பிரசன்னம்…!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 12, 2024
பார்வையிட்டோர்: 4,052
சென்னை இப்ப எப்படி இருக்கோ.. ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்ததோ அதை வச்சுத்தான் இந்தக் கதையை ஆரம்பிக்கிறேன். செல்வராஜ் சென்னை போய் இறங்கி மயிலாப்பூர் தேடி, லஸ் தாண்டி மயிலாப்பூர் விவேகானந்தா பாட சாலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான்.

‘இங்கே விவேகானந்தா வித்யாலயா?’ என்று விசாரிக்க, அந்தப் பகுதிக்கே உரிய தோற்றத்தில் வயதில் முதியவர் குடுமி சகிதம் வழுக்கை முன் பின் மண்டையோடு
‘அங்க எதுக்குப் போறே? வாசிக்கப் போறயா?’ என்றார் அட்ரஸ் சொல்லாமல்.
‘நானென்ன குன்னக்குடி வைத்தியநாதனா கோவை பிரகாசா வயலின் வாசிக்க?’
வாசிப்பது என்பது அவவளவு மரியாதைக்குரியது என்று அவனுக்கு பாவம் அந்த வயதில் புரியவில்லை. அது தப்பில்லை முதிர் வயதில் புத்தியில் எட்டாதிருப்பது புண்ணியமில்லையே??!!
‘வாசிப்பு எதுவாயிருந்தாலும் வாசிப்பவருக்கு உலகில் ஒரு தனி மரியாதை உண்டு. இந்த பீடிகை எதுக்கு?’
ஒன்றை எழுதுகிற எழுத்தாளனைவிட அதனை வாசிக்கும் வாசகன் வானளவு உயர்ந்தவன். எழுத்திலும் சரி, பேச்சிலும் சரி வாசகனை, சுவைஞனை காயப்படுத்திவிட்டு யாரும் உச்சி தொட முடியாது!
எழுத்தாளனுக்கு அவன் கதைகள் எல்லாம் உயர்வுதான் ஆனால் சில கதைகளின் ‘லைக்’ ஆயிரங்களை அரை மணியில் எட்ட, சில அரை நாளாகியும் அன்ன நடை போட, தவறு எங்கே என்று கண்டறிய வேண்டிய கடமை எழுத்தாளனுக்கு உண்டு!
கதை பிரபலமாகாமைக்குப் ‘பிரசன்னம்’ பார்க்க வேண்டாம். எழுத்தை படித்தால் எங்கே தவறு என்று புரிந்துவிடப் போகிறது…!
‘அவன் இவன் போடா வாடா’ என்கிற ஏகவசனம் எங்காவதிருந்தால் வாசிப்பவன் வருந்துவான். காரணம் அந்த வார்த்தைகள் அவனை அடையாளப்படுத்தியதாக அவன் அனுமானித்துக் கொள்ள வாய்ப்புண்டு.
பிரபலமாகாமைக்கு வாசிக்கறவாளே காரணம்..! அதனாலதான் அந்தப் பெரியவர் வாசிக்கப் போறியா? என்று வாசிக்கும் வாசகனுக்கு உரிய மரியாதையை உரித்தாக்கினார்.
‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு!’ சென்னை பல படைப்பாளிகளை உருவாக்க ஒரே காரணம் வாசகனுக்கு அவர்கள் தரும் அலாதி மரியாதைதான்.
வாசிப்பது வயலினாகட்டும் வார்த்தைக்ளாலான கவிதை கதையாகட்டும் எதுவும் சரஸ்வதி கடாட்சத்தோடு சம்மந்தப்பட்டது. சர்வ ஜாக்கிரதையாக இருக்கணும்னு செல்வராஜ் புரிந்து கொண்டது சென்னை மயிலாப்பூர் சம்பவத்தால்தான்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உதிர்ந்த மலர்
என்.ஸ்ரீதரன்
July 20, 2026
ஒட்டு
ஜே.எம்.சாலி
July 20, 2026
கல்விக் கண்
இரா.கலைச்செல்வி
July 20, 2026
