கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,885 
 
 

ஓரு அரசனின் அவையில், அறிவுக் கூர்மையும் சாதுர்யமும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னன் எரிச்சலடைந்தான். அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று முடிவு செய்தான்.

ஒருநாள் அவையில், மன்னன் புத்திசாலியான அந்த அமைச்சரைப் பார்த்து, “முட்டாள்களிடம் பழக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான். அதற்கு அந்த அமைச்சர் எவ்வித பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார்.

மௌன மொழிஅவர் பதில் தெரியாமல் இருக்கிறார் போலும் என்று நினைத்த மன்னன், “என்ன அமைச்சரே! நான் கேட்ட கேள்வி உமது செவிகளில் விழவில்லையா? முட்டாள்களுடன் பழக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?’ என்று மீண்டும் கேட்டான்.

அதற்கும் பதில் கூறாமல் அமைச்சர் அமைதியாக இருந்தார்.

இதனால் கோபமடைந்த மன்னன், “என்ன, நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எதுவும் கூறாமல் விழிக்கிறீரே! உமது காதுகள் செவிடா? அல்லது என் கேள்விக்குப் பதில் தெரியவில்லையா?’ என்று கேட்டான்.

அமைச்சர், மன்னனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “மன்னர் பெருமானே! உங்கள் கேள்விக்கு உடனே பதிலளித்து விட்டேனே! நீங்கள்தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை!’ என்றார்.

உடனே மன்னன், “மூன்று முறை நான் கேட்டும் பதிலேதும் கூறாமல் மெளனமாக அல்லவா இருந்தீர்..!’ என்றான்.

அதற்கு அமைச்சர், “ஆம், அரசே! அதுதான் என் பதில். முட்டாள்களுடன் பழக வேண்டுமென்றால் மெளனம்தான் சாதிக்க வேண்டும்!’ என்றார்.

மன்னன் வாயடைத்துப் போனான்.

– செவல்குளம் ஆச்சா (மார்ச் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *