என் கேள்விக்கென்ன பதில்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 3,590 
 
 

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தா.. அவருடை பேரன் துருவனும் அருகில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். நீயூஸில் கரையொதுங்கிய ஆமைகளைப் பற்றிக் காட்டிக் கொண்டிருக்க, பேரன் கேட்டான்.

‘ஏன் தாத்தா எங்க ஸ்கூல் தமிழ் வாத்தியார் சொல்லிக் கொடுத்த திருக்குறலில் ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்துன்னு ஓரு குறளைச் சொல்லீட்டு, ஆமைபோல் அடக்கமாக இருப்பது சிறந்தது என்று சொல்லிக் கொடுத்தார்களே. இந்த ஆமைகள் அப்படித்தானே இருந்தன?! யாருக்கு என்ன துரோகம் செய்தன?! ஏனிப்படி இவை இறந்து கரை ஒதுங்க வேண்டும்?’

‘சொல்லுங்க..?! சொல்லுங்க..?!’ என்று அண்ணனைக் கேட்ட பாட்ஷா படத் தம்பியாய் படபடத்தான் தாத்தாவிடம் அந்தப் பேரன்..’குறள் தப்புத்தானே?!’ என்றான் அடுத்தபடியாக!.

பேரன் படிப்பது ஆங்கிலப்பள்ளியில், அவன் அப்பா அம்மா இருப்பது அமரிக்காவில்.. இந்தியக் கலாச்சாரத்தைக் கடைபிடிக்கவே இங்கே தாத்தா பராமரிப்பில் படிக்க வைத்திருந்தனர் அவன் பெற்றோர்கள்.

கேள்வி, நறுக்குத் தைத்தாற்போலத்தான் இருந்தது. என்ன சொல்வது?!

குறளையோ வள்ளுவரையோ குறை சொல்ல முடியாது! அவனுக்கும் புரியணும், அதே நேரம் அடக்கத்தின் அவசியத்தையும் உணர வைக்கணும் என்ன செய்யலாம். அவனுக்குப் புரிகிற உதாரணமாய் எதைச் சொல்வது யோசித்துவிட்டுச் சொன்னார் தாத்தா!.

‘துருவன்…நீ பிளைட்ல தானே அமெரிக்கா போறே.. வரே? அப்போ அது டேகாப் ஆனதும், பிளைட் தன் வீல்களை உள்ளே இழுத்துக் கொண்டும் லேண்டிங்கின் போது வெளியே நீட்டியும் இறங்குவதைப் பார்த்திருப்பாய் அல்லவா? தேவையான போது வெளியே விட்டும் தேவையற்ற போது உள்ளிழுத்தும் கொள்வதில்லை?! பிளைட்டின் வீல்கள்?! அதுபோலத்தான் ஆமையும் தேவையின்போது பயணிக்கையில், வெளியே விடுகின்றன பாதுகாப்பாக இருக்க உள்ளே இழுத்துக் கொள்கின்றன’ என்றார்!

பேரன் முகத்தில் ஒரு திருப்தி தென்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *