என் மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 15, 2021
பார்வையிட்டோர்: 4,667 
 
 

“அப்பா ப்ளீஸ்… நோ…” நானும் என் மகனும் விளையாடும்போது, நான் அவனைப் பிடித்துவிட்டால் அவன் இப்படித்தான் சிணுங்குகிறான்.

‘அப்பா ப்ளீஸ்… நோ’ என்கிற வார்த்தை நன்றாக வேலை செய்கிறது என்பதை அவன் நன்றாகப் புரிந்துகொண்டதால் அதைத் தொடர்கிறான்.

நானும் என் மனைவியும் இதற்காக ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதன்படி என் மகன் இந்த மந்திரத்தைச் சொன்னால் நான் உடனடியாக அவனை விட்டுவிட வேண்டும்.

பல மணிநேரங்கள் கழித்துப் பார்த்தாலும், அவனை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள என் மனம் துடிக்கும். அல்லது அவனைச் சீண்டிச் சிணுங்க வைக்கத் தோன்றும். ஆனால் அவனுடைய அனுமதி இல்லாமல் மகனை நான் தொடக்கூடாது என்பதும் எங்கள் ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனை.

நாங்கள் இந்த ஒப்பந்தம் போட்ட இருபது நாட்களில், அவனுடைய குணத்தில் எவ்வளவு மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் பார்த்து நான் வியப்படைந்தேன்.

தனது பேச்சுக்கு வீட்டில் மதிப்பு அதிகம் என்று அவன் உணர்ந்து கொண்டான். இது அவனுடைய தன்னம்பிக்கை வலுவடைவதற்கு அவசியம்.

ஆனால், எல்லாவற்றிலும் முக்கியமானது, இப்போதிருந்தே ‘நோ’ சொல்லும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை அவன் உணர்ந்து கொள்கிறான். இந்தச் சொல்லின் வீரியத்தை புரிந்து கொள்வதற்குள் நம்மில் பலருக்கு வாழ்க்கையே முடிவடைந்து விடுகிறது.

தற்போது நான்கு வயதாகும் என் மகன், இதை இப்போதே உணர்ந்துவிட்டால், பெரியவனாகும் போது, பிறரின் ‘நோ’ என்ற வார்த்தைக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குத் தோன்றும்.

நான் சிறுவனாக இருந்தபோது, “ஏன் பெண்ணைப்போல் அழுகிறாய்?” என்று சொல்லித் திட்டுவார்கள். இந்த வார்த்தை எனக்கு ‘ஆண்’ என்ற உணர்வை குழந்தைப் பருவத்திலிருந்தே மனதில் விதைத்தது. ஆண் என்பவன் அழக்கூடாது, அழுவது பெண்ணின் சுபாவம் என்று தோன்றியது.

இந்த வார்த்தைகளைச் சொன்னது பெற்றோரும், உறவினர்களும்தான் என்றாலும் இதுபோன்ற சொற்கள் என்மனதில் எது போன்ற ‘மன அழுத்தத்தை’ ஏற்படுத்தியது என்பதை சொல்லிப் புரியவைக்க முடியாது.

இந்த உணர்வுகளை இன்றும்கூட என் பெற்றோரிடம் மனம் திறந்து பேச முடியாது. ஏனெனில் அவர்களின் மனோபாவம் முற்றிலும் வேறு. ஒரு குழந்தையை சமாதானப் படுத்தும் வழிமுறை இது என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் மாறி வரும் காலச்சூழலில் அதே மனோபாவத்தோடு எங்கள் குழந்தையை வளர்க்க முடியாது. ஆனால் இன்னும் சில காலத்திற்குப் பிறகு வீட்டிலிருந்து வெளியேறி பிற குழந்தைகளுடன் விளையாடும்போது இந்த வார்த்தைகளை அவன் கேட்க நேரிடும்.

சைக்கிள் ஓட்டப் பழகினால் கீழே விழுவான். அப்போது இயல்பாக அவனுக்கு அழுகை வந்தால், ஆண் குழந்தை அழக்கூடாது என்ற இலவச உபதேசங்கள் கூறி அவனுடைய அழுகையை நிறுத்துவார்கள்.

ஆனால் அவன் மனதில் இந்த அழுத்தம் ஏற்படாமல் சுதந்திரமாக இயல்பாக இருக்க வேண்டும் என்று நான் முயற்சி செய்கிறேன். ஒரு ஆண் ஏன் அழக்கூடாது? அழுது அவனுடைய வேதனைகளை வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்வது ஏன்?

தனது வேதனையை பதிவு செய்வது தவறு என்ற எண்ணம் எவ்வளவு பெரிய அழுத்தம் தெரியுமா? தனது வலியைப் பதிவு செய்வதற்கு ஒருவர் ஆண் அல்லது பெண் என்ற வித்தியாசம் இருக்கவேண்டுமா? மனிதப் பிறவியாக இருந்தால் போதாதா?

வலியின் அளவும், தாக்கமும், பாதிப்பும் மாறுபடும் என்றாலும், வலித்தால் அழுவது என்பது இயல்பானதே.

தங்கள் மனதில் உள்ள எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆண் அழக்கூடாது; பெண்தான் அழுவாள் என்று சொல்வதன் பின்புலத்தில் இருப்பது பெண் பலவீனமானவள் என்று பதிய வைக்கும் முயற்சி.

இதைச் சொல்பவர்களின் உள்நோக்கம் அதுவாக இல்லாவிட்டாலும், அதன் தாத்பர்யம் புரியாமல் சொல்லி, அடிப்படையிலேயே பெண்களை ஒருபடி தாழ்வாக நினைக்கும் நச்சு விதையை விதைக்கின்றனர்.

இந்தவிதை ஆலமரமாக வேர்விட்டு, பல இடங்களில் கிளைபரவி, பெண் என்பவள் பலவீனமானவள், அழுபவள் என்ற எண்ணத்தையும்; ஆண் என்பவன் வலுவானவன், அழக்கூடாது என்ற எண்ணத்தையும் ஆழமாகப் பதிய வைக்கிறது.

பள்ளிகளில் விளையாட்டுக் குழுவிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஏனெனில் பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களால் குழுவில் இடம் பெறுவதும், வெற்றி பெறுவதும் கடினம் என்று நினைப்பார்கள்.

ஏன் ஒரு ஆண் பலவீனமாக இருக்கக் கூடாதா? ஒரு பெண்ணிடம் ஏன் தோற்றுப்போனாய் என்ற கேள்வியை நான் ஒருபோதும் என் மகனிடம் கேட்க மாட்டேன்.

விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, வெற்றி பெறுவது மரியாதை; தோல்வியடைவது பலவீனம், கேவலம் என்று நினைக்கக்கூடாது. விளையாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது ஒருவரின் திறமை என்ற நேர்மறையான எண்ணத்தையே என் மகனிடம் விதைக்க விரும்புகிறேன்.

இந்த மாற்றம் காலப்போக்கில் பல்வேறு பரிணாமங்களைப் பெறும். நான் பத்தாவது படிக்கும்போது என்னுடைய அறிவியல் ஆசிரியர் இனப்பெருக்கம் பற்றிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தபோது, வகுப்பில் இருந்த பல மாணவர்கள் நமட்டுச்சிரிப்புடன் பாடத்தைக் கவனித்ததையும், மாணவிகள் சங்கடத்துடன் நெளிந்ததையும் கவனித்தேன்.

எனவே இந்தப்பாடம் தொடர்பாக எந்தக் கேள்வியையும் கேட்க ஆசிரியை தவிர்த்ததையும் தற்போது நினைத்துப் பார்க்கிறேன். மாணவர்களின் முன் இந்தப் பாடத்தைக் கேட்க மாணவிகள் சங்கடமாக உணர்வார்கள். எனவே ஆசிரியை வழக்கம்போல கேள்விகள் கேட்பதை தவிர்த்தார்.

ஆனால் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்கள் சிறார்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? பள்ளியில் இதுபோன்ற பாடங்களை நடத்துவதற்கு முன்பே வீட்டில் பெற்றோர் இதுபற்றி சொல்லிக்கொடுத்தால் மாணவர்கள் ஆசிரியைகளை நமட்டுச்சிரிப்புடன் பார்க்க வேண்டியிருக்காது. மாணவிகளை பள்ளித் தாழ்வாரங்களில் மாணவர்கள் கிண்டல் கேலி செய்யவும் அவசியம் ஏற்பட்டிருக்காது. இனப்பெருக்கம் என்பது ஒரு இயல்பான நிகழ்வு. ஒரு அறிவியல் என்றே மாணவர்களும், மாணவிகளும் நினைத்திருப்பார்கள்.

இன்றைய காலகட்டத்தில் எல்லா விஷயங்களையும் நாம் வெளிப்படையாக பேச முன்வரவேண்டும். இவற்றைப்பற்றி பேசுவதை தவிர்க்காமல் பொறுப்புள்ள அடுத்த தலைமுறையை உருவாக்க, ஒரு தந்தையாக நாம் அடிப்படையான சில விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.

பெண்களின் சிரமங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். மாதவிடாய் நாட்களில் அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற சிறிய முன்னெடுப்புகளின் மூலம் அவர்கள் ஆரோக்கியமான மனோநிலையுடன், நேர்மறையான சிந்தனைகளுடன், மனிதாபிமானத்துடன் வளர்வார்கள். முக்கியமாகத் தங்கள் சகோதரிகளையும், தாயையும் சரியாகப் புரிந்துகொள்ள உதவும். இதுஒரு நேர்மறையான சமுதாயமாக மாற உதவும் அல்லவா?

இன்றும்கூட என்னுடைய அலுவலக சகாக்களின் பெண்கள் பற்றிய தரம் குறைந்த வார்த்தைகளைக் கேட்க நேரிடும்போது, இது நிச்சயமாக இனப்பெருக்கப் பாடத்துடன் தொடர்புடையது என்று எனக்குத் தோன்றும்.

இதுபோன்ற விஷயங்கள் பரவுவதற்குக் காரணம் இலக்கில்லாமல் உட்கார்ந்து வீணே பொழுதைப் போக்குவதுதான் என்று தோன்றுகிறது. அரட்டையடிப்பதில் நேரத்தைக் கழிக்கும்போது அதிலேயே மூழ்கி விடுபவர்களுக்கு அதன் தாக்கம் புரிவதில்லை. ஆனால் உண்மையில் வீணாய் இருக்கும் நேரத்தை நேர்மறையான வேலைகளைச் செய்ய பயன் படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

குழந்தைகள் தாங்களாகவே நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இயல்பாக எழும் ஆர்வங்களையும், அதன் தொடர்பாக எழும் கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். சரியான நேரத்தில், அவர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்தால், குழந்தைகள் மன ஆரோக்கியத்துடன் வளர்வார்கள்.

என் மகனுடைய நண்பனாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு குழந்தை தனது நண்பர்களிடம் சொல்லும் எல்லா விஷயங்களையும் தன் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் என்னுடன் அவன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் நம்பிக்கையை வளர்ப்பது என்னுடைய பொறுப்பு என்றே நான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு குழந்தைக்கும் சகாக்களால் ஏற்படும் அழுத்தமும் என் குழந்தைக்கும் ஏற்படும் என்பதும் எனக்குத் தெரியும். அதிலும் புதிய விஷயங்களை பரிசோதனை செய்ய சிறார்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ‘மெல்லிய கோடு’ ஒன்றுக்கு எந்தச் சேதாரமும் ஏற்படாமல் அவனுக்கு சரி, தவறு பற்றி புரியவைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

என் அப்பாவுடன் எனக்கு மிகவும் நல்ல உறவு இருந்தாலும், அவருடன் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசும் தைரியம் என்னிடம் இருந்ததில்லை. ஆனால் ஒரு குழந்தைக்குத் தன் பெற்றோரிடம் எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேசுவதும், கேள்விகளைக் கேட்பதும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன்.

இது குழந்தைகளின் மனதில் எதுபோன்ற மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையோ, சிக்கலோ ஏற்பட்டால் அதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும். பத்தாவது பன்னிரண்டாவது வகுப்பு; கல்லூரிப் படிப்பு; பிறகு வேலை இப்படி அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் வேறு கட்டத்திற்கு நகரும்போது ஏற்படும் மாற்றங்களின் போதும் பெற்றோர்களின் வழிகாட்டுதல்களும், அறிவுறுத்தல்களும் இருப்பது நல்லது.

படிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்று என் மகனுக்கு உணர்த்த விரும்பும் நான், ஆனால் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தால் அதற்காக அவனைக் குறைவாக மதிப்பிடமாட்டேன் என்பதையும் புரியவைப்பேன்.

உலகம் என்ன சொல்லும்? உன் எதிர்காலம் என்ன ஆகும்? பெரிய பதவிக்கு செல்ல முடியுமா? என்பது போன்ற அழுத்தங்களில் இருந்து என் மகனை நான் விலக்கிவைக்க விரும்புகிறேன். என் மகன் நேர்மறை எண்ணங்களுடன் நேர்மையாக வாழ்க்கையை வாழட்டும்.

எல்லாக் குழந்தைகளுமே தவறுகள் செய்வார்கள். ஆனால் அந்த நிலையில், சரி என்பதற்கும்; தவறு என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தைக் கற்றுக் கொடுப்பதுதான் என் வேலை.

தவறு செய்வதில் இருந்துதான் படிப்பினைகள் கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவன் செய்யும் தவறுகள் பிறரை பாதிக்கக்கூடாது என்றே விரும்புகிறேன்.

நாம் எதிர்கொண்ட இதுபோன்ற அழுத்தங்களிலும், தளைகளில் இருந்தும் நம் குழந்தைகளை நாம் ஏன் விடுவிக்க முயலக்கூடாது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *