தாயுள்ளம்






கையில் காஃபி கோப்பையுடன் கலை – கலைவாணி என்ற பெயரை, ஏனோ தெரியவில்லை, சுருக்கிக் கொண்டாள் – பால்கனியில் நின்றிருந்தாள். காலை நேரம். காம்பவுண்டில் பச்சை பசேல் என செடி கொடிகள். பூச்செடிகள் வைக்கவேண்டும்…தன் பால்கனியில் தொங்கிக் கிடந்த பூச்செட்டிகளை நோட்டம் விட்டாள். அதில் பெரிய தொட்டி மூன்றில் மஞ்சள், சிகப்பு, நீல வண்ணத்தில் பூக்கும் வகையில் வைத்தால்…அழகாய்த்தான் இருக்கும.
நிதானமாக முதலில் ஒரு தொட்டியை இறக்கி, அதில் காய்ந்து போயிருந்த சருகுகளை நீக்கினாள். புதிதாக மண் போடவேண்டும். இரண்டாம் தொட்டியை எடுக்கப் போனவளுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது…அதுவரை தொட்டியில் பதுங்கியிருந்த குருவி சட்டென பறந்தது. தொட்டியில் சிறிய கூடு – பறந்த குருவியின் கூடுதான். கூட்டில் வெளிர் நீலத்தில் நாலு சின்னச்சின்ன முட்டைகள். நாலு ஜீவன்கள். கலைக்கு உள்ளம் துள்ளியது. தாய் குருவி திரும்பும்போது கூடு இல்லையென்றால் தவிக்குமே…தொட்டியை சுற்றிச்சுற்றி பறக்குமே…தொட்டியை மீண்டும் கொக்கியில் மாட்டினாள் கலை. ஒரு திருப்தி.
நம் அன்றாட வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடக்கும்போது மனம் மற்ற எதையோ நினைக்கும், உடன் தொடர்புப் படுத்தும். இது மனித மூளையின் அபார சக்தி – நம்முடைய சிந்திக்கும் அறிவை நிர்ணயிப்பது.
கலையும் அவள் கணவனும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாய் குட்டியை வீட்டில் வளர்த்தார்கள். அதை மிகவும் செல்லமாக செல்லி என்றே கொஞ்சினாள். ஒரே வருஷத்தில் செல்லி நன்றாக வளர்ந்து, சில நேரங்களில் அதிகமாகவே அமர்க்களம் செய்து, காம்பவுண்டில் ஒரு சின்னப் பெண்ணை கடித்துவிட்டது. பிறகு செல்லியை கொண்டு கூண்டில் அடைக்கவேண்டிய நிலை. கூண்டு சென்ற மறு நாளே செல்லிக்கு கடைசி ஊசி போட்டுவிட்டார்கள்.
கலை துக்கத்தில் மூழ்கினாள். அடுத்த வாரங்களில் எப்படியோ சமாளித்து தினமும் ஒருமுறை செல்லி உயிரிழந்த இடத்துக்கு போய் சில நிமிடங்கள் கண்ணை மூடி நின்றுவிட்டு வருவாள். பெற்ற குழந்தையை இழந்த தாய் போல அவதிப்பட்டாள்…
ஆம், கலை ஒரு முறை சில மாதங்களே தாய்மையை கொண்டாடியவள்தானே…
நாய் குட்டி செல்லியை வளர்ப்பதற்கு முன்பே கலைக்குப் பிறந்த ஆண் குழந்தை அருண் மூன்று மாதத்தில் கொடுமையான நுரையீரல் நோயால் உயிரிழந்தான். கலையின் உலகத்தில் நிரந்தர இருட்டு. மீண்டும் வெளிச்சம் பிறக்க நெடுங்காலம் ஆனது போல இருந்தது.
சின்னச்சின்ன குருவி முட்டைகள், செல்லி என்ற நாய்க் குட்டி, தனக்குப்பிறந்த ஆண் குழந்தை அருண் – கலையின் தாயுள்ளம் மூன்றையும் முடுச்சுப்போட்டது. இதைப் புரிந்துகொள்ள மனோதத்துவ நிபுணரை நாட வேண்டாமே!