கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,426 
 
 

தேதி பதினைந்து ஆகியும் தன்னிடம் வேலை பார்க்கும் ராஜாவிற்கு சம்பளம் தராமலிருந்தார் மளிகை கடை முதலாளியான அன்பரசு.

இது குறித்து அன்பரசுவின் மனைவியிடம் ராஜா பேச அவள் கணவனிடம் கேட்டாள்.

‘ஏங்க ராஜாவுக்கு சம்பளம் தரலை..?

ஒரு சின்ன ட்ரீட்மென்ட் தான்! இப்பல்லாம் அவன் நைட் கடை மூட லேட்டாயிட்டா கோபத்தோட வேலை செய்யறான்! அது எனக்குப் பிடிக்கலை. நாம தர்ற சம்பளத்தை வெச்சித்தான் அவன் பொழப்பு ஓடுது…

இதை அவனுக்குப் புரிய வைக்கணும். ‘சம்பளமில்லாமல் பிழைக்கறது கஷ்டம்’ங்கிற நினைப்பை ஏற்படுத்தணும்னுதான் இத்தனை நாள் இழுத்தடிச்சேன்! இனிமேல் அவன் வாலைச் சுருட்டிக்கிட்டு வேலை செய்வான் பாரு.

நாளைக்கு சம்பளத்தைக் கொடுத்துடறேன்’’’ என்றான் அன்பரசு.

மறுநாள் சம்பளம் வாங்கிய ராஜா அடுத்த நாள் வேலைக்குச் செல்லவில்லை.

‘ஏங்க இன்னைக்கு வேலைக்குப் போகல..? எனக் கேட்டாள் அவனது மனைவி.

முதலாளி என்னை ரொம்ப சாதாரணமாவனா நெனைக்கிறார்!

உழைக்கறதுக்கான கூலியை சரியான நேரத்துல கொடுக்கணுங்கிற நல்லெண்ணத்தை தொலைச்சிகிட்டிருக்கார்! நான் இல்லேன்னா எவ்வளவு கஷ்டம்னு அவருக்குப் புரியவைக்கணும்…!

இன்னும் மூணு நாளைக்கு லீவ் போடப்போறேன்’ என்றான் ராஜா

– வீ.விஷ்ணுகுமார் (நவம்பர் 2010)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *