உடைந்து போன கலசங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 8, 2025
பார்வையிட்டோர்: 3,215 
 
 

வைகறையின் புலர்ந்த பொழுதில் தோட்டத்திலிருந்து வந்த மருதாணிப்பூவின் வாசமும் அடுக்குமல்லியின் வாசமும் நாசியைத் துளைத்தது. நறுமுகை எழுந்தவுடன் மனதை அமைதிப்படுத்த எண்ணி, தூய்மையான காற்றைக் கொஞ்சநேரம் சுவாசித்துவிட்டுப் போவேமே என்றெண்ணி தோட்டத்தில் நுழைந்தாள். உள்ளேயிருந்து வந்த அக்காக் குருவியின் சத்தமும், குயிலின் கூவலும் மனதுக்கு ஒரு அமைதியைத் தந்தது.

வீட்டின் உள்ளிருந்த பூரணம் அம்மாளுக்குத் தனது பேரனின் நினைவலைகள் எழுந்து மனதை அழுத்தின. இன்றோடு தனது பேரன் சரவணன் இறந்து ஒரு வருடமாகிறது. அவன் உயிரோடு இருந்திருந்தால் தனது தங்கை கயல்விழிக்கும் தம்பி முகுந்தனுக்கும் பள்ளிப்படிப்புக்கான கட்டணத்தைக் கட்டியிருப்பான். இவ்வளவு மனஉளைச்சல் இருக்காது. எவ்வளவு ஆறுதலாக இருந்திருப்பான்.

“நீங்க கவலைப்படாதீங்க பாட்டி. தங்கைக்கும் தம்பிக்கும் படிப்பிற்குத் தேவைப்படுறத நான் பாத்துக்கறேன். ஒழுங்கா சாப்பிடுங்க. உடம்ப பாத்துக்கோங்க. இந்த வயசுல வேலைக்கெல்லாம் போகவேண்டாம்”

சரவணனின் இந்த வார்த்தைகள் பூரணம் அம்மாளுக்கு எவ்வளவு தெம்பையும் தைரியத்தையும் கொடுத்தது. தன் பேரனின் இந்த வார்த்தைகள்தான் அவளை உயிர்ப்பித்தன. போதாக்குறைக்கு நறுமுகை அழுகும்போதெல்லாம் அவளுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறான். இவ்வாறெல்லாம் பலவாறாக எண்ணியபடி இருந்த பூரணம் அம்மாளுக்கு,

“அம்மா அம்மா. இன்னைக்கு என்ன சமையல் பண்ணட்டும்”

என்று கேட்ட நறுமுகையின் வார்த்தைகள் அவளை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தன.

“முகைம்மா இன்னிக்கு புளிக்குளம்பு வைத்து ஏதாவது இருக்குற காயப்போட்டு கூட்டு வைம்மா. நாளைக்குக் காய் வாங்கி வாறேன்” என்று பூரணம் கூற,

“சரிம்மா” என்றாள் நறுமுகை. நேரமாகிவிட்டது சீக்கிரம் சமையலை முடித்துவிட்டு வேலைக்குக் கிளம்பவேண்டும் என சமையல்கட்டிற்குள் நுழைந்த பூரணத்தம்மாள் காய்கறிகளை எடுத்து வெட்டிவைக்க நறுமுகை வேகமாகச் சமைத்து முடித்தாள். இடையிலேயே கயல்விழி முகுந்தனை எழுப்பி காப்பி கலந்து கொடுத்து, குளிக்கச் சொன்னாள். அவர்கள் குளித்து முடித்து, யூனிபார்ம் மாட்டி சாப்பிடவரவும் சமையலை முடிக்கவும் சரியாக இருந்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்து மதியத்திற்கும் உணவைக் கட்டிக்கொடுத்து, நறுமுகை நிமிர மணி எட்டுமுப்பது. விரைவாக அவள் குளித்து பேருக்குக் கொஞ்சம் கொறித்துவிட்டு, தனது டிபன்பாக்சை கேண்ட்பேக்கில் வைத்துக்கொண்டு,

“அம்மா நான் வரேன்” என்று அவசரமாக ஓட்டம்பிடித்தாள். நறுமுகை பிளஸ்டூ வரை படித்த காரணத்தால் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்க்கிறாள். பூரணத்தம்மாள் பக்கத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் துப்புரவுப்பணியாளராக வேலை செய்கிறார். அவர் வேலைக்குச் செல்லவேண்டாம் என நறுமுகை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.

“எனக்குக் கையும் காலும் நல்லா இருக்குறவரை ஒழைக்கிறேன். அதுக்கப்புறம் என் பேரப்பிள்ளைகளோ நீயோ பாத்துக்க மாட்டீங்களா? இப்ப நான் நல்லாத்தான இருக்கேன். நான் வாங்குற ஆறாயிரம் வீட்டு வாடகைக்குப் பயன்படுமில்லையா? நீ வாங்குறது பிள்ளைங்க படிப்புக்கும் வீட்டுச்செலவுக்குமே பத்த மாட்டிங்குது. என்ன செய்யறது? நாம வாங்கி வந்த வரம் அப்படி”

என்று நறுமுகையின் வாயை அடைத்துவிட்டு அலுத்துக் கொள்வாள். நறுமுகைக்கும் அவர் வேலை செய்யாவிட்டால் உள்ள சிரமம் தெரிந்து வாயை மூடிவிடுவாள். தான் கடையில் ஓவர்டைம் பாக்கலாம் என்றால் அங்குள்ள ஆண்களின் பார்வை சரியில்லை இரவில் வேலை பார்ப்பதும் லேட்டாக வருவதும் சரிப்படாது என்று தோன்றியதால் முயற்சி செய்து பார்த்து தோற்றுப்போனாள்.

இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையிலேயும் தான் வாழ்வதே தன் குழந்கைளுக்குத்தான் என்றிருந்தவளுக்குச் சரவணன் ஒருவன்தான் வளர்ந்த பிள்ளையாய் இருந்ததால் அம்மாவின் துன்பங்களையும் பாட்டியின் துன்பங்களையும் அறிந்து ஆறுதலாக இருந்தான். சிறுசுகளிடம் பகிரமுடியாத விசயங்களையும் சரவணனிடம் வெளிப்படையாய் கூறுவாள். வீட்டுக்கஷ்டம், வேலையில் உள்ள இடையூறுகள் என அவை நீண்டுகொண்டே செல்லும். அதுகூட இந்தக் கடவுளுக்குப் பொறுக்கவில்லை போல.

ஒரு நாள் அவளது தலையில் இடியாய் விழுந்த அந்தச் செய்தி அவள் வாழ்க்கையையே நிலைகுலையச் செய்யும் என்று நறுமுகை நினைக்கவில்லை. ஏற்கனவே கணவன் செய்த கொடுமை தாளாது இருந்தவளுக்கு, சரவணன் செய்த காரியம் இவ்வளவு துன்பத்தைத்தரும் என அவள் கனவிலும் எண்ணவில்லை. அவள் மனதில் கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய், தான் எதற்காக வாழவேண்டும் என்ற விரக்தியே மனதில் இருந்தது. கண்ணீரெல்லாம் வற்றிப்போய் மனதில் ஒரு வெறுமை குடிகொண்டது.

அன்றொரு நாள் முற்பகல் வேலையில் இருந்தவளுக்குச் சரவணன் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து வந்த போன்,

“உங்கள் பிள்ளை சரவணனுக்கு உடல்நலம் சரியில்லை. உடனே புறப்பட்டு வாருங்கள்” என்று கூறி போனை அணைத்துவிட்டார்கள். மொட்டையாக என்ன செய்கிறது என்று தெரியவில்லையே, கடவுளே காப்பாற்று என் பிள்ளையை என்று கூறிக்கொண்டே சென்றவளுக்கு அவனது பிணத்தைத்தான் காட்டினார்கள். காரணம் கேட்டால் உங்களின் கணவர் குடித்துவிட்டு வந்து சரவணனைக் கெட்டவார்த்தையில் எல்லோர் முன்னிலையிலும் திட்டினார், இதனால் மனசு சரியில்லாமல் இருந்த சரவணன் கட்டடத்தில் ஓர் அறையில் தூக்கிலிட்டுக் கொண்டான் என்ற செய்தி அவள் உயிரை உருக்குலைத்தது.

வலியிலும் வேதனையிலும் என்ன செய்வதென்றே புரியாமல் இருந்தவளைப் பூரணத்தம்மாள்தான் தேற்றினாள். இன்னதென்று தெரியாத வேதனையில் ஒரு மாத காலம் நறுமுகை வேலைக்குச் செல்லவில்லை. அங்கே இங்கே கடன்பட்டுத்தான் செலவுகளைச் சமாளித்தார்கள். இன்றுகூட சரவணன் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. குடும்பத்துக்கஷ்டங்களை இவ்வளவு புரிந்து கொண்ட சரவணன்தானா இப்படிச் செய்தான் என்பது தாங்கமுடியாத வலியைத் தந்தது. வலியின் ஆழம் மனதையும் உடலையும் வாட்டி வதைத்தது. மிகவும் மெலிந்து போனாள். பூரணம் அம்மாவுக்கு இன்னும் நிலைமை மோசம். தனது மனத்துன்பத்தைச் சொன்னால் நறுமுகை இன்னும் துன்புறுவாளே என்றெண்ணி எதையும் பகிர்வதில்லை. வேலைக்குச் செல்லுமிடத்தில் தன் மனதோடு ஒத்தவர்களிடம் மட்டுமே தனது வேதனைகளைப் பகிர்வாள்.

நறுமுகையின் கணவன் ஆரம்பத்தில் நல்ல வேலையில் இருந்து கொண்டு குடும்பத்தை நடத்தியவன்தான். கூடாத பழக்கவழக்கம் அவனைப் படுகுழியில் தள்ளியது. குடிப்பழக்கத்தால் அமைதியிழந்த குடும்பம் நாளாக, ஆக வீட்டிற்கு வருவதும் அருகிப்போனது. அவன் வேலை பார்த்த இடத்தில் போய் விசாரித்த போது அவன் பல மாதங்களாக வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியது தெரியவந்ததும் நறுமுகை நொறுங்கிப் போனாள். அதற்குள் மூன்று குழந்தைகள் வேறு. பூரணத்தம்மாள் நறுமுகையின் கணவனைப் பார்த்து நியாயம் கேட்கப் போக அவரைக் கைநீட்டி அடித்தபோதுதான் அவன் வரம்புமீறி விட்டான் இனி அவனைத் திருத்தமுடியாது என்பது உறைத்தது.

நறுமுகையின் அக்கம்பக்கத்து வீட்டினர் எல்லோருமே பூரணத்தம்மாளிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். நறுமுகைக்கு உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதோடு தள்ளாத வயதிலும் உழைக்கிறாளே என்ற கரிசனம்தான். ஆனால் இதை விட இந்த ஊர்உலகம் அறியாதது ஒன்று. நறுமுகையின் மாமியார்தான் பூரணத்தம்மாள். எல்லா இடத்திலும் மாமியார், மருமகள் சண்டையைத்தான் மிகுதியாகக் காணமுடியும். ஆனால் திருமணநாளில் இருந்து மாமியாரைத் தனது தாயாக எண்ணும் நறுமுகை, மருமகளின்மேல் அன்பு செலுத்தும் பூரணத்தம்மாள் போன்ற மாமியாரையும் காண்பது அரிது. உண்மையில் கோயில் கோபுரத்தின் கலசங்கள் எவ்வளவு புனிதமானவையோ அவை போல ஆண்களால் உடைந்து போன கலசங்கள் இவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *