அரசர் சாலமனும் தேனீக்களும்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 4,354
அன்றொரு நாள். அரசர் சாலமன், அரியணையில் அமர்ந்து அவையில் உள்ள அமைச்சர்களுடன் பேசிக் கொண்டிருந்த தருணம். காவலர்கள் வந்து சொல்வதற்கு முன்பாகவே, கிளி ஒன்று அரசனின் ஆசனத்தின் அருகே வந்து ‘ மன்னா தங்களைக் காண ஷிபா பகுதியின் மகாராணி வந்து கொண்டிருக்கிறார் ‘என்று மிழற்றியது. அரசர், ராஜ பிரமுகர்களிடம் ஷிபா அரசியை முறைப்படி வரவேற்று தர்பாருக்கு அழைத்து வாருங்கள் என்றார்.
அரசவைக்குள் வந்த ஷிபா ராணியை அரசர் சாலமன் முகம் மலர வரவேற்றார்.
ராஜ கம்பீரத்துடன் தன்னுடைய பரிவாரங்களுடன் சபைக்கு வந்த ஷிபா ராணி அழகு ராணியாகவும் இருந்தாள். அவள், தனது இரண்டு கரங்களிலும் பூச்செண்டுகளை ஏந்தி இருந்தாள். ராணி மன்னனிடம் பேசினாள் ‘அரசே எங்கள் பகுதி மட்டும் அல்லாமல் தங்களது மதிநுட்பம் பற்றி தூர தேசங்களில் எல்லாம் செய்தி பரவியிருக்கிறது. இப்பொழுது தங்களுக்கு ஒரு சோதனை. என்னுடைய இரு கைகளில் உள்ள பூச்செண்டுகளைப் பாருங்கள். எது உண்மையான மலர்களைத் தன்னகத்தே கொண்ட மலர்ச்செண்டு, எது செயற்கை மலர்ச்செண்டு என்று தாங்கள் கூற வேண்டும்’ அரசரும் அவருடைய மந்திரிகளும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட மலர்ச்செண்டுகளை உற்றுப் பார்த்தனர்.
வேறுபாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.
சில நிமிடங்களில் அரசர் சாலமன்,’ அவையின் அனைத்து ஜன்னல்களையும் நன்றாகத் திறந்து வையுங்கள்’ என்றார். அரண்மனை காவலர்கள், ஓடோடி வந்து ஜன்னல்களைத் திறந்து வைத்தனர்.
எஙுகிருந்தோ தேனீக்கள் ஓடோடி வந்தன. ராணியின் வலது கையில் இருந்த மலர்ச்செண்டை மொய்த்தன.’ ஷிபா ராணி அவர்களே தங்கள் கேள்விக்குத் தேனீக்கள் பதில் அளித்து விட்டன அல்லவா? ‘ என்றார் அரசர். ஷிபா ராணி புன்னகை பூத்தாள்.
– King Solomon and the Bee by Dalia Hardof Renberg
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
