நடப்பு




சில நாட்களாகவே சுகன்யா ஆஃபீஸ் முடிந்து சற்று தாமதமாகத்தான் வீட்டுக்குள் நுழைகிறாள்.

சிப்காட்டில் ஷிஃப்ட் முடிந்து அவள் தந்தை பிரபாகரன்கூட சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விடுவான்.
‘சுகன்யா வந்துட்டாளா… இன்னிக்கு ஏன் லேட்…’ என்றெல்லாம் கூட அவன் கேட்க மாட்டான்.
தன் மகள் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு.
அவளும் தன் விருப்பப்படி நடந்து கொள்கிறாள்.ஆனால் அவள் அம்மா ரஞ்சிதாவுக்குக் கொஞ்சம் கவலைதான்.பொதுவாக ‘அம்மா’க்கள் எல்லோருக்கும் ஒரே நிறம்தான்.
அன்றைக்கு பிரபாகரனுக்கு திடீரென வேறு முகம் முளைத்தது.
அதற்கு ஒரு காரணம் இருந்தது.
அவனுடைய ‘நல்ல நண்பன்’ சிவசங்கரன் இலேசாக எரிகிற நெருப்பை பெட்ரோல் தெளித்துப் பற்ற வைத்தான்.
“பிரபா! சொல்றேன்னு தப்பா நினைக்காதே…உம் பொண்ணு சுகன்யாவை இன்னொருத்தனோட பார்த்தேன்!”
ஒரு நிமிடம் பிரபாகரன் ஆடிப் போனான்.
“என்னப்பா சொல்ற…எங்க பாத்தே?” என்றான் சற்று சினத்துடன்.
“ஒரு வேலையா அவங்க காம்ப்ளக்ஸுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுச்சு… அங்கே காண்டீன்லே உம் பொண்ணும் அந்தப் பையனும்…”
இது போதுமே!
“அப்பவே போயி கையும் களவுமாப் பிடிச்சு நாலு வார்த்தை கேட்டிருக்கலாம் … உனக்குத்தான் எம் பொண்ணு சுகன்யாவே நல்லாத் தெரியுமே” என்றான் பிரபாகரன்.
“என்னப்பா நீ…அது நல்லாவா இருக்கும்” என்றான் சிவசங்கரன் தாழ்ந்த குரலில்.
“ஏப்பா…உம் பொண்ணா இருந்தா இப்படி விட்டேத்தியா இருப்பியா..உனக்குத்தான் பொண்ணு இல்லியே! ஒரு பையனை வச்சிட்டு இருக்கே..”
பிரபாகரன் பேச்சில் அசுவராஸ்யம் மேலோங்கியிருந்தது.
அடுத்த கணமே அவன் தன் நுனி நாக்கை இலேசாகக் கடித்தவாறு தனக்குத் தானே எச்சரித்துக் கொண்டான்.
‘இனிமேலும் பேசினால் சிவா மனசு வேதனையடையும்!’
அன்று-
வேலை முடிந்து இல்லம் திரும்பியதும் பிரபாகரன், மகள் சுகன்யா வீட்டுக்குள் இருக்கிறாளா வென்று தேடினான். வழக்கம் போல் லேட் தான். அவன் மனைவி ரஞ்சிதாவுக்கு வியப்பு.
‘இந்த மனுஷன் எதையும் கண்டுக்கமாட்டாரே…இப்ப என்ன புதுசா என்றைக்கும் இல்லாத அக்கறை வந்துச்சு?’
“ரஞ்சி! காஃபி எடுத்துட்டு வா…சிவா ஒரு விஷயம் சொன்னான்”
“க்கும்… உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே கிடையாது!”
“அட.. எப்போதும் ஒரே மாதிரி இருக்குமா?”
“சரி.. சொல்லுங்க பார்ப்போம்..”
“எல்லாம் நம்ப சுகன்யா விஷயம்தான்” என்று இழுத்தான் பிரபாகரன்.
ரஞ்சிதா கொதித்தெழுந்தாள்.
“என்னங்க பேசறீங்க… நம்ப பொண்ணு எவ்வளவு இலட்சணம்..போயும் போயும் அந்தப் பையனுக்கா…கால்லே வேற ஊனம்…இழுத்து இழுத்து நடந்துட்டு..”
பிரபாகரன் தலையில் அடித்துக் கொண்டே அவளை ஏறிட்டு வெறித்துப் பார்த்தான்.
“போதும் நிறுத்து! எதையும் முழுசா கேட்க மாட்டியா.. இந்தப் பொம்பிளைகளே அப்படித்தான்!”
“சரி சொல்லுங்க..இப்ப எதுக்கு எங்க சமூகத்தையே இழுக்கறீங்க”
“பெரீய சமூகம்…!”
அப்போது காலிங் பெல் அடித்தது.
சுகன்யாதான்.
“சரீங்க அப்புறம் பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு சமையலறைக்குள் நுழைந்தாள்.
ஹாலுக்குள் நுழைந்த சுகன்யா தலையைக் குனிந்தவாறு நகருவதைப் பார்த்த பிரபாகரனுக்கு, அவள் எதையோ இரகசியமாகச் செய்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள வெகுநேரம் பிடிக்கவில்லை.
“சுகன்யா! இங்கே வாம்மா” என்று நிதானமாக அழைத்தான்.
“இருங்கப்பா.. பத்து நிமிஷத்துல வர்ரேன்” என்றவாறு உள்ளே ஓடினாள்.
அந்த நேரம் பார்த்து சிவசங்கரன் எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தான்.
அவனைப் பார்த்ததும் ஏதோ ஒப்புக்கு ‘ வாங்க ‘ என்று ரஞ்சிதா சொல்லிவிட்டு பிரபாகரனைப் பார்த்தாள்.
“வாப்பா..என்ன விஷயம்?” என்றான் பிரபாகரன்
“நல்ல செய்திதான்! முதல்லே உங்கிட்டே சொல்லீட்டுப் போலாம்னு வந்தேன்” என்றவாறு டீபாய் மீது ஸ்வீட்ஸ், மிக்சர், ஆப்பிள் கொய்யா அது இதுவென்று பெரிய பையை வைத்தான்.
“பாலனுக்கு பேங்க்ல போஸ்டிங் கிடைச்சிருக்கு!” என்றான் புன்முறுவலுடன்.
“வெரி குட்! உம் பையனையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே”
“அவன் ஆபீஸை விட்டு வர்றதுக்கு லேட் ஆகும்”
“இது டெம்பரரிதானே..”
“ஆமா பிரபா.. ரொம்ப கஷ்டப்படறான்.. கொஞ்சங்கூட தயவு தாட்சண்யம் இல்லாமே வேலை வாங்கறாங்க”.
“சரி.. கவலைப்படாதே.. எல்லாம் நல்லதா முடியும்னு நம்புவோம்” என்றான் பிரபாகரன்
பேச்சு சத்தம் கேட்டு சுகன்யா ஹாலுக்கு வந்தாள்.
“வாங்க அங்கிள்! காஃபி சாப்பிட்டீங்களா…” என்றவாறு சமையலறைக்குள் நுழையப் போனாள்.
“இரு சுகன்யா! நீ பேசிட்டிரு.. நான் போடறேன்”
ரஞ்சிதா போனாள்.
பிரபாகரன், சிவசங்கரனைப் பார்க்க…
“அங்கிள்! எங்க ஆஃபீஸ் பக்கம் வந்தீங்க போலிருக்கு!” என்றாள் சுகன்யா.
சிவசங்கரன் சுதாரித்துக் கொண்டு “ஆமாம்.. ஒரு வேலையா வந்தேன்.. என்னைப் பார்த்தியாம்மா” என்றான்.
“ஆமா அங்கிள்..காண்டீன்லே ஒரு பையன் கேட்டரிங் படிச்சிட்டு வேலை செய்யறான்.. அவன் பாவம்… ஒரு பிரச்சினைலே மாட்டிட்டான்..அது விஷயமா பேசிட்டிருந்தப்போ நீங்க க்ராஸ் ஆனதைப் பார்த்தேன் ” என்றாள் சுகன்யா அமைதியாக.
பிரபாகரனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
சிவசங்கரன் எதுவும் பேசாமல் புறப்பட்டு விட்டான்.
அன்று இரவு.
பிரபாகரன் முற்றத்தில் அமர்ந்திருந்தான்.
“சுகன்யா! இங்கே வாம்மா.. நானும் உன் அம்மாவும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்… உன்னோட மேரேஜ் பத்தி…”
ரஞ்சிதா சன்னல் திரையோரம் பதுங்கியிருந்தாள்.
“நெனைச்சேன்.. நீங்க இப்படிப் பேசுவீங்கன்னு!”
“சரி..அது இருக்கட்டும்.. அந்த காண்டீன் பையன் யாரு.. அவனுக்கு என்ன பிரச்சினை?”
“ஏப்பா.. சிவா அங்கிள் ஏதாச்சும் சொன்னாரா?”
பிரபாகரன் மவுனமாக அவளையே பார்த்தான்.
சுகன்யா புரிந்து கொண்டு திடமாகப் பேசினாள்:
“அப்பா! ஒரு விஷயம்.. அந்த அங்கிள் கிட்டே சும்மா சொன்னேன்..நானும் அந்தப் பையனும் ஒருத்தருக்கொருத்தர்…!”
பிரபாகரன் அதிர்ந்து போய் ரஞ்சிதாவைப் பார்த்தான்.