கோடாங்கிப் பேய்





(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதலிரவு அன்று.
முதலில் கையைப் பிடித்ததும், பிடித்த கையைக் கடித்தது அந்தப் பெண்பேய்.
சும்மாதானாக்கும் என்று சிரித்துக்கொண்டே சேர்த்துக் கட்டிப் பிடித்தான். மார்பில் பலமாகவே கடித்துவிட்டது! பதட்டத்தில் திணறிப்போனான்.
விலகி நின்று அவளைக் கவனித்தபோது பெருமூச்சு சூடாக – துருத்தியிலிருந்து அடிப்பதுபோல வந்துகொண்டிருந்தது. கண்ணு முழி பிதுங்கி வெளியே வந்துவிடும்போலப் பார்த்தாள் அவனை.
என்ன இது என்று தெரியாமல் திகைத்தாலும் அனுபவம், கேள்வி ஞானம் எல்லாம் சமயத்தில் வந்து கை கொடுத்தது.
இப்படியாப்பட்ட சமயங்களில் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும் என்று விலகிக் கொண்டான்.
இப்படி இது ஒரு ‘கழுத்தாகாத பாயும் மாடு’ என்று தெரிந்திருந்தால் எருது கட்டுவில் காளை அணைக்கிறவனைப்போல எச்சரிக்கையாக அணுகியிருக்கலாம் என்று தோன்றியது.
அடுத்த பிடியை எப்படிப் போடலாம் என்று அவன் விலகி நின்று கொண்டு யோசித்தபோது அவளுக்கு உடல் நடுங்குவதைக் கவனித் தான். நிதானப்படுத்த அவளருகே போனபோது நாகம்போல் சீறினாள்.
‘சரி, இது கேள்விப்படாத புதுசாகத்தானிருக்கு. அவசரப்பட வேணாம்’ என்று நினைத்து, கல்யாணப் பாயை எடுத்துக்கொண்டு போய் தூரத் தள்ளி விரித்து நீட்டி நிமுந்து படுத்துவிட்டான்.
அவள் தரையில் உட்கார்ந்தபடியே ரெண்டு கைகளையும் முன்பக்கம் ஊன்றிக்கொண்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ என்னவோ- தலையை முன்னும்பின்னுமாக ஆட்டிக் கொண்டிருந்தாள்.
‘கதை இன்னைக்கு இம்புட்டுத்தாம்’ என்ற நினைப்பு வந்ததும் ஒரு குறுஞ்சிரிப்பாணி உதட்டில் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனது அவனுக்கு.
திரும்பி சுவரைப் பார்த்துப் படுத்துக்கொண்டான்.
‘சவம், தூக்கமும் வராது போலுக்கெ’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அவனுக்குத் தனது முந்திய முதல்இரவு அனுபவம் ஞாபகத்துக்கு வந்தது. கலியாணத்துக்கு முந்தியே அவளைக் ‘கழுத்தாக்கி’ இருந்த தனால் இந்தச் சீண்றம் இல்லை. சூடு ஆற விசுறவேண்டிய தேவை யில்லை. ஆறிய சோத்தைக் கூசாமல் பிணைந்து சாப்பிடுவதைப்போல அது. அடாடா, பூமாரியைப்போல இனி தனக்கு யார் மனைவியாக வாய்க்கமுடியும் என்று நினைத்தான்.
பூமாரி இவனுக்கு என்றே பிறந்து வளர்ந்தவள். இவன்பேரில்தான் அவளுக்கு எவ்வளவு பிரியம், பரிவு, பாசம், சின்னஞ்சிறுசிலிருந்தே ‘ஒண்ணடிமண்ணடி’யாகப் பழகியதாலோ என்னமோ அந்நியம் என்று தோணவே செய்யாது.
அவள் திரண்டு நல்லா பழுத்தபிறகுதான் கலியாணம் நடந்தது. என்றாலும் கலியாணமெல்லாம் ஒரு அத்துகுத்தானெ; படைச்சபிறகு தான் சாப்பிடணும் என்று இருக்கு. சமைக்கும்போதே ருசி பார்க்காமல் எப்படி இருக்கிறது!
மாம்பழத்தில் நல்லா பழுத்த பழமும் ருசிதான். ஒதப்பழமும் ஒரு ருசிதான். ஒதக்காயும்கூட ஒரு ருசிதான். பிஞ்சின் ருசியே தனி.
எதை ருசித்தாலும் வயணமாக – முறையாக – கூறுகெட்டதனம் இல்லாமல் ருசிக்கணும் என்று நினைத்தான். பூமாரி சிறுசில் ஒரு நாள் இவனுக்கு மாங்காய் கொண்டுவந்தாள். கூடவே உப்பும் மிளகாயும். அவளே செய்தும் காட்டினாள்.
பாறையை ஊதி சுத்தமாக்கிவிட்டு மாங்காயைத் தேய்க்கச் சொன்னாள். பிறகு மிளகாயும் உப்பும்.
அளவோடு கலந்தால் ருசியான பண்டம் கிடைக்கும்.
‘கிடைத்தது. கிடைத்தது என்று குருட்டுக்கோழிபோல எடுத்து விழுங்காமல், துளித்துளியாக எடுத்து நாக்கில் தேய்க்கவேணும் என்று சொல்லித் தந்தாள் பூமாரி. கலியாணம் முடிந்ததும், மூணு நாலு வருசத்துக்குக் குழந்தையே வேணாம் என்றுதான் பூமாரி சொன்னாள். இவனுக்குத்தான், ‘முதலில் ஒரு குழந்தையைப் பெத்துக்கிடுவோம்’ என்று இணங்க வைத்தான். பிறகுதான் தெரிந்தது.. அப்படி அவசரப் பட்டிருக்க வேணாம் என்று ! விதியைப் பிடிக்க யாரால முடியும் என்று நினைத்துக்கொண்டான். வளைகாப்பு முடிந்து தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். உள்ளூரில் ஒரு தெருவைத் தாண்டினால் தாய் வீடுதான். நினைப்பு அவளுக்கோ இவனுக்கோ வந்துவிட்டால் தெரு வின் குறுக்காக ஒரே தாவலில் போய்விடலாம், ஒம்பதாவது மாசம். ஒரு நாள் மத்தியானம் திடீரென்று நெனைப்பு வந்துவிட்டது… போய் நின்றான்.
“வருவேன்னு தெரியும்!”
“ங்.. ஓம் மூஞ்சி!”
“அப்பிடியா; பாக்கலாமா?”
“பாக்கலாம்.”
“சரி.”
“என்ன செரி?”
“கிட்ட வராதெ.”
“வருவெம்.”
“கூடாதுன்னா கூடாது”
“எவஞ்சொன்னாம் கூடாதுன்னுட்டு?”
“என்னத்துக்காக அம்மா வீட்டுக்கு அனுப்பிச்சிருக்காங்க; கூடாதுன்னுட்டுத்தானே.”
முற்றத்தில் என்ன வாய்ச்சத்தம் என்று பார்க்க மாமியா வந்தாள்.
“வாங்க மருமகனே.”
“ஆமா அத்தே..”
மகளைப் பார்த்து அன்போடு கடிந்து “அடீ வெறு வாக்கலங் கெட்ட பொண்ணே; மாப்பிள்ளைய உள்ளே கூட்டிட்டுப் போய் பேசுடீ”
அம்மாவுக்குத் தெரியாமல் அவனுக்கு வலிப்புக் காட்டினாள். இருவரும் உள்ளே வந்ததும் அவன் “மொதக் காரியம் இந்த வாயைக் கிழிச்சி, நல்ல தைக்கணும்” என்றான்.
அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு மாமியா, முட்டைக் கோழியைத் தேடி கோழிக்கூண்டைப் பார்க்கப் போனாள்.
ஒம்பது மாசமும் முடிந்து, கனத்த வயிறு சரிந்தது.
அவள் சொன்னாள்: “வராம இருந்துராதீரும்.”
“ஒம்பது மாசத்துக்குமேலெ ஆயிட்டது; வராம இருக்கதுதாம் நல்லது.”
“யாரு சொன்னா? சொகமாப் பிரசவம் ஆகணும்னா அதெல்லாம் வரலாமாம்!”
“யாரு சொன்னது ?”
“பாட்டிதாம் சொல்லுச்சி.” சிரிப்பு வந்துவிட்டது.
ஆனால், பிரசவம் இவர்கள் நினைத்துபோல இல்லை. தலைப்பிரசவம். ஆய்ஸபத்திரிக்குப் போகணுமே என்கிறதெல்லாம் அந்தக்காலத்தில் கிடையாது.
பிரசவத்தின்போது குழந்தை ‘படிவாசலை’விட்டு இறங்கவே இல்லை. அப்படியே நின்றுவிட்டது. மூன்று நாட்களாகிவிட்டது. நாட்டு மருந்துவச்சிகள் கைவிட்டதுக்குப் பிறகு ஆஸ்பத்திரிக்கு வண்டியில் கொண்டுபோனார்கள். பெரிய உசுரும் போய்விட்டது. காலாகாலத்தில் வந்திருந்தால் வயத்தைக் கீறி பிள்ளையையும் காப்பாத்தி தாயையும் காபப்ாத்தி இருக்கலாமே என்றார்கள் அங்கே. விதியைப் பிடிக்க யாரால் முடியும் என்று சொல்லிச் சமாதானப் பட்டுக்கொண்டார்கள்.
நேத்துப்போல இருந்தாலும் பூமாரி போய் ஐந்து வருஷம் ஆகிவிட்டது.
குடும்பத்துக்கும் சம்சாரி சோலிக்கும் நேரத்துக்கு ஒரு கஞ்சி காய்ச்சி வைக்கவும் வீட்டில் ஒரு பொண்ணடி இல்லாமல் முடியுமா? பக்கத்து ஊரிலுள்ள நடுவுள்ள மாமன் மகள் வெள்ளை அப்பதான் பூத்தாள். ஆள் ஓங்குதாங்காக அழகாக இருப்பாள். சடங்கோடு சேர்த்து கலியாணத்தையும் முடித்து வைத்துவிட்டார்கள் இவனுக்கு.
இந்த ரெண்டாவது முதலிரவு மாமியார் வீட்டில்தான் நடந்தது. வெள்ளை இந்தக் கூத்து பண்ணுவாள் என்று அவன் நினைக்கவே யில்லை. அவள் ஆடிக்கொண்டிருக்கும்விதம் அவனுக்குச் சந்தேகமாய் இருந்தது. பார்த்துக் கொண்டேயிருந்தான். ‘எங்கயோ பயந்திருக்கா’. முதலில் முன்னும்பின்னும் ஆடிக்கொண்டிருந்த தலை இப்போ ஆட்டுரலில் குழவி ஆடுவதுபோல வட்டமாக ஆட ஆரம்பித்திருந்தது.
‘செ! குடிகெட்டுப் போச்சி’ என்று பாயை உதறித் தூக்கித் கிடாசி விட்டு மச்சுவீட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். வாசப்படியில்தான் மாமியா தலைவைத்துப் படுத்திருக்கிறாள். கொஞ்சம் கவனம் பிசகியிருந்தாலும் அவள் குரல்வளையில் மிதித்திருப்பான். பதறியடித்து எழுந்தாள் “என்ன ராசா, என்ன?” என்று கொண்டே.
“உள்ளே போயிப் பாருங்க.. ஒங்க மக பண்ற கூத்த” என்று சொல்லி விட்டு வெளியே போனான்.
பார்த்ததுமே தெரிந்துபோய்விட்டது அம்மாக்காரிக்கு இது கருப்புக் கோளாறுதான் என்று. தொழுவத்தில் கிடந்து தேய்ந்துபோன கட்டை விளக்குமாறை எடுத்துக்கொண்டு வந்து வெள்ளையின் உச்சந் தலையிலேயே போடு போடு என்று போட்டாள் ஓங்கி.
“ஓடிப்போ, ஓடிப்போ.. எம் பிள்ளையோட வாழ்வெக் கெடுக்க வந்தியா ஓடிப்போ” என்று சொல்லிக்கொண்டே
வெள்ளை மயங்கி தரையில் சாய்ந்தாள்.
பெத்தவள் ஒப்புசொல்லி அழத்தொடங்கினாள். கூட்டம் கூடி விட்டது என்னமோ ஏதோ என்று.
“செவ்வாய்க்கிழமையும் அதுவுமா தலைநிறைய பூவை வெச்சுக்கிட்டு சொள்ளமாடங்கோயிலுக்கு எதுக்க – கன்னிகழியாத பொண்ணு போகப்படுமா?”
“சொன்னேம்: கேட்டாத்தானே.”
“நம்ம பேச்செ யாரு கேக்கா?” – வெள்ளையின் பாட்டி புலம்பினாள்.
**
கோடாங்கிக்காரனுக்கு ஆள் அனுப்பினார்கள்.
கையில் உடுக்கோடும் கை நிறைய எருக்கமிளாறுகளுமாக கோடாங்கிக்காரன் வந்து சேர்ந்தான்.
பூசை தொடங்கியது ஆர்ப்பாட்டமாய், உடுக்கை எடுத்து அடித்தான் கோடாங்கி.
ஒவ்வொரு அடியும் மனித நரம்புகளைச் சுண்டுவதுபோல் ஒலித்தது. உயர்ந்துகொண்டே வரும் உடுக்கோசை மனசுகளை என்னவோ செய்தது. உடுக்கோடு இசைந்து குரலெடுத்துப் பாடி உலகத் திலுள்ள அத்தனை தேவதைகளையும் தனக்குத் துணைக்கு வரும்படி அழைத்தான்.
கொஞ்சநேரத்தில் அவர்கள் அத்தனை பேரும் அவனுக்கு முன்னால் வந்து நின்றுவிட்டதுபோல அவன் முகம் சொன்னது. அவர்களைப் போற்றி வாழ்த்திப் பாடினான்.
இப்போது உடுக்கின் ஓசை சுதிமாறி ஒலித்தது. வெள்ளையின் தலை சுழன்று சுழன்று கதி ஓசைக்குத் தக்கபடி ஆடியது. ஆடிய வேகத்தில் கூந்தல் அவிழ்ந்து முகத்தை மூடியது.
பாடி அலுத்ததும், ஆடி அலுத்ததும் உடுக்கின் ஓசையை சற்றே நிறுத்தி அன்போடு கேட்டான்: “தாயி, நீ யாரு தாயி ?”
பேயிடமிருந்து பதில் இல்லை. அது ஆடிக்கொண்டுதான் இருந்தது. திரும்பவும் அதேபோல் கேட்டு, “நீ யாருன்னு சொன்னாத்தானே தெரியும்…. பச்சை மண்ணைப் பிடிச்சி இப்பிடி ஆட்டுதயே, தாயி நீ யாருன்னு சொல்லிரு” என்று கேட்டான் கோடாங்கி.
அதுக்கும் அந்தப்பேய் பதில் பேசாமல் ஆடிக்கொண்டே இருந்தது.
“தாயி, ஒனக்கு என்ன வேணும்னாவது வாயத் தொறந்து சொல்லு. சொன்னாத்தானே தெரியும்” என்று கேட்டுவிட்டு, உடுக்கில் மெல் ஓசை எழுப்பிக்கொண்டே பாடினான்:
பட்டுத் துணியணி வேணுமோ – ஒனக்கு
பாங்கான வளவிவக வேணுமோ?
நட்டு நகையெல்லாம் தருவமே – நீ
யாருன்னு சொல்லீரு தாயே…
பெண்டுகளே கேட்டு ஆசைப்படும்படியாக நகைவகைகளின் லாவண்யத்தை வர்ணித்தான்.
அந்தப்பேய்க்கு நகைகள்பேரில் ஆசையில்லை போலிருக்கு. அமைதியாக இருந்தது.
உணவுவகைகள், பலகார பட்சணங்கள், புலவுவகைகளை வர்ணித்தான். அதுக்கும் அசையவில்லை.
பார்த்தவர்களெல்லாம் வருத்தப்பட்டார்கள். ‘இந்தக் கொட்டுக் கெல்லாம் அந்தப்பேய் ஆடாது’ என்கிற சொலவடைதான் ஞாபகத்துக்கு வந்தது.
கோடாங்கி தனது கடேசி ஆயுதமான எருக்கமிளாறை எடுத்தான். பெண்டுகளின் கூட்டம் மிரண்டு விலகியது. ஆங்காரமாய்க் கத்திக் கொண்டே அவளை அடி விளாசினான். அடி பொறுக்கமாட்டாமல் எருக்கமிளாறுகள் சில்லுச்சில்லாய்த் தெறித்து ஓடின.
பகவதியின்மேல் ஆணை வைத்துக் கேட்டான். ஜக்கம்மாபேரில் ஆணை வைத்துக் கேட்டான். கிணுங்கவில்லை பேய்.
அன்றைக்குப் பூசை அத்தோடு முடிந்தது. பெண்டுகள் கலைந்து அவரவர் வீடுகளுக்குப் புறப்பட்டார்கள்.
“என்ன அதிசயமான பேயா இருக்கம்மா; கொஞ்சங்கூட ‘ஏம்’ன்னே கேக்கமாட்டேங்கெ!” என்று மூக்கில் விரல் வைத்துப் பேசிக்கொண்டே போனார்கள்.
மறுபூசை தொடங்குவதற்கு முன்னால்…
அன்று பகலில் கோடாங்கி, வெள்ளையின் அம்மையிடம் வெள்ளையைப்பற்றிய பல விசயங்கள் கேட்டுத் தெரிந்துகொண்டான். கோடாங்கிக்கு மதிய விருந்து பலமாக இருந்தது.
வெள்ளை தலை முழுகிவிட்டு முற்றத்தில் நின்றுகொண்டு தலை முடியைக் கோதி ஆறவிட்டுக்கொண்டிருந்தாள். கூந்தல் இரு தோள்கள் வழிய இறங்கி இடுப்புக்கும் கீழே பரவியிருந்தது. விரித்த கூந்தலுக்கு இடையே தெரிந்த அவளுடைய அழகிய முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான் கோடாங்கி.
இன்றைக்கு ராத்திரி எப்படியாவது அவள் தலையில் கல்யேத்தி விடணும் என்று தீர்மானம் பண்ணிக்கொண்டான்.
‘ஆயிரம் கோழி தின்ற வெருகு’ அவன்.
மடங்காத பேயை எல்லாம் மடக்கி பச்சை மண்கலயத்தில் அடக்கி பூமியின் கீழே தோண்டிப் புதைத்திருக்கிறான். பேய் பிடித்து, அடங்காமல் கூத்தாடிய பெண்கள் பலர் தலையில் கல்சுமந்து கொண்டுபோய் போட்டுவிட்டு அவனோடு திரும்பி வருகிறபோது பேய்க்களை மாறி முகத்தில் சிரிப்பும் நாணமுமாகத் திரும்பியிருக் கிறார்கள்.
“என்னிட்டையா பூச்சி காட்டுதெ. இரு இரு ராத்திரி பாத்துக்கிடுதேம் உன்னே” என்று வெள்ளையைப் பார்த்துக் கறுவிக் கொண்டான்.
நடுராத்திரியில் பூசை தொடங்கியது.
‘உடுக்குச் சத்தம் எப்பக் கேக்கும்?’ என்று காத்துக்கொண்டிருந்த பெண்டுகளின் கூட்டம் மொலுமொலு என்று வந்து கூடிவிட்டது. குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். பக்கத்து வீடுகளில் ஆண்கள் கோடாங்கிக்காரனை நினைத்து முணுமுணுத்தார்கள். பேயின் ஆட்டம் பலமாகத்தானிருந்தது. கடைசியில் கோடாங்கிக் காரனின் இம்சையைத் தாளமுடியாமல் பணிந்து வந்து, தான் யார் என்பதையும் தனது கதை என்ன என்பதையும் ஆடிக்கொண்டே… உடுக்கடி இசைக்கு ஏற்பபாடிக்கொண்டே சொல்லிக்கொண்டு வந்தது.
ஒப்புசொல்லி அழுவதைப் போன்ற குரலில் பாடிச் சொன்ன கதையை பெண்டுகள் ஆர்வத்தோடு கவனித்துக் கேட்டார்கள். முதல் அதிர்ச்சி – அது ஒரு பெண் பேய் இல்லை என்பது. ஒருவர் முகத்தை ஒருவர் வியப்போடு பார்த்துக்கொண்டார்கள்.
முதிலில் அந்தப் பேய் ஒற்றைக்கால் மண்டபத்தின் சீரைப் புகழ்ந்து பாடியது. அதன்பிறகு ஒரு பெண்ணின் அழகை வர்ணித்துப் பாடியது. அந்தப் பெண் எப்படித் தன் மனசைக் கொள்ளைகொண்டாள் என்று று சொன்னது. பிறகு அது குலுங்கி அழ ஆரம்பித்தது. அவள் எப்படித் தன்னை ஏமாற்றி மோசம் செய்தாள் என்று சொன்னது.
சத்தியம் செய்து கொடுத்துவிட்டு இன்னொருவனைப் போய் கலியாணம் செய்துகொண்ட தாங்கமுடியாத அநியாயத்தை அழுது கொண்டே சொன்னது. முந்தானைய இழுத்து மூடி வாய்பொத்திக் கேட்டுக்கொண்டிருந்த பெண்டுகள் கண்ணீர் சிந்தினார்கள். மூச்சு ஒழுகலை முந்தானையில் சத்தமில்லாமல் துடைத்துக்கொண்டு கவனித்தார்கள். குறைந்த ஸ்தாயியில் உடுக்கு ஒலித்துக்கொண்டிருந்தது. பேய் தொடர்ந்தது. வாழ்வு வெறுத்துப்போய் ஒற்றைக்கால் மண்டபத் தின் அருகே நின்ற புளியமரத்தில் ஏறி கழுத்தில் கயிறு போட்டுக் கொண்டு ‘நாண்டு’கொண்டதையும் சொன்னது. பேயாக ஆகி, ஒற்றைக் கால் மண்டபத்தையும் அந்தப் புளியமரத்தையும் சுற்றிச்சுற்றி வாழ்ந்து கொண்டிருந்ததையும், அப்போது இவள் அங்கே தனிமையில் புளியம் பிஞ்சுகளைப் பறித்துத் தின்ன வந்தபோது பிடித்துக்கொண்டேன் என்றது.
“இப்போ அந்த இடத்துலயே கொண்டுபோயி விட்டுறதேம்; போறயா?” என்று கேட்டு எருக்கமிளாறைக் கையில் எடுத்ததும், “போறேம்; போறேம்” என்று ஒப்புக்கொண்டது. பேயின் தலையில் ஒரு தேய்ந்த கனமான அம்மிக்கல்லைத் தூக்கி வைத்து “கிளம்பு” என்றான் கோடாங்கி.
தலையில் அம்மிக்கல்லைப் பிடித்துக்கொண்டு தலைவிரிகோல மாகப் புறப்பட்டது பேய். அந்த கூஇருட்டில் கோடாங்கியும் பேயும் சுடலைக்காட்டிலிருந்த ஒற்றைக்கால் மண்டபம் புளியமரத்தைப் பார்த்துப் போனார்கள். பேயைக் கொண்டுபோய் விடும்போது மற்றவர் யாரும் பின்தொடர்ந்து போவது வழக்கமில்லை என்பதால் அவர்கள் இருவர் மட்டுமே போனார்கள். மோசமான பாதை, பள்ளங்களும் திடீர் மேடுகளுமாக.
அவர்களை அனுப்பிவிட்டு, மந்தையிலும் ஊர்மடத்திலும் வருகைக்காக வீட்டாரும் ஊராரும் காத்துக்கொண்டிருந்தார்கள் தயாராக. வெகுநேரமாகியும் குலவைச் சத்தம் கேட்கவில்லை. விடிந்து கொண்டு வந்தது. சுப்பனாசாரி சொன்னார்:
“என்ன தாட்டோட்டுன்னு தெரியலையே!” என்று சொல்லிவிட்டு, “கூந்தலைப் பிடிச்சு இழுத்து மரத்துல ஒட்ட வைச்சி இரும்புக் கொண்டியை அறைஞ்சிட்டு, கல்லே வீசி எறிஞ்சிட்டுத் திரும்பிப் பாக்காம வரவேண்டியதுதானே” என்றார். நன்றாக விடிந்துவிட்டது.
கிராம முக்கியஸ்தர்களும் கொண்டிக் காவல்காரரும் சுடலைக் காட்டுக்குத் தேடிப்போனார்கள்.
கொஞ்சதூரத்திலேயே தெரிந்தது… அம்மிக்கல் அந்த மரத்தின் கீழே விழுந்து கிடந்தது! உடுக்கும் எருக்கவிளாறும் தனியே உருண்டு அநாதையாகக் கிடந்தது. கோடாங்கிக்காரன் மண்டை உடைந்து, நைந்து, மூளை பிதுங்கி மட்டமல்லாந்து கண்கள் நிலைகுத்தி வாய்பிளந்து கிடந்தான்.
எங்கே வெள்ளை?
காணலை அவளை!
ஒற்றைக்கால் மண்டபப் புளியமரத்தில், அந்த வட்டாரப் பேய்களுக்கெல்லாம் தலைவனாகக் கோடாங்கிப்பேய் இருப்பதாக ஊர் பேசத் தொடங்கியது!
– 14-2-93, ஆனந்த விகடன்.