அன்பிற்கு அழிவில்லை காண்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 5,080 
 
 

“சந்திராக்கு மூணாவதும் பொண்ணா?”

மாமியார் மங்களத்தில் அலறல் கேட்டு தூக்கத்தில் தூக்கி வாரி போட்டவளாய் எழுந்து கொண்டாள் சந்திரா.

முப்பது வருஷம் முன்பு கேட்ட அதே குரல் கனவில் வந்து இன்று மீண்டும் உலுக்கியது.

“முதல் இரண்டும் பொட்டையா பெத்து இப்ப மூணாவதும் பொண்ணு… என் பையன் தல மொட்டை தான் போ”

மாமியாரின் ஆங்காரமான குரல் பிரசவம் முடித்து தளர்ந்திருந்த சந்திராவின் செவியில் அமிலமாய் பாய்ந்தது.

“நான் என்னமா செய்யறது? ஆண்குழந்தை பிறக்கிறதுக்கும் பெண் குழந்தை பிறக்கிறதுக்கும் அதை வயித்துல தாங்குகிறவள் காரணமில்லை. மண்ணில் நடுகிற விதையைக் கொண்டு தான் செடி முளைக்கும்” என்று சந்திரா மனசுக்குள் சொல்லிக் கொண்டாள்.

வாய்விட்டு சொல்லவும் சண்டை போடவும் தெரியாத அப்பாவி..அனாதைகளுக்கு மனம் தான் வாய். மனமே செவி. மனமே சுமைதாங்கி.

முதல் பிரசவம் பார்த்ததுமே சந்திராவை வளர்த்த உறவினர்கள் அவளுக்கு தண்ணீர் தெளித்து விட்டனர் .

“உன்னை பெத்து போட்டு ஒரே வருஷத்துல காவேரி வெள்ளத்தில் உன் அம்மாவும் அப்பாவும் துலாஸ்னானம் செய்யப்போனவா போய்ச்சேர்ந்துட்டா.கோயில் அர்ச்சகரான உன் அப்பா உனக்கு ஒரு சொத்தும் சேர்த்து வைக்கல. ஏதோ பரிதாபத்தில் தூரத்து உறவுக்காரங்க நாங்க உன்னை பத்துக்ளாஸ் படிக்க வச்சோம். நீயும் சேப்பா நல்ல அழகா இருக்கறதினால நம்ம ஜாதிப் பையன் அதிகம் சீர் எதிர்பார்க்காம கல்யாணமும் பண்ணிண்டான். இப்ப தலைச்சன் பொண் குழந்தை பிறக்கிறவரை செய்துட்டோம். இனிமே இங்க வராத. எங்களுக்கும் நாலு பசங்க இருக்கு” என்றார்கள் வளர்த்தவர்கள்.

அடங்கி அடங்கி வாழ்ந்தே பழக்கம் ஆகிவிட்டதால் கல்யாணமாகி வந்ததும் மாமியாரின் அதிகாரத்தை பொறுத்துக் கொண்டு அடிமையாகவே கிடக்க ஆரம்பித்தாள் சந்திரா.

பெரியவள் நித்யாவைத் தொடர்ந்து ஐந்து வருஷம் கழித்து நிர்மலாவும் பிறந்து விட்டாள்.

சந்திராவின் புருஷன் கிரிதருக்கு டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ். ஊர் ஊராக சுற்றுவான் மாதத்தில் பாதி நாள் தான் வீட்டில் இருப்பான் .

என்றாவது ஒருநாள் அவனிடம் “உங்க அம்மா ரொம்ப என்னை அதட்டறார்” என்று சந்திரா பயந்தபடி சொன்னால், “இதோ பாரு சந்திரா அம்மா நான் பிறந்து ஒரே வருஷத்துல அப்பாவை இழந்துட்டா பாவம். அந்த சோகம் தான் அம்மாவுக்கு வெறுப்பா மாறுது நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்பான்.

மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததும் மங்களத்தின் ஆலோசனையை கேட்கச் சொன்னான் கிரிதர்.

“எனக்கும் வர வர பிசினஸ் டல்லா இருக்கு. நித்யாவுக்கும் நிர்மலாவுக்கும் கல்யாணம் பண்ண பணம் சேர்க்கணும். தங்கம் வேற விஷமா விலை ஏறிண்டேபோறது .நான் மாடா உழைக்கிறது இதுக்காகத்தான். இதுல மூணாவது பெண் குழந்தை பிறந்திருக்கு. நான் என்ன செய்வேன் எதிர்காலத்துக்கு? அதனால அம்மா சொல்றபடி குழந்தையை நம்ம வீட்டு வேலாயிகிட்ட கொடுத்து ரோட்ல கிடந்ததா சொல்லி அனாதை காப்பகத்தில் விட்டுட சொல்லலாம்” என்றான்.

தன் அருகில் கிடந்த சிசுவை பார்த்தாள் சந்திரா. ரோஜாக்கு கை கால் முளைத்தது போல அப்படியே சந்திராவின் நிறத்தில் ஜாடையில் கூடை கவிழ்த்துப் போட்ட மாதிரி தலைமயிருடன் அழகு பிம்பமாய் இருந்தது. முதல் இரண்டு பெண்களும் கிரிதரின் ஜாடைதான்.

“குழந்தை அழகா இருக்கு” என்றாள் கண்ணீர்வழிய.

“வரவர அழகும் ஒரு பொண்ணுக்கு ஆபத்தா இருக்கு..க்கும்..வயித்துல நெருப்பைக் கட்டிண்ட மாதிரி இவளை வளக்கணும்.அதனால என் ஆலோசனைக்கு சரின்னு சொல்லுடி”.

மங்களத்தின் அதட்டல் சந்திராவை கலங்க வைத்தது. கண்ணில் நீர் முட்ட மார்பில் பால் முட்ட நீண்ட நேரத்திற்கு எதுவுமே பேசாமல் இருந்தவள் வேறு வழியின்றி சம்மதித்தாள்.

எங்கோ குழந்தை நன்றாக இருந்தால் சரி.

அன்று கர்ணனைப் பிரிந்த குந்தியின் நிலைமையில் தான் இருப்பதை சந்திரா உணர்ந்தாள்.

“கிரிதருக்கு ஒரு பையனை பெத்து இருந்தியான்னா இப்படி அழ வேண்டிய வந்திருக்குமா?” என்று வார்த்தைகளால் சுட்டாள் மங்களம்.

மங்களத்தின் திட்டப்படி வீட்டு வேலைக்காரி வேலாயிடம் அந்தக் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அதை அவள் வேறு ஒரு ஊரில் அனாதை ஆசிரமத்தில் கொண்டு சேர்த்துவிட்டதாயும் சில நாட்களில் அந்தக் குழந்தையை யாரோ பணக்காரர்கள் தத்தெடுத்துக் கொண்டு போய் விட்டதாயும் வேலாயியே வந்து சொன்னாள். யார் என்ன போன்ற விவரங்கள் சொல்ல மாட்டார்களாம்.

‘என்னுடைய ரோஜாப்பூஎங்கோ நல்ல வசதியான இடத்தில் வளர்கிறது’ என சந்திரா மெல்ல தன்னை தேற்றிக் கொண்டாள் .

அவ்வப்போது ரோஜாப் பூவின் நினைவு சந்திராவிற்கு வந்து கொண்டே இருக்கும்.

ரோஜாப்பூ இன்றைக்கு இருந்தால் 30 வயது இருக்குமா கல்யாணம் ஆகி இருக்குமோ? குழந்தை குட்டிகள் எல்லாம் இருக்கும். விஷயம் தெரிந்து பெற்றவளை தேடி வருமோ அல்லது பெற்றவள் மேல் கோபமாக இருக்குமோ! அந்த சம்பவத்தை நினைத்தாலே சந்திராவிற்கு உடம்பே சிலிர்த்துத் தான் போகும்.. கண்கள் குளமாகித் ததும்பும்..

பிரசவத்தில் தங்கைப்பாப்பா இறந்து விட்டதாகவே இன்று வரை நம்பிக் கொண்டிருக்கும் மூத்த இரு மகள்களைப் பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்வில் நெஞ்சு குறுகுறுக்கும்.

வேலாயியும் அவளுடைய புருஷன் இறந்து விட்டான் என ஒரிரு மாதங்களில் மகள் இருக்கும் வேறு ஊருக்குப் போய்விட்டாள்.

நித்யாவும் நிர்மலாவும் கல்லூரிப் படிப்பை தாண்டுவதற்குள் கிரிதர் மாரடைப்பில் இறந்து போய்விட்டான்.

இரண்டு பெண்களும் புத்திசாலியாக இருந்ததால் படித்து முன்னேறி விட்டனர். பல தொண்டு உள்ளங்கள் இருவரின் கல்வித் தேவைகளுக்கு உதவின.

பெரியவள் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகி கை நிறைய சம்பாதித்து நல்ல மாப்பிள்ளை கிடைத்து கணவனுடன் அமெரிக்காவில் இருக்கிறாள். ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

சின்னவள் நிர்மலா மருத்துவப் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு விட்டாள். சேலத்தில் டாக்டர் நிர்மலா என்றால் தெரியாதவர்களே இல்லை. ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்ப்பதிலிருந்து மருத்துவத்துறையின் சவாலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதுவரை நிர்மலாவிற்கு எல்லா இடத்திலும் நல்ல பெயர்.

தன் அம்மா பாட்டியிடம் பட்ட கஷ்டங்களை கண்கூடாகப் பார்த்தவள்.

“அம்மா.இனிமேலாவது நீ கண் கலங்காம இருக்கணும் .உன்னைக் கடைசிவரை கூடவே இருந்து காப்பாத்தறது என் கடமை. கல்யாணம் என்கிறதெல்லாம் எனக்கு அவசியம் இல்லை. ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்வார்கள். நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன். ஆணை விட பெண் பல மடங்கு சிறப்பானவன். ஏன் பிரம்மாண்டமானவள் பெண் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகம் என்றுமே இருந்ததில்லை. அதுக்கு சாட்சி நீதான்.” என்பாள் நிர்மலா.

பெண்களின் கனவுகளும் முன்னேற்றங்களும் சமுதாயத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் பெண்களின் மனம் படும் பாடு, அவர்களுடைய எதிர்பார்ப்புகள் ஏக்கம் தாகம் இவை கவனிக்கப்படாத போது எழும் நியாயமான கோபம் இவைகளைப் பற்றி நிர்மலா பேசும்போது சந்திராவிற்குப் பெருமையாக இருக்கும்.

பெண்களை பெண்களே தவறாக புரிந்து கொள்வது, ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணே எதிரி ஆக இருப்பது எத்தனை கீழ்த்தரமானது என்பதை தன் பாட்டியிடம் பேசி அவள் வாயை அடைத்து விடுவாள். உண்மையில் நிர்மலா வளர்ந்த பிறகுதான் சந்திராவிற்கு மங்களத்திடமிருந்து விமோசனமே கிடைத்தது. ஆனால் செய்த தவறை உணர்வதற்குள் மங்களத்திற்கு பக்கவாதம் வந்து கை காலுடன் மூளையும் இழுத்துக் கொண்டு விட்டது. ஐந்து வருடங்கள் கட்டிலோடு கிடந்தாள்.

“என்னம்மா பாதி தூக்கத்துல எழுந்துட்டியா? பாட்டி கனவுலயும் வந்து பயமுறுத்தினாளாக்கும்? இருக்கிற வரைக்கும் உன்னைப் பாடாய் படுத்தியது போறாதா?”

சின்னக்கோபம் கலந்த சிரிப்புடன் நிர்மலா, சந்திராவின் அறைக்குள் நுழைந்தாள்.

“என்னவோ போ..பாட்டியும் போய்ச் சேர்ந்து இன்னிக்கு பதிமூணு நாள் ஆச்சு..செத்துப் போனவாளைப் பத்தி தூஷணையா பேசக் கூடாதுடாம்மா”.

“மத்தவா மனசைக் கொத்திப் போட்டு மரணமடைந்தவர்களுக்காக இரக்கமே படக்கூடாது. பாட்டிக்கு அகம்பாவம் அதிகமிருந்தது. ஒரு ஆணைப் பெற்ற பெருமை கலந்த திமிர்…உன்னிடம் ஒரு நாள் அன்பாப் பேசி இருப்பாளா?”

“துன்ப நினைவுகளும்
சோர்வும் பயமும் எல்லாம்
அன்பில் அழியுமடி கிளியே
அன்பிற்கு அழிவில்லை”

என்பார் பாரதி. அன்பு அகத்தில் இருக்கிறதால் நான் எதையுமே இயல்பாய் எடுத்துட்டுப்போறேன்மா!”

”ஆமா அக அழகு என்பது ஒரு ரோஜாப்பூ.ரோஜாவோடு மல்லிகையை அல்ல. ரோஜாவோடு இன்னொரு ரோஜாவை கூட ஒப்பிடக்கூடாது இல்லையாம்மா?”

ரோஜாப்பூ என்று நிர்மலாசொன்னதும் சந்திராவிற்கு உடம்பு ஆடிப்போய்விட்டது. இன்று அளவுக்கு அதிகமாக அந்தக்கு ழந்தையின் நினைவுவரக் காரணம் என்ன!

சந்திரா யோசிக்கும்போதே நிர்மலா, “அம்மா நினைவிருக்கா இன்னிக்கு என் தங்கையோட பிறந்தநாள். பொறந்தப்போ ரோஜாப்பூ போல அழகா இருந்தான்னு நீ சொல்லி இருக்கியே..அவளுக்கு மனசும் உன்னைப் போல அழகாய்த்தான் இருந்திருக்கும். அந்த அழகுக் குழந்தை பேர்ல….ஓ..பெயர் வைக்கும்மு ன்னாடியே அது கடவுள் கிட்ட போய்டுத்து இல்லையா?..அதனால் என்ன நான் என் தங்கைக்கு ரோஜாப்பூ என்றே பேர் வைக்கிறேன்.அந்த ரோஜாப்பூ பேர்லயே கோயில்ல இன்னிக்கு ஒரு அர்ச்சனை பண்ணிடும்மா” என்று முடித்த போது சந்திரா குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

நிர்மலா தாயின் தோளை மெல்லத் தட்டிக் கொடுத்தாள்.

பிறகு, “அம்மா! இன்னிக்கு பாட்டியின் சுபஸ்வீகாரக்காரியங்கள் முடிஞ்சதும் குல தெய்வக் கோயில் போகணும்னு சொன்னியே. அது கொல்லிமலை போகிற வழியில் இருக்கு. போய்ட்டு திரும்பி வர நேரமாகும்..எனக்கு அர்ஜன்ட்டா ஆப்ரேஷன் வேலை இருக்கும்மா..ஸாரி. உன் கூட வரமுடியல.. நம்ம புது ட்ரைவர் முருகனுக்கு இருபத்தி ஆறு வயசுதான். சின்னப்பையனா இருந்தாலும் ரொம்ப ஷார்ப். எனக்காக ஆஸ்பித்திரில காத்திருக்கிற நேரத்துல நல்ல புக்ஸ் படிக்கிறான். அனாவசியமா யார் கூடயாவது போனில் பேசறது சக ட்ரைவர்களிடம் அரட்டை அடிக்கறதுன்னு எதுவும் கிடையாது. சொந்த ஊர் தர்மபுரியாம்..முருகன் உன்னை பத்திரமா கோயிலுக்குக் கூட்டிப் போய்ட்டு வருவான் என்ன?”

நிர்மலா மருத்துவமனை கிளம்பிப் போனதும் சாஸ்திரிகள் வந்து மங்களத்தின் சுபநாள் காரியங்களை காலை எட்டுமணிக்குள் முடித்து வைத்துப் போனார்.

மணி10.

சந்திரா பூ பழம் தேங்காய் பையுடன் தயாராக வாசலுக்கு வந்த போது முருகனும் வந்துவிட்டான் .அவள் கையிலிருந்து பையை பவ்யமாக வாங்கிக் கொண்டான்.

“அம்மா! கிளம்பலாமா அம்மா?” என்று கேட்டான் பணிவான குரலில்.

வெள்ளைச் சீருடையின் நெற்றியின் விபூதிக்கீற்றினில் புன்னகை ததும்பும் முகத்தில் அவனை பார்க்கிறபோது இறைவன் முருகனையே பார்க்கிற மாதிரி இருந்தது சந்திராவிற்கு.

“டிபன் சாப்டியாப்பா?” என்று அன்பாய் கேட்டாள்

“இல்லம்மா நான் கோயிலுக்கு போக வேண்டிய நாளில் காலையில் எதுவும் சாப்பிட்டறதில்லம்மா”

சந்திரா முருகனைப் பெருமையுடன் பார்த்தாள்.

சேலத்தில் இருந்து கொல்லிமலை போகிற வழியில் இருக்கிற அந்த முருகன் கோயிலுக்கு காரை செலுத்திக் கொண்டிருந்தான் முருகன்.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த சந்திரா அவனிடம் “உனக்கு கூடப்பிறந்தவர்கள் இருக்கிறார்களா அப்பா?” என்று கேட்டாள்.

“இல்லைமா நான் ஒரே பையன் தான். எனக்கு ரொம்ப ஆசை ஒரு தங்கச்சி பாப்பா பொறக்கணும்னு.. ஆனா அதுக்கு அதிர்ஷமில்லாம போயிட்டேன். பொண் குழந்தைங்கன்னா எனக்கு இஷ்டம்மா..அதனால நான் கல்யாணம் பண்ணிட்டா வரிசையா நாலு பெண் குழந்தைகளை பெத்துக்கறதா இருக்கேன்” என்றான்.

சந்திராவிற்கு சுருக்கென்றது .

நான்கு இல்லை மூன்றாவதையே தொலைத்துவிட்டு நிற்கிறேன் நான்.

ரோஜாப்பூ எங்கே இருக்கிறாய் கண்ணே! இன்னிக்கு இருக்கிற தைரியம், பண வசதி அன்னிக்கு இருந்திருந்தா உன்னைத் தூக்கிக் கொடுத்திருக்க மாட்டேனடி கண்ணே.

முருகன் சட்டென திரும்பி, “அம்மா உங்களுக்கு பிரபல சொற்பொழிவாளர் பேச்சு கேட்கப்பிடிக்குமா அந்த சிடி போடட்டுமா?” என்று கேட்டான்.

சந்திரா மென்மையாய் தலையாட்டினாள். “இன்னும் ஒரு மணி நேரமாகும் கோயிலுக்குப் போக அதுவரை கேட்கலாமே!” என்றாள்.

சிடியை ஆன் செய்தான் முருகன்.

‘சமுதாயத்தின் தேரின் அலங்கரிக்கப்பட்ட ஆபரணம் என்று அறிவிக்கப்பட்டிருந்த பெண்’, ‘இல்லையில்லை சமுதாயத்தேரில் நானும் ஒரு சக்கரம்’ என்று அறியத் தலைப்பட்டாள். பல நூற்றாண்டுகளாய் மூடி வைக்கப்பட்ட எரிமலையின் கண்கள் மூர்க்கமாய் திறந்து கொண்டன

பெண் கல்வி புதிய பெண்ணையும் பெண்ணியத்தையும் தோற்றுவிட்டது. வாழ்வு, பெறுவது அதிகமா தொலைப்பது அதிகமா எனில் தொலைப்பதே அதிகம் என்று சொல்லத் தோன்றுகிறது. வாழ்வின் முற்பகலில் செய்த தவறுகளுக்கு பிற்பகலில் வெட்கப்பட ஆரம்பித்தால் அந்த வெட்கத்தின்

எடை இக்கால வாழ்வின் ஆயுளை விட அதிகமாக இருக்கிறது எந்த சூரிய உதயமும் பூமிக்கு சோகம் கொண்டு வருவதில்லை எந்த இரும்பும் சவப்பெட்டிக்கான ஆணிகளாய் தன்னைத் தானே தயாரித்ததுக் கொள்வதில்லை. சோகத்தை மனிதர்களே வாங்குகிறார்கள். ஆணிகளை மனிதர்களே வடிவமைக்கிறார்கள். தன்னைப் போல இன்னோர் உயிரின் இருப்பையும் மதிப்பது தான் நாகரிகத்தின் முதிர்வு’

சந்திரா ரசித்துக் கேட்டுகொண்டிருந்தபோதேசட்டென சிடி ப்ளேயரை ஆஃப் செய்தான் முருகன்.

சந்திரா திகைக்கும்போது காரையும் ப்ரேக் போட்டு நிறுத்திவிட்டான்.

“என்னப்பா என்ன ஆச்சு?” சந்திரா கலவரமாய்க்கேட்டாள்.

“அம்மா..சாலை ஓரப் புதர்ல…”

“புதர்ல பாம்பா முருகா?”

“இல்.இல்லம்மா.. ஒரு குழந்தை கிடக்குது..தூரத்திலேயே பார்த்திட்டேன்..” அலறியபடி முருகன் காரினின்றும் இறங்கி புதரை நோக்கி ஓட சந்திராவும் கார்க் கதவைத் திறந்து கொண்டு அவனைத் தொடர்ந்தாள்.

புதர் நடுவே பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கிடந்தது.

முருகன் குனிந்து வாரி எடுத்தான். அவன் கண்கள் கலங்கி சிவந்துவிட்டன.

“பெண் சிசுவை தூக்கிக் கடாசிட்டாங்களே ஐயோ.” என்றவன் அதன் உச்சி மண்டை துடிப்பதையும் கை அசைவதையும் கண்டு, “நல்லவேளை உயிர் இருக்குதும்மா” என்றான்.

சந்திரா அவனிடமிருந்து குழந்தையை வாங்கி புடவைத் தலைப்பில் சுற்றிக் கொண்டாள். அவள் கண்கள் கண்ணீரைக் கொட்டத் தயாராகின. குழந்தை பட்டு ரோஜாப்பூ நிறத்தில் முப்பது வருஷம் முன்பு தான் பெற்ற செல்வம் போலவே இருந்தது சந்திராவிற்கு.

அதிர்ச்சியும் வேதனையும் நிரம்பிய குரலில் முருகனிடம், “காரைத் திருப்பு முருகா..வீட்டுக்கு போகலாம்” என்றாள்.

“அம்மா..கோயிலுக்கு..?” என இழுத்தான் முருகன்.

“குழந்தைக்கு முதலில் பசும்பால் வாங்கிப் புகட்டணும். அன்பான அரவணைப்பு குழந்தைக்கு முக்கியம்…அதைவிட கோயில் முக்கியமில்ல”

“ஆமாம்மா. நானும் அதைதான் நினச்சேன். நல்ல வேளை..குழந்தையை வீசிப்போட்ட கல் மனசுக்கார பாவிங்க பால்ல நெல்மணி போட்டுக் கொல்லாம விட்டாங்களே. தெய்வமே!..என் கண்ல மட்டும் குழந்தை படாமப் போயிருந்தா என்ன ஆகி இருக்கும்? அம்மா..எனக்குத் தெரிஞ்சி ஒரு வேலைக்கார கிழவி இதே ஊர்ல பல வருஷம் முன்னாடி, தான் வேலை செய்த அந்த வீட்டு மாமியார் கிழவி சொன்னான்னு அவமருமக பெத்த பெண் குழந்தையை காசுக்காக பாலாடையில் பால்ல நெல்லு மணி போட்டு கொன்னுப் போட்டு, கடைசி காலத்துல உண்மையை தன் உறவு கிட்ட சொல்லி அழுதா. செஞ்ச பாவத்துக்கு கிழவி ரத்தப்புத்துநோய்ல கிடந்து செத்தா.” என்று முருகன் ஆற்றாமையாய் சொல்லிக் கொண்டே காரை செலுத்திய போது அவன் முகம் கோபத்தில் சிவந்ததை சந்திரா கவனிக்கவில்லை.

கவனித்து மேலும் விசாரித்து இருந்தால் அந்தக் குழந்தை தான் முப்பது வருஷம் முன்பு அவள் பெற்ற ரோஜாப்பூ என்றும் அன்று அதை அவள் மாமியார் வேலாயியிடம் கணிசமான பணம் கொடுத்து கொல்லச் சொன்னதும் அந்த வேலாயியின் பேரன் தான் இந்த முருகன் என்பதும் தெரிந்து போயிருக்கும்.

சில விஷயங்களை, சில காரணங்களுக்காக காலம் மூடி மறைத்து தான் விடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *