மிருகம்
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னறிவிப்பு இல்லாமல் வித்யா புறப்பட்டு வந்திருக்கிறாள்.
மோகனுக்கு வியப்பாக இருக்கும். நம்ப முடியாத மலைப்புடன் விழிகளை விரித்துக் கொண்டு அவளைப் பார்க்கப் போகிறான்.
வித்யா அப்படித்தான் நினைத்தாள்.
ஆறுமாதமாக லைப்ரரியில் சந்திக்கிறவனை, அவன் வீட்டில் முதல் முறையாகச் சந்திக்கப் போகிறாள்.
திரும்பத் திரும்ப வித்யாவை வீட்டுக்கு அழைத்து அலுத்துப் போனவன். இப்பொழுது திகைத்துப் போவான்.
எதற்காகத் தன்னை அழைக்கிறான் என்று ஆரம்பத்தில் அவள் எண்ணிப் பார்த்ததில்லை.
அப்பொழுதெல்லாம் மிதமான சந்திப்பு, மெல்லிய புன்னகை, மிருதுவான சில பேச்சுக்கள்.
மெதுமெதுவாக ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது!
அந்தச் சார்பைச் சாதகமாக்கிக் கொண்டு புறப்பட்டு வந்திருக்கிறாள். அதிகம் படித்துவிட்டு பொருத்தமான வேலைக்குக் காத்திருப்பவன் அவன். தனக்குப் பொருத்த மானவனாக அமைவானா என்பதைக் கண்டறியும் வேட்கை.
வித்யாவுக்குக் கூச்சமாக இருந்தது. குறுகுறுப்பாகவும் இருக்கிறது.
ஒரு ராமன், பரதன், லட்சுமணன்… யாரோ ஒருவன் வித்யாவுக்குப் பிடித்திருந்தால் போதும். தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் பெற்றவர்கள்.
தாமதிக்காமல் கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்ற நெருக்குதல். கிடைத்த உரிமையை எப்படிப் பிரயோகிப் பது என்பது வித்யாவுக்குப் பிரச்னையாக இருந்தது.
மோகனின் முகவரியும், முகவெட்டும் பதிவாகியிருக்கின்றன.
அவனைச் சிபாரிசு செய்யுமுன் வீட்டுக்குச் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல்.
இதோ வீதியைத் தேடிப் பிடித்தாயிற்று பெரும்பாலும் சீனர்களின் தரைவீடுகள்.
இந்த சிங்கப்பூரில் தரைவீடுகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. அடுக்கு மாடிப் பேட்டைகளுக்கு இடையே அபூர்வமாக இப்படித் தரைவீடுகள் மோகனின் வசதிக்கு இது ஓர் அடையாளம்.
வீட்டு இலக்கங்கள் மீது நோட்டம்.
ஒரு முகப்பு வித்யாவின் பார்வையை இழுத்துப் பிடித்துக் கொண்டது. வீடா, தோட்டமா, பூங்காவா? பொட்டானிக்கல் கார்டன் மாதிரி. முன்பகுதி முழுக்க முழுக்க பூச்செடிகள். வண்ண வண்ணமான மலர்க் கூட்டம்.
வசமிழந்து போனாள் வித்யா. மலர்கள்மீது உயிர்.
இதுதான் மோகனின் வீடோ? அப்படி இருக்கவேண்டும் என்று அடித்துக்கொண்டது மனம்.
ரசனையோடு, கலை நுட்பத்தோடு சின்னஞ்சிறு பூந்தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.
எந்த மலரில் தேன் பருகலாம் என்று சிறகடிக்கும் ஒரு பூஞ்சிட்டின் மனநிலையில் அவள் நின்றிருந்தாள்.
எந்தப் பூவையும் பறிக்க வேண்டும் என்று கைகள் துருதுருக்கவில்லை. பார்த்து ரசிப்பதில்தான் வித்யாவுக்கு மகிழ்ச்சி. இந்த வீடு மோகனின் வீடாக இருக்க வேண்டும்… நினைத்தபடி வாசலில் நின்றிருந்தபோது குரல்.
அவளை விளித்தான் மோகன். குரலுடன் துள்ளலான ஸ்கூட்டரை நிறுத்தினான்.
“அதோ அதுதான் நம்ம வீடு!”
பக்கத்து வீட்டைச் சுட்டிக் காட்டினான். ஸ்கூட்டரைத் தள்ளியபடி தன்னைப் பின்தொடரச் சொன்னான். திடீரென்று வித்யாவை இந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை என்றான்.
“வருவதாகச் சொல்லியிருந்தால் சொல்லியிருந்தால் வாசலிலேயே காத்திருப்பேனே.. ‘எதற்காக இப்படி ஒரு சர்ப்ரைஸ் விசிட்?” என்றும் கேட்டான்.
“ஏன் திடீரென்று நான் வரக் கூடாதா?”
“இந்த நேரம் பார்த்து வீட்டில் யாருமில்லை. அதனால் என்ன? முடிந்தவரை உபசரிக்கிறேன்!’
வாசல் கதவைத் தள்ளினான்.
“முகப்பில் பூந்தோட்டம் போடவில்லையா?” என்றாள்.
“ஓ! அதில் விருப்பமோ?” அவன் கேட்டான்.
வீட்டைத் திறந்து வித்யாவை உட்காரச் சொன்னான்.
“இடத்தைக் கண்டுபிடிக்கச் சிரமமாக இருந்ததா?”
“நீங்கள்தான் சரியான நேரத்தில் வந்துவிட்டீர்களே!”
“பக்கத்து வீட்டு வாசலில் ரொம்ப நேரம் காத்திருந்தது போல் தெரிந்தது!”
”காத்திருக்கலே… கண் கொள்ளாம நிறைஞ்சிருந்த பூக்களைப் பார்த்துக்கிட்டிருந்தேன்.’
“ஓ! அதையா..? பக்கத்து வீட்டிலே ஒரு பைத்தியம் இருக்கு… தோட்டக்காரன் மாதிரி வரிஞ்சுக் கட்டிக்கிட்டு, பாத்திகட்டி, ஊர்லே இருக்கிற பூச்செடிகளையெல்லாம் தேடிப் பிடிச்சிக் கொண்டு வந்து வைப்பான்.”
“அப்படி ஒரு பைத்தியமா?” என்றாள் வித்யா.
“ஆமாம்… இத்தனைக்கும் அவன் ஒரு புரொபஸர். கொஞ்ச வயதுதான். டாக்டரேட் வாங்கியிருந்தாலும் செடி கொடி வளர்க்கிறதிலே அசாத்தியமான பித்து என்ன ரசனையோ…”
“உங்களுக்கு அதெல்லாம் பிடிக்காதா?’
வித்யாவின் கேள்விக்கு நேர்முகமான பதில் வரவில்லை. ஆனால் பக்கத்து வீட்டு இளம் பேராசிரியனைப்போல் தான் பைத்தியக்காரன் அல்ல என்று சொல்ல முற்பட்டான்.
பேசிக் கொண்டிருந்தார்கள்.
வித்யா இன்னொருமுறை வீட்டுக்கு வரவேண்டும் என்றான்.
வாசல் வரை வந்து வழியனுப்புவதோடு நில்லாமல் ஸ்கூட்டரிலேயே கொண்டுபோய் விடுவதாகச் சொன்னான்.
அதெல்லாம் அப்புறம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டாள். பக்கத்து வீட்டு முகப்புப் பூங்காவைப் பார்த்தபடி வித்யா விடைபெற்றுக் கொண்டாள்.
ஞாயிற்றுக்கிழ்மை.
வித்யாவுக்கு ஆசை அடித்துக் கொள்கிறது.
வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும். உடுத்திக் கொண்டாள்.
மோகனைப் பார்க்கவா?
‘சுயம்வரம் இன்னும் முடிய வில்லையா?’ என்று வீட்டில் அவளைக் குடைகிறார்கள்.
விருப்பமானவனை வெகு சீக்கிரத்தில் அடையாளம் காட்டு என்கிறார்கள்.
மோகனைப் பற்றிச் சொல்ல வேண்டியதுதானே! இன்னொரு முறை மனம் விட்டுப் பேசியபிறகு சொல்லலாமே என்ற நினைப்பு.
அந்தச் சந்திப்பைக் கருதித் தான் இந்த ஆயத்தமா? இன்னொன்றும் இருக்கிறது-
அந்த பொட்டானிக்கல் கார்டன், மோகனின் பக்கத்து வீட்டுப் பூந்தோட்டம், வா, வித்யா!’ என்று அழைக்கவில்லையா?
இன்றைக்கு அதைப் பார்ப்பதோடு நின்றுவிடக் கூடாது. கம்பிக் கதவைத் தள்ளிக்கொண்டு அந்த முகப்புத் தோட்டத்திற்குள் போகவேண்டும்.
‘குட்மார்னிங்’ சொல்லியபடி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மோகனால் வர்ணிக்கப்பட்ட ‘அந்த பைத்தியக்கார’ புரொபசருடன் பேசவேண்டும்.
தேவையானால் ஒன்றிரண்டு ரோஜாப்பூவைப் பறித்துக் கொள்ள வேண்டும் – அனுமதியுடன்.
பிறகு மோகனைப் பார்க்கலாம். பேசித் தீர்மானிக்கலாம்.
வித்யாவின் திட்டம் வேறு. புறப்பட்டாள்.
வந்தாயிற்று.
கம்பிக் கதவருகே ஓர் ஆடவன்.
வித்யா நிமிர்ந்து பார்த்தாள். ஓ! தோட்டக்கார புரொபசரா!
“குட்மார்னிங்!”
அவனும் பதில் சொல்லிவிட்டு விபரம் கோரினான். புரொபசர் பாஸ்கர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கு!” என்றாள்.
“எப்போ பார்த்தீங்க?”
முதல் அனுபவத்தை வித்யா விவரித்தாள்.
“மறுபடியும் பார்க்கணும்னு வந்தீங்களா?”
“ஆமா…அதே நினைப்பு. பார்த்துக்கிட்டே இருக்கணும் போல ஆசை!”
“ஆசை தீரப் பாருங்களேன்!” கம்பிக் கதவைத் திறந்து விட்டான் பாஸ்கர்.
உள்ளே அடியெடுத்து வைத்தவள் அதிர்ந்து நின்றாள்.
சின்னஞ்சிறு ‘பொட்டானிக்கல் கார்டன்’ பொட்டல் மேடு போல் காட்சியளித்தது.
“என்னங்க இது? எல்லாச்செடிகளும் எங்கே?” துணுக்குற்றபடி வித்யா கேட்டாள்.
எவ்வளவு பெரிய ஏமாற்றம்! சில நாட்களுக்குள் ஒரு தோட்டம் இப்படிச் சீரழிந்து போக முடியுமா?
குழம்பியபடி நின்றாள்.
“நீங்களே வேண்டாம்னு இதை அழிச்சிட்டீங்களா?”
வித்யா கேட்டாள். விரக்திச் சிரிப்பு அவனுக்கு!
“நானா? தோட்டத்தை அழிக்கிறதாவது.?”
“அப்ப யார்?”
“ஒரு மிருகம்!”
“அதை அடிச்சி விரட்டி, தோட்டத்தைக் காப்பாத்தியிருக்கக் கூடாதா?”
“ராத்திரி நேரத்திலே அத்து மீறி நுழைஞ்சி..”
பாஸ்கர் விவரித்தான்.
“மொட்டும் பூவுமா நூத்துக் கணக்கில் இருந்ததே. அநியாயமா ஒரு மிருகம் அழிச்சிருக்கே! எப்படி உங்களாலே சகிச்சுக்க முடிஞ்சது?”
“ஆறறிவு உள்ள மிருகமாச்சே. வேறு வழியில்லை அதைப்போய் அடிக்கவா முடியும்?” என்றான் பாஸ்கர்.
‘ஆறறிவு மிருகமா!” என்று வியப்புடன் விளக்கம் கேட்டாள் வித்யா.
“சொல்லவே வெறுப்பா இருக்கு. பக்கத்து வீட்டில் மோகன்னு ஒருத்தன். படிச்சவன். என்ன பொறாமையோ. என்னதான் நினைச்சானோ, ரகசியமா உள்ளே புகுந்து தோட்டத்தையே நாசப் படுத்திட்டுப் போயிட்டான். என்ன காரணம்னுதான் புரியலே…”
வித்யாவுக்குப் புரிந்தது.
‘என்ன பொறாமையோ’ என்று பாஸ்கர் பேச்சுவாக்கில் சொன்னது முள்ளாகத் தைத்தது அவளை.
“பாஸ்கர் வருத்தப்படாதீங்க.. உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா நாம ரெண்டு பேரும் சேர்ந்தே புதுசா ஒரு மினி பொட்டானிக்கல் கார்டனை இதே இடத்திலே உண்டுபண்ணுவோம். உங்களுக்கு இஷ்டமா?” – வித்யா கேட்டாள்.
‘என்னைப் பிடித்திருக்கிறதா உங்களுக்கு?’ என்று அவள் கேட்பதுபோல் இருந்தது. அவனுக்கு.
மலர்ச்சியோடு வித்யாவைப் பார்த்தான் பாஸ்கர்.
இனி எங்கும், யாரையும் தேடி அலையவேண்டாம் என்ற நிறைவுடன் அவள் மலர்ந்து போனாள்.
– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.