காணாமல் போன வைர மாலை
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 3,599
இன்ஸ்பெக்டர் ரவி, கோடீஸ்வரர் திரு.ராகவனின் ஆடம்பர பங்களாவிற்கு விரைந்தார்.
ராகவனின் மனைவியின் விலைமதிப்பற்ற வைர நெக்லஸ் அவரது லாக்கரிலிருந்து திருடப்பட்டிருந்தது. கதவுகள், ஜன்னல்கள் என அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. இது ஒரு ‘பூட்டிய அறை மர்மம்’.
சமையல்காரன், தோட்டக்காரன், உதவியாளர் என அனைவரும் ஒரே இடத்தில் வரவழைக்கப்பட்டனர். யாரும் உள்ளே நுழையவில்லை என்று அவர்கள் சத்தியம் செய்தனர்.
ரவி கூர்மையாக லாக்கரை ஆய்வு செய்தார். அதை உடைக்கவில்லை, சாவியைப் பயன்படுத்தித் திறந்திருக்கிறார்கள். ஆனால், லாக்கரின் சாவி ராகவனின் கோட் பாக்கெட்டில் பத்திரமாக இருந்தது.
“யாராவது லாக்கர் சாவியைத் தொட்டீர்களா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். அனைவரும் மறுத்தனர்.
இன்ஸ்பெக்டர் ரவி யோசிக்கத் தொடங்கினார். லாக்கர் சாவி இல்லாமல் திறக்கப்பட்டிருக்க முடியாது. ராகவனின் கோட்டைக் கவனித்தபோது, அதன் பாக்கெட்டில் ஒரு காய்ந்து போன துளசி இலை ஒட்டியிருந்தது.
சமையல்காரனைக் கூப்பிட்டு, “ராகவன் ஐயாவுக்குத் துளசி டீ போடும் பழக்கம் உண்டா?” என்று ரவி கேட்டார். சமையல்காரன் “ஆமாம்” என்றான்.
“திருடன் வேறு யாருமல்ல, நீதான்” என்று இன்ஸ்பெக்டர் உறுதியோடு கூறினார்.
சமையக்காரன் திருட்டு முழி முழித்தான்.
“நீ டீ போட துளசி இலை பறித்து வந்த போது, ராகவனின் கோட் பாக்கெட்டில் சாவி இருந்ததை பார்த்துள்ளாய். உடனே அதை கையோடு ராகவனின் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து, போலியான சாவி செய்துவிட்டு, மீண்டும் அதை அந்த பாக்கெட்டிலேயே வைத்துள்ளாய். சந்தர்ப்பம் கிடைத்த போது லாக்கரை திறந்து திருடிவிட்டாய். அப்படி தானே” என அதட்டினார்.
சமையல்காரன் அதிர்ச்சியில் உறைந்துபோனான். அவனது தகரப் பெட்டியில் இருந்து வைர மாலையும், போலியாக உருவாக்கப்பட்ட மற்றொரு சாவியும் இருந்தது கண்டறியப்பட்டது.
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
