கம்பீரம் – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,869
கம்பீரம் ததும்பும் உடல் மொழியோடு வாத்தியார் கனகசபை, அன்பழகனை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அன்பழகன், கார்ப்பரேஷன் ஆபிஸில் உயர் அதிகாரி.
“அங்கே வர்றாரே! அந்தக் காலத்தில் எனக்கு பள்ளியில் கணக்கு வாத்தியார். கண்டிப்பானவர். ஏதாவது தப்பு பண்ணினா உருப்படாத பய மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று கண்டபடி திட்டுவார். வகுப்பிலேயே அதிக திட்டு வாங்கினது நானாகத்தான் இருப்பேன்’
அன்பழகன் தனது தலைமைக் கிளர்க் கந்தசாமியிடம் கூறிக்கொண்டிருக்கும்போதே வந்தமர்ந்தார் கனகசபை.
“தம்பி, நான் ரிட்டையர் ஆன வாத்தியார். ஒரு வீடு கட்டலாம்னு இருக்கேன். அதற்கான அப்ரூவ்டு சர்டிஃபிகேட் வேணும். எல்லார்க்கிட்டேயும் கையெழுத்து வாங்கிட்டேன். உங்க கிட்டதான் பாக்கி.’
“அதனால என்ன சார். உடனே போட்டுத் தர்றேன்.’
கையெழுத்து போட்டுக் கொடுத்தார் அன்பழகன்.
நன்றிப் பெருக்கோடு வெளியேறினார் வாத்தியார்.
“ஏங்க சார்… உங்க பழைய வாத்தியார்கிட்ட உங்களை ஞாபகப்படுத்தியிருக்கிலாமே’ என்றார் தலைமை கிளர்க்.
“அவர் ரொம்ப கம்பீரமானவர். எதற்கும் வளைந்து கொடுக்காதவர். இப்போது பழசை ஞாபகப்படுத்தினா அன்று அப்படி திட்டியவனிடம் போய் உதவி கேட்கிறோமே என்று அவரது மனம் புண்படுமில்லையா?’
அதிகாரி அன்பழகனின் வார்த்தை அவரை மேலும் உயர்த்தியது.
– செல்வராஜா (ஜூலை 2011)
தொடர்புள்ள சிறுகதைகள்
இவளே என் மனைவி!
அ.லஷ்மி
June 20, 2026
யார் அது?
இரஜகை நிலவன்
June 20, 2026
கந்தையரின் கடைசி வித்து!
மா.சித்திவினாயகம்
June 14, 2026