விரல்
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாணி வெறித்துப் பார்த்தாள்.
கோபியின் விரலிலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. தரையில் குருதிச் சொட்டுகள் காய்ந்து பொட்டாகிக் கொண்டிருப்பதை வாணி கவனித்தாள். மயக்கம் வரும் போல் இருந்தது.
வெட்டுண்ட விரலுடன் பிரமை பிடித்த மாதிரி கோபி நின்றிருந்தான். இடது கை சுண்டு விரல் சிதைந்து போயிருந்தது.
அவன் நிமிர்ந்தபோது அவளும் நிமிர்ந்து பார்த்தாள்.
அவனுக்கு எப்படியோ, ஆனால், வாணிக்கு நடுக்கமாக இருந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட விரலைப் பிடித்துக் கொண்டு ஒருவித பரபரப்பும் இல்லாமல் கோபி நிற்கிறானே என்ற மலைப்பு அவளுக்கு…
இப்பொழுது என்ன செய்யலாம்? கோபியின் கையைப் பிடித்து வழிகிற குருதியைத் துடைத்துவிட்டு, ஒரு கட்டு போடலாம். அது போதாது. விரல் சிதைந்திருக்கிறது. பழக் கத்தி இத்தனை வேகத்தில் பதம் பார்த்துவிடுமா என்ன?
வாணி நெடுமூச்சு விட்டபடி மறுபடியும் கோபியை நிமிர்ந்து பார்த்தாள். பாதியளவுக்குத் துண்டாடப்பட்ட ஆப்பிள் பழத்தையும், ரத்தச் சுவடு பதிந்த கத்தியையும் பார்த்தாள்.
“டாக்டரைக் கூப்பிட வேண்டியது தான். இஞ்செக்ஷன் போட்டு மருந்து வைத்துக் கட்ட வேண்டும்…”
“டாக்டரைக் கூட்டியாரட்டுமா?”
வாணி கேட்டாள். பதில் இல்லை.
நெருங்கவும் முடியாமல், விலகவும் தோன்றாமல் மருண்டு போய் நின்றாள். இந்த நேரம் யாரும் இல்லாமல் போனார்களே என்று வாணி மறுகிக் கொண்டிருந்தபோது
“கோபி, என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா நிக்கிறே?” என்ற குரலுடன் நீலா வந்தாள்.
வெளியே போயிருந்த அண்ணி இத்தனை விரைவில் திரும்பி விடுவாள் என்று கோபி எதிர்பார்க்கவில்லை. ரத்தக் காயத்தை மறைக்க முடியுமா? முடியவில்லை. தரையில் படர்ந் திருந்த குருதிப் பொட்டுகள் காட்டிக் கொடுத்து விட்டன.
தக்க சமயத்தில் நீலா – எஜமானி-வந்து சேர்ந்தாளே என்ற நிம்மதி வாணிக்கு
“வெரல்லேருந்து ரத்தம் கொட்டுது. ஒண்ணும் பண்ணாம நிக்கிறியே, கோபி என்ன நடந்ததுன்னு சொல்லு, கோபி..”
நீலா துடித்துப் போனாள். வாணிக்கும் துடிப்புதான்.
“பழம் வெட்டறப்ப..” என்று அவன் இழுத்தான்.
“நீ எதுக்குக் கத்தியைத் தொட்டே கோபி? வாணி கிட்டே சொன்னா வெட்டித் தந்திருக்க மாட்டாளா? வம்பை வெலைக்கி வாங்கியிருக்கியே, கோபி. டாக்டரைக் கூட்டிட்டு வரச் சொல்றேன்!”
வேண்டாம் என்றான் தானே போய் வருவதாகச் சொன்னான்.
“நீதான் வெரலை வெட்டிக்கிட்டு நிக்கிறே.. இவளுக்கு புத்தி வேணாம்? என்ன ஏதுன்னு கேக்கலையா இவ? இது தான் வேலைபாக்கற லட்சணமா? பொறுப்பு இருந்தாத்தானே?”
நீலா வெடித்தாள். மெளனமாக, நீலாவின் பார்வையில் படுகிற மாதிரி ஓரமாக ஒதுங்கி நின்றாள் வாணி.
“இந்த நேரத்திலே இப்படி வெரலை வெட்டிக்கிட்டு நிக்கறியே எனக்கு ஒண்ணுமே ஓடலே!”
நீலா ஆதங்கப்பட்டாள். நியாயம் இருக்கிறது கல்யாணத்திற்காகச் சில வார லீவில் வந்திருக்கும் இளம் எஞ்சினியர் காயத்துடன் நின்றால் வருத்தமாக இருக்காதா? கோபிக்குக் கால்கட்டு போட்டு விட்டால் தங்கள் கவலை தீர்ந்தது என்ற எண்ணத்தில் வெகுவாக முயன்று அவணை வரவழைத்திருக்கிறார்கள். சிங்கப்பூருக்கு. புருணையில் அவனுக்கு வேலை.
கையில் கட்டுப் போட்டுக்கொள்ள அவன் டாக்டரிடம் போயிருக்கிறான்.
நீலாவுக்குப் பொறுக்கவில்லை.
‘இந்தப் பிள்ளை ஏன் கத்தியை எடுக்க வேண்டும். கை விரலை வெட்டிக் கொள்ள வேண்டும்? பொறுப்பில்லாத பிள்ளை..!’
வாணியின் பக்கம் அவள் பார்வை திரும்பியது.
“இவ்வளவு ரத்தம் கொட்டுறவரைக்கும் நீ பாத்துக்கிட்டிருந்தே இல்லே? கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கணும். கவலை இருக்கணும், வெளிநாட்டிலேருந்து இங்கே வந்த பணிப்பெண் தானே? உங்கிட்டே அதையெல்லாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.?”
வாணி எதிர்ப்பின்றி நின்றாள். நீலா ஆத்திரப்படும்போது அடங்கி நிற்க வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும். வாய் திறக்கவில்லை. கொஞ்சம் நிம்மதி
“ஆபத்து ஒண்ணுமில்லியே?”
கொழுந்தனின் கைக்கட்டைப் பார்த்தபடி நீலா கேட்டாள்.
‘இல்லை’ என்று தலையை ஆட்டினான் கோபி. உண்மையைச் சொன்னால், அண்ணியும் அண்ணனும் ஆர்ப்பாட்டம் பண்ணிவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.
சிகிச்சைக்குப் போன இடத்தில், டாக்டர் அவனுக்கு இஞ்செக்ஷன் கொடுத்து விரலுக்குத் தையலிட்டு மருந்து போட்டுக் கட்டி அனுப்பினார் என்பதைச் சொன்னால் அந்த வீட்டில் நடப்பது வேறு கண்டு கொள்ளாமல் உட்கார்ந்து விட்டான் கோபி.
“கோபி, பெண் பார்க்க எப்பவர்றீங்கன்னு கேட்டு அரிச்சி எடுக்கிறா. எங்களுக்கு எடம் பிடிச்சிருக்கு. ரொம்ப அழகான பெண்.. படிப்பும் இருக்கு. நல்ல வசதியும் இருக்கு..” நீலா விவரித்தாள்,
“இருக்கட்டும். ஆனா, இன்னிக்கோ நாளைக்கோ யாரையும் நான் பார்க்கறதா இல்லே.” என்றான் அவன்.
“அதெப்டி, கோபி… ஒவ்வொரு நாளா தள்ளிப் போட்டுட்டுப் போனா உன் லீவு முடிஞ்சிடாதா? அப்புறம் வெறும் கைக் கட்டோடத்தான் திரும்பணும்…”
“ரெண்டு நாள் அவகாசம் குடுங்களேன்!” நீலா அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
மூன்றாம் நாள்.
தேனீரைக் கொண்டுவந்து வைத்த அண்ணியை தயக்கத்தோடு பார்த்தான் கோபி.
‘இன்னிக்கு நான் வாயைத் தெறக்கலாம். இல்லே?” என்றாள் நீலா.
கோபியின் முகத்தில் மெல்லிய புன்னகை.
“அப்ப பெண் வீட்டுக்காரங்களுக்கு சொல்லியனுப் பட்டுமா? எப்ப எப்பன்னு தொளைச்சி எடுக்கிறாங்க. புள்ளைப் பூச்சியாட்டம்!”
கோபி மௌனமாக இருந்தான்.
“ஏன் பேசாம இருக்கே, கோபி?”
“உங்ககிட்டே எப்படிச் சொல்றதுன்னு தெரியலே.”
“என்ன வெக்கம்? ஆம்பளைப் புள்ளையா, அழகா, துணிச்சலா சொல்லு கோபி. மனசிலே என்ன இருந்தாலும் சொல்லணும், புரிஞ்சதா?”
“நான்…நான்..” – இரண்டு நிமிஷம் தயக்கம். பிறகு அதெல்லாம் போன இடம் தெரியவில்லை. சொல்ல விரும்பியதைச் சொல்லிவிட்டான். பாரம் இறங்கி விட்டது போல் உணர்ந்தான். இப்பொழுது நீலாவின் மனம் தான் கனத்துப் போயிற்று.
கோபிக்குப் பதில் சொல்ல முடியாத படி ஒரு குழப்பம். படிப்படியாகக் கடந்து உச்சிக்குப் போய்க் கொண்டிருந்தவனை கீழே உருட்டித் தள்ளிய மாதிரி பதறிப் போனாள் நீலா.
“இதுதான் என்னோட முடிவு. இதுக்கு மேலே உங்க இஷ்டம்!” – கோபி தீர்க்கமாகச் சொல்லி விட்டான்.
தம்பியின் தீர்மானம் அண்ணனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது பேசிப் பார்த்தார்.
“இல்லேன்னா எனக்குக் கல்யாணமும் வேண்டாம்… காட்சியும் வேண்டாம். இன்னும் ரெண்டு வாரம் உங்களோட இருந்துட்டுப் போயிடறேன்” என்றான் கோபி.
“இதுக்கு மேலே நாங்க ஒண்ணும் சொல்லப் போறதில்லே. உன் இஷ்டப் படி எல்லாம் நடக்கும். சரிதானே?” என்றாள் நீலா.
அவசரக் கல்யாணம்தான்!.
யாரும் எதிர்பார்த்திராத விதத்தில், ஒரே வாரத்தில் கோபியின் திருமணம் நடந்திருக்கிறது. தாமதப் படுத்தினால் கோபி வந்த வேகத்தில் திரும்பி விடுவானோ என்ற அச்சம் நீலாவுக்கு… அவன் அண்ணனுக்கும் தான் பரபரவென்று திருமணத்தை நடத்தி வைத்து விட்டார்கள்.
அறை முழுவதும் மையலூட்டும் நறுமணம். கோபியை நெடுநேரம் காத்திருக்க விடாமல் புதுமணப் பெண், புதுப்புடவை சரசரப்புடன், பூங்கோதையாக வருகிறாள். நாணப் போர்வையைச் சுற்றிக் கொண்டு தரையைப் பார்த்துக் கொண்டிருப்பவளின் கரத்தைப் பற்றியிழுத்து அருகில் அமர்த்திக் கொள்கிறான் கோபி.
புது அனுபவம். உள்ளமெல்லாம் துள்ளல். துடிப்பு- அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.
கன்னத்தை வருடிப் பார்த்தான்.
அந்த மேனியின் நடுக்கத்தை உணர்ந்தான்,
கண்களின் மருட்சியை அளந்து பார்த்தான்.
இமைகளின் சிறகடிப்பை இமைக்காமல் அவன் பார்த்தபோது, காந்த அலைகளைத் தாங்கிக் கொள்ள மாட்டாதவள் போல் முகத்தை மூடிக்கொள்ள முயன்றாள்.
அந்தக் கரங்களை இழுத்தவன்,
காயம் ஆறிப் போயிருந்த அவனுடைய கைவிரலை அவளுடைய கைக்குள் புதைத்தான்!
“நான் சொல்ல நினைச்சதையெல்லாம் உன்கிட்டே இப்ப சொல்லணும் போல இருக்கு. சொல்றேன். கேப்பியா?”
அவள் மெல்லத் தலைதூக்கினாள். அதனால் நெஞ்சம் முழுவதும் படபடப்பு.
“உன்னை என்னிக்குப் பாத்தேனோ, அப்பவே உன்மேலே எனக்குக் கண் அடைஞ்சே தீரணும்கிற வேகம். மோகம்… அண்ணி வீட்லே இல்லாத நேரம் பாத்து உன்னைத் தீண்ட வந்தேன். நீ கைக்கு எட்டின பழம்னு நெனைச்சேன். ஆனா, கற்பு விஷயத்திலே நீ பதம் பாக்கற கத்திங்கிறதை நிரூபிச்சிட்டே ஆனாலும், உன்னை என்னாலே ஒதுக்க முடியலே. வேலைக்காரப் பெண்ணுன்னு உன்னை வித்தியாசப்படுத்த முடியலே. – உன்னையே மனசிலே வரிச்சி, நீயும் ஒரு தழும்பை உண்டு பண்ணிட்டே. இதைப் பாத்தியா?” கோபி அந்த விரலைக் காட்டினான்.
வாணியின் கண்களில் கலக்கத் திரை. அவள் வெட்டிய விரல் அல்லவா?
“வாணி, நீ இன்னொருத்தன் மனைவியானா, என்னைத் தொட்ட ஒருத்தனுடைய வெரலையே வாங்கினேன்னு சொல்லிக் காட்டற சந்தர்ப்பம் வரலாம். அது மாதிரி நான் இன்னொருத்தியைத் தீண்டினாலும் எனக்கு அந்த நெனைப்பு வருமில்லையா? உன்னையே சொந்தமாக்கிக்க ஒத்தைக் கால்லே நான் நின்னேன். சரிதானே?” என்றான் கோபி.
அவனுடைய இறுக்கத்திலும், வாணி உரிமையோடு அந்த விரலை வருடினாள்.
– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.