்டிய கணவன் என்ற ரீதியில் அவன் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தாள். தன்னை ஏமாற்றவோ கை விடவோ மாட்டான் என நினைத்த அவளது நம்பிக்கை பொய்யாய் போனது. காந்தனின் தந்தை ஒரு நேர்மை உள்ளம் கொண்ட ஒரு தியாகி என்று கூறினால் ரொம்பவே பொறுந்தும்.
தனது பணத் தேவைக்காக மட்டுமின்றி, தனது மனைவியான காந்தனின் தாயாரின் பொய் பித்தலாட்டம், காரணமாகவும், கணவரோடு ஒத்துழைத்து வாழ முடியாதவளை வெறுத்து ஒதுக்கிட முடியாமலும், நேர்மையான உள்ளத்தில், மனைவி பிள்ளைகளைக் கைவிட்டு விட்டு ஓட மனசு வலித்தன் காரணமாயும், குடும்பத்தை மரியாதையாய், வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும், தனக்குத்தானே பிரிவை ஏற்படுத்திக் கொண்டு, சுமார் பதினைந்து வருடங்களாக சவூதியில் தொழிலை தயார் செய்து கொண்டு போனவர் இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து விட்டுச் செல்வார்.
அவ்வாறு தான் காந்தனின் திருமணத்திற்கு வந்தவர், இரண்டு மாதங்களில் காயத்திரி ஒரு நல்ல குடும்பப் பெண் என்று புரிந்து கொண்ட சந்தோசமான மன நிலையோடு மீண்டும் சவூதி சென்று விட்டார்.
அவருடைய பிரார்த்தனை எல்லாம் மகனும் மருமகளும் சிறப்பான வாழ்க்கை வாழ தனது மனைவியும் ஒத்துழைக்க வேண்டும் என்பது தான்.
இருந்தும் அவரது பிரார்த்தனை அங்கே செல்லுபடியாக வில்லைப் போலும்.
தினம் ஒரு பிரச்சனையால் குடும்ப நிம்மதி பெரிதாய் சோபிக்கவில்லை. முடிவில் காந்தன் காயத்திரி வாழ்க்கை விவாகரத்து வரை சென்று விட்ட காரணத்தினால் மனம் பொறுக்காத தந்தை மகனுக்கு அழைப்பை ஏற்படுத்தி பிரச்சனைகளை சமரசம் செய்ய எண்ணி தோற்றுப் போனார். காரணம் காந்தன் அவரின் தொலைபேசி அழைப்பை ஏற்கவேயில்லை.
இதைப் பற்றி தாயாரிடம் பேசினால் நான் எல்லா வகையிலும் நல்லாத்தான் வளர்த்துள்ளேன். மற்றவர்கள் தான் எம்மைப் பற்றி பிழையாகக் கதைக்குகிறார்கள். என் மகனுக்கு எல்லோரும் மரியாதைக் கொடுத்து மாப்பிள்ளை என்ற வார்த்தைக்கு உகந்தவன் என்ற ரீதியில் மதிப்பளித்து வழி நடத்தியிருக்க வேண்டும். ஆண் பிள்ளை சில தவறுகள் செய்தாலும் அதைப் பொறுத்துக், கண்டு கொள்ளாமல் வாழ்க்கை நடத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
மகன் வெளியே யாருடன் பேசிப் பழகினால் என்ன! வீட்டில் காயத்திரிக்கு கணவனாய் தானே உள்ளான். இப்படி தாயின் அருவருப்பான பேச்சுகள் யாருக்குமே பிடிக்காத போது காயத்திரிக்கு மட்டும் எப்படிப் பிடிக்கும்.
இது வெல்லாம் பிரச்சனைகளில் ஒரு பகுதி மாத்திரமே!. ஆக! பொறுக்காத பொண்ணம்பலத்தார் மகனுக்கு நீண்ட குரல் பதிவு ஒன்றை அனுப்பினார். அதில் காந்தன் வீணே உன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளாதே, நீ பெண் பார்த்து விரும்பி ஏற்றுக் கொண்டவளை ஏமாற்றி விடாதே,. உன் அம்மாவின் செயற்பாடுகள் உனக்கு நன்றாகவேத் தெரியும்.
மாப்பிள்ளை என்ற நாமம் பொருளினாலும் பணத்தினாலும் அலங்கரிக்க வேண்டிய பதவியல்ல, மரியாதையாகவும் பெருமையாகவும் மாப்பிள்ளை ஆவதற்கான பராயததைத் தந்த கடவுளுக்கு நன்றியுடன் பிரார்த்தித்து வாழ்க்கை முழுமைப் பெற்றிட அனுபவித்து வாழ்ந்திட முயற்சிப்பாய் என நினைத்து அன்போடு எதிர்ப்பார்க்கின்றேன்.
எத்தனைப் பேர் என்ன சொன்னால் உனக்கு என்ன, உன் நடத்தையில் பிழையிருப்பது உனக்குத் தெரியும் தானே. அதைத் திருத்திக் கொண்டு உன் மனைவியிடம் மன்னிப்பைக் கேட்டு விட்டு சேர்ந்து வாழுங்கள். விவாகரத்து ஒன்றும் விரும்பி தேவை என்று வாங்கியப் பொருளை அழுக்குப் படுத்தியப் பின் வேண்டாம் என்று கொடுத்திட விலைக்கு வாங்கியப் பொருளல்ல. அதிலும் பெண் பாவம் பொல்லாதது. உன் ஏழு ஜென்மத்துக்கும் பாவப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திட அத்திவாரமாய் அமைந்திடும். நீ ஒருவன் நினைத்தால் மட்டும் தான் வாழ முடியும். இதற்கு யாரையும் கூட்டுச் சேர்க்காதே! மாப்பிள்ளை என்ற வார்த்தையை பதவி எனும் மோகத்தில் பார்க்காதே, மாப்பிள்ளை என்ற வார்த்தையை அன்பு, ஆசை, பாசம், ஆதரவு, பொறுப்பு, கருணை, நம்பிக்கை, நேர்மை போன்ற வற்றில் நுழைத்து வாழ்ந்திடு
நேர்மை யற்ற இடத்தில் தான் மன்னிப்புக்கு இடம் இருக்காது.
நேர்மையையும் உண்மையையும் கட்டிப் பிடித்து வாழக் கற்றுக் கொள், மன்னிப்பு தானாகவே உன்னை அணைத்துக் கொள்ளும்.
நீ எல்லா வற்றையும் மறந்து கைப் பிடித்தவளை எல்லாத் தகுதிகளோடும் வாழ வைக்க தகுதியானவன் என்ற உண்மையை உணர்ந்து காயத்திரியை அன்போடு அணைத்து வாழ்க்கை நடத்து, இது நம் குடும்பத்திற்கு நல்ல கௌரவத்தையும், உயர்வையும்
தரும். இந்த அப்பாவுக்கு நீ மரியாதைத் தருவதாக இருந்தால் உன் மனைவியுடன் வாழ்ந்து காட்டு, அது மட்டும் எனக்குப் போதும்.||
குரல் பதிவைக் கேட்ட காந்தன் ம் இவருக்கு என்னத் தெரியும், நான் மாப்பிள்ளை, ஆண் மகன் நான் யாருக்கும் பணியமாட்டேன்.
நான் போடும் கட்டளைகளை ஏற்று எனக்கும், அம்மாவுக்கும் அடிமையாக வாழ விரும்பினால், என்னோடு வரட்டும். இல்லாவிட்டால் எனக்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை எனக் கூறிக் கொண்டே விவாகரத்துப் பேப்பரில் கையொப்பம் இடத் தயாராக பேனாவைக் கையில் எடுத்தான் காந்தன்.
இங்கே யார் பிழையென காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.