குரூர ரசனைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2025
பார்வையிட்டோர்: 440 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)\

வெளியில் மழை சன்னமாகத் தூறிக்கொண்டிருந்த போது தான் அந்தச் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டது. 

“தபால் போலை கிடக்கு… போய்ப் பாருங்கோவன்…” அடுப்பில் உலை வைத்துவிட்டு நெருப்புடன் போராடிக் கொண்டிருந்த மீனாட்சி குரல் கொடுத்தாள். 

வெளி விறாந்தையில் போடப்பட்டிருந்த ஈசிச் செயரில் சாய்ந்து படுத்துக்கொண்டு… பக்கத்து வீட்டில் இரவல் வாங்கிய அன்றைய பேப்பர் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்த செல்லையா உபாத்தியாயர் மெதுவாக எழுந்து, ‘பொத்தல்கள்’ பல கொண்ட அந்தப் பழைய குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு படலைக்குப் போனார். மழை பொழிந்து கொட்டாமல் தூறிக் கொண்டிருந்தபடியால் போலும், மழைத்துளி குடையின் 

துவாரங்களுக்கூடாக உபாத்தியாயரின் தலையை நனைக்கவில்லை. 

“யார் கடிதம் போட்டது?” 

உபாத்தியாயர் முற்றத்திற்கு வந்தபோது மீனாட்சி உள்ளிருந்தவாறே புதிதான ஓர் ஆச்சரியத்துடன் கேட்டாள். உபாத்தியாயர் பாடசாலையில் படிப்பித்த காலங்களில் என்றால் அடிக்கடி கடிதங்கள் வரும். பென்சன்’ எடுத்த பின்னர் கடிதங்கள் வருவதும் குறைந்துவிட்டது. அவருக்குப் புத்திர பாக்கியமும். கிடையாது. யார் கடிதம் போடப்போகிறார்கள்? 

மூக்குக் கண்ணாடியை நிமிர்த்தி விட்டுக்கொண்டே கடிதத்தை விறுவிறென்று உடைத்தார் அவர். அவர் கண்களில் திடீரென ஒரு பரவசம் மின்னியது. புதிய விடயந்தான்! 

ஜனரஞ்சக எழுத்தாளர் ஒன்றியத்திலிருந்து அந்தக் கடிதம் வந்திருந்தது. உபாத்தியாயரின் இருபத்தைந்து வருட இலக்கியச் சேவையைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தி ‘இலக்கிய மன்னன்’ என்ற பட்டமும் சூட்டிக் கௌரவிக்க இருக்கிறதாம் ஜனரஞ்சக எழுத்தாளர் ஒன்றியம். விழாவிற்கான தேதியும் குறித்து, விழாவில் பாரியார் சகிதம் தவறாமல் வந்து கலந்து கொள்ளும்படி ஒன்றியத் தலைவர் எழுதியிருந்தார். 

கடிதம் முழுவதையும் படித்தவுடன் முகம் முழுவதும் தாமரையென மலர்ந்துவிட்டது உபாத்தியாயருக்கு! 

வாலிபம் திரும்பிவிட்டதோவெனப் பார்ப்பவர் ஐயுறும்படியான ஒரு துள்ளலுடன் அநாயாசமாக நடந்து கடிதமும் கையுமாக மனைவியின் முன் போய் நின்றார் அவர். 

‘பாத்தியே! நெடுக இருந்து எழுதி எழுதி என்னதான் கிழிக்கிறியள்? ஒரு ஐஞ்சு சதத்துக்கு வருமானம் இருக்கோ எண்டு திட்டுறனியெல்லே… வந்திருக்கு இப்ப…” 

“என்ன வந்திருக்கு? காசோ? எவ்வளவு… ஆர் அனுப்பினது?” என்று அரிசியில் நெல்லுப் பொறுக்கிக் கொண்டிருந்த அலுவலையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்து கேட்டாள் மீனாட்சி. 

“எந்த நேரமும் உனக்குக் காசு காசெண்டு காசுப் பைத்தியம். மனிதனுக்குக் கௌரவந்தான் பெரிசு. புகழ்தான் பெரிசு. எனக்குப் பாராட்டு விழா வைக்கப் போறாங்களாம்… உன்னையும் கூட்டிக்கொண்டு வரச்சொல்லி எழுதியிருக்கு… பாத்தியே உனக்கு வந்த பெருமையை…” உடலை நிமிர்த்தி உசாராகப் பேசினார் உபாத்தியாயர். 

மீனாட்சிக்கும் உள்ளூரப் பெருமைதான். ஆனாலும் கணவருக்கு முன்னால் விட்டுக் கொடுக்காமல், 

“வீட்டிலை எத்தினை வேலையள் காசில்லாமல் முடங்கிக் கிடக்கு… பாராட்டும் கூட்டமும் வைச்சு என்ன பிரயோசனம்…” என்று முனகிக்கொண்டே அரிசியை உலையில் போட்டாள் அவள். 

அன்று மத்தியானம் அவள் பரிமாறிய சோற்றில் விசேடமானதொரு அன்புப் பிரவாகம் கரை புரண்டோடியதை அவர் கவனிக்கத் தவறவில்லை. உள்ளூர மெதுவாகச் சிரித்துக்கொண்டார். அடுத்து வந்த நாட்களில் தனது கணவனுக்கு நடக்க இருக்கும் பாராட்டினைப்பற்றி மிகைப்படுத்தப்பட்ட அலங்காரங்களுடன் ஊரில் உள்ள பெண்களுக்குக் கொட்டி அளந்துவிடவும் மீனாட்சி தவறவில்லை. 

அந்த நாளும் வந்தது. பெட்டியின் அடியில் மடித்து வைத்திருந்த பழைய பெங்களூர்ச் சேலையை எடுத்து, பூச்சி அரித்த பகுதியை உள்ளே விட்டுக் கட்டிக்கொண்டாள் மீனாட்சி. வெறுமை வெளியில் சருகாகப் பறப்பது போன்ற ஒரு உற்சாக உணர்வுடன் புறப்பட்டார் உபாத்தியாயர். முற்றத்தில் நின்று வானத்தை நிமிர்ந்து பார்த்தவர். 

“வானம் மப்பும் மந்தாரமுமாகக் கிடக்கு… மழை வரும்போலை இருக்கு மீனாட்சி…” என்றார். வீட்டிலோ அந்தப் பொத்தல் குடை மட்டுந்தான் இருந்தது. 

“அந்தக் குடையை நாலு பெரிய மனுசருக்கு முன்னாலை என்னெண்டு கொண்டுபோறது… மழை வராது வாருங்கோ…” என்று கூறிக்கொண்டே முன்னால் நடந்தாள் மீனாட்சி. வீட்டுப் படலையைத் தாண்டி, அதற்கொரு தடியும் வைத்துக் கட்டிவிட்டுப் பின்னால் தொடர்ந்தார் அவர். 

“தங்கமுத்து அக்கா! வீட்டை ஒருக்கா பார்த்துக் கொள்ளுங்கோ… நாங்கள் போட்டு வாறம்…” என்று மீனாட்சி வேலிக்கு மேலே எட்டிக் குரல் கொடுத்தபோது, அக்கம் பக்கத்துப் பெண்களெல்லாம் படலைக்கு வந்து உபாத்தியாயரும் மீனாட்சியும் போவதைப் பார்த்துக்கொண்டு நின்றனர். நெஞ்செல்லாம் நிறைந்தது போன்ற ஒரு மகோன்னத உணர்வுடன் பஸ்ஸில் ஏறி அந்தத் தம்பதிகள் விழா மண்டபத்திற்கு வந்தபோது மண்டபத்தில் அதிகம் கூட்டமில்லை. ஏதோ தெய்வ புண்ணியமாக அவர்கள் வந்துசேரும்வரை மழையும் ‘பெய்யவில்லை. மண்டபத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில தலைகள் மாத்திரமே தென்பட்டன. மேடைக்குத் தேவையான கதிரைகளை அடுக்குவதில் அப்போதுதான் சில இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். ஓர் இளைஞர் வந்து… அவர் அந்த ஒன்றியத்தின் செயலாளராக இருக்கலாம்… உபாத்தியாயரையும் மனைவியையும் அழைத்துச் சென்று ஓர் இடத்தில் உட்கார வைத்தார். 

விழா தொடங்குவதாக இருந்த நேரத்திற்கு ஓர் அரை மணித்தியாலம் கழித்துப் பேச்சாளர்கள் ஒவ்வொருவராய் வந்திறங்கினர். விழா வைப்பதற்கென ஒன்றியத்துக்கு நன்கொடை கொடுத்து உதவிய வர்த்தகப் பெருமக்களும் பேச்சாளர்களாக வந்திருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பேராசிரியர்களுமாய் விழா தொடங்கியபோது மேடை நிரம்பி வழிந்தது. ஆனாலும் பார்வையாளர் மண்டபத்தில் கூட்டம் மிகக் குறைவு என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஒன்றியத் தலைவர் உபாத்தியாயருக்கு மாலை அணிவிக்க, ஒரு சிறுமி அவர் மனைவிக்குப் பூச்செண்டு வழங்கச் சம்பிரதாய பூர்வமாகத் தேவாரத்துடன் கூட்டம் ஆரம்பமானது. 

பேச்சாளர்கள் ஒவ்வொருவராய் எழுந்து நின்றனர். அவர் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்றார் ஒருவர். அவர் விரசம் இன்றி எழுதுவதே ஓர் அழகென்றார் இன்னொருவர். அவர் கதைகளைப் படிப்பது ஒரு சுகானுபவம் என்றார் வேறொருவர். எழுந்து பேசிய எல்லாருமே உபாத்தியாயரின் இலக்கிய சேவையை ஆனையடா குதிரையடா என்று வானளாவப் புகழ்ந்தார்கள். இப்புகழுரைகளில் ஒரு கணம் லயித்து உபாத்தியாயர் மயங்கித்தான் போய்விட்டார். ஒரு சாமான்ய நிலையில் இருந்து எழுதியவரை இந்தப் பெரிய பெரியவர்கள் எல்லாம் இப்படிப் புகழ்ந்தால்… மீனாட்சிக்கு உடல் ஒருமுறை சிலிர்த்து ஓய்ந்தது. சில பேச்சாளர்களின் பாராட்டுக்கள் வெறும் அபத்தமாக உபாத்தியாயருக்கே தோன்றிய போதிலும்கூட, எல்லோரது பேச்சுக்களும் முடியும்வரை அவர் மௌனமாகவே உட்கார்ந்திருந்தார். ஊரின் முக்கிய புள்ளியான ஒரு வர்த்தகர் அவருக்குப் பொன்னாடை போர்த்தி ‘இலக்கிய மன்னன்’ என்ற பட்டத்தையும் அளித்தார். 

இறுதியாக அவரைப் பேசச் சொல்லி அழைத்தபோது, தனது. தீட்சணியமான பார்வையை ஒருமுறை எல்லாப் பேச்சாளர்கள் மீதும் லாவகமாகத் திருப்பிவிட்டு எழுந்த உபாத்தியாயர் வெகு அடக்கத்துடன் இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டார். மேடையை விட்டு இறங்கும் போது தனது கணவருக்கு ஒரு தனிக் காம்பீர்யம் வந்திருப்பதை மீனாட்சி அவதானித்தாள். 

இரவு ஒன்பது மணிக்கு மேல் விழா முடிந்த பின்னர், விழா மண்டபத்திற்கு முன்புறும் வந்து பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறார்கள் உபாத்தியாயரும் மனைவியும். திடீரென்று வானம் கறுத்து மேகம் பிளந்துவிட்டதுபோல் மழை கொட்டுகொட்டென்று கொட்டுகிறது. பேச்சாளப் பேராசிரியர்களதும் வர்த்தகப் பிரமுகர்களினதும் கார்கள் ஒவ்வொன்றாக உபாத்தியாயரைக் கடந்து வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. தங்களால் புகழப்பட்ட ஒரு பெரியவர் அப்படி நனைவதைப் பார்த்து ரசிப்பதும் ஒருவித ரசனைதானோ? 

உபாத்தியாயரும் மீனாட்சியும் கிளர்ந்தெழும் உள்ளக் குமுறலைச் சுதாரித்துக் கொண்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். 

பெரியவர்கள் பேசிய பேச்சுக்களும் புகழுரைகளும் பேசியவர் பெயருடன் அடுத்த நாளையப் பத்திரிகைகளில் வெளிவரும் ஆனால்… மழையில் நனைந்து கொண்டிருக்கும் உபாத்தியாயரைக் காரில் ஏற்றிச் சென்றது பற்றியோ, அல்லது ஏற்றிச் செல்லாதது பற்றியோ பத்திரிகைகளில் வரப்போகிறதா என்ன? வேறு வேலை இல்லை… போங்கள்! 

– 1980 ஆனி மாதச் சுடரில் பரிசுக் கதையாகப் பிரசுரமானது.

– மனித சொரூபங்கள் (பன்னிரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1982, சிவன் கல்வி நிலைய வெளியீடு, தெல்லிப்பழை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *