படியில் பயணம் நொடியில் மரணம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 3,468 
 
 

வீட்டிலிருந்து கல்லூரிக்கு விரைவாக கிளம்பி கொண்டிருந்தான். கண்ணாடியின் முன் நின்று தலையை சீவி பின்பு அதனை களைத்துவிட்டு அவன் முகத்தை பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். கழுத்தில் அழகான ஒரு வெள்ளி செயின் கையில் ஒரு காப்பு போட்டிருந்தான். அவன் பிறந்த நாளைக்கு அந்த செயின் ரமேஷ் அவனுக்கு பரிசாக கொடுத்தது. அம்மா சமையல் அறைக்குள் இருந்து அவனை அழைத்தார்!

“வாடா மதன் சாப்பிட எனக்கு வேலைக்கு நேரமாச்சு”

“இந்தா வர்றேன் மா”

தட்டில் ஆவி பறக்க இட்டிலியும் தேங்காய் சட்னியும் இருந்தது. அதனை சாப்பிட்டுவிட்டு உடனடியாக புளியங்குளம் பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தான். நரிக்குடியில் இருந்து அந்த பேருந்து அருப்புக்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தது. புளியங்குளம் பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது. புளியங்குளத்தில் சில நபர்கள் இறங்கினார்கள். மதன் பேருந்தில் ஏறினான். படிக்கட்டு பக்கத்தில் நின்று பயணித்துக் கொண்டிருந்தான்.

கண்டெக்டர் “உள்ளே வாங்கடா! இல்லேன்னா இறங்கி போங்கடா!” என்று வசை பாடிக் கொண்டிருந்தார்.

மதன் அவன் நண்பர்களுடன் பேருந்தில் பேசிக்கொண்டே படிக்கட்டில் நின்று கொண்டு வந்தான். மதன் நடத்துனர் சொன்ன வார்த்தைக்கு செவி சாய்க்கவே இல்லை. டிரைவர் படியில் தொங்கும் மதனை தன்னுடைய இடது பக்க கண்ணாடியில் பார்த்து வசை பாடிக் கொண்டே இருந்தார். அது அவன் காதில் கேட்டது.

“உங்க வேலைய பாருங்க எனக்கு தெரியும்!” என்று திமிராக பேசினான்.

டிரைவர் அவனுடைய பேச்சை கண்டு கொள்ளவில்லை.

ஒரு வழியாக பேருந்து திருச்சுழி பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது. அங்கேயும் சில பேர்கள் இறங்கினார்கள். சில பேர்கள் ஏறினார்கள். கண்டெக்டர் எல்லோரையும்
“உள்ள வாங்கம்மா! உள்ள வாங்கடா! உள்ள வாங்கடா! ஏன்டா? இப்படி உசுர வாங்குறீங்க!” என்று வசைப்பாடிக்கொண்டே இருந்தார். மதன் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வந்து கொண்டிருந்தான்.

அவனுடைய தலைமுடியை கையால் கோதி விட்டு மற்ற பெண்கள் பார்ப்பார்களா? என்று ஒரு புறம் மற்ற பெண்பிள்ளைகளை ரசித்துக் கொண்டிருந்தான்……

தமிழ்பாடியின் வளைவில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது தன்னுடைய கை வழுக்கி கீழே விழுந்து பேருந்தின் டயர் மதன் மேல் ஏறி அவனுடைய உயிர் அங்கேயே பிரிந்து உடல் சிதைந்து போனது. பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது. அவனுடைய தாய்க்கு நண்பர்களால் தகவல் கொடுக்கப்பட்டது. நண்பர்கள் கண்கலங்கி நின்று கொண்டிருந்தார்கள்.

அவனுடைய சடலம் அருப்புக்கோட்டை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிகை அலங்காரம் சிதைந்து போனது!

முக அலங்காரம் மறைந்து போனது!

மதன் உயிர் பிரிந்து போனது!

மறுநாள் காலையில் நரிக்குடியில் இருந்து அந்த பேருந்து அருப்புக்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தின் படிக்கட்டின் அருகில்

“படியில் பயணம் நொடியில் மரணம்”

என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது…

பெ.சிவக்குமார் பெயர்: பெ.சிவக்குமார் கலைஞர்: நாட்டுப்புற பாடல்கலைஞர் ஈமெயில்: sivakumarpandi049@gmail.com முகவரி: குலசேகரநல்லூர், விருதுநகர் மாவட்டம். சாதனைகள் : மாநில அளவிலான நாட்டுப்புற பாடல் போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு. மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாம் பரிசு. மண்டல அளவில் முதல் பரிசு. பெற்ற விருதுகள் : இளம் கலைஞர், கலைச்சுடர், நாட்டுப்புறக் கவிஞர், கலைரத்னா, சிறந்த மாணவர் விருது, இளம் ஆராய்ச்சியாளர் விருது, தமிழ்க்கலைமணி, நல்இசைத்திலகம்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *