அருவிலை நல்லணி
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 7,389
வடக்கிருந்தான் சோழன். பிசிராந்தையாரும் வந்து அருகே அமர்ந்து விட்டார். இதனைக் கண்டு விட்டுத்தான் வீட்டிற்குத் திரும்பினார் புலவர் கண்ண கனார்.
வீடு அடைந்த புலவர் தன் எதிரே வந்து நின்ற மனைவியையே பார்த்தார். அவள் கழுத்தில் கிடந்த பொன்னணி மீது கண்கள் பதிந்து விட்டன.
புலவர் முகத்தில் நிலவிய சோகத்தைக் கண்டாள் மனைவி. கையில் பொருள் இல்லாமையே கவலைக்குக் காரணமோ என்று நினைத்தாள். கழற்றிக் கொடுக்கப் போனாள். அடகு வைத்துப் பெறலாமல்லவா? “கழற்றாதே காதலி, சோழன் தந்த பரிசு அது. பொன், பவளம், முத்து, மணி ஆகியவற்றால் ஆன பொன்னகை. எங்கோ சுரங்கத்தில் பிறந்தது பொன். ஆழ்கடல் அடியில் தோன்றியது முத்து. கீழ்க்கடல் பொருள் பவளம். மலையில் பிறந்த பொருள் மணி. இவற்றை ஒன்றாய்ச் சேர்த்துக் கோவையாக்கியதால் அழகிய அணியாகியது. இதைப்போல் சான்றோர் சான்றோரோடு கூடுவர். பிசிராந்தையார் இதற்கு எடுத்துக்காட்டு” என்று கூறி முடிப்பதற்குள் போல பொல வென்று நீர்த்துளிகள் உதிர்ந்தன.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்