காய்க்காத பூக்கள்
அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் 5
மணிகண்டன் தனியாக வந்து கவிதாவிற்கு ஃபோன் செய்கிறான்.
“ஹலோ மேம்”
“தனியா இருக்கியா மணி?”
“யெஸ் மேம்”
“எவிடென்ஸ் கலெக்ட் பண்றது மட்டும் இப்ப உன் வேலை இல்ல. கதிரவன் ஆக்டிவிட்டீஸ் அப்சர்வ் பண்ணு. கண்டிப்பா அவர் எதையோ மறைக்கிறாரு”
“கதிர் சார் ரொம்ப நல்லவராச்சே மேம்”
“நல்லவங்க தப்பு பண்ணாம வேணா இருக்கலாம். ஆனா சட்டத்த மீற மாட்டாங்கனு சொல்ல முடியாது. ஏன்னா சட்டம் நல்லவங்களுக்கு மட்டுமே சாதகமா இல்ல. நம்ம வேலைல சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட
நபர் யாரும் இல்ல. அப்புறம் கதிரவனுக்கு தெரியாம அவரோட ஃபோன் கால் டீடெயில்ஸ் வாங்கி வெச்சிக்க. ஃபோன வெச்சிடுறேன்”
“யெஸ் மேம்”
மணிகண்டன் ஸ்டேசன் வாசலுக்கு வந்தான். கதிரவனுடன் ஃபாரன்சிக் லேபிற்கு கிளம்பினான். உள்ளே கவிதா ஜீவாவுக்கு ஃபோன் செய்தார்.
“ஹலோ ஜீவா சார்”
“சொல்லுங்க மேடம்”
“அந்த நோட்ல இருக்குற கவிதைய எழுதினது ரேவதி தான்னு சொல்றாங்க. இருந்தாலும் கன்ஃபார்ம் பண்ண ரேவதி ஹஸ்பண்ட்ட அங்க அனுப்பி வெச்சிருக்கேன்”
“ஓகே மேடம். அவர் கன்ஃபார்ம் பண்ணிட்டா நான் ஹேண்ட்ரைட்டிங் எக்ஸ்பர்ட்ஸ் கிட்ட அனுப்பி வைக்குறேன். ரிப்போர்ட் வந்ததும் இன்ஃபார்ம் பண்றேன்”
“ஓகே. தேங்க் யூ”
அன்றிரவு 9½ மணிக்கு கவிதா அவரது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது மணிகண்டன் அவருக்கு ஃபோன் செய்தான். கவிதா டிவியை ஆஃப் செய்துவிட்டு ஃபோன் அட்டன் செய்தார்.
“சொல்லு மணி. போன விஷயம் என்னாச்சு?”
“CCTV ஃபுட்டேஜ் எல்லாமே வாங்கியாச்சு மேடம். சஸ்பெக்ட்ஸ் சிம் மூவ் ஆன லொகேஷன்ஸ் நாளைக்கு தான் கிடைக்கும். ஃபோன் கால் டீடெயில்ஸ் மட்டும் இப்ப வாங்கி இருக்கு. நாளைக்கு லொகேஷன்ஸும் கிடைச்சு செக் பண்ணிட்டா சஸ்பெக்ட்ஸ ஃபர்தரா விசாரிக்கலாம். அவங்கள நாளான்னைக்கு வர சொல்லி இருக்கு மேம்”
“இதெல்லாம் கதிர் ஸ்டேசன்லயே சொல்லிட்டாரு. நான் கேட்கிறது கதிர் அப்ரோச் பத்தி. அவர் யாரையாவது காப்பாத்த முயற்சி பண்ற மாதிரி தெரியுதா?”
“க்ளியரா சொல்ல முடியல மேம். ஆனா ஒரேயொரு நபர் கிட்ட மட்டும் கரிசனம் காட்டுற மாதிரி இருக்கு. அதுமட்டுமில்லாம அவருக்கு தெரியாம எடுத்த அவரோட கால் லிஸ்ட் படி அந்த நபர் கூட தான் அதிகமா ஃபோன்ல பேசி இருக்காரு”
“யாரது?”
“ராஜேஷ்”
“வேற எதாவது க்ளூஸ்?”
“இல்ல மேம். இப்போதைக்கு இவ்வளவு தான்”
“ஓகே. மார்னிங் பேசிக்கலாம். குட் நைட்”
“குட் நைட் மேம்”
மார்ச் 22 வெள்ளிக்கிழமை. இன்ஸ்பெக்டர் கவிதா கதிரவனுடன் CCTV ஃபுட்டேஜ்களை பார்த்து கொண்டு இருந்தார். கதிரவன் CCTVஐ கடந்து சொல்பவர்கள் விவரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.
“நீங்க சொல்றத பார்த்தா திங்கட்கிழமை உங்க ஏரியாவுக்கு புதுசா வந்து ராத்திரி தங்குனது மூணு பேர் கொண்ட ஒரு ஃபேமிலி மட்டும் தான். அவங்களும் அடுத்த நாள் உங்க நெய்பர் வீட்டுல நடக்கப் போற ஃபங்க்ஷனுக்கு வந்தவங்க. அப்படித்தான”
“ஆமா மேடம். மத்த எல்லாருமே எங்க ஏரியால இருக்க ஆளுங்க தான்”
“சஸ்பெக்ட்ஸ் எல்லாம் ஓரே இடத்துல. இந்த CCTV ஃபுட்டேஜ்’ல இருந்து தெரியுற ஓரே விஷயம். கொலைகாரன் திங்கட்கிழமை ஈவ்னிங்ல இருந்து செவ்வாய்க்கிழமை காலைல வரைக்கும் அந்த ஏரியாவ விட்டு வெளியவே போகல. அங்கேயே இருந்து சத்தமில்லாம கூலா கொலை பண்ணி இருக்கான். அதுவும் பில்ஸ ரேவதி தானே சாப்பிட்டு இறந்து போய் இருக்காங்க. அத செய்ய வைக்க அதாவது ரேவதிக்கு சாகுறத தவிர வேற எதுவும் வழியில்லனு யோசிக்க வைக்க ஏதோ ஒண்ணு அவன் கிட்ட இருக்கு. அதுக்கு ரேவதியோட மறுபக்கம் தெரியணும். எல்லாத்துக்கும் மேல கொலைகாரன் ரேவதி மரணம் தற்கொலையா தான் இருக்கணும்னு மெனக்கெட்டு இருக்கான். அது ஏன்?”
“கொலையா தெரியுறத விட தற்கொலையா தெரியுறது அவங்க மேல சந்தேகம் வராதுன்னு பண்ணி இருக்கலாம் மேடம்”
“இப்படி யோசிங்களேன். ரேவதியோட மரணம் தான் முக்கியம்’னா ஒரு ஃபேக் ஆக்சிடென்ட் போதாது. அதுக்கு இவ்ளோ கஷ்டப்படணுமா என்ன. ம்ஹூம். எதோ ஒண்ண மிஸ் பண்றோம்”
கதிரவன் ஒண்ணும் புரியாமல் தாடைய தடவிக் கொண்டு நிற்கிறார்.
“கதிர் சார் ரேவதி பத்தி நீங்க சொன்னத தாண்டி எதாவது மறதில சொல்லாம இருக்கீங்களா?”
“மேடம் நீங்க என்னதான் தேடுனாலும் ரேவதிக்கு தவறான மறுபக்கம்’னு எதுவும் கிடைக்காது. எனக்கு தெரிஞ்சு நான் சொல்லாம விட்டது ஒரே விஷயம் தான் மேடம். ஆனா அது இந்த கேஸுக்கு உதவுமானு தெரியல”
“விஷயத்த சொல்லுங்க. உதவுமா இல்லையான்னு அப்புறம் பார்க்கலாம்”
“ரேவதிக்கு மொழிப்பற்று அதிகம் மேடம். தமிழ்மொழி மேல அவ்வளவு ஈடுபாடு. எந்த அளவுக்குன்னா நல்லா மார்க் எடுத்து இருந்தும் படிக்க வைக்க அவங்க வீட்டுல நல்ல வசதி இருந்தும் சயின்ஸ் படிக்காம விரும்பி தமிழ் இலக்கியம் படிச்சு இருக்காங்க. நல்லா கவிதை எழுதுவாங்க. ஆனா இதுல கேஸ லிங்க் பண்ண எதுவுமே இல்லயே”
அப்பொழுது கவிதாவிற்கு ஜீவா’விடம் இருந்து ஃபோன் வருகிறது.
“ஹலோ மேடம்”
“சொல்லுங்க ஜீவா சார்”
“நீங்க கொஞ்சம் லேப் வரைக்கும் வர முடியுமா?”
“ஹ்ம்ம். ஓகே சார். வர்றேன்”
கவிதா ஃபோனை கட் செய்து விட்டு கதிரவனிடம்
“இன்னொரு முறை இந்த ஃபுட்டேஜ் பாருங்க. எதாவது மிஸ் பண்ணி இருந்தா நோட் பண்ணி வைங்க. நான் லேப் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்”
“சரிங்க மேடம்”
கவிதா ஸ்டேசனில் இருந்து லேபுக்கு விரைகிறார்.
“வாங்க மேடம்”
“ஜீவா சார் சொல்லுங்க. கையெழுத்து மேட்ச் பண்ணி பார்த்தாச்சா?”
“ஹ்ம்ம் பார்த்தாச்சு மேடம். லெட்டர்ல இருக்க கையெழுத்து ரேவதியோட கையெழுத்து இல்ல. ஆனா ஆல்மோஸ்ட் அவங்க கையெழுத்து மாதிரி தான் இருக்கு. நீங்க தேடுற கொலைகாரனுக்கு ஒருத்தர் கையெழுத்த பார்தத்தும் அதே மாதிரி எழுதுற திறமை இருக்கு”
“பார்த்த உடனே எழுதி இருப்பாங்கன்னு எப்படி சொல்றீங்க?”
“ஏன்னா பதட்டத்துல எழுதி இருக்காங்க. ஆனாலும் நம்ம ஆளுங்க. என்ன தான் பார்த்த உடனே எழுதுற திறமை இருந்தாலும் சில தனித்துவமான ரைட்டிங் உடனடியா வராது. ரேவதியோட ரைட்டிங் மொதட்ல சாதாரண ஆட்களுக்கு இல்லாத ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு”
“அது என்ன வித்தியாசம்?”
“பொதுவா ‘ழ’ எழுதும் போது ம எழுதி அதுக்கு கீழ் சின்ன கோடு இழுத்து ‘>’ போட்டு இல்ல சின்னதா சுழிச்சு U ரிவர்ஸ்ல போட்ட மாதிரி முடிப்போம். ஆனா ரேவதி எழுதும் போது ம எழுதி அதுக்கு கீழ U ரிவர்ஸ்ல போட்ட மாதிரி எழுதி அந்த > பதிலா – போடுவாங்க. க்ரைம் சீன்ல கிடைச்ச லெட்டர்ல ஒரு ‘ழ’ கூட அப்படி இல்ல”
“கொலைகாரனுக்கு கையெழுத்து ஃபோர்ஜரி பண்ண நல்லா தெரிஞ்சு இருக்கு”
“இதுபோக க்ராஃபாலஜி எக்பர்ட்ஸ் இந்த 2 லெட்டரயும் அனலைஸ் பண்ணி சம்மந்தப்பட்ட நபர்களோட குணாதிசயங்கள கண்டுபிடிச்சு இருக்காங்க. நீங்க தேடுற கொலைகாரன் தன்னுடைய நோக்கம் நிறைவேற எந்த எல்லைக்கும் போவான். அப்புறம் ரேவதி வெளிப்படையான ஆள். ரொம்ப தைரியமானவங்க”
“வாட்? ரேவதி தைரியமான வெளிப்படையான நபர்னா எத வெச்சு மிரட்டி பில்ஸ் எடுத்துக்க வெச்சு இருப்பாங்க?”
“அத நீங்க தான் கண்டுபிடிக்கணும். அப்புறம் க்ராஃப்லாஜி வெறும் க்ளூ தான். எவிடன்ஸ் கிடையாது. உதாரணத்துக்கு இந்த ரெண்டையும் ரேவதியே எழுதி இருக்கலாம் வெவ்வேறு மனநிலையில. கையெழுத்து ஒரே ஆளோடது இல்லங்கிறது மட்டும் தான் ரிப்போர்ட்ல வரும்”
“இது வேறயா. சரி சார் ரிப்போர்ட் குடுங்க”
கவிதா ரிப்போர்ட்டை வாங்கி கொண்டு லேபில் இருந்து வெளியே வந்தார். அப்போது மணிகண்டன் அவருக்கு ஃபோன் செய்தான்.
“சொல்லு மணி”
“சிம் லொகேஷன்ஸ் கிடைச்சிருச்சு மேடம்”
“என்ன பெரிய சிம் லொகேஷன். அதான் CCTV ஃபுட்டேஜ்லயே தெரிஞ்சிடுச்சே. ராஜேஷ் தவிர எல்லா சஸ்பெக்ட்ஸும் அதே ஏரியால தான் இருந்து இருக்காங்க”
“ஆனா CCTV ஃபுட்டேஜ்ல தெரியாத ஒரு விஷயம் சிம் லெகேஷன்ல கிடைச்சு இருக்கு மேம்”
“என்ன?”
“ராஜேஷ் சிம் சேலம் சிட்டிக்குள்ள தான் இருந்து இருக்கு”
– தொடரும்….