கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,102 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

தமிழ் எழுத்துக்களில் ‘ழ’ – என்னும் எழுத்து தமிழுக்குச் சிறப்பு தருவது.

தமிழ் மொழியைத் தவிர, பிற எந்த மொழியிலும் ‘ழ’ என்று உச்சரிக்கக்கூடிய எழுத்து கிடையாது. அதனால் புலவர் பெருமக்கள் ல, ள என்ற எழுத்துக்களோடு இதனைச் ‘சிறப்பு ழகரம்’ என்றே கூறுவர்.

இந்தச் சிறப்பு ‘ழ’ – ஒலி – தமிழ் மக்கள் சிலரால் உச்சரிக்கப்படுவதில்லை.

திருச்சிக்குத் தெற்கே சில ‘ழ’ளை ‘ள’ ஆக உச்சரிப்பர்.
(எ – டு) ‘ஐயா, கடைக்காரரே உங்களிடம் வாளபளம் உண்டுமோ?’ என்பர்.

திருச்சிக்கு கிழக்கே, தஞ்சை மாவட்டத்தில் சிலர் ‘ழ’வை ‘ஷ’ ஆக உச்சரிப்பர்.
(எ – டு) மார்கழித் திருவிழா – (வியாழக்கிழமை)

இதனை மார்கக்ஷதித் திருவிஷா வருகிறது என்றால் விசாஷக் கிழமையில் வருகிறது என்று விடையும் கூறுவர்.

இனி, தமிழகத்து வடக்கே சென்னை போன்ற இடங்களில் சிலர் ‘ழ’வை ‘ஸ்’ ஆக்கிப் பேசுவர்.
(எ – டு) இழுத்துக்கொண்டு – என்பதை ‘இஸ்த்துக்கினு’ என்பர்.

திருச்சிக்கு மேற்கே கோவை போன்ற இடங்களில் சிலர் – ‘ழ’வை ‘ய’ ஆக ஒலிப்பர்.

வாழப்பழத்தை – வாயப்பயம் என்று கூறுவர்.

நான் ஒருதடவை கோவைக்கு சென்றபோது – கடைத்தெருவில் – வாழைப்பழத்தை விற்கும் ஒருவன், ‘வாயப்பயம்’ – என்றே கூறி விற்றுக் கொண்டிருந்தான்.

நான் அவனைப் பார்த்ததும், அவன் என்னிடம் வந்து, தட்டை இறக்கி வைத்து – ‘வாயப்பயம் வேணுங்களா’ என்றான்.

எனக்கு வியப்பு ஒருபுறம்; கோபம் ஒருபுறம். ‘நீ எந்த ஊர் அப்பா’ என்றேன்.

அவன் – ‘கியக்கேங்க’ என்றான்.

நான் (கிழக்கு) கியக்கேயிருந்து இங்கே எதுக்கு வந்தீங்க? – என்றேன்.

அவன், (புயக்க – பிழைக்க) புயக்க வந்தேங்க – என்றான்.

கியக்கேயிருந்து புயக்க வந்தேன் – என்றதும் எனக்குக் கோபம் அதிகமாகியது.

“ஏம்பா, தமிழை இப்படிகொலை பண்ணுகிறீர்கள்?” என்று அதட்டிக் கேட்டேன்.

அவன் இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டுக் கொண்டே, அது எங்க வயக்கங்க என்றான்.

நான் உடனே அவனை விட்டு எழுந்தே போய் விட்டேன்.

தமிழுக்கே உள்ள சிறப்பு ‘ழ’கரம். இது தமிழ் மக்களிடத்துப் படுகிற காட்டை இது நன்றாக விளக்கிக் காட்டுகிறது.

இது தவறு.

சிறியவர்களோ பெரியவர்களோ யார் பேசும்

போதும் சொற்களைச் சரியாக உச்சரிக்கப் பழகிக்

கொள்வது நாட்டுக்கும் நல்லது; மொழிக்கும் நல்லது; நமக்கும் நல்லது.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *