கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2025
பார்வையிட்டோர்: 7,733 
 
 

சோபாவில் அமர்ந்து வேலைச் செய்து கொண்டிருந்தான் கௌதம், சமையலறையில் இருந்து வெளியே வந்த கமலி. என்னங்க இன்னைக்கும் வேலை பாத்துட்டு தான் இருப்பீங்களா? ஒருநாள் வீட்டில் இருக்கீங்க அப்பக்கூட வேலைதானா என்னுடன் நேரம் செலவிடக்கூடாதா? என கேட்டு சலித்துக் கொள்கிறாள். ஒரு ஐந்து நிமிடம் என் வேலை முடிந்துவிடும் என கூறுகிறான் அவளும் காத்திருக்கிறாள். வேலையை முடித்துவிட்டு சொல்லு என்கிறான். நானும் ரொம்ப நாளா கேட்கிறேன், என்னை கடற்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள் என எதாவது ஒரு காரணத்தைக் கூறி தட்டிக்கழித்து விடுறீர்கள்.

இன்றைக்கு நீங்கள் எவ்வித காரணமும் சொல்லாமல் என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறாள். அதுவந்து, நிறுத்துங்கள் நீங்க என்ன சொல்ல போறீங்க என எனக்குத் தெரியும் ஹோட்டல்,சினிமா என வேறு எங்கும் நான் வரமாட்டேன். ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்ச மறுக்கமுடியாமல் வேறுவழியன்றி கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறான். அவள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்க இவன் மணலில் அமர்ந்து அவளைப் பார்த்தப்படி அமர்ந்திருக்கிறான். காற்று சற்று பலமாக வீச கண்களை மூடுகிறான்.

கெளதம் வந்து ரொம்ப நேரம் ஆச்சா, சாரிம்மா கொஞ்ச வேல அதான் வர லேட்டா ஆயிருச்சு என்கிறாள் காயத்ரி. அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா நான் இப்போதான் வந்தேன் அது இருக்கட்டும் நான் ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு கேக்கணும் என நினச்சுட்டு இருந்தேன் கேக்கவா என்கிறான். கேளு என சொல்கிறாள் நான் எப்ப வெளிய போலாம்ன்னு  கேக்குறப்ப நீ ஏன் கடற்கரையை தேர்ந்தெடுகிறாய் என கேட்கிறான்.

சிரித்தபடியே சொல்கிறாள், கரையை தீண்டாமல் அலையால் இருக்க முடியாது அலையை சந்திக்காமல் கரையால் இருக்க முடியாது.  இவை சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது இவைகளை யாரும் பிரிக்கவும் முடியாது.  அதேபோல்தான் நீ எனக்கு  இக்கரையையும் அலையையும் போல நம்மையும் யாராலும் பிரிக்க முடியாது, என இதை பார்க்கும் போது எனக்கு தோன்றுகிறது அதனால் தான் நீ எப்பொழுது சந்திக்க அழைத்தாலும் நான் கடற்கரையை தேர்ந்தெடுக்கிறேன், என கூறிவிட்டு கடலில் விளையாட செல்கிறாள் இவனும் பின்னாலையே செல்கிறான். அவளின் துப்பட்டா இவனின் முகத்தை தீண்டியது அவளின் வாசம் அதில் வீசியது அதை முகர்ந்த படி அவன் நின்றுருந்தான்.

ஒருநாள் அவனின் மடியில் படித்துக் கொண்டு கொண்டு  என்னை எப்போது கல்யாணம் செய்யப்போற என கேட்கிறாள். அம்மா அப்பாகிட்ட கேக்கணும் அவங்க ஒத்துக்கலைன்னா என இழுக்கிறான். ஒத்துக்கலைன்னா சார் என்ன பண்ணுவீங்க என கேட்க அவங்க பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்க வேண்டிதான் என்கிறான். மடியில் படுத்து இருந்தவள் எழுந்து அவனை ஹேண்ட் பேக்கை வைத்து அடிக்க அவன் ஓட ஆரம்பித்தான் அப்படியே சாலை பக்கம் செல்ல கட்டுப்பாட்டை இழந்த லாரி அவளின் மீது மோதியதில் அவன் கண் முன்னே அந்த இடத்திலேயே அவனை நிரந்தரமாக தவிக்க விட்டு சென்று விட்டாள்.

“கரையோடும் அலையோடும் உரையாடி கொண்டிருந்தவள் இன்று காற்றோடு காற்றாக கலந்துவிட்டாள்”.

கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த கௌதமை பார்த்த கமலி காற்று பலமாக வீசுவதால் உங்கள் கண்கள் கலங்குகிறது என்கிறாள், அவள் கூறியது உண்மைதானே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *