கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 16,222 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-29 | அத்தியாயம் 30-31

அத்தியாயம்-28

சாமியார் தவறு செய்யமாட்டார், சாமியார் சொல்வதில் ஏதோ அர்த்தம் இருக்க வேண்டும், நல்லவர்கள் தவறுகள் செய்தாலும் அதன் முடிவு நன்மையாகவே முடியும் என்று மோகினியின் பண்புள்ளம் கூறியது. ஆனால். மோகினியின் அறிவு படிப்பு இரண்டும், வேறு பெயரில் வாழ்வது ஒரு பொய் வாழ்க்கை, அது தவறு என்று கூறியது.

“வா மோகினி! உன்னை இந்த வீட்டு எஐமானி அம்மாளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்”, என்று சாமியார் அழைத்துக் கொண்டு சென்றார். எந்த உணர்வும் இல்லாமல் பீதியோடு மோகினி பின் தொடர்ந்தாள். சாமியார் படிக்கட்டுகளில் ஏறினார், மோகினியும் பின் தொடர்ந்தாள். அவள் முகம் வியர்த்து, அவள் நெஞ்சு பட படவென்று அடித்துக் கொண்டது. நள்ளிரவில் ஒரு வீட்டில் திருட வந்தவள் போல் பயந்து பயந்து மோகினி அடி எடுத்து வைத்தாள்.

மாடியில் சாமியார் நீண்ட சதுரமான ஓர் அறைக்குள் நுழைந்தார். அந்த அறையில் ஒரு பெரிய கட்டில். அதையடுத்துச் சிறு ஸ்டூல்கள் போடப்பட்டிருந்தன. ரேடியோ, பெட்டி, பீரோக்கள், தொங்கும் வர்ண விளக்குகள் இத்யாதிப் பொருட்களை மோகினி முதன்முறையாகக் கவனித்தாள். அறையில் நுழைந்ததுமே அவள் கால்கள் கம்பளத்தில் புதைந்தன. திரண்ட செல்வத்தின் முதல் அறிமுகம் மோகினிக்கு இன்றுதான் ஏற்பட்டது.

அருகிலுள்ள மேஜையில் தங்கச் செயின்களும் வைரத்தோடுகளும் கவனிப்பாரற்றுக் கிடந்தன. மூவர் படுத்து உருளக்கூடிய பரந்த கட்டிலில் ஓரடி உயரத்துக்குப் பருமனான படுக்கை. அந்தப் படுக்கையின் மீது வெல்வெட் துணி கலைந்து கிடந்தது. வெள்ளிப் பாத்திரங்கள் தரையில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிடந்தன. ஒரு சாதாரணப் பாத்திரம் கடையில் வாங்க நாராயணி அம்மாள் எவ்வளவு நாள் யோசித்து, சேமித்து வாங்க வேண்டி இருந்தது என்பதை நன்கு உணர்ந்திருந்தாள் மோகினி. வெள்ளிப் பாத்திரங்களை பற்றியம், தங்க நகைகளைப் பற்றியும் பார்த்தும் கேட்டுமிருக்கிறாள். ஆனால் ஆண்டு அனுபவித்ததில்லை.

சாமியார் ”விஜயா,விஜயா”. என்று கூப்பிட்டார். அடுத்த வினாடியே கடகடவென்று சப்தம் கேட்டது. அறைக்கு வெளிப்புறம் பால்கனிக்குப் போகும் வழிக் கதவு படீரென்று திறந்தது. சற்று இருண்டு இருந்த அறையில் உடனே பளீரென்று ஒளி வீசியது. அந்த வழியே பால்கனியிலிருந்து சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு விஜயா நுழைந்தாள்.

விஜயாவின் பின்புறம் ஒளி நிறைந்து இருந்தமையால், மோகினிக்கு விஜயாவின் முகம் சரியாகத் தெரியவில்லை. விஜயா நாற்காலியைத் தள்ளியபடி நடு அறைக்கு வந்த பின்புதான். அவள் முகம் நன்கு தெரிந்தது. விஜயா சாமியாரைப் பார்த்து. “நிக்கறீங்களே, உட்காருங்க,” என்று சம்பிரதாயத்துக்காகச் சொன்னாள். அந்த உபசாரத்தில் உண்மை தொனிக்கவில்லை.

விஜயா மோகினியின் பக்கம் திரும்பினாள். மோகினியின் கண்களும் விஜயாவின் கண்களும் சந்தித்தன. மோகினியின் பார்வையில் இருந்தது மருட்சி, பயம். விஜயாவின் பார்வையில் இருந்தது அலட்சியம். விஜயாவின் பார்வை மோகினியின் கேசத்திலிருந்து, முகத்தில் நின்று, கழுத்து, மார்பு இவற்றில் தயங்கி நின்று பாதம் வரை பரிசீலித்ததும், அவள் பார்வையில் இருந்த அலட்சியம் படிப்படியாக ஆச்சரியமாக மாறியது. ஆச்சரியம் வேதனையாக மாறி பொறாமையாக உருவெடுத்து நின்றது.

விஜயாவின் முகத்தில் ஏற்படும் உணர்ச்சிகளைக் கவனித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார் சாமியார், விஜயா மோகினியிடம் ஒன்றும் பேசவில்லை. “உட்கார்”, என்று கூடச் சொல்லவில்லை, சட்டென்று முகத்தைச் சாமியார் பக்கம் திருப்பி, “இவள்தான்…இவள்தான்… ” என்று ஆரம்பித்து முடிக்காமல் நிறுத்தினாள்.

சாமியார், “இவள்தான் நான் சொன்ன பெண். மலையாளத்தைச் சேர்ந்தவள். நன்கு படித்தவள். வீட்டு வேலைகள், கணக்கு வழக்கு, குழந்தை கௌரிக்குப் பாடம் சொல்லித் தருவது எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வாள்,” என்று கூறினார்.

விஜயா விர்ரென்று மோகினியின் பக்கம் திரும்பினாள், “உனக்கு என்ன வயசாகுது?” என்று கேட்டாள்.

மோகினி பதில் சொல்ல முயன்றாள். ஆனால் பயத்தால் வார்த்தை வெளிவரவில்லை. மோகினியின் குழப்பத்தை உணர்ந்து கொண்ட சாமியார், “பதினெட்டு. இருபது வயசிருக்கும்.” என்று கூறினார்.

“நீ எந்த ஊர்?” என்று விஜயா தொடர்ந்து கேட்டாள். மோகினிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, ஷோரனூர் என்று சொல்வதா, திருச்சூர் என்று சொல்வதா? சாமியார் ஏற்கனவே ஏதாவது சொல்லியிருந்தால், அதற்கு மாறாக நாம் வேறு ஊரைச் சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாதே என்று வாய்மூடிப் பேசாமல் இருந்தாள். “அவள் பிறந்தது குருவாயூரிலே. வளர்ந்தது ஷோரனூர் பக்கத்திலே”, என்று உண்மையையே சொன்னார் சாமியார்.

விஜயா தொடர்ந்து, “உன் பேரு என்னம்மா?” என்று கேட்டாள். அதற்கும் மோகினி பதில் கூறு முன்பே சாமியார் முந்திக்கொண்டார். “இவள் பேரு சாந்தினி.”

இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் சாமியாரே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். மோகினி வாய் புதைத்து நின்று கொண்டிருந்ததைக் கவனித்த விஜயா, “அவள் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் நிற்கிறாளே, அவள் என்ன ஊமையா?” என்று கேட்டாள்.

மோகினிக்குச் சுருக்கென்றது. சாமியார் சிரித்தார். “விஐயா! அவள் ஏழை. தாய் தகப்பனில்லாத அனாதை. வயசிலே பெரியவங்க முன்னாலே அடக்கமாக இருக்கப் பழகியவள். எதிர்கால எஜமானியம்மா முன்னால், எப்படி மரியாதையா நடத்துக்கணும்னு தெரிந்து கொண்டவள். அதனாலே தான் பேசல்லே. பேசத் தெரியாமல் இல்லை” என்று கூறினார்.

விஜயா மறுபடியும் ஒருமுறை மோகினியைப் பார்த்தாள். “சாந்தினி! நீ போய் வெராந்தாவிலே நில்லு” என்று கட்டளையிட்டாள். மோகினி உடனே வெளியே போய் வெராந்தாவில் நின்றாள், உட்புறமிருந்து விஜயா பேசுவது அவள் காதுகளில் விழுந்தது.

விஜயா: “அவள் ரொம்ப அழகாயிருக்காளே?”

சாமியார்: “ஆனால் ரொம்ப ஒழுக்கமானவள். அவள் அழகாயிருக்கிறது தான் அவளுக்குப் பெரிய துக்கம். அதனாலேதான் அவளை ஒரு நல்ல இடத்திலே அமர்த்தணும்னு நினைச்சேன், அழகும் படிப்பும் இருக்கிற அவளை பணம் தானே தேடி வரும். ஆனால் அவள் ஒழுக்கம்தான் அவ கண்ணியமான ஒரு இடத்தைத் தேடி வேலைக்கு அமரணும்னு சொல்லுது”.

விஜயா சற்றுச் சிந்தித்தபடி இருந்தாள். இதை வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மோகினி முந்நூறு ரூபாய் வேலை தன் அழகின் காரணமாகத் தனக்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்தாள். அதே சமயத்தில் டாக்டர் தோல்பையுடன் படிகளில் ஏறி வந்தார். அவர் ஒரு வினாடி நின்று மோகினியைப் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தார்.

உள்ளே போனதும் விஜயாவிடம், ”கன்கிராஜுலேஷன்ஸ் மிஸஸ் ராஜு, ஈ.எஸ்.ஜி. ரிப்போர்ட் சரியா இருக்கு. இனிமேல் உங்களுக்குப் பயமில்லே, ப்ளட் டெஸ்டும் கரெக்டா இருக்கு. உங்களுக்கு ஒருவித பயமும் இல்லே. அதைச் சொல்லத்தான் வந்தேன்,” என்று பேசினார்.

இந்தச் செய்தியைக் கேட்டதும் விஜயாவின் முகத்திலே ஒரு தெளிவு ஏற்பட்டது. சந்தோஷம் ஏற்பட்டது. அதைக் கவனித்த சாமியார் சந்தர்ப்பத்தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டார். “சாந்தினி வந்த வேளை நல்ல வேளை தான், டாக்டர் நல்ல செய்தியாகக் கொண்டு வந்திருக்கார்,” என்று சொல்லி முடித்தார்.

நிரந்தர நோயாளியாக, நல்ல சூசகங்களுக்குக் காத்திருந்து அதையே நம்பி வாழ்ந்து வந்த விஜயாவுக்கு மோகினியின் மற்ற யோக்யதாம்சங்களைவிட இந்த ராசி என்ற விஷயம் மிகவும் பிடித்தது. அவள் வந்த வேளை நல்ல செய்தி வந்தது என்ற திருப்தி ஏற்பட்டது. “நான் கௌரியைப் பிரசவித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தப்போ டாக்டர்களெல்லாம் என்னைக் கைவிட்டுட்டாங்களாம். சித்தப்பா, நீங்க கொண்டு வந்த விபூதியும் குங்குமமும்தான் எனக்கு உயிர்ப்பிச்சைக் கொடுத்ததுன்னு அவர் அடிக்கடி சொல்வார். நீங்க செய்யறது எல்லாமே இந்த வீட்டுக்கு நல்லதாத்தான் வருது,” என்றாள்.

திடீரென்று விஜயாவின் புகழ்ச்சிக்குக் காரணம் டாக்டர் கூறிய நல்ல செய்திதான் என்பதை உணர்ந்த சாமியார், “விஜயா! என்னை ஒரேயடியாய்ப் புகழ்ந்து என்னை கடவுளாக்கிடாதே. நான் ஒரு சோம்பேறிச் சாமியார். என் வாழ்க்கையிலே நான் எவ்வளவோ பொய் சொல்லும்படி நேர்ந்திருக்கு,” என்று தன்னைத்தானே குறைத்துக் கொண்டார்.

டாக்டர் விஜயாவிடம், “மிஸஸ் ராஜு! அன்னிக்கு ஆஸ்பத்திரியிலே உங்களுக்கு ஞாபகம் வந்தப்போ, இவர் அங்கே இருந்தாரில்லே! ரொம்ப லக்கி பண்டாரம்!” என்று விஜயாவின் வாதத்துக்கு ஒத்தூதினார். பெரிய மனிதர்கள் உளறினாலும் அந்த உளறலுக்குக் கண்ணியமான, விளக்கங்கள் தேடித் தந்து அவர்கள் உளறலை அறிவுரை என்று நிரூபிக்கும் கோஷ்டியைச் சேர்ந்தவர் அந்தச் சின்ன டாக்டர் என்று புரிந்து கொண்டார் சாமியார். உடனே சாமியார் டாக்டரைப் பார்த்து “நான் வெறும் லக்கி பண்டாரம் மட்டுமில்லே டாக்டர். விஜயாவின் சின்ன மாமனார்,” என்று சொல்லி விட்டுத் தன் வார்த்தைகள் டாக்டரின் முகத்தில் என்ன விளைவை உண்டாக்கி இருக்கின்றன என்று கவனித்தார்.

அவர் எதிர்பார்த்தபடியே டாக்டர் அயர்ந்துவிட்டார். உடனே, “ஐ ஸீ…ஐ ஸீ…நீங்க… நீங்க…அந்த கிரேட் மில்லியனேர். கோடீஸ்வரர், வெங்கடபதியின் தம்பியா? எக்ஸ்க்யூஸ் மி. நான் உங்களைப் பண்டாரம்னு சொல்லிட்டேன். ஐ ஆம் சாரி. நான் ஒரு முட்டாள்,” என்று தன்னைத்தானே நொந்து கொண்டு பேசினர்.

சாமியார் அமைதியாக, “நீங்கள் முட்டாள் இல்லை. நீங்க கெட்டிக்காரர்னுதான் சொல்வேன். உலக இலக்கணம் புரிந்து வாழறவர்,” என்று சொல்லி முடித்தார். சாமியார் சொன்னதை மறுப்பதா, ஒத்துக் கொள்வதா என்று புரியாமல் திகைத்தார் டாக்டர். அசடு வழியச் சிரித்தபடி விஜயாவிடம் விடை பெற்றுக் கொண்டார்.

டாக்டர் சென்றதும் விஜயா, மோகினியை மறுபடியும் உள்ளே அழைத்தாள். அவளை வேலைக்கு நியமித்து விட்டதாகக் கூறினாள். பிறகு சாமியாரிடம் திரும்பி, “இரண்டு நாளைக்கு முன்னே ஒரு கனவு கண்டேன், ரொம்ப வித்தியாசமாயிருந்தது” என்றாள்.

“என்ன கனவு விஜயா?” என்று சாமியார் கேட்டார். வேலைக்கு நியமிக்கப்பட்ட பின்பு சும்மா நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது சரியில்லை என்ற நினைப்பில் மோகினி. அங்கு கீழே கிடக்கும் புத்தகங்கள், வெள்ளிப் பாத்திரங்களை எடுத்து அங்குள்ள ஷெல்பில் ஒழுங்காக அடுக்கி வைக்க ஆரம்பித்தாள். விஜயா சாமியாரிடம் தான் கண்ட கனவைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள்.

“பயங்கரமான ராத்திரி வேளை. இடியும் மின்னலும் மழையும் ஒரே இரைச்சலா இருக்கு. நான் மலையாளத்துப் பங்களா வெராந்தாவிலே ஓடறேன். என்னை ஒரு பெண் துரத்திட்டு வாரா, இன்னதுன்னு தெரியாத ஒரு பயம் என்னைப் பிடிச்சுக்கிறது. திரும்பிப் பார்க்கறேன். என்னை துரத்திட்டு வார பெண்ணோடு குழந்தை கௌரி சிரிச்சுப் பேசிக்கிட்டு ஓடி வருகிறாள். ‘கௌரி! யாருடி அவ?’ன்னு கௌரியைக் கேக்கறேன். அதுக்கு கௌரி, ‘மோகினி டீச்சர் அம்மா, அவள் வேலையைத்தான் நீ தொலைச்சுட்டே. உன்னை மோகினி டீச்சர் பழி வாங்காம் விடமாட்டாள்’ என்று சொல்கிறாள்,” என்று கூறிவிட்டு நிறுத்தினாள்.

மோகினி அப்படியே திகைத்து நின்றாள். விஜயா தொடர்ந்து கூறினாள்: “கனவிலே வந்த மோகினி டீச்சர் என்னை மெள்ள நெருங்கினாள். அவள் முகத்திலே கோபமும் ஆத்திரமும் தாண்டவமாடியது. ‘உங்க பெண்ணிடம் அன்பா நடந்துகிட்டதுக்காக என் சாப்பாட்டிலே மண்ணைப் போட்டே இல்லே? போ, கோயமுத்தூர் ஆஸ்பத்திரியிலே போய்ச் சாவு!’ என்று என்னைப் பார்த்துச் சாபமிட்டாள். அப்படியே அலறி விழித்துக் கொண்டேன். விசித்திரம் என்னவென்றால், மோகினியை வேலையை விட்டு நிறுத்திய மறு நாளே, நான் பாத்ரூம்லே விழுந்துட்டேன், அப்புறம் நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே?” என்று சொல்லிவிட்டுத் தன் பேச்சையே உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கும் மோகினியைப் பார்த்து “என்ன அப்படித் திகைச்சு நிக்கறே? உன் முன்னாலே இந்த வீட்டிலே எவ்வளவோ பேசுவோம். நீ எதையும் கமண்ட் பண்ணாமல் உன் வேலையைக் கவனிக்கணும்,” என்று கண்டித்தாள்.

உடனே மோகினி பரபரவென்று படுக்கையைச் சரி செய்ய ஆரம்பித்தாள். சாமியார் குறும்புப் புன்னகையோடு, “கனவிலே நீ கண்ட மோகினி எப்படி இருந்தாள் விஜயா?” என்று கேட்டார்.

“ஐயோ! ஒரே ஒல்லியா, பார்க்க அருவருப்பா இருந்தாள். சப்பை மூக்கும், மெலிந்த கூன் விழுந்த முதுகும் பார்க்கிறதுக்கே பரிதாபமா இருந்தாள். ஆனால் ஒரு விஷயத்திலே மோகினி கரெக்ட் சித்தப்பா, கௌரிக்கு ஒரு நோயும் இல்லைன்னு தைரியம் கொடுத்து ஓடியாடச் செய்தவள் அந்த மோகினிதான். நான்கூட அதனால் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வரும்னு பயந்தேன். நேத்திக்குத் தான் இந்த ஆஸ்பத்திரி பெரிய டாக்டர் கௌரியைப் பரிசோதனை பண்ணி அவள் இருதயத்திலே ஒரு கோளாறும் இல்லைன்னு சொல்லிட்டார். இப்ப நினைத்தால், அவளை ஏன் வேலையை விட்டுத் தள்ளினோம்னு தோணறது. நீங்க ஷோரனூர் போனால் அந்த மோகினியை மறுபடியும் பள்ளிக்கூடத்திலே வேலைக்குச் சேர்த்துடுங்க” என்றாள்.

சாமியார் சிரித்தபடியே எழுந்தார். “அவளுக்கு வேற இடத்திலே வேலை வாங்கிக் கொடுத்திட்டேன். இப்போ அவளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. வேலை போனதே ஒரு விதத்திலே அவளுக்கு அதிர்ஷ்டமா போச்சு,” என்று சொல்லிவிட்டு மோகினியைப் பார்த்தார்.

“எப்படியோ அந்த மோகினி நல்லா இருந்தால் சரி. கௌரி அவள் மேலே உயிரையே வச்சிருந்தாள்”, என்று விஜயா கூறி முடித்ததும் சாமியார், “விஜயா! நாம் ஆத்திரத்திலே எவ்வளவோ தப்பு செய்யறோம். அதை உணர்ந்து வருந்தினால் பாபம் போயிடும். மோகினியை எனக்குக் குழந்தையிலிருந்து தெரியும். அவள் ரொம்ப நல்லவ. அவளுக்கு நீ இழைத்த தீங்குக்குப் பிராயச்சித்தமா இந்தச் சாந்தினியை நல்லா நடத்தினால் அதுவே போதும்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

மோகினியும் அறையிலுள்ள வேலைகளை முடித்து விட்டு அந்தப் பங்களாவின் கீழ்த்தளத்துக்கு வந்தாள். ஹாலில் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சியில் சாமியார் சிரித்தபடி உட்கார்ந்திருந்தார். மோகினி பதற்றத்துடன் அவரிடம் சென்று, “சாமி! எனக்குப் பயமா இருக்கு. இதென்ன நாடகம்! சினிமாவிலே நடக்கிற காட்சி மாதிரி இருக்கு. விஜயாவுக்கு உண்மை தெரிஞ்சால் நான் என்ன செய்யறதுங்க?” என்று கேட்டாள்.

சாமியார், “உண்மை. தெரிந்து அவங்க உன்னைக் கேட்டாங்கன்னா பழியை என் மேலே போடு. சாமியார் சொன்னபடி செய்தேன்னு சொல்லு,” என்று சாவதானமாகச் சொன்னார்.

“சாமி! எனக்கு ஒண்ணும் புரியல்லே. இந்தப் பொய் நாடகத்தை நீங்க என்று ஏன் நடத்தணும்?” மோகினி அழாத குறையாகக் கேட்டாள். சாமியாரின் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது. அவர் குரலில் சோகம் நிறைந்தது. “மோகினி! இந்த நாடகம் உனக்காக நான் நடத்தல்லே. எனக்காகவும் நடத்தல்லே. அந்தக் குழந்தை கௌரிக்கு உன் துணை தேவைப்படுது. அது மட்டுமில்லே. இது என் அண்ணன் வீடு. எங்கண்ணன் எவ்வளவோ பேர் வாழ்க்கையை நசுக்கி இவ்வளவு செல்வத்தையும் சேர்த்தார். பலபேர் சாபம் இந்த வீட்டைச் சுத்துது. அதனாலே அமைதி இல்லே. இந்தக் குடும்பம் நல்லா இருக்கணும்னா உன்னைப் போல ஒரு சுத்த சத்துவமான ஜீவன் இங்கே வாழணும். உன் கருணையினாலே தான் ராஜுவின் வாழ்விலே சந்தோஷம் ஏற்படணும் தாயே! நான் புறப்படட்டுமா?” என்று சொல்லி விட்டு வெளிப்புறம் நடந்தார்.

மோகினி அவரைத் தொடர்ந்து ஓடி, “சாமி! மறுபடியும் நீங்க எப்போ வருவீங்க?” என்று கேட்டாள். “மின்னலும் மழையும் எப்போ வரும்னு சொல்ல முடியுமா? அது போலத்தான் வருகையும்,” என்று சொல்லி விட்டு பங்களாவை விட்டுச் சென்று விட்டார் சாமியார். அவர் போன திசையையே பார்த்தபடி நின்றவள் “யாரம்மா யாரைப் பார்க்க வந்தே?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். அப்படியே திகைத்து நின்றாள்.

சிவந்த முகம், எடுப்பான தெற்றி, அதை ஓரளவு மறைத்தபடி சுருண்டு விழுந்த கிராப், உள்ளத்து வலிமையைக் காட்டும் மோவாய்க் கட்டை. உடல் வலிமையைக் காட்டும் உருண்டு திரண்ட புஜங்கள். அந்தப் புஜங்களின் திரட்சியும் வளப்பும் சில்க் ஜிப்பாவின் உட்புறமும் நிழலாடின. பரந்த மார்பு, கறுத்த கண்கள். அந்தக் கண்களின் பார்வை கெஞ்சும் பார்வையாக இருந்தது, எதையோ பிச்சையாக வேண்டி எதிர்பார்த்து நிற்கும் பார்வை அது!

இந்தப் பார்வையை இதற்கு முன் எங்கு பார்த்தோம் என்று நினைத்தாள் மோகினி. சட்டென்று ஞாபகம் வந்தது. முதல் முறை கௌரியைச் சந்தித்த போது, கௌரி இதே போல் தான் அவளை நோக்கினாள். கௌரியின் கண்களேதான்!

எஜமானின் முன் நிற்கிறோம் என்று உணர்ந்ததும் சேலைத் தலைப்பை எடுத்துத் தோளைப் போர்த்திக் கொண்டாள்.

ராஜு மீண்டும், “நீங்க யாரைப் பார்க்க வந்தீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

“நான்..தான்…” என்று கூறி விட்டுக் கண்களைக் கொட்டியபடி நின்றாள் மோகினி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்கும் நிலையில் கெளரி, “அப்பா! அப்பா!” என்று கூப்பிட்டபடி ஓடிவந்தாள். கௌரியின் வருகை மோகினிக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. “சாமியார் தாத்தா இவங்களைக் கூட்டிக்கிட்டு வந்தாங்கப்பா. இவுங்கதான் சாந்தினி. இனி மேல் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போறது இவுங்கதான்,” என்று கௌரி கூறினாள்.

“தாத்தா எங்கே கௌரி?” என்று ராஜு கேட்டான். அதற்கு கெளரி, “அவர் போயிட்டாரப்பா. கேட் வரையிலும் அவரோட போயிட்டு வர்ரேன். போறப்போ எனக்குக் கல்கண்டு கொடுத்துட்டுப் போனார். நான் இத்துனுண்டு இருக்கேன். சாமியார் தாத்தா எங்கிட்டே போயி, ‘போயிட்டு வர்ரேன் தாயே’ன்னு சொல்றாரப்பா!” என்றாள். ராஜு சிரித்தான், அப்போது மோகினி ராஜுவின் அழகான உதடுகளையும், அந்த உதடுகளின் பின்புறம் வரிசையாகத் தோற்றமளித்த அழகான பற்களையும் கண்டாள். தன்னையும் மறந்து ராஜுவைப் பார்த்தபடி நின்றாள்.

“சாந்தினி!” என்ற அதிகாரக் குரல் இடியோசை போல் மோகினியின் காதுகளில் கேட்டது. மோகினி திரும்பிப் பார்த்தாள். மாடியில் சக்கர நாற்காலியில் விஜயா வீற்றிருந்தாள். விஜயா சாந்தினியை ஒருவிதமாகப் பார்த்தாள். “சாந்தினி தோட்டத்திலே போய்த் தோட்டக்காரனைப் பூச்செடிக்கு நீர் பாய்ச்சச் சொல்,” என்று கட்டளையிட்டாள். மோகினி பயபக்தியோடு வெளியேறினாள்.

ராஜு மெள்ளப் படிக்கட்டுகளில் ஏறி மனைவி இருக்குமிடம் வந்தான், அவளது நாற்காலியைத் தள்ளிக் கொண்டு விஜயாவின் அறைக்குள் சென்றான், நாற்காலியில் அமர்ந்தபடியே விஜயா திடீரென்று தலையைத் திருப்பி ராஜுவைப் பார்த்தாள். அவள் பார்வை. போலீஸ் ஸ்டேஷனுக்குச் சந்தேகத்தில் அழைத்து வரப்பட்ட ஓர் ஆசாமியை இன்ஸ்பெக்டர் பார்ப்பது போல் இருந்தது.

“சாந்தினி எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டாள் விஜயா.

ராஜு ஒன்றும் புரியாமல் விழித்தான், “யார் இந்தச் சாந்தினி? அவள் ஏன் இங்கு வந்திருக்கிறாள்? எனக்கு ஒன்றும் புரியல்லியே!” என்று குழந்தை போல் கேட்டான்.

அத்தியாயம்-29

“சாந்தினி யாருன்னு தெரியாதுன்னு சொல்றீங்க…ஆனா கீழே ஹாலிலே அவகூடப் பேசிட்டு இருந்தீங்களே?”

“அவளை யாருன்னு கேட்டுக்கிட்டு இருந்தேன். அவள் யாரைப் பார்க்க வந்து இருக்கான்னு கேட்டேன். அந்தப் பொண்ணு முழிச்சிப் பார்த்துட்டு ஒரு பதிலும் சொல்லாம நின்னுக்கிட்டிருந்தாள். நம்ம குழந்தை கௌரி ஓடி வந்து, ‘சாமியார் தாத்தா அழைச்சிக்கிட்டு வந்தார். இனிமேல் எனக்கு இவங்கதான் பாடம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க’ன்னு சொன்னாள். இதெல்லாம் யார் ஏற்பாடு? சித்தப்பா எங்கே போயிட்டார்?”

“சித்தப்பா எங்கே போனார். அவர் எப்போ வருவாருன்னு யாருக்குத் தெரியும்? இந்தச் சாந்தினி ஏற்பாடு, உங்க சித்தப்பாவுடைய ஏற்பாடு,” என்று தனக்கு ஒன்றும் தெரியாதது போல் சொன்னாள்.

“சித்தப்பா எவ்வளவோ பேருக்கு ஏற்பாடு செய்வது உண்டு. அதுபோல இதுவும் ஒன்று…” என்று ராஜு சொல்லி முடிக்கு முன்பே, விஜயா, “ஆமாம், ஆமாம். பழனியிலே ஒரு பிச்சைக்காரிக்கு மணியார்டர் பண்ணச் சொன்னார், மலையாளத்திலிருந்து லட்சணமான ஒரு பெண்ணை அழைச்சிக்கிட்டு வந்து வேலை கொடுக்கிறார்,” என்று குத்தலாகப் பேசினாள்.

“விஜயா! சித்தப்பாவைப் பற்றி ஒன்றும் சொல்லாதே. உனக்கு இஷ்டம் இல்லையானால் ஏன் இந்தப் பெண்ணை நீ வீட்டிலே வைத்துக் கொள்ளணும்? இப்போதே வெளியே அனுப்பி விட்டால் போகிறது,” என்றான் ராஜு.

அதற்கு விஜயா, “அடேடே. அவசரப்படறீங்களே. இந்தப் பெண்ணை வேலையில் வைத்துச் கொள்வதில் எனக்கும் இஷ்டம்தான். நான்தான் உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருந்தேன். வீட்டு வேலைக்காரர்களை மானேஜ் பண்ணவும், குழந்தை கௌரிக்குப் படிப்புச் சொல்லித் தரவும், எனக்கு மருந்து கொடுத்து, குளிப்பாட்டி என்னைக் கவனிக்கவும் ஒரு பெண் தேவை என்று சொல்லியிருந்தேன். யாராவது வயசான அம்மாவைக் கொண்டு வருவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அழகான சின்னப் பெண்ணைக் கொண்டு வந்துவிட்டார்,” என்று சொல்லி ஒருவித அர்த்தத்தோடு ராஜு வைப் பார்த்தாள்.

ராஜு ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தான்.

“சாந்தினி உண்மையிலேயே அழகாக இருக்கிறாள். இல்லையா?” விஜயா கேட்டாள்.

“நான் சரியாகக் கவனிக்கவில்லை விஜயா, வீட்டு வேலைக்கு அழகான ஒரு பெண் தேவையா? வேணுமானால் அந்தப் பெண், கௌரிக்கு வந்து தினமும் டியூஷன் சொல்லிக் கொடுத்து விட்டுப் போகட்டும். அவளை வேலைக்கு வைத்துக் கொண்டோம் என்று சித்தப்பாவுக்கும் திருப்தியாக இருக்கும். உன்னைச் கவனிக்கவும், வீட்டை நிர்வாகம் பண்ணவும் வேறு யாராவது ஓர் அம்மாவைப் போடுலோம்,” என்று ராஜ யதார்த்தமாகச் சொன்னான்.

இந்தப் பதிலைக் கேட்டதும் விஜயாவுக்குத் திருப்தி ஏற்பட்டது.

உண்மையிலேயே சாந்தினியின் அழகு ராஜுவைக் கவரவில்லை. அவன் சொன்னது போல் அவன் அவளை நன்றாகக் கவனிக்கவில்லை என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.

“அவளுக்குக் கோயமுத்தூரில் தங்க இடமில்லை. அவள் மலையாளத்திலிருந்து வந்திருக்கிறாள். கௌரிக்கு டியூஷன் சொல்லித் தருவதற்கு மட்டும் அவளை வைத்துக்கொண்டால், நாம் அவளுக்கு இடம் பார்த்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவள் நமது பங்களாவில் தங்க இடம் தரவேண்டும். உங்கள் சித்தப்பா அவளுக்கு முன்னூறு ரூபாய் சம்பளம் தர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மாதம் நூறு ரூபாய் ஷோரனூரில் உள்ள அவள் பந்துவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஒரு நூறு ரூபாய் அவள் கணக்கில் கட்ட வேண்டும் என்றும், மீதியுள்ள நூறு ரூபாயை அவள் கையில் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்,” என்று கூறினாள்.

உடனே ராஜு, “ஒரு வேளை இந்தப் பெண் அவருக்கு வேண்டியவர்கள் மகளாக இருக்கலாம். அதனாலே தான் அவர் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்,” என்று சொன்னான்.

“இவ்வளவு பணத்தையும் கொடுத்துவிட்டு அவளை வெறும் டியூஷனுக்கு மட்டும் வைத்துக் கொள்ளவானேன்? வீட்டு வேலையைப் பூராவும் வாங்கிக்கொள்வோமே என்றுதான் அவளை எனக்கு ஒரு செக்ரட்டரி மாதிரி இருந்து விட்டுப் போகட்டுமென்று நியமித்தேன்,” என்று சொல்லி விட்டு ராஜுவைப் பார்த்துச் சிரித்தாள்.

“முன்பு உன்னைக் கவனிக்கும் வேலை எனக்கு இருந்தது. அதுவும் இப்போ இல்லையென்று சொல்கிறாய்.” என்று சொல்லிவிட்டு ராஜு சிரித்தான்.

”நீங்கள் மில், தோட்டம் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளலாம். வெறும் நோயாளியிடம் உட்கார்ந்து கிட்டு இருந்தால் உங்களுக்கும் சலிப்பாகத் தானே இருக்கும்?” என்று விஜயா கூறினாள்.

அதற்கு ராஜு, “உன்னைக் கவனிப்பதில் எனக்குச் சலிப்பு ஒன்றுமில்லை விஜயா” என்று கூறினான்.

“நாம் மயைாளத்திலே இருந்த போது நம்ம பந்துக்கள் யாரும் வர மாட்டார்கள். இப்போ கோயமுத்தூர் வந்துவிட்டோம். தினமும் காலையிலேயும் மாலையிலேயும் யாராவது வந்துகிட்டே இருப்பார்கள். நீங்கள் என் பக்கத்திலேயே ஒரு ‘ஆண் நர்ஸ்’ மாதிரி நின்றுகிட்டிருந்தா உங்கள் அந்தஸ்துக்குப் பொருத்தமா இருக்குமா? அதனாலே தான் சரியென்று தோன்றிற்று.” என்று சொல்லி நிறுத்தினாள் விஜயா.

“இந்தச் சாந்தினி விஷயத்தில் உனக்கே பிடித்துப் போயிருக்கிறபோது என்னைக் கேள்வி கேட்பானேன்?” என்று கூறி விஜயாவைப் பார்த்தான்.

விஜயா சிரித்தாள். “அது மட்டு மல்ல. இந்தப் பெண் வந்த வேளை, டாக்டர் வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்லிட்டுப் போனார். என்னுடைய ரத்தத்திலே ஒரு தப்பும் இல்லையென்று தீர்மானம் ஆகிவிட்டதாம். ஈ.எஸ்.ஜி. படும்படியாக ஒரு கோளாறும் இல்லை ரிப்போர்ட்டும், இருதயத்துக்கு கவலைப் யென்று வந்துவிட்டதாம்,” என்று கூறினாள்.

“அப்படியா? ரொம்ப சந்தோஷம் விஜயா, ரொம்ப சந்தோஷம். என் மனத்திலிருந்து ஒரு பளுவான சுமை இறங்கின மாதிரி இருக்கிறது,” என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் ராஜு. மேலும் அவன், “இந்தப் பெண் வந்த வேளையினால் அல்ல விஜயா, சித்தப்பா ஒரு மகான். அவர் ஆசிர்வாதம் தான் நமக்கு எல்லா நன்மையும் செய்கிறது. அவர் என்னிடம் கீதைப் புத்தகத்தையும், தேவியின் துதிப் பாடலையும் கொடுத்துச் சென்றார். அதைத் தினமும் படிக்கச் சொல்லியிருந்தார். அதை இரண்டு நாட்களாக விடாமல் படிக்கிறேன். அதைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்தே மனத்துக்கு ஓர் ஆறுதல் விஜயா, ‘நம்பிக்கையால் மலைகளையே நகர்த்தலாம்’ என்று சொல்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. வைத்தியத்தால் சாதிக்க முடியாததை பக்தி சாதிக்க இயலும் அல்லவா? என் பக்தியினாலே உன் கால்களுக்கு வலு ஏற்பட்டு, நீ நடந்தாலும் நடக்கலாம் விஜயா,” என்று உணர்ச்சியோடு சொன்னான் ராஜு.

அவனது ஆர்வத்தையும், உன்னதமான அன்பையும் கண்டு விஜயாவுக்கு மனம் நிறைந்தது. இவ்வளவு நல்ல கணவர் மீது நமக்குச் சந்தேகம் ஏற்பட்டதே என்று தன்னையே வெறுத்துக் கொண்டாள். “இப்படி வாருங்கள்,” என்று கணவனை அழைத்தாள்.

ராஜு மெள்ளக் கட்டிலை நோக்கி நகர்ந்தான். விஜயாவின் மெலிந்த கரங்கள் அவன் கழுத்தை அணைத்தன.

“என்னை மன்னித்துவிடுங்கள். என்னை மன்னித்து விடுங்கள். இவ்வளவு நல்லவருக்கு என்னால் எவ்வளவு வேதனை! எவ்வளவு சோதனை!” என்று தன்னையே நொந்தபடி அழுதாள். அடுத்த வினாடியே, “அம்மா” என்று அழைத்தபடி கௌரி அறையின் உட்புறம் நுழைந்தாள்.

அவளைத் தொடர்ந்து மோகினியும் கையில் பிஸ்கட், காப்பி வைத்த ஒரு தட்டுடன் நுழைந்தாள்.

அறையில் நுழைந்ததும் மோகினி, அங்கு கணவனும், மனைவியும் இருக்கும் அன்னியோன்ய நிலையைக் கவனித்தாள்.

அந்த ஒரு வினாடியில் மோகிளியின் மனத்தில் புரியாத ஒரு வெப்பம் ஏற்பட்டது. சிறு குழப்பமும் ஏற்பட்டது. முதல் நாளே தவறு செய்துவிட்டோமே. இந்தச் சமயத்தில் அறையினுள் நுழைந்து இருக்கக்கூடாதே என்று நினைத்தாள்.

அறையைவிட்டு வெளியேறத் திரும்பினாள். அதற்குள் விஜயாவின் குரல், “சாந்தினி! அந்த ட்ரேயை மேஜை மீது வைத்து விட்டுப் போ,” என்று கட்டளை யிட்டது. சாந்தினி தலைகுனிந்தபடியே ட்ரேயை மேஜை மீது வைத்து விட்டு அறையை விட்டு வெளியே போகத் திரும்பினாள். அதற்குள் விஜயாவும் ராஜுவும் பிரிந்து உட்கார்ந்திருந்தனர். கணவனும் மனைவியுமாக அவர்கள் இருந்த அன்னியோன்னியம் அவள் நெஞ்சில் ஒருவிதப் படபடப்பையும் சிறு கோபத்தையும் உண்டு பண்ணியது. இந்த உணர்ச்சி எப்படி அவள் மனத்தில் நுழைய முடிந்தது என்று அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது.

மோகினி, சாந்தினியாக மாறு பெயரில் அந்த வீட்டில் வாழ்ந்த அந்த முதல் இரண்டு நாட்களில், அவளுக்குப் பயமும் வேதனையும்தான் அனுபவிக்கக் கிடைத்தன. குழந்தை கௌரியின் அன்பு ஒன்றுதான் அவளுக்கு ஓர் ஊன்றுகோல் போல் இருந்தது.

குழந்தை கௌரி எப்படித் தொடர்ச்சியாக இந்தச் சூது நாடகத்தில் தன் பாகத்தை நடிக்கப் போகிறாள்!

திடீரென்று தன்னையும் மறந்து அவள் உண்மையை உளறிவிட்டால் என்ன ஆகும் என்று பயந்தாள். ஆனால் மோகினியின் பயம் வீண் பயம் என்று இரண்டு நாட்களில் புரிந்துவிட்டது. கௌரி ஒரு முறைகூட மோகினியை, அவள் உண்மைப் பெயரில் அழைக்கவில்லை. எப்போதும், “டீச்சர்!” என்று தான் கூப்பிட்டாள்.

மோகினியை ‘டீச்சர்’ என்று அழைப்பதை விஜயாவும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பவளை, ‘டீச்சர்’ என்று குழந்தை அழைப்பதில், தவறு இருப்பதாக யார் கருத முடியும்? மில் விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் ராஜு வீட்டிலே அதிகமாகத் தங்குவதில்லை. அது மோகினிக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது. வீட்டின் உட்புறமுள்ள திறந்த வெளியில் விஜயா ஒரு பூப்பந்து ஆட்ட மைதானம் தயார் செய்து அதில் கௌரிக்குப் பொழுது போக்குக்காக வலை கட்டிப் பூப்பந்து ஆடக் கற்றுக் கொடுக்கும்படி உத்தரவிட்டிருந்தாள்.

தினமும் காலையிலும் மாலையிலும் அந்தப் பாட்மிண்டன் கோர்ட்டில் மோகினி, கெளரிக்கு ஆட்டம் கற்றுக் கொடுப்பாள்.

அதை மாடியிலிருந்து, சக்சுர நாற்காலியில் அமர்ந்து கவனிப்பாள் விஜயா.

ஒருநாள் மாலை நான்கு மணிக்கு ராஜு வீடு திரும்பியபோது, கௌரியும் சாந்தினியும் பந்தாடிக் கொண்டிருந்தனர். மாடிப் பால்கனியிலிருந்து விஜயா கவனித்து ரசித்துக் கொண்டிருந்தாள். கௌரி ஒவ்வொரு பந்தையும் வலையிலே அடித்துக் கொண்டிருந்தாள்.

பால்கனியில் இருந்தபடி கவனித்துக் கொண்டிருந்த விஜயாவுக்குத் தன் மகள் ஆடத் தெரியாமல் ஆடுவது கோபமாக இருந்தது. “கௌரி! அப்படி மடத்தனமாக ஆடாதே. பந்தை எப்பவும் தூக்கிப் போட்டு ஆடனும். முறத்தாலே தட்டுகிற மாதிரி தட்டுகிறயே?” என்று கண்டித்தாள்.

கௌரிக்குக் கோபம் வந்தது. ”நீ சும்மா இரும்மா. எனக்குத் தெரிஞ்சபடி நான் ஆடறேன்.” என்று பதில் சொன்னாள்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த ராஜு உடனே குறுக்கிட்டு, ”கௌரி! நான் ஆடிக் காட்டுகிறேன். நீ பார்த்து விட்டு, அதே மாதிரி ஆடவேண்டும்”, என்று சொல்லி விட்டு பாட்மின்டன் கோர்ட்டில் இறங்கினான்.

கௌரி மட்டையைத் தந்தையிடம் கொடுத்துவிட்டு, கோர்ட்டுக்கு வெளியே வந்தாள்.

ராஜு, “எங்கே சாந்தினி, சர்வீஸ் போடு,” என்று சொன்னான்.

மோகினிக்குக் குழப்பமாக இருந்தது. முதலாளியோடு ஆடுவதா என்று ஒரு முறை பால்கனியில் உட்கார்ந்திருக்கும் விஜயாவைப் பார்த்து விட்டு, பந்தை எடுத்து சர்வீஸ் போட்டாள்.

உடனே ராஜு, தன் கையில் உள்ள பேட்டை நீட்டி, மறுபடியும் மோகினி யின் பக்கம் பந்தை அடித்தான்.

இவ்வாறு மாறி மாறிப் பந்து இருபுறமும் சென்று கொண்டிருந்தது. மோகினியும் கூச்சத்தை விட்டு ஆட்டத்தில் பூரா கவனத்தையும் செலுத்தி ஆடினாள்.

ராஜுவும் மோகினியும் வலையின் இரு பக்கமும் ஓடி ஓடிப் பந்தைத் தட்டிக் கொண்டிருந்தனர். மோகினி ராஜுவின் ஆட்டத்துக்குச் சற்றும் சளைக்க வில்லை. ராஜு எப்படியாவது பந்தை மோகினியின் கோர்ட்டில் போட முயன்றான். முடியவில்லை. “அப்பா! டீச்சர் நல்லா ஆடுவாங்க. உங்களைத் தோற்கடிச்சுடுவாங்க. ஜாக்கிரதை,” என்று கூச்சல் இட்டபடி ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் கௌரி.

மாடியிலிருந்து விஜயாவும் மெய்ம் மறந்து ஆட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

வலிமையும் வளப்பும் நிறைந்த கணவன், அழகே உருவான சாந்தினி யோடு ஆடும் அந்த ஆட்டம், விஜயாவின் கண் முன்னால் தான் இழந்தது, அவள் கணவன் இழந்து நிற்பது யாவற்றையும் ஒருங்கே சேர்த்துக் கொண்டு வந்து நிறுத்துவதுபோல் தெரிந்தது.

எவ்வளவு அழகாக ஆடுகிறாள் இந்தச் சாந்தினி என்று நினைக்கும்போதே, வலிமையிழந்த தன் கால்களைப் பார்த்துக் கொண்டாள். வேதனை உண்டாயிற்று.

ராஜு இடமும் வலமுமாகப் பந்தைப் போட்டுக் கொண்டிருந்தான். ஆனால் ஒன்றுகூடத் தப்பாமல் திரும்பி வந்து கொண்டிருந்தது. ‘பெரிய ‘சேம்பியன்’ நான். என்னையே திணற அடிக்கிறாளே’ என்ற ஆத்திரத்துடன் ஆட ஆரம்பித்தான் ராஜ.

கோர்ட்டில் அங்கும் இங்கும் ஓடிப் பந்துகளைத் திருப்பிக் கொண்டிருந்த மோகினிக்குத் தன் முந்தானை நழுவியது கூடத் தெரியவில்லை. அதே சமயத்தில் ஒரு பந்து நேராக ராஜுவின் பேட்டை நோக்கி வந்தது. தன் ஆத்திரம் பூராவையும் அந்தப் பந்தின்மீது செலுத்தி மட்டையால் பந்தை ஓங்கி அடித்தான். அந்த பூப்பந்து மோகினியைத் தாக்கிற்று. மோகினியின் செயலற்று கையிலிருந்த மட்டை நழுவியது. அவள் அப்படியே ராஜுவை நோக்கினாள். அவனும் அவளை நோக்கினான்.

அவளை இப்போது ஒரு வேலைக்காரியாக நோக்கவில்லை. ஒரு பெண்ணாக, ஓர் அழகியாக அவளைக் கண்டான். இவர்கள் இருவரையும் பால்கனியில் இருந்து விஜயா நோக்கினாள்.

– தொடரும்…

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *