வியாபாரம் – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,699 

ஊரிலிருந்து வந்திருந்தான் ரகு.

ரகுவின் அக்காவை மணந்திருப்பவன் சேகர்.

இருவருமே மளிகைக்கடை வைத்திருப்பவர்கள்.

“என்ன ரகு, ரொம்ப சோகமா இருக்க.’

“கடையில வியாபாரம் ரொம்ப கம்மியாபோகுது மாமா. ரொம்ப கவலையா இருக்கு.’

“அப்படியா. நீ இன்னைக்கு ஒருநாள் என்கூட கடைக்கு வந்துபாரு.’

“சரி மாமா.’ இருவரும் கடைக்கு கிளம்பினார்கள்.

கடையில் பத்து ரூபாய்க்கும் குறைவாக சில்லறை கொடுப்பதுபோல் இருந்தால் நோட்டில் குறித்துக் கொண்டு அடுத்தமுறை வாங்கிக் கொள்ளுமாறு பணிவுடன் கூறினான் சேகர்.

“என்ன மாமா, சில்லறைதான் இருக்கே, கொடுத்துட வேண்டியதுதானே.’

“கொடுத்துடலாம் ரகு. ஆனால், அப்படிக் கொடுத்துட்டோம்னா அவங்களுக்கும் நமக்கும் உறவு முறிந்தமாதிரி ஆயிடுது. அடுத்தமுறை வேற கடையில கூட வாங்கிக்க முடியும். ஆனால் சில்லறை பாக்கி இருந்தா அதை கழிக்க கண்டிப்பா வருவாங்க. வரும்போது அவங்களுக்குத் தேவையானதை வாங்கவும் செய்வாங்க. அப்ப நம்ம வியாபாரமும் நல்லா நடக்கும், கஸ்டமரும் கையவிட்டுப் போகமாட்டாங்க.’

“அருமையான ஐடியா மாமா. கண்டிப்பா நானும் கடைப்பிடிக்கிறேன்.’

– ஆர். பாலகிருஷ்ணன் (டிசம்பர் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *