நாக்கு – ஒரு பக்கக் கதை






அது ஒரு மெட்ரிக் பள்ளி.
பிரின்ஸிபால் மாத்ருபூதம், மிகவும் கண்டிப்பான பேர்வழி. எந்த நேரமும் முகத்தில் எள்ளும் கொள்ளும் போட்டால் வெடிக்கும்.

“பிரின்ஸிபால்ன்னா கொம்பா முளைச்சிருக்கு?” பொறுமிப் பேசுவார் டிரில் மாஸ்டர் முத்து.
“எந்நேரமும் கடுகு வெடிக்கிற மாதிரி .மூஞ்சி….விடியாமூஞ்சி..” தமிழாசிரியர் கோபியின் சாடல்.
“சரியான முசுடு” கணக்கு டீச்சரின் கமெண்ட்.
திரைமறைவில்தான் பிரின்ஸிபால் மாத்ருபூதத்தை அவதூறு பேசுவார்களே தவிர அவருக்கு முன் ‘கப்சிப்’ தான்.
‘பள்ளி முதல்வராய் இருப்பதால் ஆசிரிய அலுவலர்களை நிற்க வைத்து அதிகாரமாய் பேசத் தேவையில்லை என்பதும்; அமரவைத்து கௌரவமாகவும் பேசலாமே…!’ என்பது சீனியர் ஆசிரியர் சிவராமனின் கருத்து.
மாத்ருபூதம் ரிடையர் ஆகிச் சென்றுவிட்டார்.
சீனியாரிட்டி அடிப்படையில் சிவராமன் முதல்வரானார்.
முதல்வரான முதல் நாளே “ஸ்டாஃப் ஃப்ரண்ட்லி” முறையில் பணியைத் துவங்கினார்.
முதல் நாள் முதல் பிரிவு முடியும் நேரம் சுற்றுக்கு சென்றார்.
மூடியிருந்த லேடிஸ் ஓய்வறையிலிருந்து “சிவராமன் என்ன செய்தான் தெரியுமா…?”
பலமாய் பேசிய உரையாடல் அவர் காதில் விழுந்தன.
சற்றே காதில் வாங்கினார்..
“சிவராமு உட்கார வெச்சிப் பேசுது போல…” ராகிணி
“பழைய பிரின்ஸ்ஸிபால் விஷயாதி. நேச்சர் ஆஃப் ஒர்க் தெரிஞ்சவர். சிவராமுவைப் பொருத்தவரை அனுசரிச்சு போனால்தான் ஓட்டமுடியும்னேன்..” இது கண்ணகி மிஸ்.
‘ஆசிரியர்களை அடிமைபோல நடத்தக்கூடாது. அவர்களை மதிப்பாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு, கௌரவப் படுத்திய என்னை இப்படிச் சிறுமைப்படுத்திப் பேசுகிறார்களே…?’
‘ச்சே.. இப்படியும் மனிதர்களா?’
ஆயாசத்தோடு அறைக்குத் திரும்பினார் சிவராமன்.
ப்யூனை அழைத்தார்.
“எக்ஸ்ட்ரா நாற்காலிகளை எடுத்துரு” என்று உத்தரவிட்டார்.
“ஐயா.. ” என்று ‘ஓ ஏ’ ஏதோ சொல்ல வாய் திறந்தான்.
“சொன்னதை செய்… இல்லைன்னா வேலையை விட்டுத் தூக்கிருவேன்” கத்தினார் சிவராமன்.
“பழைய பிரின்சி முன்கோபி தான். ஆனால் வேலையை விட்டு தூக்கிருவேன்னு அவர் ஒரு நாளும் சொன்னதில்லை. இவருக்கு அவர் எவ்வளவோ தேவலாம்”
முணுமுணுத்துக்கொண்டே ப்யூன் நாற்காலிகளை அப்புறப்படுத்தினான்.
இந்தச் செய்தி தலைப்புச் செய்தியாகி பள்ளி முழுவதும் வைரலாகப் பரவிக் கொண்டிருந்தது.
– 06.07.2022 – My Vikatan