சலனம்





(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விரல்கள் மின்னல் வேகத்தில் பீடிகளைச் சுற்றினாலும், மனம் நினைவலைகளில் மிதந்தது. இடப்புறமாக நனைத்த இலை அட்டியும், நடுவில் புகையிலைத் தூளுமாகத் தட்டில் பீடிகள் குவிந்தன. வெறுந்தரையில் உட்கார்ந்து கால்களை நீட்டி சுவரில் சாய்ந்த வண்ணம் வேலையில் ஈடுபட்டாள் ரமீஸா.

இந்த நாற்பது வயதிலும் வெள்ளையாய், மென்மையாய் விரல்கள்தான் எத்தனை அழகு! ஒரு தட்டெழுத்துக்காரியின் நளினம், இசைவாணியின் சுருதிமீட்டல், இவள் விரல்களில் இயல்பாய் இணைந்து கொண்டதோ? இடக்கையால் லாவக மாக இலையை எடுத்து, வலக்கையால் தூளை அள்ளிப் போட்டு, ஒரே தாவலில் தலை, வால் முடித்து, நூலைக் கட்டி…
ஒரு நொடிப் பொழுதில் உருளும் பீடிகள்!
திடீரென முற்றத்துத் தரையில் ஏற்பட்ட சலனம். பம்பரச் சுழற்சியின் வேகம் தடைபடுகிறது. ‘என்ன சத்தம்?’ பார்வை, முன்வாசலை வெறிக்கிறது. பெட்டைக் கோழி தன் குஞ்சு களை, கொத்தி விரட்டும் காட்சி இவளை ஆர்வமுடன் பார்க்க வைக்கிறது. பக்கத்தில் நின்றிருந்த சேவல் கால்களால் குப்பை யைக் கிளறியவாறு கொக்கரித்து அழைக்கிறது. அதன் வாஞ்சை மிகும் அழைப்பை, ஏற்று குஞ்சுகளைத் துரத்திய தாய்க் கோழி, சிறகு சிலிர்த்து அதனருகில் ஒட்டிக் கொள்கிறது. குஞ்சுகளின் பதட்டம் அவளுக்கு பரிதாபமாய் இருந்தது.
இந்த தாய் கோழிக்கு இன்று என்னதான் பிடித்து விட் டது ? குஞ்சுகளை இரக்கமின்றி துரத்துவதற்கு! இந்தச் சம்பவம் ரமீஸாவின் உள்ளுணர்வை பெரிதாய் பாதித்திருக்க வேண் டும். இல்லையாயின், உலக அதிசயமொன்றை கண்டுவிட்டதைப் போல வேலையை நிறுத்தி விட்டு காட்சியில் ஏன் மெய் மறக்க வேண்டும்? சில கணங்களுக்குப் பின் – அவள் இதழோரங்களில், லேசான புன்னகை ஒன்று மின்னி மறைந்தது.
குஞ்சுகளுக்கு சுயகாலில் இயங்குவதற்கு வயது வந்து விட்டது. தாய்க் கோழிக்கும் இதமான ஆண்துணை தேவைப்ப டுகிறது. இப்படியொரு இணைபிரிதல், இப்போதைக்கு அவசி நேர்த்தியாய் இந்தக் கோழி உணர்த்தி நிற்கிறது. சரிதான் குஞ்சுகளுக்கு என்னதான் விளங் கப் போகிறது. அவளது மன அரங்கில் சலசலத்த கேள்விக்கு விடையும் தெளிவும் கிட்டிய நிறைவில் தனக்குள்ளே திருப்தி கொண்டாள்.
ரமீஸா கைகள் இரண்டையும் தலைக்கு நேராக உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டாள். நீண்ட நேரமாக உட்கார்ந்து கொண்டே இருந்ததாலும், விடியற்காலை தொட்டு உபவாசம் வேறு இருந்து விட்டதாலும், உடல் சோர்வுற்று, இடுப்பு வின்னென்று வலித்தது. அடுப்பை பற்ற வைத்து தேனீர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறவே, புடவையில் சிதறியிருந்த புகையிலைத் தூளை, தட்டில், உதறியவாறு, எழுந்து நின்றவளுக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
பிள்ளையைத் தோளில் போட்டவாறு, கலங்கிய கண்களு டன் மகள் ரிஸ்மியா எதிரில் நின்றாள். அவளது அழுகையும் பரபரப்பும் இவளை, கவலைக்குள் ஆழ்த்தியது. அவளது கூப்பாடு பக்கத்து வீடுகளுக்கும் எட்டியிருக்க வேண்டும். அடுக்களைகளிலிருந்து வேடிக்கை பார்க்கும், சில ஆர்வ முகங்கள் அசைந்தன. மகளை ஆதரவாய் தழுவியவாறு குடி சைக்குள் சென்றாள்.
‘எல்லாம் சேந்து எனக்கு கொடுமை செய்யுற… உம்மா! அவரும் இப்ப முந்திப் போல இல்ல! ஒரே அடிதடியும், கொளப்பமும்தான். நான் இனி அங்க போகமாட்டன் உம்மா…!’
மகளின் புலம்பலை அக்கறையோடு செவி மடுத்தாள் ரமீஸா.
‘எல்லாத்தையும் அந்த ஆண்டவனிடம் பாரம் சாட்டிட்டு, பொறுமையா இரி புள்ள!’ என்றாள் கருணை இழையும் குரலில். தாயின் ஆறுதல் வார்த்தையில், உடைப்பெடுத்திருந்த மகளின் ஆத்திரம் சிறிது தணிந்தது. பேரன் உம்மம்மாவைப் பார்த்து, கைகால் அசைத்து சிரித்தான். பேரனை வாரியெடுத்து ஆசைதீர முத்தமிட்டாள் ரமீஸா. அவனது அணைப்பில் பசியும், துயரமும், பஞ்சாய் பறக்கும் அதிசயத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து மேனி சிலிர்த்தாள்.
பெற்ற பிள்ளைகளையும்விட பேரக் குழந்தைகளிடம் பேரன்பு சொரியாத பாட்டன் பாட்டி யாருளர் இந்தப் பூமி யில்? ரமீஸா மட்டும் வேறுபட முடியுமா? குழந்தையின் உச்சி முகர்ந்து உள்ளம் குளிர்ந்தாள்.
‘என்னதான் மகள் நடந்தது? கொஞ்சம் வெளப்பமா செல்லு புள்ள!’
கலங்கித் துடிக்கும் துயர விழிகளால் தாயின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள் ரிஸ்மியா. முதுமையை மிக அருகில் அழைத்துக் கொள்ளத் துடிக்கும் வறுமையின் நெருக்கம். காலம் பூராவும் பிணைத்துக் கொண்டதில் கண்களைச் சுற்றி கருவலையங்கள். நெற்றிப்பரப்பில் அசையும் நரை, இவற்றை மீறி முகத்தில் தெரியும் அமைதிப் பொலிவு.
‘உம்மா…! அந்த முன் வீட்டுப் பொடியன் ஏண்ட கூடப் பொறந்த தம்பி மாதிரி. இந்தப் புள்ளையோட அவன் உசிரு மாதிரி இரக்கம். அவரோடையும், வந்து கதைச்சுக் கொண்டு இருப்பான். அல்லா மேல சத்தியமா, எங்க ரண்டு பேருகிட்ட யும் எந்த கெட்ட எண்ணமும் இல்ல உம்மா! மதினியும், மாமியும், அவருகிட்ட என்னத்தையோ கோள் சொல்லி, என்ன சந்தேகப்பட்டு அடியும் சண்டையும் தான்…! பொறுக்க ஏலா மத்தான் நான் இங்க வந்த…!’ ஆத்திரத்தில் வார்த்தைகள் வர மறுத்தன.
அவளது துயரக் கதையைக் கேட்ட ரமீஸாக்கு எதைச் சொல்வது என்று புரியாமல் இருந்தது. மகளும் மருமகனும் சந்தோஷமாக வாழ்வதை அறிந்து இறுமாந்திருந்த அவளுக்கு இச்சம்பவத்தின் தாக்கம், பெரிய பாதிப்பை, ஏற்படுத்தியது. நீண்டதொரு நெட்டுயிர்ப்பு உள்ளத்திலிருந்து வெளியாயிற்று. மகளின் ஒழுக்க குணம் பற்றி அறிந்திருந்த தாய், மனதிற்குள் பெருமைப்பட்டுப் போயிருந்தாள்.
பெண் மனம் என்னதான் சபலம் கொண்டிருந்தாலும், அவள் எந்தத் தவறுகளுக்குள்ளும் எளிதில் தடுக்கி விழக்கூடிய வளல்ல என்பது ரமீஸாவின் தீர்க்கமான கணிப்பு. தன் வாழ்வில் ஏற்பட்ட தடுக்கல்களின் நிழல்கூட மகளின் வாழ் வில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அவள் மிக வைராக்கிய மாக இருந்தாள். அவளை ஒரு நல்ல பெண்ணாய் வளர்த்தெ டுப்பதற்கு, பட்ட துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. அந்தப் பெருமையோடு இதுகாறும் வாழ்ந்து வந்த தாய்க்கு, துர்அதிர்ஸ்டவசமாக இப்போது ஏற்பட்டுள்ள அவப் பெயர் பெரும் சுமையாயிற்று.
அவள் நிரபராதி என்பதில் ரமீஸாவுக்கு எந்த அபிப்பிராய பேதமும் இல்லை. பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே. தன் மகளுக்கு ஏற்பட்ட அவப் பெயர் நீங்கி கணவனோடு மீண்டும் கருத்தொருமித்து வாழ வேண்டுமென மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டாள்.
இள வயதிலேயே கணவனை இழந்த ரமீஸாவின், கடந்த காலம் இருள் மூட்டம் நிறைந்தது. அழகும், இளமையும் உள்ள ஏழை விதவைப் பெண்ணொருத்தியை இந்த வெறிபி டித்த உலகம் சும்மா விட்டு வைக்குமா? படரக் கொம்பின்றி வாடிய கொடியாய், இளமைச் சுகங்களை இழந்து விம்மித் துடித்திருக்கிறாள் இவள்.
காசு இல்லாத காரணத்தால் கழுத்து வேலியின்றி ஏழைக் குமர்கள் கண்ணீர் வடிக்கையில், ஒரு விதவையின் விம்மலுக் காகவா இந்தக் குருட்டு உலகம் விழித் தெழப் போகிறது. இவள் ஒரு மாதிரி, என்று ஊரில் பலரும் பேசியதுண்டு. வாழ்க்கை நிர்ப்பந்தங்களால், அவளது வைராக்கியம் சில பொழுது வலுவிழந்து போனது உண்மைதான்.
அதற்காகச் சிரித்தவனிடம் எல்லாம் சில்லறை வாங்கிக் கொள்ளலாமே, என்ற சீரழிந்த நிலைக்கு அவள் எப்போதும் போனதில்லை. மகளை, மானமுள்ள பெண்ணாக, வளர்த்து ஒருவன் கையில், ஒப்படைக்கும் வரை, அவள் இலட்சியத்தோடு இயங்கினாள். பீடி முதலாளி காசீமோடு அவளுக்கு இருக்கும் உறவு ஊர் அறியாதது அல்ல!
வறுமையின் கோரக் கெடுபிடிக்கு மத்தியில் அல்லாடிக் கொண்டிருந்த வேளையில், அவன் அவ்வப்போது செய்து வந்த உதவிகளால் அவன்மீது பற்று வளரக் காரணமாயிற்று. ஒரே விதமான விரக்தி கலந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு காசிமோடு மனமொன்றி களித்தாள்.
காசிமின் வைப்பாட்டி என்று, ஊர் அவளுக்கு அடை மொழி சூட்டினாலும் அதுபற்றி அவள் அலட்டிக் கொள்ள வில்லை. நிலையான கொள்கையற்ற ஊர் உலகத்தைப் பற்றி பெரிய தாற்பரியம், எதுவும் அவளில் இல்லை. தன் மனசாட் சிக்கு மட்டும்தான், அவள் மதிப்புக் கொடுத்தாள். காசிம் முன்புபோல் இப்போது இவளிடத்தில் அதிகம் வாஞ்சை காட்டவில்லை. இவளைப் போல இன்னுமொரு ஆசைநாயகி யின் தொடர்பும், அவனுக்கு உண்டு என்ற செய்தியும் சமீபத் தில் அவள் காதுகளிலும் வந்து விழத்தான் செய்தது. அவள் அது பற்றி ஆர்ப்பரிக்கவில்லை. இந்த பீடித் தொழில்தான், பசிக்கொடுமையை அவ்வப்போது தணிக்கிறது.
கடந்த காலத்தில் திளைத்து, நிகழ்காலத்தை மறந்திருந்த வேளை, பேரக் குழந்தையின் அழுகைச் சத்தம். அவளை விழிப்படையச் செய்தது. அவனுக்கு பால்மா வாங்க வேண் டும். சமைப்பதற்கு பொருட்கள் வாங்க வேண்டும். மகளும் திடுதிப்பென்று, சண்டை பிடித்துக் கொண்டு, வந்துவிட்டாள். அவளிடம் ஏது காசு? பணத்திற்கு என்ன செய்வது?
கேள்விகளுக்கு வில கிடைக்கவில்லை அவளுக்கு. திடீரென ஒரு நம்பிக்கைக் கீற்று மின்னலாய் பளிச்சிட்டது.
காசிமிடம் போய் கேட்டால், நிச்சயம் உதவி செய்வார் என்ற எண்ணம் வலுப்பெறவே, தோல்பையை உதறி கையில் எடுத் துக் கொண்டாள்.
‘கடைக்குப் பெயித்து, சாமான் ஏதும், வாங்கி வாரன் புள்ள…! எதிர்பார்ப்புகளை நெஞ்சில் நிறைத்துக் கொண்டு, குடிசையிலிருந்து வெளியேறினாள். ரமீஸாவைக் கண்டதும் அலட்டிக் கொள்ளாமல் மிக நிதானமாகக் கதைத்தான் காசீம்.
‘மகள்ட கத… காத்து வாக்கில காதில புழுந்திச்சி… ரமீஸா! பஸ் ஸ்டாண்டில, இருந்து ரிஸ்மியா புள்ளயோட, போறதைப் பாத்தன். பாவமா இருந்திச்சி…!’ அவர் முடிக்க வில்லை.
அவள் கலங்கிய விழிகளுடன் புடவைத் தலைப்பை எடுத்து உடலை மூடிக்கொண்டாள். தன்னுடைய துயரங்களில் பங்கு கொள்வதற்கு, காசிம் போன்ற ஒருவராவது இருக்கின் றாரே, என்று நினைக்கையில் ஆறுதலாக இருந்தது அவளுக்கு.
‘எனக்கு… அவசரமா… கொஞ்சம் பணம் வேணும்! கைப்புள்ளையோட மகள் வந்திருக்கிறா…? ஏண்ட கையிலேயும் சல்லியில்லை. சமைச்சி கொடுக்கோணும்!’
‘ஒனக்கு இல்லாத பணமா? அது சின்ன விஷயம்! நான் செல்லுறதை நல்லாக் கேட்கோணும் ரமீஸா.
இனி மகள் வீட்டோட இரிக்கட்டும். காதிக், கோட்டில, வழக்கொண்டு போட்டு, அவனை தொலைச்சுடுவம். ரிஸ்மி யாவையும் புள்ளயையும் நான் கைவிட்டு விடுவேனா? ஒனக் கும் வயசாகுது. நெஞ்சி வருத்தக்காரி. நாளைக்கு பின்ன, அவள் றோட்டிலே சீரழியப் படாது. ஒனக்கு எவ்வளவு ஒதவி செஞ்சீக்கியன். நான் ரிஸ்மியாவை நிக்காஹ் செய்றன். நாங்க இரண்டு பேரும் எடுத்துச் சென்னா, அவ கேட்காம இரிக்கிற இல்ல…!’
காசிமின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போனாள் ரமீஸா. பேரிடி ஒன்று தன் தலையில் இடிந்து விழுந்ததைப் போன்று துடித்தாள். எரிகின்ற வீட்டில் பிடுங்குகின்றதெல்லாம் லாபம் என்று நினைக்கின்ற இரக்கமற்ற இவனைப் போய், நல்லவனாக இதுகாறும் நினைத்த பேதமைக்காக வருந்தினாள். தீட்டிய மரத்திலே குத்திக் கூர் பார்க்கின்ற கொடிய மனம் கொண்டவன் இவன். இனி இந்த சகவாசமே வேண்டாம் என்று தீர்மானித்தவளாக அவன் நீட்டிய காசை ஏறிட்டும் பார்க்காமல், அழுகையையும், விம்மலையும் அடக்கியவாறு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
கடைக்குப் போன உம்மா, கவலை தோய்ந்த முகத்தோடும், வெறுங்கையோடும், வீடு திரும்புவதை ஆச்சரியத்தோடு பார்த் தாள் மகள். கையிலிருந்து பையை வீசியெறிந்துவிட்டு, மர மென தரையில் சரிந்தாள் ரமீஸா. அவளுக்கு மார்பு துடித்தது. உடல் சில்லிட்டது. தாயின் நிலை மகளை வருத்தியது. அவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. ‘ஒங்களுக்கு… என்ன உம்மா? இந்த வெய்யில்ல எனத்துக்குப் போன?’ சோகக் குரலால் இறைஞ்சினாள்.
சற்று நேரத்தில் ரமீஸா சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
‘எனக்கு ஒன்டும் இல்ல. ஒடனே புள்ளய தூக்கிக் கொண்டு போடி ஓண்ட வூட்டுக்கு! ஒன்ன புடிச்சி, ஒத்தன்ட கையில, கொடுக்க நான் என்ன பாடுபட்டேன். இப்ப உம் மாட, சதையத் தின்னவா, இங்க வந்தீக்கிய. ஓண்ட மாப்புள்ள, ஒன்ன, அடிச்சிக் கொண்டாலும் அங்கேயே மவுத்தாப் போ! இஞ்ச வராதே…!’
தாயின் கடுமையான மனநிலையின் தாற்பரியம் எது வென்றறியாத மகள் திகைத்து நின்றாள்.
‘உம்மா… நான் போறேன். அவரு என்ன என்ன செஞ்சா லும், இனி இங்க வரமாட்டேன். நீங்க, அழாம பத்திரமா இருங்க உம்மா!’
அவள் குழந்தையை தோளில் இட்டவாறு பாதையில் இறங்கி நடந்தாள். மகளின் உருவம் பாதையில் தேய்ந்து மறையும்வரை, சிலையென இருந்த ரமீஸா, நெக்குருகும் குரலில்,
‘எனக்கு ஒரு மௌத்து வராதா நாயனே! ஏண்ட ஈரக் குலைய, பசியில துரத்தின பாவி நான்!’ என்று தலையைச் சுவரில் அடித்தவாறு அழுது புலம்பினாள். முற்றத்தில், மீண் டும் தன்னை ஒட்ட வந்த குஞ்சுகளை ஆக்ரோஷமாகக் கொத்தித் துரத்தியது தாய்க் கோழி. பாசத்தால் துடிதுடித்த அந்தத் தாயின் மனதில், மகளுக்கு வரவிருந்த ஆபத்து நீங்கி விட்டது என்ற ஆசுவதம் மிகப் பெரிய ஆறுதலைத் தந்தது.
– 4.7.1991, மல்லிகை.
– மீறல்கள், முதற்பதிப்பு: நவம்பர் 1996, மல்லிகைப் பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம்.