அளவிட முடியாத அளவு!
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,605
வானவீதியைப் பார். பெரிய வீதி. அதில் ஏழு குதிரை பூட்டிய தேர் ஓடுகிறதே. தேரில் கதிரவன் தான் உட்கார்ந்திருக்கிறான். அப்ப்பா எவ்வளவு வேகமாய்த் தேரைச் செலுத்துகிறான்.
அதோ மலர்க் கொடி பார். அதனை ஆட்டுவது யார்? வடக்கே சாய்கிறதே கொடி, யாரேனும் தெற்கே நின்று தள்ளுகிறார்களோ? கண்ணுக்குத் தெரியாத அக்கள்வன் யார்? அவன் பெயர் காற்று. அவன்தான் தென்றல்!
மேலே தெரிகிற பந்தலைப் போட்டவர் யார்? அதில் நிலாவையும் வீண் மீனையும் பதித்தது எப்படி? பந்தலுக்குக் கால்கள் இல்லையே. காலில்லாப் பந்தல் அற்புதமான பந்தல். இவைகள் எல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறாயா? இருந்த இடத்தில் கொண்டே எல்லாவற்றையும் அளக்கும் அறிஞர்கள் சொன்னார்கள்
ஆனால், வானத்தை அளந்தவர்கள் எம் மன்னன் ஆற்றலை அறியும் திறன் பெறவில்லை .
யானை தன் கதுப்பிலே, அடக்கி வைத்து எறியும் கல்லைப் போன்று, சோழன் நலங்கிள்ளியின் ஆற்றலும் கண்காணாத் திறன் கொண்டது.
புலவர் அதனை எவ்வாறு பாடுவர்!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்