கலக்கம்





(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பத்மாவின் குறும்பை என்னவென்பது? அப்படிச் செய்யவில்லை என்றால் பத்தியப்படாது அவளுக்கு. பால் நிலவில் தோய்ந்த முகம். திடுதிப்பென்று மலரும், சுருங் கும். அவள் என்ன மலரா…?
மலர் மணத்தைப் பரப்பித் தன்னை அறிமுகப்படுத்து கிறது. அவள் குறும்பு மலரின் மணமா…? கலகலப்பும் வெண் சிரிப்புமாக துள்ளிக் குதிக்கும் பெண்மலர். பிடிக் காத ஒன்றைக் கூறிவிட்டு முகத்தைப் பார்க்கும்பொழுது நயனங்கள் பயமுறுத்தும்; அதரங்கள் அசையும்; சுழியில் நீர் சுழல்வதுபோல் அப்படியும் இப்படியும் சுழலும். பல் நுனி பதித்து பவள அதரங்களை மறைக்கும். கோபம் எனச் சொல்லாமல் சொல்வது இப்படித்தான். அதை மெய்ப்பிக்கும் செயல்கள்……
மணம் மட்டுந்தான் மலருக்குரிய சிறப்பா…?
இல்லை. நிறமுள்ள மலர்களும் வண்டுகளைக் கவரத் தானே செய்கின்றன. மணமும் நிறமும் மலரின் தன்மை கள். தன்மைகளில் மென்மை மாறும்போது மலர்கள் சுயத்துவத்தை இழக்கின்றன.
பத்மாவும் மணமுள்ள மலர். கூடப் பிறந்தால்தான் தங்கையா…? உடலில் ஓடும் இரத்தம் இருவரிடத்தில் ஒத் திருந்தால் அதுதான் வழிவழியாக வந்த உறவுமுறை..
தங்கை என்பதை மெய்ப்பிக்கின்றன. அதன் வலிமை போல்.. கணேசனுக்கும் அவள் தங்கை.
“பத்மா, பேனை எடுத்திருந்தால் கொடு; விளையாட்டை விட்டிட்டுத்தா…”
“கதவைத் திறந்துவிட்டால்தானே…”
எழுதத் துவங்குமுன் கதவைப் பூட்டி வைத்து விடு வது வழக்கம். கொழுக்கியை எடுக்கிறான்.
சந்தோஷப் பறவையாகச் சிறகடித்து பத்மா உள்ளே வந்து பேனையைக் கொடுத்துவிட்டு நின்றாள்.
“சரி…சரி… வெளியே போவன்…”
“இல்லை நான் போக மாட்டன். நீங்கள் எழுதுவதை எனக்குக் காட்டுவதில்லை. நான் வாசிக்காமல் போக மாட்டன்…”
“நிற்பதானால் நில்; எனக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது…”
சரி என்பதுபோல் தலையை ஆட்டினாள். ஆனால் உள் ளத்தில் குள்ள நினைவுகள் குமிழியிடுகின்றன.
இவருக்கு இடையூறு செய்யவேண்டும்… கண்டறி யாத எழுத்து. எப்ப பார்த்தாலும் பேனைக்கும் மைக்கும் காகிதத்துக்கும் நட்டம், இதில் என்ன பிரயோசனம்? பெரியம்மா என்ன பாடுபட்டுப் படிப்பிச்சாள். அவளைப் பற்றிக் கொஞ்சமென்றாலும் இவருக்குக் கவலையில்லை.
வேறே ஆரேன் உதவி கிதவி இருக்கா? எல்லாம் இவரை நம்பித்தான் கடன்பட்டு கூலிக்கு வேலை செய்து குப்பை சுமக்குது. கண்டபடி அடிச்சுக் குடுத்து தேகம் தடியாப் போச்சு… இதுவரை என்ன சுகத்தைக் கண்டாள்.. எல்லாரும் ஆடம்பரமாக அந்த இந்தச் சீலையை உடுக்கினம். அதுக்கு இப்படி அனுபவிக்க வேண்டுமென்று தலையில் எழிதிவைச்சிருக்கா…. இவற்றை பேனையைப் பறிக்க வேண்டும். கதை எழுதுகிறதையும்
பார்ப்பம்.
அவன் எழுதுவதைப் பார்த்து வாசிப்பதும் சிரிப்பதும்..
அந்தச் சிரிப்பின் நடுவில் குறும்பு குலவுகிறது.
அதோ அவன் தலையில் குட்டிவிட்டு சற்று விலகி ஓடி விடுகிறாள்.
கணேசன் தலையைக் கையால் தடவிவிட்டுக் கொள் கிறான். கற்பனை உணர்ச்சித் தட்டில் நிறையும்போது அதை எழுத்தில் வடித்துவிட வேண்டுமென்ற தவிப்பு. அவனுக்கு… இறக்கை கட்டி மேலே.. மேலே மிதக்கிறான்..
மாலைப்பொழுது மல்லிகை கட்டவிழ்த்துச் சிரிக்கிறது. பசிய இலைகள் பனிபட்டு சிலிர்த்து நிற்கின்றன. தென்றலின் வருடல் குலவுகிறது. இதயத்தில் இதம் அந்தத் தொடரில் எழும் ஓசை நரம்பு திடீரென அறுகிறது.
ஏன்?
பத்மா பேனையை இழுக்கிறாள். கணேசன் கையை முன்னுக்கிழுக்கிறான்… பேனை இருவர் பிடியையும் விட்டு நழுவி சுவருடன் மோதி மூடி ஒரு புறமும் பேன மறுபுற மும் சிதறிவிழுகிறது.
பேனையின் முனை கிழிந்து வளைந்து கோரமாகக் காட்சியளிக்கிறது. பத்மாவின் கண்களில் பரிதாபமான பார்வை…
முன்பிருந்த துடிப்பு அதிலில்லை. குரல் தாழ்ந்த சுரத்தில் எழுந்து தேய்கிறது…
“என்னண்ணா பேனை கிழிந்துவிட்டதா… என்னை மன்னித்துவிடு…” முகத்தில் வழியும் அசடு துலாம்பாரமாகத் தான் செய்த தவறை உணர்த்துவதுபோல் இருந்தது.
அவன் ஒன்றுமே சொல்லவில்லை. மெளனமாகப் பேனாவை எடுத்துப் பார்க்கிறான்… திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். எழுத நினைத்த விடயம் தணியாமல் மலை போல எழுந்து அலைபோல மிதந்து தாழ்கிறது.
எண்ணத் தணல் புகைகிறது.
உள்ளத்தில் ஒளிருவதை மறைக்கும் சக்தி அவனுக் கில்லை. அத்தனையும் அடுக்கடுக்காக வாழை மடல் பெயர்வதுபோல் பெயர்ந்துவிடுகிறது. மனதைக் குடை யும் அந்த நிகழ்ச்சி… எழுத்துருவம் பெற்றுவிடத் துடிக் கிறது. படபடக்கும் இதயத்தில் எழும் விகார எண்ணங் கள்… உணர்வுக்கு… அதன் கிளர்ச்சிக்குத் தீனி… விரிக்க விரியும்… பச்சையான இச்சைதான். மனிதனுடன் ஒன்றிவிட்ட அந்த உணர்வுக்கு உறக்கமில்லையே. உயிர் ஊட்டி உள்ளத்தில் நடமாடுகிறது.
உணர்ச்சிக் கிளறல் கட்டவிழ்ந்து சிரிக்கிறது. நினைக்க நினைக்கத் தூண்டியது நினைவு. அதன் அலைகள் மன இலைப் பரப்பைப் பங்கு பங்காகச் சிதற வைக்கிறது. வெள்ளம் கட்டுமீறினால்… விளைவு… கலக்கமா…?
கணேசன் கலங்குகிறான். கவலையில் மிதக்கிறான். இதயம் சுடுகிறது. கலங்குவதில் நின்று கட்டுப்பட முடியவில்லை… இது வரை இப்படியானதில்லை. இதுமுதல் வாழ்க்கைப் பள்ளியில் முதல் படி ஏற முன்பே சறுக்கி விழுந்துவிட்டான்…… அவனைப் பொறுத்தவரை அதில் தப்பில்லை.
அடுத்தவீட்டுக் கனகம் சின்னம்மாவிடம் கூறியவை:
“என்ன இவனும் ஒரு பிள்ளையா… மற்றவர்களைப் போல் நாலுசதம் தேடுவமெண்டில்லை. அவருக்கென்ன என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகலாம் பெண்… தாயில்லாத அந்தப் பிள்ளை களை வழிப்படுத்தவேண் டியது என் கடமையல்லவா… இப்படிச் செய்யும் என்று நான் நினைக்கவில்லை… படிக்கிறபொழுதிலுமில்லை… நாட கம் நடிக்கிறபொழுதுமில்லை. இப்பத்தான் இவை வந்திருக்கினம்…”
கனகம் தனக்கே உரித்தான புதிய போக்கில் கூறுவ திலும் பிழையில்லைத்தான். அவள் இக்காலத்துப் புற நடையான மனுசி… கல்யாணத்துக்குப் பின்தான் காதல் என்ற கொள்கை.
இளமையில் காதல் ஒரு ஆசையா? அழகு அதற் கொரு விருந்து… உணர்ச்சி இருக்கவே இருக்கத்தான் செய்கிறது; அதற்காக கட்டுமீறுவதா? எதுவும் கட்டுப் பட்டுத்தான் ஆகவேண்டும்… கணேசனுக்கு அவை கட்டுப்படுவதாக இல்லையே!
கண்முன்னே காணும் கருமணிகளில் ஒளியாகி நிற் கும் ஒரு மலர் இதழ் விரித்து நீரில் நிற்கும் தாமரையாகி மலர்ந்து நிற்கிறது. அதன் மெல்லிய பட்டு இதழ் துடிக் கிறது. மேலே தேன் சொட்டு தடவி விடப்பட்டு மின்னு கிறது. அந்த மலர்… அவள்தான் பவானி… மென்மை யில் தோய்ந்திருக்கும் உடலின் வழுவழுப்பான இடையில் விழுதுகள் பரவிப்படர்ந்து தாவி மகிழ்கின்றன. கெண்டை மீனன்ன நயனங்களின் அலைப்பு… வளைந்த புருவம்… இளமைக் களை… முறுவல் மென்னகை… இவை மறக்க முடியாத சின்னங்கள்.
அவளைக் கண்டதும் ஒருவிருப்பம்… அழகின் விரிப் பில் தனி மயக்கம். காதல் மலராக நினைப்பதில் ஒரு திருப்தி… எப்பொழுதும் எழும் ராகத்தின் ஒரு நிலை கிறுக்கம்…
கண்ணுடன் கண் நோக்கினான். அவளும் நோக்கி னாள். காலம் கடந்தது. அரைமணி வரை அடித்துவைத்த சிலையானாள். கண்களில் செம்மை படர்ந்தது அதரங்கள் துடித்தன… அதைவிட வாயால் என்னபேச்சு வேண்டி யிருக்கு… எத்தனை தடவை அவள் வரவை பார்த்து நின் றான். அவள் நின்ற இடத்தில் நின்றுகொண்டிருந் தாள். ஒரு அடிகூட நகரவில்லை… கேற்றில் கையைத் தொங்கப் போட்டு உடம்பை அப்படியும் இப்படியும் அசைத்தாள்…உணர்வைக் கிளறிவிட்ட அவள் இன்று எரிமலையாகிக் குமுறுவதற்குக் காரணம்….?
மேகத்தின் வெண்முகில்கள் அலைஅலையாக பஞ்சு மலையாக அசைந்து வருகின்றன. வெண்முகில்கள் என்றும் வெண்மையாக இருந்துவிட முடிகிறதா? இல்லையே. இரவில் இருள் அடையத்தானே வேண்டும். அதோ வெண் முகில்கள் கறுத்து விட்டன. காற்றின் வீச்சில் ஏன் இந்த வேகம்… புயற்காற்று சுழன்று ”சுரீர் சுரீர்’ என அடிக்கிறது. முகில்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி உறவாடுகின்றன. இல்லை முத்தி மோதுகின்றன. அதைத் தொடர்ந்து ஒரு கம்பிச்சுடர் கண்ணிமைத்து மறைகிறது. வேதனை கண்ணீராகிக் கரைகிறது. வலி தாங்காது ஓலமிடுகின்றன… முகில்கள் நைந்து நொந்து கலங்குகின்றன… கற்றைகள் நிலத்தில் கால்களை ஊன்றுகின்றன. தென்னை மரங்கள் தமது உடலை வளைத்து வேப்பமர முகப்பில் முத்தி ரகசியம் சொல்லும் பாவனையில் உரசி நிமிர்கின்றன. சில மரங்கள் இடை ஒடிந்து புவி யில் விழுந்து அழுகின்றன. மாம் பிஞ்சுகள் மரத்தை விட்டு நிலைகலங்கி மண்மீது விழுந்து சிதறுகின்றன..
கனகம் கொப்பியை விரிக்கிறாள். அதற்குள் இருந்த கடிதம் கீழே விழுந்து சிரிக்கிறது. பரபரவெனத் திறந்து வாசிக்கிறாள், காதல் கடிதம்…!
“என்ன பவானி, உனக்கொரு கடிதம் வந்திருக்கு வாசித்துப்பார். இப்படியெல்லாம் நடக்குமென்று எதிர் பார்க்கவில்லை… சே… சே… உலகம் கெட்டுப்போச்சு. அவன் உனக்கு கடிதம் எழுதும் அளவுக்கு உன்மீது குற் றம் இருக்கிறது….நீ கேற்றில் போய் நிற்பதை இப் பொழுதுதான் புரிந்துகொண்டேன். இது முதல் தடவை…. இனிமேலும் இப்படி வந்தா அவரிட்டைக் காட்டிப் போடுவன். அவர் குணம்தான் உனக்குத் தெரியுமே…”
“நான் ஒரு பிழையுஞ் செய்யவில்லை”
“என்னவோ எனிமேல் தெருப்பக்கம் போறதைக் குறைச்சுக்கொள். அவ்வளவுதான். வயசு வந்த பிள் ளைகள் படலைஅடிக்குப் போகப்படாது. நம்மடை ஊரிலை எண்டா பக்குவப்பட்டதுக்கப்புறம் படிக்கக்கூட போக விடமாட்டாங்க. மற்றவர் கண்களிலை படாமல் ஒருவன் கையிலை பிடிச்சுக் கொடுக்குந்தனைக்கும் பாதுகாக் கிறாங்க… தெருவாலை போறவங்கள் பல்லைக் காட்டு மளவுக்கு நாம் நடக்கக்கூடாது. என்னவோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லுறன்…”
பவானியின் கைகளினிடுக்கில் கடிதத்தைத் திணித்து விட்டு விடுவிடென்று கூடத் தறையுள் போய்விட்டாள் கனகம்.
கன்னியவள் கடிதத்தைப் பார்த்த மாத்திரத்தில் வெம்புகிறாள் உடல் குப்பென்று வியர்வையில் சிலிர்க் கிறது. மேல்சட்டை நனைந்து தோய்கிறது. நெற்றியில் அலைபோன்ற ரேகை சுழல்கிறது. கண்களின் பாளைகள் மூடிமூடி விழிக்க… கண்ணீர் முத்துருண்டைகள் பொட் டுப் பொட்டென உடைகின் றன. எதையோ மீண்டும் மீண்டும் தன் நெஞ்சப் பற்களினால் அசைபோடுகின்றாள். குற்றமற்றவள் எனச் சொல்லிக் கொண்டவள் கலங்குவதில் நியாயமில்லையே… தினமும் ஈடுபடும் சமையல் வேலையில்கூட கவனம் செல்லவில்லை… கண்கள் சிவந்து கனிந்த கொவ்வைப் பழமாகி நிறம் காட்டுகின்றன. கன்னத்தில் அழுது வடித்த கண்ணீர்; காய்ந்து முகம் ஒளியிழந்து உப்பி விட்டது,
உடலில் சக்தியில்லை. உயிரிருந்தும் இல்லாத சட மாகச் சரிகிறது. கீழேவிழாதபடி கப்பு முண்டுகொடுத்து நிறுத்தியிருக்கிறது. ‘விழுந்து விடுவேனா’ என்ற ஏக்கத் தில் கப்பை… கையால் பிடித்திருந்தாள்.
இதயத்தில் ஒரே போராட்டம். சிந்தனைச் சுழலில் எத்தனை நெழிவு சுழிவுகள். இதயம் பொருமி நெட்டுயிர்க்கிறது.
மழை ஓய்ந்தது….
கனகம் கணேசனின் சிறிய தாயைக் கூப்பிட்டு அவள் காதிலும் விடயத்தைப் போட்டு வைக்கவேண்டுமென்ற எண்ணம் உதயமாக, அவளை அழைத்துவர ஆள்விட்டாள்.
அவளும் வந்தாள்…?
“என்ன பாருங்க உங்கடை வீட்டுத் தம்பி செய்திருக் கிற வேலையை! அதுவும் சின்னப் பெடியனை விட்டுக் கொப்பி வாங்கி அதுக்குள்ளை கடிதம் வைத்துக் குடுத்து விட்டிருக்கு… இப்படிச் செய்யுமெண்டு கனவிலும் நினைக்க வில்லை….’
“வேலாயுதா, அவர் அறிஞ்சா இரண்டு காலிலும் பிடிச்சு சிதறு தேங்காயாய் அடிச்சுப் போடுவார். இப் படியுஞ் செய்யிறதா…” ஆத்திரத்தில் சிறிய தாயின் நெஞ்சம் பதறுகிறது.
“இதுவரை காலத்திலும் ஒருத்தர் வரயில்லை… நாங் கள் மானத்தோடை மதிப்போடை வாழ்ந்தோம். பள்ளி யிலை படிக்கிற நாளிலும் இல்லை. நாடகங்களிலே நடிக் கிறபொழுதும் இப்படி இல்லை…” விம்மி விம்மி பவானி கண்களில் கண்ணீர் கரைந்தோடச் சொல்கிறாள்.
கணேசன் வந்ததும், சிறியதாய் சொல்லக் கேட்டு உண்மையில் கலங்கிவிட்டான். அன்றிலிருந்து அவன் முகத்தில் ஒளியில்லை. சிரிப்பில்லை இதுவரையும் அனுப வித்த ஒன்றைஇழந்துவிட்ட புது நிலை .. இதயப் பாளையில் கீறல்… இனம் புரியாத துக்கம்… மனம் சலசலக்கிறது. குமுறும் எரியும்… கொந்தளிக்கும் மனச்சுமையைத் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்.
அவன் உடனடியாக அந்த இடத்தைவிட்டுக் கண் காணாத தூரத்துக்குப் போய்விட்டான். கண்முன் பவானி யைப் பார்க்கும் போதெல்லாம்… அவனது மனதில் போராட்டம்.
இவற்றை முற்றுப் புள்ளி வைக்க நினைத்து, வெளியே போய்த்தான் பார்த்தான்… ஆனால்… கல்லில் கீறிய சிற் பம். இதயத்திலிருந்து கரைவதாக இல்லை… அது அதன் ஒளியோடு மனக் கண்ணில் சிரிக்கிறது. … எப்பொழு தும் ஏதோ ஆழ்ந்த சிந்தனை. அவன் வேதனையைப் பார்க்க எனக்கே சங்கடமாய்ப் போயிற்று…
அவன் கலங்குவதைப் பாக்க என் கண்களில் கலக் கம் தளிர்விடுகிறது. என் நண்பன் அவன். எனக்கு இருக்காதா என்ன…?
அண்ணியிடம் சொல்லளவிலே சொல்ல முடிந்ததே தவிர உண்மை பவானியின் உள்ளத்தைக் கசக்கிப் பிழி கிறதே… மனச்சாட்சியுடன் போட்டி போட எத்தனை தடவை முடியும்? கடைசியில் உள்ளது உள்ளதுதான்…
கட்டுப்பாட்டில் அவள்… இப்பொழுதெல்லாம் முன் போல் தெருக்கோடிக்கு வருவதில்லை. எல்லாம் அந்தக் குச்சி வீடும் விறாந்தையும்தான் கதி…
நிமிர்ந்து விறாந்தைச் சுவர் யன்னல் ஊடாக வெளியே பார்க்கிறாள். சுழல் காற்றில் அலையும் வேப்பம் சருகு கள்… வெற்றிடத்தை நோக்கி காற்று நுழைவதில்… அதன் நெருடலில் அவஸ்தைப்படுகின்றன. முழுப்பலத் தையும் பிரயோகித்து விடுவித்துக்கொள்ளத் தவிக் கின்றன. அகத்தில் எழுந்த விவகாரம் நெஞ்சைக் குத் திக் கிழிக்கிறது.
“உண்மையில் அன்று அவர்முன் அப்படி நின்றிருக்கக்கூடாது. என் சுய உணர்வை இழக்கச் செய்தது ஒன்று.
நான் நானாக இல்லை. எல்லாம் அது… அதன் செயல் உடலில் பாய்ந்த மின்சாரத்தின் எதிர்விளைவு.. மயக் கம்… உருவம் தெரியாத மோனநிலை… அப்பப்பா… எவ் வளவு கேவலம்! இளமையில் உணர்ச்சிதான் ஒத்தூதுவதா; அதற்கு இப்படியொரு வலிமையா…?
பெண்கள் பொ றுமைசாலிகள்… உணர்ச்சிகள் கட்டு மீறினாலும் வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்தும் திறமை சாலிகள்…
ஆனால் நான்… அந்தக் கணத்தில்…! வெட்கம் என்பதே இன்றி… அவர்முன்… எவ்வளவு துணிவு…… நா ன் பிழை செய்யாமல் இருக்க நான் என்ன கடவுளா? மனிதப் பிண்டம்தானே… மனித உணர்ச்சிக்கு இடம் கொடுப்பவள்தானே… அதை எப்பொழுது கட்டவிழ்த்து விடுவது…”
அதற்கொரு கட்டுப்பாடும் உண்டா…? உண்மை யையே ஒழிவு மறைவில்லாமல் சொல்லுகிறேன். அவர் மீது விருப்பம் இருக்கிறது. அதைச் சொன்னாலும் அவர் புரிவதாக இல்லையே… அண்ணி வேறு இடையில்…!
நான் எப்படிப் போனாலும் தான் என்ன… அவவுக்குக் கண்டறியாத விண்ணாணம்… என் மனதில் உள்ளதை அவவுக்கு எப்படித் தெரியும். றோட்டுப் பக்கம் போகாதே என்று ஒரு நொடியில் சொல்லிவிடலாம். அவவின் சொல் லுக்குக் கட்டுப்படத்தான் வேண்டுமா? கட்டுப்படாவிட் டால்… ஆத்திரத்தில் வார்த்தைகள் அடித்தொண்டையில் புரள்கின்றன; வெளியே வர இடமில்லாமல் உள்ளே குமைந்து கொள்கின்றன.
அண்ணனிடம் சொல்லிவிட்டால்…..உடல் நடுங்குகிறது.
– ஈழநாடு, ஆவணி 1964.
– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.