கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,336 
 
 

”கலைச்சிடு…யாருக்கும் பிரச்சினை இல்லை” என்றான் கோட்டி… “என்ன பேசறீங்க கலைக்குறதுக்கு இது என்ன ஆட்சியா?.குழந்தைங்க.என் வயித்துல வளர்ற குழந்தைக்கு நீங்கதான் அப்பா”

“அதுக்கு சாட்சி இருக்கா? ஒண்ணு தெரியுமா.. நாம காதலிச்சதுக்கு எந்த ஆதாரமும் உன்கிட்ட கிடையாது .இந்த 365 நாள்ல லவ் லெட்டர் அனுப்பினதும் உன்னையே கொடுத்ததும் நீதாண்டி மக்குப்பெண்ணே….சோ…356வது விதியின்படி கலைச்சுடு!”

அரசியல்வாதியின் மகனாக பேசினான்.

ஆட்சி மாற்றம் அவணுள் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்தாள் அகிலா.

“வரேண்டி என் அப்பாவிப்பெண்ணே…”

பல்சரை எடுத்துக்கொண்டு பறந்தான்.

ஹோட்டல் லீ மெரிடியன் தாண்டி வளைவில் திரும்பிய போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

குறுக்கே வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டான் கோட்டி.

பாலாஜி ஹாஸ்பிட்டல்..

ஆபரேசன் முடிந்து வெளியே வந்த டாக்டரை பதற்ற முகத்துடன் நெருங்கினார் எம்.எல்.ஏ.அப்பா .

“உயிருக்கு பிரச்சினை இல்லை.காப்பாத்திட்டோம் .பட்,ஒரு வருத்தமான விசயம் முக்கியமான இடத்துல அடி பட்டதால இனி அவரால தாம்பத்ய வாழ்க்கையில முதல் இரவில் ஈடுபட முடியாது.ஒரு குழந்தைக்கு அப்பாவாகிற தகுதியை அவர் இழந்துட்டார்” என்றார் டாக்டர்.

– பாலாசரவணன் (அக்டோபர் 2011)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *