ரெட்டைக்கீத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2025
பார்வையிட்டோர்: 4,899 
 
 

கிழக்கிலும் மேற்கிலும், தண்ணீரோடு வாலாக நீண்டிருந்த கண்மாய்கரையில் இருந்தது அந்த கிராமம். வடக்கிலும் தெற்கிலும், இதேபோல் நீர்நிலைகள் ஆகர்ஷனம் செய்திருந்தால், சூரம்புளி என்ற பாடாவதி கிராமம், தீபகற்பமாகியிருக்கும்.

நல்ல வேளை,வலப்புறமும் இடப்புறமும் இருந்த தலா ஏழெட்டு வீடுகளால், அதிர்ஷ்டவசமாக ஊருக்கு ஒரு தெரு வாய்த்தது. காலையிலும், அந்திசாயும் நேரங்களிலும் ‘விளையாடுறோம்’ என்ற பெயரில், இருக்கும் ஒரு தெருவையும் அல்லோகலப்படுத்தி வைத்தன சின்னஞ்சிறுசுகள். இந்த அதகளத்தை முடித்தபின்தான்,வீடு திரும்பி சோற்றுப் பருக்கையில் கை வைப்பது என்பது போல,பாடாய்படுத்திக்கொண்டிருதார்கள்.

அந்த ஆட்டம்பாட்டத்திற்கிடையே, ஒலிநாடாக்களில் வெட்டி எடுத்த சரடுகளை, சைக்கிள் ஹேண்ட் பார்களில் சடையாகப் போட்டுக் கொண்டு, மணல்மேடிட்ட தெருவை, பிளப்பதுபோல் போனான் ராமச்சந்திரன்.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை, தண்ணீரைப் பார்க்கும் அவன் உடம்பில், தோற்றத்தை மாற்றியிருந்தது உடுத்தியிருந்த புதுத்துணிகள். மோனிகா லெவென்ஸ்கியைக்கூட, பார்வையாலேயே விழ வைக்கும் கிளின்டனைப் போலவும், ஈராக் அதிபரைப் போலவும் வீராப்புடன் பேசித்திரிகிறவன், அன்றைக்கு ஏனோ வாய்க்கு பூட்டுப் போட்டதைப் போல, தானுண்டு தன் வேலையுண்டு என, வழக்கம்போல தூங்கி விட்டான். அய்யோ பாவம்..!

வைகாசி போய் ஆனி பிறந்தது.அவன் ஊரில் இருந்தது சில வீடுகள்தான். என்றாலும்,அதில் விரல் நீட்டி அடையாளப்படுத்தும், சிற்சில வீடுகளுக்கு முன்பாக, வாழை மரங்களும் கீற்று கொட்டகைகளும் சோபையை உருவாக்கியிருந்தன. புண்ணாகி உரிந்தபோன சுவர்கள்மறைக்கப்பட்டிருந்ததால். இது அடுத்த சில நாட்களில் அகற்றப்பட்டன. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த, செவ்வாயில் பால்மணம் மாறாத அந்த வாண்டுகளுக்கு, கால்கட்டு (திருமணம்) போட்டுவிட்டதாக அரசல் புரசலாக பேச்சு. ஏற்கனவே,அந்த ஊர்க்காரர்ககளுக்கு வாய்நீளம். இது போதாதா..? பொழுதெல்லாம் இதுபற்றி பேசுவதற்காகவே, அந்த ஊர்வாய்கள அகலவாக்கிலும், நீளவாக்கிலும் திறந்தே இருந்தன.

ஈவேராவுக்கு தாடி வளர்ந்து தந்தை பெரியாராகவும், அண்ணா பேரறிஞராகி முழுமைபெற்ற பிறகும், துரைக்கு திருமணம் செய்ய அந்த குடும்பத்தில் யாரும் அவசரப்படவில்லை. சீர்திருத்த உணர்வா? (நல்லாச் சொன்னீங்க போங்க,அந்தப்பேச்சே புடிக்காது அவங்களுக்கு) மெத்தனமா..? தெரியவில்லை.. தனது கெளரவத்திற்கு, கிஞ்சித்தும் பங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளும், தன்மையான மனிதன் என்பதால்,இதை துரையும் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

நாட்கள் நகர்ந்தன.. காலண்டர்கள் மாற்றப்பட்டன..வயது 27ஐ தாண்டியது. பக்கத்தில்,கடைத் தெருக்கள் உள்ள திருவெற்றியூர் என்ற கிராமத்திற்குச் சென்ற துரை, முத்து கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தான். அப்போது, அம்மன் ஆலயத்தின் வடக்கு பார்த்த வாயிலிலிருந்து வெளியேறிய பெண்கள், பூக்கூடையுடன் கிழக்கு நோக்கி நடந்தார்கள்.

வந்தவர்களில் ஒருத்தி, முத்து கடையின் அடுப்பிலிருந்து சிதறிய, வெந்த விறகின் நிறத்தோடு இருந்தாள். இருந்தாலும் இடையை நெளித்து நளினமாக நடந்து வந்தது கூடுதலாக கவர்ச்சி சேர்த்திருந்த்து. மார்பின் அழுத்தத்தில், உடுத்திய ரவிக்கையின் கனம் தெரியும் அளவுக்கு, சேலை அணிந்திருந்ததாள். வெட்டியது போக, பனம்பழம் இரண்டைச் கமந்திருக்கும் பனைமரம் போல், நீண்டு வளர்ந்திருந்தவள் துரையை கொஞ்சம் கவர்ந்தாள். இல்லை… நிரம்பவே ஈர்த்துவிட்டாள்போல் தெரிகிறது. வயதின் வறட்சியும், மாப்பிள்ளை கேட்டுவராத அதிருப்தியும், துரையை வாலிப வேட்கைக்கு தூண்டியது. ‘ம்ம்ஹூம்…விளையாட வேண்டாமா…?’

அடுத்தடுத்து, இதே சோலியாகத் திரிந்தது போல கோவில்கள், திருவிழாக்கள், தெருக்கூத்துகளில் இருவரும் யதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. ஸ்பரிஸிக்காமல், பார்வையால் நிகழ்ந்த மனப்பரிவர்த்தனை, அவர்களையே அறியாமல் நடந்தது. ஒருநாள், ஆடானைக்கு சென்ற துரை, பள்ளிக்கு அருகிலிருந்த பாலத்தில் அனாமத்தாக உட்கார்ந்திருந்தான். எதிரே, காய்கறிப் பையோடு வெளியேறியவளின் கண்கள், தூர மற்றும் கிட்டப் பார்வைகளால் அப்பகுதியை மேய்ந்தன. எதிர்பாராமல் துரையைப் பார்த்தவள், அவன் அமர்ந்திருந்த திசை நோக்கி நடந்தாள்.

பாலத்தை நெருங்கி அவன் எதிரே நின்றவள் ‘இருபது வயசையா, இருப்பது எல்லாம் உனக்கையா’ என்பதுபோல், அவனைப் பார்த்து வாட்டமாக நெளிந்தாள். நாக்கால் உதடுகளை மேலும் கீழும் ஈரமாக்கியவள், அகன்ற வாயை கொஞ்சமாய் திறந்தாள்.

“என்ன இப்டி தனியா இருக்கீங்க.. கூட யாரும் வரலையா?”

“சாமி கும்பிட்டு வந்தேன், அது முடிஞ்சது..கொஞ்சம் காலாறிட்டு போகலாமேனு, இங்கே வந்து உக்காந்து இருக்கேன்”

“சாமிக்கிட்டவேண்டுற அளவுக்கு என்ன நடந்துபோச்சு…உங்களுக்கு?”

“எட்டுக்கட்டிலேர்ந்து, மூணு கட்னவன் வரை எங்க வீட்ல இருந்தாங்கே, அதெல்லாம் வேணாம் எனக்கு, ஒண்ணு கட்ணா போதும், அதுக்கு நல்ல மனுசியா ஒருத்தியை, காட்டுனு வேண்டிக்கிட்டேன்”

பூடகமாக சொல்கிறான் என்பதை, பருவ வயதிற்கேற்ப புரிந்து கொண்டவள் ’கவலைப்படாதீங்க, இன்னைக்கி வாங்க எங்க வீட்டுக்கு போகலாம்’என அழைத்தாள். நடக்காத ஒன்று நடந்துவிட்டதைப்போல மனதிற்குள் பூரித்தவன், அவளோடு புறப்பட்டான். வீடு போய் சேர்ந்தார்கள்.

அவளது தங்கை மட்டும்தான் இருந்தாள். சும்மா இல்லை..பூஞ்சையேறிய பணியாரத்தை, வாய் திறக்க முடியாத அளவுக்கு உள்ளே தள்ளி, வீங்கிய கன்னத்தோடு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு கதவுகளோ, வாயிலில் காவலுக்கு நாய்கள் கூட இல்லாத அந்த வீடு, இரவு நேரத்தை சுதந்திரமாகக் கழிக்க உதவியது.

பேசினார்கள்… பேசினார்கள்.. நடுநிசியைக் கடந்தும் வாயை ஓயவிடவில்லை. திறந்தும்மூடியும், மூடியும் திறந்தும் கொண்டிருந்தார்கள்.

“உங்க பேரென்ன?” என, மூன்றாமவரின் காதுக்குள் நுழையாத, டெஸ்பல்லில் கேட்டான் துரை.

“கலாவதிங்க”

உச்சரிப்பில் காவுக்கு காலைப்போட்டு “காலாவதியா…? நல்ல பேரா இருக்கே… யாரு இந்தப் பேரை வச்சா?” என்றான்.

“அப்பா தாங்க, நா சின்னப்புள்ளேல சரஸ்வதிதேவி மாதிரி இருப்பேனாம், அதுக்காக இந்தபு பேரை வச்சதா சொன்னுச்சு..ஏதோ படிச்சு கிழிச்சமாதிரி”

“இப்பவும் அந்தப் பேருதானா..?”என குறும்பாக கேட்டான்.

“ஒருத்தருக்கு ஒரு பேரு தானங்க வெக்கெ முடியும், இப்ப நான் கருத்துப் போனதாலே, ‘கலா சகதின்னா’ பேரை மாத்துவாங்க என, குறுக்குவெட்டில் அகலமாகப்போன வாயால், அசிங்கமாக சிரித்தாள்.

கட்டாக்காலியாக இருந்த அவர்கள், ‘எத்தனை நாளைக்கு இப்படியே கடத்துவது’ என, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள். தாலி ஏறுவதற்கு முன்புவரை பேசிக்கொண்டே இருந்தவர்கள், புருசன் பொண்டாட்டி உறவுமுறையை, தன்னிச்சையாக எடுத்துக் கொண்ட பிறகு , அதற்கு நேரமில்லாதது போல் கொடிகளாக படர்ந்தனர்.ஏனோதானாக்களாக இருந்தாலும், தாம்பத்யத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததன. சூனாபானா மாதிரியும், சூனாபானாவிற்கு தம்பி மாதிரியும் இருந்த இரண்டு பேரையும், தெரிந்தவர்கள் மூலம், வேலையில் சேர்த்துவிட்டான் துரை.

தந்தைக்கான கடமையை நிறைவேற்றிய தகப்பனை, கைகழுவினர் பிள்ளைகள். தனது இஷ்டங்களின் தொகுப்பாய் இருந்த கணவனை, கழற்றிவிடும் எல்லைக்கே போனாள் கலாவதி.மகன்களிடமிருந்து வரும் வருவாய், அவள் கைகளையும், பைகளையும் நிறைத்தபோது, கருணையே இல்லாமல் கணவனை காறி உமிழ்ந்தாள்.

வரம்புமீறி வதைத்த இந்த துர்க்கதியால், பிறந்த வீட்டில் ஐக்கியமானான் துரை. குறிப்பறிந்து அவனுக்காக உதவிக்கரம் நீட்டிய தமக்கையாலும், மருமக்களாலும் மனைவியிடம் இழந்த சந்தோசம் திரும்ப கிடைத்தது. ஆனால் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, காதிற்கு வந்த மனைவி பற்றிய தகவல்கள், அவன் இதயத்தை உளிகொண்டு அடிப்பதாக இருந்தது. அவிந்து நெகிழ்ந்துபோன பலாச்சுளையின், இரட்டைக் கீற்றுக்குள் புகுந்த ஈயைப்போல துடித்துப்போனான்.

” என்னாச்சு, ஏன்டா இப்டி இருக்கே” என சின்னாத்தாமாரும், சகோதரிகளும் விசாரித்தார்கள். எப்போதும்போல மழுப்பியவன், ஒருநாள் வீட்டிலிருந்து வெளியே போனான். திரும்பவில்லை.. தேடினார்கள்.. ஒரு மரத்தடியிலிருந்து சவமாக மீட்கப்பட்டான். துஷ்டி கேட்கக்கூட செல்லாத மனைவி, வீட்டுக்கு வந்தவர்களிடம் கணவனைப் பற்றி, கண்ணியமற்ற புகார்களை அடுக்கினாள். அவள் அடுக்களைக்குள் நுழைந்தபோது, துஷ்டி கேட்கச் சென்றவர்கள் ‘அறுதாலி முண்டை’ என, வந்த வழியே நடந்தார்கள்.

அதில் ஒருத்தி “பாத்தீங்களா.. இவ ஏதோ நல்ல குடும்பத்திலே பொறந்தவ மாதிரி பேசுறா…என்றாள். தொடர்ந்து சென்றவள்’ஆம்பளைகதான், பொம்பளைகளை கடத்திட்டுப்போயி, கல்லாணம் பண்ணுவாங்கேன்னு கேள்விப்பட்ருக்கோம், மொதமுறையா, ஆம்பளையக் கடத்தி புருசனாக்குன மூதேவி, நாக்குலே நரம்பில்லாமப் பேசுறா ” என்றாள்.

கணவன் இறந்து மூன்றுநாள் வரை கூட, வைதவ்யவிரதம் அவளை நெருங்கவில்லை. இல்லை அவள் உடன்படவில்லையோ தெரியவில்லை. எப்போதும் போலவே, சிங்காரித்துக்கொண்டாள். இதில், வெடிப்பதற்காக வறண்டு,அசடு தேங்கியிருந்த உதட்டை மட்டும் மெருகேற்றாமல் விட்டிருந்தாள்.

மறுநாள் இருள் மூடிய ஏழுமணிக்கு, பஸ் நிறுத்தத்திலஅ இறங்கினாள். அவளை நெருங்கிய அறிமுகமான பெண்கள். ஆதங்கத்தோடு’அக்கா இப்பத்தாக்கா கேள்விப்பட்டோம், கவலைப்படாதீங்க’ என்றார்கள்.

”அதை விட்டுத் தள்ளுங்க’ என்ற பதிலோடு, அவர்களைக்கடந்தாள். மரியாதை இல்லாத இந்த அணுகுமுறையால், அலுத்துக் கொண்டார்கள் அந்தப் பெண்கள். அதில் ஒருத்தி பேசத் தொடங்கினாள்

”நீயேக்கா ஆயாசப்படுறே, புருசன் உயிரோட இருக்கும்போதே வெரட்டி விட்டவ இவ” இதுக்குப்போயி..என்று இழுத்தாள்.

”என்னடி சொல்றே ”

”ஆமாக்கா, அவருபோயி ரொம்ப வருசமாச்சு. நீ எழவு கேட்டுத்தான் ஆகனும்னா பொறுமையா இரு..இவ அக்கா தங்கச்சிகளோட நாலு புள்ளைக, ஒரே வீட்டுக்கு போயிருக்காளுக..அங்கே ஏதாவது நடந்தா போயி கேட்டுக்கலாம்”

வெறும்வாயை மென்று கொண்டிருந்தவர்கள் ’சரி வாங்கடி போவோம்’ என, பேசக்கிடைத்த வம்பின் வீரியம் சுணங்கிப் போகாத அளவுக்கு, முணுமுணுத்துக் கொண்டே வீடு போய்ச் சேர்ந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *