தன்னைப் போலவே… – ஒரு பக்கக் கதை





பத்திரப் பதிவின்போது சாட்சிக் கையொப்பமிட பள்ளிப் பருவத் தோழன் பரந்தாமனை அழைத்துச் சென்றவன், பிஸியான டவுன் ஏரியாவில், பள்ளிக்கூடத்துக்கு அருகில், பஸ் ஸ்டாப்பை ஒட்டி டூ வீலரை நிறுத்தி தான் ஒரு பார்ட்டிக்கு விற்ற வீட்டைக் காட்டினான்.

எதிரில் இருந்த கோவிலில் உச்சிகால பூஜை மணி அடித்தது.
கூப்பிடு தூரத்தில் ரயில் நிலையத்த ஒட்டிய பெரிய மால்..
“இந்த வீடா?” விழி விரித்து ஆச்சரியத்துடன் கேட்டான் பரந்தாமன்.
“ம்”
“பள்ளிக்கூடம், கல்லூரி, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், ரயில் நிலையம், சினிமா தியேட்டர், பார்க், கோவில்னு எல்லாமே இவ்வளவு அருகாமையில் இருக்கறமாதிரி ஒரு வீடு வாங்கணும்னு வருஷக் கணக்கா தேடிக்கட்டிருக்கேன். எனக்கு அதிர்ஷ்டமில்லை.. என நொந்து கொண்டான் பரந்தாமன்..?”
“இரண்டு மூன்று முறை உங்க கிட்டே நேரிலும், போன்லயும் பேசும்போது இவ்வளவு விவரத்தையும் உங்க கிட்டே சொன்னேனே பரந்தாமா..?.. நீதான் கண்டுக்கவே இல்லை..!” என்றான் நண்பன்.
‘உன்னையும் என்னைப் போலவே நினைத்துவிட்டேனடா நண்பா..’ என்று சொல்ல முடியாமல், சரி புறப்படு!, நேரமாச்சு என்று நண்பனை அவசரப் படுத்தினான் ‘டிபிகல் ரியல் எஸ்டேட் பிசினஸ்மேன்’ பரந்தாமன்.
(கதிர்ஸ், மே 16-31)