தாவைப் பார்த்து…




(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புது ஆள் ஒருத்தன் வந்து ஊர் மடத்தில் படுத்திருப்பதாகத் தாக்கல் கிடைத்தது. வேலைக்கு ஆள் கிடைக்காத இந்தக் காலத்தில் ஒரு ‘மொண்டி சண்டி’யைக்கூட தேடினாலும் கிடைக்கிறதில்லை. ஆள் ஜவான்போல இருப்பதாகச் சொன்னார்கள். முந்தணும்; இல்லைண்ணா எவனும் தட்டிக்கொண்டு போயிருவான். முக்கியமா ஐயி நாயக்கர் கண்ணுலெ படுறதுக்கு முன்னாலெ முந்திக்கிடணும் என்று நினைத்துக் கொண்டே ஊர் மடத்தைப் பார்த்து நடந்தார் சுப்பாநாயுண்டு.
கேள்விப்பட்டது சரிதான்; ஆள் வாட்டசாட்டமா ஒருப்பூட்டான ஆள்தான். மட்டமல்லாக்கப் படுத்துக் கிடந்தான். செப்பையில் சின்ன மாசத்துக்கு ஒரு மாசத்தாடி, வயசும் அப்பிடி ஒண்ணும் அதிக மிருக்காது; முப்பதுக்கு உள்ளெதான் சொல்லணும். விரிந்து கிடக்கும் உள்ளங்கை நல்ல காய் காச்சி இருந்தது. வேலைக்காரன்தான்; பெருத்த மார்பும் சிறுத்த வயிறும்; நாய் உடம்பு.
விரித்துப் படுத்திருந்த கந்தல்த் துண்டிலிருந்து விலகிக் கிடந்தது உடம்பு.
என்னா தூக்கம்! அந்தத் தூக்கத்தையும் உடம்பையும் பொறாமை யோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
முகத்தைக் கவனித்து ஜாதியை யோசித்தார். நிதானம் பிடிபட வில்லை. தொட்டுக்கிடுற ஜாதியா இருந்தா தண்ணி வென்னி எடுக்கத் தோது; பார்ப்பம்.
மெல்லே ஆள் புரண்டு கொடுத்தான். இது அநேகமா மிச்ச தூக்கந் தான்; எழுப்பலாம். செறுமினார். லேசா கண்ணை முழிச்சிப் பார்த்தான். யாரோ ஒரு மரியாதைக்குரிய மனுசன் பக்கத்தில் வந்து உட்கார்ந்திருப்பதைக் கண்ட அவன் எழுந்திருந்து உட்கார்ந்தான். நல்ல விடிஞ்சி போச்சி போலிருக்கே. வெளிச்சத்துக்குக் கூசிய கண்களை தேய்த்துவிட்டுக் கொண்டான். கந்தல் அழுக்குத் துண்டினால் மூஞ்சியைத் துடைத்துக்கொண்டான்.
“எந்த ஊரு?” பிள்ளையார் சுழி போட்டார் நாயுண்டு,
“கங்கரிசல்ப்பட்டி யூரு”
சொல்லும் ஒலி உச்சரிப்பிலிருந்து இது தெலுங்கு நாக்கு என்று கண்டுகொண்டார். தெலுங்கிலேயே தொயந்தார்.
வீட்டுப்பேர் என்ன என்று கேட்டார்.
“அடடே நமக்கு சம்மந்தகாரனாகத்தான் வந்திருக்கெ!”
கலியாணம் ஆகலை இன்னும், வீட்லெ கொஞ்சம் சடவா கடவாகத்தான் வந்திருக்கான், நிலம் நீச்சு கிடையாது அத்தக் கொத்துக்காரந்தான் என்கிறதை எல்லாம் ஒரு நிமிட்டில் கறந்து விட்டார். உடனே “எந்திரி எந்திரி நம்ம எனத்துக்காரன், அதுவும் நம்ம ஊரிலே வந்து வயித்துப் பசியோட படுத்திருக்கிறதாவது; ம்..ம், கிளம்பு” என்று வீட்டுக்கு கொண்டுபோய் விட்டார்.
“அசோதெ; அசோதெ” என்று அவர் கொடுத்துக்கொண்டே நுழைந்த குரலில் பெருமிதமும் குதூகலமும் தூக்கியிருந்தது. வீட்டம்மாவும் வந்து அவனை ஒரு பார்வை கவனித்தாள். நாயுண்டு வின் கண்ணைவிட அது கொஞ்சம் கூர்மை.
சாப்பிட்டு முடிந்ததும் அவனால் சும்மா இருக்கமுடியலை. தொழுவில் சாணி அள்ளப்படாமல்க் கிடப்பதும் போட்ட சாணியின் மேலேயே காளைமாடுகள் படுத்துக்கிடப்பதும் அவன் கண்ணை உறுத்தியது. கந்தல்த் துண்டை தலையில் வரிந்து, வேட்டியைத் தார்ப் பாய்ச்சிக் கொண்டு, யாரும் சொல்லாமலேயே கூடையில் சாணியை அள்ளி வைக்கவும் தொழுவை பருத்திமார் முடியினால் தூக்கவும் தொடங்கிவிட்டான்.
‘வேலை செய்து செய்து துருப்பிடிக்காமல் வைத்துக்கொண்டி ருக்கும் கைகள்’ என்று நினைத்துக்கொண்டார் நாயுண்டு.
அன்றைய வேலையை முடித்துவிட்டு சாயந்திரம் இறவைக் கிணற்றில் போய் முங்கிக் குளித்துவிட்டு வந்தான். உடம்பும் மனசும் பெடைச்செடுத்தது போல லேசா இருந்தது. ராச்சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பாதசரம் அணிந்த இளம் பாதங்கள் அங்கிட்டும் இங்கிட்டுமாகப் போய்வந்தபோது வாசனைச் சோப்பு மணத்தது.
வேலை வேலை; சாப்பிடுகிற நேரம் தூங்குகிற நேரம் போக பாக்கி நேரமெல்லாம் வேலைதான் அந்த வீட்டிலெ அவனுக்கு. இப்படிச் செய்யிற வேலைக்கு என்ன சம்பளம் போட்டுக் கொடுப்பார்கள் என்று அவன் மனசு கணக்குப் போட்டுப் பார்த்தது. ராமய்யா ராமய்யா என்று அவனை அவர்கள் வாய் நிறையக் கூப்பிட்டார்கள். அவனும் அத்தெ, மாமா என்று அவர்களைக் கொண்டாடினான். சாப்பிடும் போது மறுசோறு வேண்டியதிருக்கும்போது சொல்லி வச்சதுபோல அந்தப் பாதசரம் அணிந்த இளம் பாதங்கள் வரும். “அது” பரிமாறும் போது குடங்கையிலுள்ள அந்த நீலநிற மச்சம் அவன் கண்ணில் படும்.
ஊர் வாயை மூட உலைமூடி கிடையாதுதான்; கம்மாய்க்கரைப் பக்கம் போனாலும் கிணத்துக்கரைப் பக்கம் போனாலும் துளைத்து எடுத்தார்கள் அவனை; சம்பளம் என்ன ஏது என்று. இதை அவன் வீட்டில் வந்து சொன்னபோது அசோதையம்மாவுக்கு அண்டகடாரம் முட்டிக்கொண்டு வந்தது. “எப்பிடித்தான் வந்துட்டுப் போகுது எனக்கு… என்று புருஷனிடமென்றால் அதன்கூடவே ஒரு சொல்த் தொடரையும் சேர்த்துக் சொல்லுவாள்! அந்நியனிடம் அப்படி அதையெல்லாம் சொல்லமுடியுமா.” குசும்பு பிடிச்ச பயபிள்ளைக; களுதப்பெறட்டு பண்றதே தொளிலு என்று மட்டும் சொன்னாள். சுப்பாநாயுண்டு வந்ததும் வராததுமாய் விஷயத்தை அவரிடம் இறக்கினாள். வெளியூர் போய்வந்த அலுப்பையும் பார்க்காமல் அவர் வெடிக்க ஆரம்பித்தார். “நா எம்புட்டு சம்பளங் கொடுத்தா இந்தத்யா பிள்ளைகளுக்கு என்ன; நா சம்பளங் கொடுப்பேன் கொடுக்காமெயும் இருப்பேன்; ஏம் மகளைக் கட்டிக்கொடுத்து அவனெ வீட்டோட வச்சிக்கிடுவேன்; இந்த ஊர்த் தே…பிள்ளைகளுக்கு என்னேங்ஙெ?” என்று அவளொடெயே சண்டைக்குப் போறதுபோல் இறைந்தார். சமையல் கொட்டத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ராமய்யாவுக்கும் இது கேட்டது.
அரங்கு வீட்டுக்குள் போனார் அதே வெருச்சில், அசோதை யம்மாவும் போனாள். சட்டையைக் கழத்தி கொடியில் வீசினார். அதிலிருந்து மணிப்பர்ஸ் கீழே விழுந்தது. அதை எடுத்து வைக்கும் சாக்கில் அசோதையம்மா, செலவழிந்தது போக மீதி எவ்வளவு இருக்கிறது என்று ஒரு நோட்டம் விட்டுக்கொண்டே.
“சரீ; போன காரியம்?” என்று ஆரம்பித்தாள்.
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப ஆசைப்படுறாங்க” என்றார்.
“என்னவாம்?”
“முப்பது பவுனுக்கு நகை போடணுமாம்!”
அசோதையம்மாவுக்கு யோசனையாகிவிட்டது; தன் பொண்ணு விஷயமாக ஒரு பெரிய்ய இருட்டு தெரிய ஆரம்பித்தது.
ஆடிமாசப் பின்நிலாக் காலத்தில் குப்பையடி நடந்துகொண்டி ருந்தது. ராத்திரியெல்லாம் முழித்து கூடவேயிருந்து குப்பையடித்த அலுப்பு. மத்தியானம் கம்மாய்க்கரை மரநிழலில் துண்டை விரித்துப் படுத்துக் கிடந்தார் சுப்பாநாயுண்டு. தூக்கமும் வராத அலுப்புந் தீராத ஒரு நிலை, கண்ணை மூடி மூடி சொருகிக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் எங்கிருந்தோ ஐயி நாயக்கர் அங்கே வந்து சேர்ந்தார். ‘எங்கெயோ தொலைக்காட்டிலிருந்து வர்ரான் போலிருக்கு கெட்ட… மகன்’ மனசுக்குள்ளேயே வைதுகொண்டார் நாயுண்டு. வந்தவர் பக்கத்தில் வந்து குத்துக்கால் வைத்துக் உட்கார்ந்தார். லேஞ்சியை அவிழ்த்து குண்டிக்கடியில் போட்டுக்கொண்டு தலையை ரண்டு கைகளாலும் பறட் பறட் என்று சொறிந்துகொண்டார். இது அவர் வழக்கமாக எங்கே போய் உட்கார்ந்தாலும் செய்யும் முதல்க்காரியம். அடுத்தது கோமணத்துணியை சரிசெய்து கொள்வது. வேட்டியோ லங்கோடோ இவர் அணிந்து கொள்வதில்லை. இருபத்தி நாலுமணி நேரமும் பழனி ஆண்டவர்போல கோமணத் துணியோடுதான் காட்சி தருவார். மாராப்பைப் பெண்கள் அடிக்கடி சரிசெய்து கொள்வது போல இவர் கோமணத்துணியை இழுத்துவிட்டு சரிசெய்து கொள்வார் அடிக்கடி. ஒன்றுமே அறியாதவர்போல முகத்தை வைத்துக் கொள்வார்.
தரையைப் பார்த்துப் பேசுவதுபோல ஆரம்பித்தார். “மாப்பிள் ளைக்கு ராத்திரிபூரா குப்பையடிச்ச அலுப்பு போலுக்கு” என்றார் சன்னமான குரலில்.
“ஆமா மாமா” என்றார் சுப்பாநாயுண்டு மரியாதை தொனிக்க.
“ம்…” என்று தலையை ஆட்டி முனகிக்கொண்டே மேலும் ஒரு தடவை தலையைச் சொறிந்துகொண்டு, கோமணத்தை சரிசெய்து கொண்டே தரையைப் பார்த்து “ஒரு பிள்ளையாண்டன் யாரோ வண்டி பத்திக்கிட்டுப் போனாப்பிலே இருந்தது, பாத்தென்”
‘கேக்கதைப் பாரு ஒண்ணுந் தெரியாததுபோல. எல்லாம் விசாரிச் சிருப்பான். இப்பொ என் வாயைப் பிடுங்கணும் இவனுக்கு’
“அது வந்து மாமா; கங்கரிசப்பட்டி, என்னமோ வந்தான், இருக்கான்”
“ம்…பரவாயில்லியா; வேலையெல்லாம்?”
“என்ன வேலை; இந்தக் காலத்துப் பயபிள்ளெக என்னெத்தெ செய்யும்? சும்மா ஆத்தமாட்டாமெ. நமக்கும் அதெவிட்டாப் புகலு; சொல்லுங்க”
இந்தமாதிரி சொல்லும் பதிலுக்கு ‘ஐயிநாயக்கர் பாணி’ என்று பெயர்! அவரிடம் திறமையான ஒரு வேலைக்காரன் வந்து அமைந்தான் என்றால், வெளியில் அவனைப்பற்றி “மகா மோசமான பயல், கெட்டசாதிப் பயல், ஒரு எளவும் வேலை தெரியலை, இவனைக் கட்டிட்டு அளுகுறதைவிட பேசாமெ நாமே செஞ்சிக்கிடலாம்” என்று சொல்லிக்கொண்டே திரிவார்.
“சம்பளம் பேசியாச்சா இனிமேத்தானா?”
“ஒண்ணும் பேசலை. இவன் என்னெத்தெ மாமா ஒப்பேறப் போரான்; ஏதோ இருந்தமட்டுக்கும் சரி”
“முப்பதுக்குமேலெ யாரும் பேசலை; பாத்துக்கொ”
நாயுண்டு இதுக்கொண்ணும் பதில் பேசலை. மரத்தின் மேல்க் கொம்பில் உட்கார்ந்துகொண்டிருந்த மீன்கொத்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சுப்பா நாயுண்டுவின் வீட்டுக்குப் பருத்தி நிறுக்க வந்தார், யேவாரி செல்லைய நாயக்கர். சம்சாரிகளின் பருத்தியை விலைக்கு வாங்கிக் கொண்டு போய் மில்களுக்கு விற்பது இவருடைய தொழில். கிராமத்தில் கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பவர். தினந்தவறாமல் தெக்கே வடக்கே போறவர். நாலெழுத்துப் படிச்சவர்.
யேவாரி வீட்டுக்குள்ளே வந்தபோது அசோதையம்மா ஈர் வாங்கி யினால் தலைமுடிக்குள் கொடுத்து வாங்கி ஈரு முட்டைகளை நசுக்கிக் கொண்டிருந்தாள். நாயுண்டுதான் வந்து யவாரியை “வாங்க” என்று சொன்னார். பருத்தி விலையைக் கேட்டார். “லச்சுமி இப்போ 450க்குத் தான் தீருது அங்கே”
“அநியாயம்; யேவாரிகளெல்லாஞ் சேந்து சம்சாரிகளெக் கொள்ளைதானெ அடிக்கீக” என்றார் நாயுண்டு சத்தம் போட்டு, கோபத்துக்கு பதிலாக கொந்தளிப்பான ஒரு சிரிப்பே பதிலாக வந்தது.
“முன்னெல்லாம் ஒரு பவுன் என்ன வெலையோ அதே வெலைதான் ஒரு பொதி பருதியின் வெலையும்” என்றாள் அசோதையம்மா தலையை முடிந்துகொண்டே. “அதுபடி பாத்தா இப்பொப் பருத்தி வெலை குண்டாலுக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபா இருக்கணும்” என்றார் நாயுண்டு,
“ஆமா ஆமா, அதிலென்ன சந்தேகம்” என்று ஒப்புக்கொண்ட யேவாரி,
“பருத்தி வெலையை நாமளா வெக்கிறோம்; அது மில்லுக்கார னில்லா வெக்கான்; வெலையை ஏத்துறதும் எறக்குறதும், அவம்பாடு தான்” என்றார்.
போனவருசம் பருத்தி யேவாரி செல்லைய நாயக்கருக்கு பலத்த அடி;
மீண்டதே பெரிய காரியம் என்று பேசிக்கொண்டார்கள் என்பது நாயுண்டுவின் நினைவுக்கு வந்தது.
நூலு விலைக்கும் துணி விக்கிற விலைக்கும் இப்போதைய பருத்தி. விலைக்கும் சம்மந்தமே இல்லை என்பதை ஒப்புக்கொண்டார் பருத்தி யேவாரி.
ஊர்த்தரகனார் வந்து திராசைத் தொங்கவிட்டார். தட்டு வாட்டம் பார்த்தார். பருத்தியை அள்ளி நாயுண்டு தட்டில் வைத்துக்கொண்டே யிருந்தார். உடம்பெல்லாம் வியர்வையாய் ஒழுகியது. தரகனார் கணீ ரென்ற குரலில் ராகம் போட்டு எண்ணிக்கையைச் சொல்லி பருத்தியை நிறுத்துப் போட்டுக்கொண்டேயிருந்தார். ஒரு மருகை நிறைந்தவுடன் அடுத்த மருகைக்கான நிறுவை ஆரம்பமாகும்
“வெங்கடாசலபதி முன்னிற்க…லாபம்”
“லா…பம். லா…பம். ரெண்டு”
“ரெண்…டு. ரெண்…டு. மூணு”
நேரம் மதியத்துக்கு மேலாகிவிட்டது. வீட்டுக்குள்ளிருந்து பருத்தி மருகைகள் உருண்டு உருண்டு தெருவுக்கு வந்துகொண்டேயிருந்தன.
பருத்தியைப் போட்டுவிட்டு பணத்துக்கு நடையாய் நடந்தார் சுப்பாநாயுண்டு. இப்பொ பிறகு நாளை அடுத்தவாரம் என்று தவணை சொல்லிக்கொண்டே வந்தார் யேவாரி.
“இப்படி மரமா நின்னுக்கிட்டிருந்தா எப்பிடி. எவ்வளவு செலவு இருக்கு; சம்பளகாரனுக்கு சம்பளங் கொடுக்கணும். அருகு எடுத்தவங் களுக்குப் பணமா வேணுமாம். அவங்க வேறெ நடையா நடக்காங்க, அல்லுஞ்சில்லுமா வீட்டாப்புக் கடன்வேறெ வாங்கிக் கெடக்கு, வீட்டுக்கு சாமான் வாங்கிப்போட்டு எத்தனெ நாளாகுது, பிள்ளைக் கும் நமக்கும் உடுக்கத் துணியெடுக்க வேண்டாமா, மாடுகளுக்குப் பருத்திக்கொட்டை எப்பப் போயி பிடிக்கிறது….” என்று வரிசையாய்ப் பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிப்பதுபோல ஆகவேண்டிய செலவுகளை சொல்லிக்கொண்டே போனாள் அசோதையம்மா.
இவர் போன வேகத்தில் நல்லவேளையாய் யேவாரி செல்லைய நாயக்கர் இருந்தார். அவர் இந்த வருசம் ஓரளவு பருத்தி வாங்கி முடிக்கவும் பஞ்சு விலை இறங்கவும் சரிய்யாக இருந்தது. அரைத்த பஞ்சை விற்கமுடியாமல் தவுதாயப்பட்டுக் கொண்டிருந்தார்.
வீட்டுக்குள் நாயுண்டு நுழையப்போகும் சமயம் பார்த்து அங்கே ஒரு கார் வந்து நின்றது. ரண்டு மூணு பேர் ‘பணம்பெத்த’ ஆசாமிகள் அதிலிருந்து இறங்கி நாயுண்டுவை முந்திக்கொண்டு நுழைந்தார்கள். “டேயப்ப, என்னமா அடிக்கி வாசம் ஜம்முன்னு”
வாசலில் அவர்கள் கழத்திப் போட்டுவிட்டுப் போன செருப்பு களைக் கவனித்தார். ‘தோல்லெ இப்பிடி முகம் பாக்கும்படியாவும் செருப்புகெ இருக்கு போலிருக்கே! தா…நாமளும் இருக்கமெ’ என்று தன்னையே ஒரு பாச்சல் வைதுகொண்டார்.
எவ்வளவு வேகமாய்ப் போனார்களோ அவர்கள் அவ்வளவு வேகமாய்ப் பாய்ந்து திரும்பி வந்தார்கள்.
கார் புறப்பட்டுப் போய்விட்டது. பெட்ரோல் மணமே மிஞ்சியது. போனவர்கள், போகும்போது “கட்டாயம் வந்துறணும்” என்று சொல்லிவிட்டுப் போனதுதான் சுப்பநாயுண்டு கேட்ட வார்த்தை அவர்களை வழியனுப்ப வெளியே வந்த யேவாரி, இவரைப் பார்த்ததும் “வாங்க உள்ளெ வாங்க” என்று அழைத்தார்.
“வந்தது யாரு?” என்று கேட்டுக்கொண்டே நாயுண்டு உள்ளே போனார் அவரோடு.
“மில்லுலெயிருந்து அழைப்புப் பத்திரிகை; மில் முதலாளி கொடுத்து விட்டிருக்காரு. புதுசா இன்னொரு மில்லு தெறக்கப் போறாங்க”
“எந்த எடத்திலெ?”
“அதே மில்லுக்கு உள்ளறதான். B. மில்லுண்ணு சொல்றது, இது அதெவிடப் பெரிய்ய மில்லு. மெசின்களெல்லாம் ஜப்பான்லெ இருந்து வந்தது. தொழிலாளிகளே வேண்டாம்! எல்லாம் அதே செஞ்சிக்கிடும். நூக்குறதோ நெசவு செய்யிறதோ சேலைகளெ மடிக்கிறதோ பொட்ணம் போடுறதோ சகலமும் மெசினே செஞ்சிரும்; மனுசங்கூட அப்பிடிச் செய்யமாட்டான்!”
“போடு பெண்ணெ; அப்பிடியும் வந்துருச்சா, ஆங்.!!” காரணமில் லாத சந்தோஷம் கொஞ்சநேரம் ரண்டுபேரையும் பற்றிக் கொண்டது.
அரை நிமிஷ சந்தோஷத்துக்குப் பிறகு சுப்பாநாயுண்டு தரையிறங்கி வந்து, பருத்தி போட்டதுக்குப் பணம் வேணுமே என்று கேட்டார்.
“இப்பொக் கொஞ்சம் குடுக்கேன் வாங்கீட்டுப் போங்கெ” என்று சொல்லி கொஞ்சம் பணம் கொண்டுவந்து கொடுத்தார்.
“இதென்ன; இதெ வாங்கீட்டுப் போயி என்ன செய்ய, ஓதவா?” என்று எரிச்சலுடன் கேட்டார்.
“என்ன செய்யெ; ரெண்டுநா பொறுத்துக்கிடுங்க, பொறுத்ததே பொறுத்துக்கீட்டீகெ”
கிடைத்ததை வாங்கிக்கொண்டு இதாவது இப்பொக் கிடைத்ததே என்று வந்தார். அவருடைய பொறுமையின்மையும் எரிச்சலும் அவர் நடந்து வரும் ‘அழகி’லேயே தெரிந்தது.
வருகிற வழிதான் ஐயிநாயக்கர் வீடு, பருத்தி எடை போட்டுக் கொண்டிருந்தார்கள். முக்குத் திரும்புகிறதுக்கு முன்னாலேயே ஊர்த் தரகனாரின் குரல் கணீரென்று ராகம்போட்டு நீளமாய்க் கேட்டது.
“வெங்கடாசலபதி முன்னிற்க… லாபம்” முன்னிற்க என்பதில் விழுந்த அழுத்தம் நாயுண்டுவுக்கு ரொம்பத்தான் எரிச்சலைக் கிளப்பி விட்டுவிட்டது!
“முன்னிற்க; என்னத்தெ முன்னிற்க ?”
வெங்கடாசலபதியும் வெங்கடாசலபதியின் மில்லுந்தான் முன்னிற்கி! தா அவனுக்கு மாசம் அம்பது லச்சம் அறுபது லட்சம் உண்டியல்லெ வந்து விழுது; இவனுகளுக்கு வருசம் அம்பது கோடி அறுபது கோடிண்ணு லாபம் வருது.
‘முன்னிற்கங்கிறது அவனுக்கு; லா..பம்ங்கிறது இவனுக்கு’
முக்குத் திரும்பி ஐயிநாயக்கர் வீட்டுக்கு முன்னாலெகூடி வந்த போது, அங்கெ ஐயிநாயக்கர் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து கொண்டு எண்ணெய் படாத தலையை பறட் பட் என்று சொறிந்து கொள்வதும் கோமணத்தை இழுத்து சரிசெய்து கொள்வதும் இவருடைய கண்ணில் பட்டது.
ஒருவினாடி அதை நின்று பார்த்துக்கொண்டிருந்த நாயுண்டுவுக்கு பளிச்சென்று சில விஷயங்கள் புலப்பட்டதுபோல்த் தெரிந்தது.
– அன்னம் விடு தூது, ஆகஸ்டு 1984.