கடமை




(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“பதினைந்தாம் நம்பர்.”
எனக்கு உதவியாக இருக்கும் பணியாள் உரத்துக் கூவுகிறான்.
அந்த இலக்கத்தையுடைய நோயாளி உள்ளே நுழைவதற்குள் வேறுசிலரும் முண்டியடித்துக் கொண்டு நுழைய முனைகிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்திப் பதினைந்தாம் இலக்க நோயாளியை மட்டும் உள்ளே அநுமதிக்கிறான் எனது பணியாள்.

என்னைத் தங்கள் குடும்ப வைத்தியனாகக் கொண்ட ஒருசிலர் எதிரே இருந்த யன்னல் ஊடாகப் பார்த்து அறிமுகச் சிரிப்பை உதிர்க்கின்றனர். அப்படிச் செய்வதால் எனது சலுகையுடன் உள்ளே நுழைந்துவிடலாம் என்ற நினைப்பு அவர்களுக்கு. நான்தான் என்ன செய்யமுடியும் ? கட்டுப்பாட்டைக் குலைத்து விட்டால் பின்பு சரிப்படுத்த முடியாதே.
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்; பதினொன்று இருபதாகி விட்டது. கடந்த மூன்று மணிநேரத்தில் பதினான்கு நோயாளிகளைத்தான் என்னால் கவனிக்க முடிந்தது. வெளியில் நிற்கும் நோயாளிகளின் தொகையைப் பார்த்தால் இன்னும் நான்கு மணிநேரத்தில்கூட எல்லோரையும் என்னால் சமாளித்துவிட முடியாதுபோல் தோன்றியது.
வேண்டுமானால் ஒருமணிநேரத்தில் எனது வேலையை முடித்துக் கொண்டுவிடலாம். ஆனால் அப்படி எப்பொழுதாவது நான் செய்திருந்தால் இன்று சிறந்த வைத்தியனாகி இருக்கமாட்டேன். எனக்குப் பேரும் புகழும் கிடைத்திருக்க முடியாது. எனது வைத்திய நிலையமும் பிரபல்யம் அடைந்திருக்காது.
பதினைந்தாம் நம்பர் நோயாளி என் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தாள். நான் கடமையில் முனைகிறேன்.
“பெயர்?”
“மீனா.”
“வயது?”
“பதினைந்து.”
“என்ன வருத்தம் ?”
“………….”
நான் அவளின் பக்கம் திரும்பி அதே கேள்வியை மீண்டும் கேட்டேன்.
“என்ன வருத்தம்?”
என்னுடைய கேள்வி இப்பொழுதும் அநாதையாக நிற்கிறது. நான் அவளைக் கூர்ந்து நோக்கினேன்.
ஏதோ சொல்ல வேண்டுமென்று அவளது இதழ்கள் துடிக்க, மனம் அதனைத் தடுத்திருக்கவேண்டும். அவளது கண்களில் மருட்சி நிறைந்திருந்தது.
“பயப்படாமல் சொல்லு மீனா, நான் ஒருடாக்டர். என்னிடம் எதையும் மறைத்தால் நோயைக் குணப்படுத்திவிட முடியாது.” அவளது தோற்றத்தைப் பார்த்ததும் என்னையறியாமலே அவளிடம் தோன்றிய அன்பினால் தெம்பூட்டினேன்.
“நான்…. நான்… கருவுற்றிருக்கிறேன் டாக்டர்”. அவள் தயங்கியபடியே கூறினாள்.
அவளைக் கூர்ந்து பார்த்தேன். இளமையின் நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்திருக்கும் அவளது அழகிய தோற்றத்தில் தாய்மையும் இழையோடியிருக்கிறது. எனது மனம் ஏனோ குறுகுறுத்தது.
‘நீ எத்தனை வயதில் மணம்புரிந்து கொண்டாய்?’ என்று கேட்கவேண்டும் போல இருந்தது. ஆனாலும் நான் அப்படிக் கேட்கவில்லை. “உன் கணவன் எங்கே?” என்றுதான் கேட்கிறேன்.
மௌனம்.
நான் திரும்பவும் அதே கேள்வியைக் கண்டிப்புடன் கேட்டேன். தேவையற்ற கேள்விக்கு எனது தகுதியைக்கொண்டு பதிலறிய முனைவதை என்னால் உணர முடிந்தது.
“எனக்கு விவாகமாகவில்லை.”
அவளது அடித்தொண்டையிலிருந்து கிளம்பிய பதில் நலிந்து ஒலித்தது. ஏதோ ஒரு சக்தி என்னைப் பேசவிடாமல் தடுக்க நான் மௌனமாக அவளையே பார்த்தபடி இருக்கிறேன். அவள் தொடர்ந்தாள்.
“எனது கருவை அழித்துவிடுங்கள் டாக்டர்.”
இதை அவள் கூறும்போது எனது மனம் திடுக்குற்று மௌனத்தை நீடிக்கச் செய்தது. எனது பார்வை அவளது உடலைக் கூசச் செய்திருக்க வேண்டும். கூனிக்குறுகி என்னைக் கெஞ்சும் விழிகளால் பார்த்தாள். அவளது கண்கள் சிறிது பனித்திருந்தன. இதழ்கள் படபடத்தன. அவளைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.
“உன்னை இந்நிலைக்குக் கொணர்ந்தவனோடு கூடி வாழ்வது தான் சரியென்று நினைக்கிறேன்.”
அவளது கண்களில் நீர்வழிந்தோடியது. விம்மலுக்கிடையே அவள் கூறினாள்.
“முன்பே மணமான ஒருவன் என்னை ஏமாற்றிவிட்டான். இந்நிலையில் நான் மானமிழந்து எப்படி வாழ்வது?”
எனது மனதில் பல எண்ணங்கள் ஒரே தடவையில் புகுந்து உழைச்சல் கொடுத்தன. கடமையை மீறி அவளுக்கு உதவி செய்யவும் முடியவில்லை. அவளது பரிதாபத்தைக் கண்டு உதவி செய்யாமல் இருக்கவும் முடியவில்லை.
சிந்தனை எனது சொந்த வாழ்க்கையைச் சுற்றி ஒருகணம் வட்டமிடத் தொடங்கியது.
காலையில் நான் வைத்தியசாலைக்குப் புறப்படும் பொழுது மனைவி என்னிடம் கேட்டாள். “வெள்ளவத்தையில் பிரபல டாக்டர் ஒருவர் இருக்கிறாராமே, அவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாமா?”
நான் பதிலொன்றும் கூறாமல் சரியென்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தேன். என்னால் வேறு என்னதான் செய்யமுடியும்?
எங்களிருவருக்கும் விவாகம் நடந்து பத்து வருஷங்களுக்கு மேலாகி விட்டது. குழந்தைச் செல்வத்திற்காக நாங்கள் அல்லும் பகலும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம். எனது முதிர்ந்த வைத்திய அறிவைக்கொண்டு உடலமைப்புகளைச் சோதித்துப் பார்த்துவிட்டேன். எங்களிடத்தில் ஒரு குறையுமில்லை. கடவுள் எம்மிடம் காட்டும் கருணையிலேதான் குறையிருக்கிறது.
எத்தனையோ லட்சம் மனிதர்கள் என்னிடம் சிகிச்சை பெறுவதற்காக ஓடிவருகிறார்கள். ஆனால் என் மனைவி எனது வைத்தியத்தில் நம்பிக்கை ஏற்படாதவள்போல வேறு வைத்தியர்களிடம் போகிறாள். அவள்தான் என்ன செய்வாள், உள்ளத்தில் ஊறியிருந்த தாபம் அப்படியெல்லாம் செய்யவைக்கிறது.
எனது சொல்லையும் கேளாது ஏதேதோ மருந்துகளை வாங்கியுண்பாள். அவள் நேராத கோவில்கள் இல்லை. யாத்திரை செய்யாத ஸ்தலங்கள் இல்லை. செவ்வாயும் வெள்ளியும் விரதம் பிடித்துப் பிடித்து அவளது உடம்பு இளைத்துப்போயிருந்தது.
எனது மனத்தாங்கலை அடக்கிக்கொள்ள நான் புரியும் தொழில் எவ்வளவோ உதவியாக இருக்கிறது. ஆனால் என் மனைவி அல்லும் பகலும் வீட்டிலிருந்தபடியே வேதனைப்பட்டுக்கொண்டு இருப்பாள். அவளுக்கு வாழ்க்கையில் வரவரப் பற்றுக் குறைந்துகொண்டே வந்தது. சிறு விஷயங்களுக்கும் பெரிதாகச் சினந்துகொள்வாள். எனக்கும் அவளுக்கும் இடையில் இருந்த பிணைப்பில்கூட தொய்வு காணப்படுவது போலச் சிலவேளைகளில் எனக்குத் தோன்றும்.
என் சிந்தனை அறுகின்றது. குழந்தைச் செல்வத்திற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி; கிடைத்த செல்வத்தை அழித்துவிடத் துடிக்கிறாள் வேறொருத்தி. உலகத்திலேதான் எத்தனை விந்தைகள்!
அங்குமிங்குமாக இழுபட்டுக்கொண்டிருந்த என் எண்ணங்கள் நிலைபெற்றபொழுது மனப்போராட்டத்திற்கு முடிவுகண்ட துடிப்பில் பிறிஸ்கிறிப்ஷனைக் கிறுக்குகிறேன்.
அதனைப் பெற்றுக் கொண்டு நன்றிகலந்த பார்வையுடன் என்னிடம் இருந்து விலகி மருந்தைப் பெறுவதற்காக ‘டிஸ் பென்சரி’ யை நோக்கி நடக்கின்றாள் மீனா. அவள் நடந்து போவதை பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்னும் சிறிது காலத்தில் மீனாவின் அடிவயிற்றில் இருக்கும் கரு நெளிந்து கொடுக்கும். நல்லதொரு போஷாக்கைப்பெற்ற மகிழ்ச்சியில் பூரிப்படையும். தான் உயிருடன் நல்ல முறையில் வளர்ந்து வருவதையும் அவளுக்குத் தன் அசைவுகளால் உணர்த்தும்.
மீனா…….?
என்மேல் ஆத்திரமடைவாள். தன்னை ஏமாற்றிவிட்டதாகச் சபிப்பாள். ஆனாலும் அவளுக்குள் உருவாகிவரும் கரு எனக்கு நன்றி சொல்லும் ; மனதாரப் போற்றும். என்றும் என்னை வாழ்த்திக் கொண்டே இருக்கும். வைத்தியனுடைய கடமையைச் சரிவரச் செய்த உணர்வில் எனது மனம் மகிழ்கிறது.
ஐந்தாறு மாதங்கள் கழிந்தன.
எனது மனைவி தினசரியை வாசிக்க நான் சாய்வு நாற்காலியில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தேன்.
வெகுகாலத்திற்குபின் இப்போதுதான் என்மனைவி சந்தோஷமாக இருக்கிறாள். என்றுமே இல்லாத புது அழகு அவளிடத்தில் மின்னியது. எனது மனம் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது.
‘கடமையைச் செய் கருணை பெறுவாய்’ என்று பத்திரிகையின் பின்பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் போடப்பட்டிருந்த வாசகம் என்கண்களைக் கவர்ந்தது. அந்த வாசகத்தில் லயித்துப்போய் மனம் அதனைச் சுற்றிவளைய, காலத்தின் சுழற்சியில் மலர்ந்து கொண்டிருந்த எனது வாழ்க்கையை மெஞ்ஞானக்கண்களால் அழகு பார்த்து மகிழ்ந்தேன்.
ஏதேதோ புதினங்களை வாசிக்கும் பொழுது கவரப்படாத என் கவனம் திடீரென்று திரும்புகின்றது.
‘இளம்பெண் தற்கொலை! பதினைந்து வயது நிரம்பிய மீனா என்றபெண் தற்கொலை புரிந்துகொண்டாள். இப்பெண் இறக்கும்போது கருவுற்றிருந்தாள்…….’ மனைவி தொடர்ந்து வாசித்தாள். என்னால் தொடர்ந்து கேட்கமுடியவில்லை.
அன்று ஒரு உயிரைக் காப்பாற்ற முனைந்தேன், கடமையைச் சரிவரச்செய்த நினைவில் மகிழ்ந்தேன். ஆனால் இன்று…..!
இரு உயிர்கள் சிதைந்துவிட்டனவே. மீனாவின் கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால்….?
மனச்சுவர்கள் பொருக்குடைந்து சரிவதைப்போன்ற ஒரு பிரமை. மன உளைச்சலைத் தாங்கமுடியாது கண்களை மூடிக்கொண்டு புரண்டேன்.
என் கடமையைத்தான் செய்தேன் என்ற நினைவு எனது வேதனையைக் கரைக்க முயன்றுகொண்டிருந்தது.
– கலைச்செல்வி 1965.
– அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், முதற் பதிப்பு: மே 1998, மல்லிகைப் பந்தல் வெளியீடு.