கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 9,812 
 
 

விரிவுரை முடிந்து மற்ற மாணவர்கள் எல்லோரும் வெளியேறி விட, கீரா மட்டுமே அரங்கத்தில் மிஞ்சியிருந்தாள். மேடையில் தனது குறிப்புகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த பேராசிரியர் டாலெனை மெல்ல அணுகினாள்.

“பேராசிரியர் டாலென்?” என்றாள் கீரா. “உங்களிடம் ஒரு நிமிடம் பேச முடியுமா?”

பேராசிரியர் பார்வையை உயர்த்தினார். “கண்டிப்பாக, கீரா. என்ன வேண்டும், சொல்.”

“சில நாட்களாகவே என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும்,” என்று ஆரம்பித்தாள் கீரா. “இந்தப் பிரபஞ்சம் மிக மிகப் பெரியதென்றும் மிக மிகப் பழமையானதென்றும் நீங்கள் சொன்னீர்கள். நமது பால்வெளியில் மட்டுமே பில்லியன் கணக்கான கிரகங்கள் இருக்கின்றன. நாமும் வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ளும் பொருட்டு அதற்குத் தேவையான சமிக்ஞைகளை பல ஆண்டுகளாக அனுப்பிக் கொண்டே இருக்கிறோம். அப்படியிருந்தும், நாம் ஏன் இன்னும் மற்ற கிரகங்களை சார்ந்த அறிவார்ந்த உயிரினங்களை சந்திக்கவே இல்லை?”

பேராசிரியர் புன்னகைத்தார். “நீ வானியற்பியலின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றைப் பற்றிக் கேட்கிறாய். அதற்குப் பெயர் செனித் முரண்பாடு. தத்துவவாதி செனித் நாற்பது வருடங்களுக்கு முன்பு மிக அழகாக கேட்டார்: ‘எல்லோரும் எங்கே?'”

கீரா ஆர்வத்துடன் தலையசைத்தாள். “ஆம். அதே கேள்வி தான் எனக்குள்ளும். எப்படி வைத்துப் பார்த்தாலும் நாம் இந்நேரம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அது ஏன் இன்னும் நடக்கவில்லை?”

“அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன, கீரா,” என்று ஆரம்பித்தார் பேராசிரியர். “ஒன்று – வேற்றுகிரகவாசிகள் நம்முடன் தொடர்பு கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைவதற்கு முன்பே தங்களை அழித்துக் கொண்டிருக்கலாம்.”

“சுய அழிவு அல்லது சுற்றுச் சூழல் சரிவு மூலமாகவா?”

“ஆமாம். இரண்டாவதாக, தாண்ட முடியாத ஒரு பெரும் தொழில்நுட்ப தடையை அவர்கள் சந்தித்திருக்கலாம்.”

கீரா அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும்போது பேராசிரியர் தொடர்ந்தார். “மூன்றாவதாக, அவர்கள் நாம் இன்னும் கண்டறிய முடியாத வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கலாம்.”

“அதாவது அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள தேவையான உணர்வு உறுப்புக்கள் நம்மிடம் இல்லை, அப்படித் தானே?”

“சரியாகச் சொன்னாய். நான்காவதாக இன்னொரு காரணம் இருக்கிறது – அதற்குப் பெயர் ‘மிருகக்காட்சி தியரி’. முன்னேறிய நாகரிகங்கள் நம்மைப் பற்றி அறிந்திருக்கின்றன, ஆனால் வேண்டுமென்றே நம்முடன் தொடர்பைத் தவிர்க்கின்றன. ஒருவேளை தொலைவில் இருந்து நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கலாம்.”

“இன்டெரெஸ்ட்டிங். வேறு என்ன காரணங்கள்?”

“இன்னொரு முக்கியமான காரணம் கால அளவு. வேற்று கிரக நாகரிகங்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக உயர்ந்து வீழ்ச்சி அடைந்திருக்கலாம். நமது குறுகிய தொழில்நுட்ப வளர்ச்சிக் காலம் – வெறும் நூற்றாண்டுகள் – அவர்களின் காலத்துடன் ஒத்துப்போகாமல் இருந்திருக்கலாம்.”

“அதாவது, நாம் காலியான அரங்கத்திற்குள் சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்,” என்று தொடர்ந்தாள் கீரா. “அங்கு பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வந்து போய் விட்டார்கள், அல்லது இன்னும் வரவே இல்லை.”

“அழகாகச் சொன்னாய், கீரா. பிரபஞ்சம் 13.8 பில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது. நாம் சமிக்ஞைகளை அனுப்பி சுமார் 300 ஆண்டுகளே ஆகின்றன.”

கீரா புன்னகைத்தாள். பாரம் சற்று குறைந்தது போல் உணர்ந்தாள். “அப்படியென்றால் நம்முடைய தேடல் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது.”

“உண்மை தான்.” பேராசிரியர் எழுந்து, தனது பொருட்களைச் சேகரித்தார். “அதனால்தான் உங்கள் தலைமுறையினரின் பணி மிகவும் முக்கியமானது செனித் முரண்பாட்டைத் தீர்ப்பதில்.”

உரையாடல் முடிவடைந்ததும், கீரா பேராசிரியரின் கருத்துகளுக்கு நன்றி தெரிவித்தாள். இருவரும் அரங்கத்தை விட்டு வெளி வந்து நூறு அடி உயரத்தில் இருக்கும் பறக்கும் ரயில் நிலையத்தை நோக்கி மிதக்க ஆரம்பித்தனர். அவர்களின் உணர்கொம்புகள் KP-389 கிரகத்தின் கந்தகம் நிறைந்த வளிமண்டலத்தில் சோம்பலாக அலைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *