மனிதர்கள் சராசரிகள்தான்

அவர் சாலையிலிருந்து ஒதுங்கி ஆபீசுக்குள் நுழைவது தெரிந்தது. தற்செயலாக ஜன்னல் வழி பார்வை கீழே போக உள்ளே அடியெடுத்து வைத்தார். இடது தோளில் தாங்கியிருக்கும் வட்டப் பிரம்புக் கூடை, வலது கையில் ஒரு உயரமான எவர்சில்வர் தூக்கு. படியேறும்போது மேல்படியில் அந்தத் தூக்கை இறக்கி வைத்து உன்னி ஏறலாம் என்று கூட அவருக்குத் தெரியவில்லை. தெரியவில்லையா அல்லது கண்ட இடத்திலெல்லாம் தூக்குச் சட்டியை இறக்கக் கூடாது என்கிற தீர்மானமா? தடுமாறி விழுந்தால், அதுவும் அந்தத் தோள் கூடை சரிந்தால் கொண்டு வந்திருக்கும் பண்டங்கள் அத்தனையும் வீணாகி விடுமே…? இது ஏன் தெரியவில்லை அந்தப் பெரியவருக்கு? இந்தத் தள்ளாத வயதில் வியாபாரம் என்று வருவதே பெரிது…!
அந்த அளவுக்கு ஒண்ணும் இன்னும் மோசமாகலை…இந்த ரெண்டு படி கூடவா ஏற முடியாது என்று நினைக்கிறாரோ? காம்பவுன்ட்டுக்கு உட்பக்கமாய் வந்தவர் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டது போலிருந்தது. வலது கையில் அந்தத் தூக்கு இருந்தமேனிக்கே முதுகைச் சற்றுப் பின்னால் வளைத்துக் கொண்டார். உள்ளே பார்வை நீள, நுழையலாமா என்று தயங்கியது போலிருந்தது. ஐயர் வந்தாலே ஆபீசில் இருப்பவர்களுக்கு வேலை ஓடாது. ஒரு ப்ரேக் நேரம் அது.
சாமி…என்ன இன்னிக்கு கொஞ்சம் லேட் போல்ருக்கு…..கேட்டுக் கொண்டே ஒருவர் வெளியிலிருந்து உள்ளே வர அவரைத் தொடர்ந்து நான்கைந்து பேர் நுழைந்தனர். சாமி என்கிற அந்த விளிப்பு இன்னும் சில இடங்களில் சகஜ பாவத்தில் உள்ளதுதான்…
டீ சாப்டுட்டு வர்றீங்களா….அட…ராமா….கொஞ்சம் லேட்டாயிடுத்து…வண்டி கிடைக்கல்லே….-வருத்தப்பட்டதுபோல் சொன்னார். முகம் சற்றே வாடிப் போனது.நெற்றி வியர்வை வழிந்து, போட்டிருக்கும் விபூதிப்பட்டையின் குறுக்கே இறங்கி, குங்குமத்தைத் தொட்டிருந்தது.
பத்தரைக்கெல்லாம் வந்திரணுங்கய்யா….அப்பத்தான் வெளில கிளம்புற ஆட்களை பிடிக்க முடியும்…நீங்க ஒவ்வொரு நாளைக்கு லேட் பண்ணிர்றீங்களே…? எங்களுக்குல்ல கஷ்டமாயிருக்கு…?
தினம் வந்திடுறேனே…இன்னைக்குத்தான் பஸ் கிடைக்கல்லே….ரெண்டு பஸ் மாறி வர வேண்டியதாப் போச்சு….போதாக் குறைக்கு ஆஸ்பத்திரி ஸ்டாப்ல இறக்கிவிட்டுட்டான். அடுத்த ஸ்டாப்புல நிக்காதாம்….
கொஞ்சம் இறங்கிக்கிறேன்னு சொல்லி இறங்கிட வேண்டிதானே…! சொன்னா இரக்கப்பட்டு நிறுத்துவாங்களே….
நல்லாயிருக்கே….ஸ்டாப் இல்லாத எடத்துல எப்டி இறங்கறது..? நமக்காகவா கவர்ன்மென்ட் பஸ் ஓடுது…அதெல்லாம் ப்டாது…..
சரி…சரி…வாங்க….உள்ளே.!..ஏன் தயங்கி நிற்கிறீங்க….? – அவர்கள் கொடுத்த தைரியத்தில் முகம் மலர்ந்தவராய் அலுவலகத்திற்குள் நுழைந்தார் அவர். அந்தப் பகுதியின்,அந்தமாதிரி ஆதரவில்தானே இத்தனை வருஷமாய் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது சமீப நாட்களாய்த்தான் கொஞ்சம் டல். என்னவோ ஒரு தயக்கம் எல்லோரிடமும்.. சரக்குல ஏதும் குறைபாடோ…? இருக்க வாய்ப்பில்லையே…? முன்னைவிட க்வாலிட்டியாத்தானே இப்பவும் தயார் பண்றேன்? கஸ்தூரி எதையேனும் பழசைச் சேர்த்திடுவா, கோளாறு பண்ணிடுவாளோன்னு கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுண்டுல்ல பார்க்கிறேன்…அப்படி எதுவும் செய்துடக்கூடாதுன்னு அவளைக் கண்டிச்சில்ல வச்சிருக்கேன்…கொஞ்சம் நப்பாசை உண்டுதான்..அதுக்கு விலங்கு போட்டுல்ல நிறுத்தியிருக்கேன்….தரம் நிரந்தரம்ங்கிறதுதானே டிரேட் மார்க்கா இத்தனை வருஷம் காண்பிச்சிருக்கிற பாடம்…! அதைப் பொய்யாக்க முடியுமா?
என்னா சாமி.! .சொல்றது காதுல விழலியா…உள்ளே வாங்க…..
சட்டென்று ஏதோ நினைவுக்குப் போய்விட்டவரை இந்த அழைப்பு தடுத்து நிறுத்தியது. உள்ளே அடியெடுத்து வைத்தார்.
காலை பதினோரு மணிக்கு வெளியே டீ சாப்பிடப்போகும் பணியாளர்கள் அதற்குள் வந்துவிட்டாரென்றால்….அவரிடம் சூடாக ஒரு வடையை வாங்கிக் கொறிப்பார்கள். மொறு மொறுவென்றிருக்கும் அவர் சரக்கு துளித் துளியாய்க் கொறிப்பதுதான். அய்யோ…தீருதே…தீருதே…என்றிருக்கும். நெடுநேரம் அதை வைத்துக் கடிப்பதே தனி சுகம். அந்த ருசிக்கு அவர்கள் அடிமை. உள்ளங்கை அளவுக்குப் பெரியதாய் மாவை மெத்தையாய்ப் பரத்தி, நடுவில் ஒரு சிறு ஓட்டையோடு, பம்மென்று உப்பியிருக்கும் வடையை அவர் தரும் சிறு கட்டிங்
பேப்பரோடு சேர்த்துப் பிடித்து அப்படியே கடித்துத் தின்பதில் அலாதி சுகம். என்ன ஒரு மணம்? மூக்குக்கே அந்த வாடை சுகந்தம்.
தாமதமின்றி நேரத்துக்கு வந்துவிட்டாரென்றால் அத்தோடு சரி. எழுந்து வெளியே செல்ல மாட்டார்கள். பியூன் சிவசாமியிடம் ஃப்ளாஸ்கைக் கொடுத்து டீ வாங்கிவரச் சொல்லிக் குடித்து விடுவார்கள். சாமி…டீ சாப்பிடுறீகளா….? உபசரிப்பார்கள். வேண்டாம்…வேண்டாம்… வயித்தைக் கலக்கிடும்…அப்புறம் வியாபாரம் பார்க்க முடியாது….. மறுத்து விடுவார்.
தினசரி காலையில் வடை, பஜ்ஜி, போளி, மிக்சர், சேவு, ஓமப்பொடி என்று அவரிடம் வாங்கி வாங்கி அந்த அலுவலகமே அவர் கைபாக ருசியில் மயங்கிக் கிடந்தது. போதாக் குறைக்கு இட்லி மிளகாய்ப்பொடி, கருவேப்பிலைப் பொடி, புளியோதரைப் பொடி, மிளகுப் பொடி, சீரகப் பொடி என்று பாக்கெட்டுகள் வேறு. குறிப்பாக அந்த போளிக்கு. தேங்காய் போளி, பருப்பு போளி என்று ரெண்டு விதம் கொண்டு வருவார். இது டேஸ்ட் ஜாஸ்தியா, இல்ல அதுவா… எத சொல்றது…அசத்துறீங்களே சாமி…என்று மயங்கிப் போவார்கள். மிளகாய்ப் பொடில இன்னும் கொஞ்சம் காரம் சேர்க்கணும் சாமி….என்பார்கள். காமன் டேஸ்டோல்லியோ…உப்பு, காரம் பொதுவாத்தான் இருக்கணும்…என்று சமாளிப்பார். அய்யர் சரக்கு என்னைக்குமே அசத்தல்தாங்க…..என்று சொல்லி வாய் கொள்ளாமல் செலுத்திச் சுவைப்பார்கள்.
இன்னொண்ணு தரவா…நன்னாயிருக்கும் சாப்டுங்கோ…நாளைக்குக் காசு தரலாம்….உங்க திருப்திதான் முக்கியம்….! அவர் சொல்கிறாரே என்று நாலைந்தைப் பார்சல் பண்ணி வீட்டுக்கு வாங்கிக் கொண்டு போனார்கள் சிலர். காலையில் நுழைந்தார் என்றால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அவர் ராஜ்யந்தான். கீழேயும், மாடியிலும் அவர் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கும். மாடியில் வேறு ஆபீஸ். அங்கும் பழக்கம்தான். இன்னும் வெளில நிறைய ஆபீஸ் இருக்கே…ஈஸ்வரா..எப்டி அவாளத் திருப்தி பண்ணப் போறேன்…? சாமி…சீக்கிரம் வாங்க…பக்கத்து ஆபீசிலிருந்து குரல் கேட்கும். நெஞ்சு படபடக்கும் இவருக்கு.
இந்தப் பகுதியிலயே பேசாம ஒரு கடை போட்ருங்களேன்யா…-ஒரு நாள் சொன்னார்கள்.
அதுக்கு நான் எங்க போவேன் பணத்துக்கு? ஊருக்குத் தள்ளியிருக்கிற இடத்துக்கே வாடகை கொடுத்து முடியல…கடை போடுறதாவது…? – சிரித்துக் கொள்வார். மனதுக்குள் துள்ளாட்டம் போடுவார்…எவ்வளவு அன்பு இவர்களுக்குத்தான்…! நல்லதை, தரத்தை விரும்பும் ஆட்கள் இன்னும் உலகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் நம் தரத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்….
வீட்டை மாத்திருங்க சாமி…அவ்வளவுதானே…பட்சணக் கடைங்கிற அடையாளமா திண்ணைல ஓப்பன் பண்ணுங்க…ஒரு சின்ன போர்டைத் தொங்க விடுங்க…வீட்டுக்குள்ள சரக்கை பூராவும் வச்சிக்குங்க…அட…அய்யர் இங்கயே வந்திட்டாரான்னு…கொத்திட்டுப் போயிட மாட்டாங்க….?
அந்தப் பகுதி முழுவதற்கும் அவரால் சரக்குக் கொடுத்து முடியவில்லை. ஒராள் எவ்வளவுதான் சுமந்து வருவது. இருக்கும் ஒரே பையன் உபயோகமில்லை. எதற்கும் லாயக்கற்றவன். அவனுக்குத் தீனி போட்டே மாளாது.
அய்யர் போய்ட்டாரா…இருக்காரா பாருங்க….வீட்ல வாங்கிட்டு வரச்சொன்னாங்க…மறந்திட்டேன்…என்று ஞாபகமாய் வாங்கிப் பைக்குள் பத்திரப்படுத்துவார்கள்.
காலைல போட்டது…ராத்திரி ஏழாகுமே சாமி…வீடு போய்ச் சேர…அதுவரை நல்லாயிருக்குமா..இல்ல…ஊசிருமா….?
போளிக்கு என்ன வந்தது? அதெல்லாம் ஊசவே ஊசாது….அப்டி ஊசித்தின்னா நீங்க காசு தர வேண்டாம்….அப்டியிருந்தா நானே உங்களுக்குத் தர மாட்டேனாக்கும்…! அப்போது சாப்பிடுவது மட்டுமல்லாமல் மதியம் சாப்பாட்டிற்கு என்றும் வாங்கி வைத்துக் கொள்வார்கள். வெறும் வடையை மட்டும் நீட்டினால் கதையாகாது என்று ஒரு பாத்திரத்தில் சட்னி வேறு செய்து கொண்டு வருவார் அவர். பெரும்பாலும் வடை அத்தனையும் தீருவதற்கு முன்பே சட்னி தீர்ந்து விடும். இன்னும் கொஞ்சம் போடுங்க சாமி…என்று விரும்பிக் கேட்பவருக்கு இல்லை என்று எப்படிச் சொல்வது?
அய்யரின் அந்தப் பேச்சு வெறும் பேச்சல்ல. அத்தனையும் சத்தியம். ஒரு நாள் கூட அவர் கொண்டு வந்து கொடுக்கும் சரக்கில் யாரும் குறை கண்டதில்லை.
பரமேஸ்வர அய்யர் என்றுமே தன் வியாபாரப் பண்டங்களின் தரத்தைக் குறைத்ததில்லை. வீட்டுக்கு என்று செய்யும் பொருட்களில் வேண்டுமானால் சற்று முன்னே பின்னே இருக்கும்… கடந்த முப்பது வருஷமாய் இந்த வேலையைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். இந்த வரும்படியில்தான் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறார். எல்லாம் அவர் மனைவியின் சாமர்த்தியம். தோளில் அந்தக் கூடையைச் சுமந்து சுமந்து இடது பக்கத் தோள் நிரந்தரமாய் இறங்கிப்போனது போலவே இருக்கும் அவருக்கு. அலைந்து அலைந்தே ஆள் தளர்ந்து போனார். அவரை இளமையாய்ப் பார்த்த பல பணியாளர்கள், பத்து வருஷம் முன்னே ஆள் எப்டி இருப்பாப்ல…? அப்பல்லாம் சைக்கிள்ல வந்திட்டிருந்தாரு….இப்போ முடியல…பாவம்…என்று பரிதாபப்படுவார்கள்.
பரமேஸ்வரன் அந்தக் கருணாநகர் பகுதிக்கு வியாபாரத்திற்கு என்று நுழைந்த நாளிலிருந்து நன்றாய்த்தான் போய்க் கொண்டிருக்கிறது. பத்துப் பதினைந்து அலுவலகங்களுக்கு மேல் இருக்கும் அப்பகுதியில் அவர் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம்….அரசு ஆஸ்பத்திரி மார்ச்சுவரி அந்தப் பக்கம் இருந்ததுதான்.
பிணப் பரிசோதனை முடிந்து உடலை வாங்குவதற்காக அனுதினமும் கூடியிருக்கும் கூட்டம். தினமுமா ஏதாவது அநாச்சாரம் நடக்கும்? தினசரி எந்த மூலைலயாவது தற்கொலை, கொலை, ஆக்ஸிடென்டுன்னு நடந்திட்டேயிருக்கே….பகவானே….இந்த ஜனங்களை ஏன் இப்படி அல்லாட விடுறே…உனக்கு இரக்கமேயில்லையா…? என்று மனதுக்குள் புலம்பியிருக்கிறார் அவர். அங்கு கூடியிருக்கும் சனக்கூட்டத்தைப் பார்க்கும்போது மனசு கனத்துப் போகும். அவர்களே சோகத்தில், அழுது புலம்பி சோர்ந்து போய்க் கிடக்கையில் அவர்கள் நடுவே சென்று வியாபாரத்தை எப்படிச் செய்வது? உங்களுக்குத்தானே சோகமும், துக்கமும்…எனக்கென்ன வந்தது? என்று எப்படிப் போய் வடை வேணுமா…பஜ்ஜி வேணுமா…போளி இருக்கு தரவா…? என்று சகஜமாய் வாய் திறந்து கேட்பது? ஒரு தன்மை வேண்டாமா? வியாபாரத்திற்கும் ஒரு நியாயம் இருக்கிறதுதானே?
ஆனாலும் அந்தக் கூட்டத்தைத் தவற விட மனதில்லை அவருக்கு. காலையிலிருந்து பழியாய்க் காத்துக் கிடந்து, பாடி எப்போது கிடைக்கும் என்று தெரியாத நிலையில், வயிற்றில் பச்சைத் தண்ணீர் கூட ஊற்றாமல், போன உயிரை நினைத்து அழுது மாய்ந்து, காய்ந்து சோர்ந்து நிற்கும் அவர்களிடம் இவராய்ப் போய்க் கேட்காமல், ஒரு மரத்தடி பார்த்து அமைதியாய் அமர்வது என்று முடிவு செய்து கொண்டார். என்னதான் ஆனாலும் மனித உயிர்தானே…? எவ்வளவு நேரம்தான் தாங்கும். போன உயிர் போக, இருப்பவர் தெம்போடு நடமாடினால்தானே அடுத்துச் செய்ய வேண்டிய காரியங்களை ஆற்ற முடியும்? என்று அவர்களாகவேதான் வந்தார்கள். வாங்கினார்கள். பல நாட்கள் அங்கேயே கொண்டு வந்த சரக்கு அத்தனையும் தீர்ந்து போக, திரும்ப விடுவிடுவென்று வீடு நோக்கி ஓடியிருக்கிறார் அய்யர்.
வேகு வேகுவென்று அடுத்த செட் பண்டங்களைப் போட்டு எடுத்துக் கொண்டு திரும்பவும் வேகாத வெயிலில் வந்து விடுவார். அந்த அய்யர நம்பிப் புண்ணியமில்லைய்யா…ஒரு ரெகுலாரிட்டி இல்ல….என்ற சொல் ஒரு நாள் அவர் காதில் விழ, அன்று முதல் பையனையும்கூட அழைத்துக் கொண்டு வர ஆரம்பித்தார். படிப்பு ஏறாத பையனை வீட்டில் வைத்துக் கொண்டு தண்டச் சாப்பாடு போட்டு வளர்ப்பதற்கு, இப்படியாவது உதவட்டும் என்று கூட்டிக் கொண்டு வந்தார். ஒரு வேலைக்கும் ஆக மாட்டான் என்று பிறகுதான் தெரிந்தது.
போற எடத்துல யார்ட்டயும் உன் திருவாயைத் திறந்துறாதே…புரியுதா…நீ பேச வேண்டாம்…நானே பேசிக்கிறேன்….அவா கேட்கிறதை மட்டும் கொடு….எத்தனை கொடுத்தேன்னு மட்டும் சொல்லு…துட்டை நான் வாங்கிக்கிறேன்….தெரிஞ்சிதா….? – பையனின் சமத்து தெரிந்து அவனை எச்சரித்தே உடன் கூட்டி வருவார். படிப்புத்தான் வரவில்லையென்றால் பழக்க வழக்கம் கூடவா பதப்படாது? அவனுக்கு யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. தத்துப் பித்தென்று என்னவோ உளறினான். பெண் பணியாளர்கள் இருக்கும் பக்கம் வெறித்துப் பார்த்தான். அவர்களிடம் சென்று நின்று உறி…உறி…உறி…என்று சிரித்தான். அப்டிப் போய் உட்காருங்க தம்பி…என்றார்கள் அவர்கள். வியாபாரத்தக் கவனிக்காம இங்க என்ன பண்ணின்டிருக்கே…போடா கீழே….என்று விரட்டினார் அய்யர். நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துண்டுடாதீங்கோ…அவனுக்குக் கொஞ்சம் போறாது….! என்று சமாளித்தார்.
சகஜமாய் ஒரு நாள் ஒரு லேடி இந்தப் பேனாவுக்கு இங்க் போடு என்று கொடுக்க….லெட்டர் பேடு இங்க்கை பேனாவில் ஊற்றிவிட்டான்…..என்னா பண்ணி வச்சிருக்கே….இது கூடவா தெரியாது லூஸா நீ…என்றார்கள். பரமேஸ்வரய்யருக்கு படு அவமானமாய்ப் போய்விட்டது. சொல்லாமல் கொள்ளாமல் அலுவலர் சேம்பருக்குள் ஒரு நாள் நுழைந்து விட்டான். அய்யர் பையனா நீ….என்று கேட்டு…குடிக்கத் தண்ணி எடுத்திட்டு வா பார்ப்போம்…என்று சகஜமாய் அவர் கூற, இவன் அவர் டேபிளில் இருந்த க்ளாஸையே எடுத்துக் கொண்டு கிளம்ப, டே…டேய்…..என்று கத்தினார். அதற்குள் கையைவிட்டு அலசித் தூரக் கொட்ட ஒரு கிளாஸ் லெமன் ஜூஸ் வேஸ்ட்.
ஏன்டா…தண்ணி எடுத்திட்டுவான்னா…டேபிள்ல ஜூஸோட இருக்கிற கிளாசையே தூக்குவியா….? அதுல என்ன இருக்குன்னு கூடப் பார்க்க மாட்டியா….? அவர் கேட்டார்.
அழுக்குத் தண்ணி மாதிரி இருந்திச்சு…உள்ளே தூசி மிதந்திச்சு…அதான் கழுவிக் கொட்டிட்டு புதுசாக் கொண்டு வரலாமேன்னு…..
அது லெமன் ஜூஸ்ப்பா…அப்டித்தான் இருக்கும்…தெரியாதா உனக்கு….என்னைச் சொல்லணும்…பியூனைக் கூப்பிட்டுச் சொல்லாம அவசரத்துக்குன்னு உன்கிட்டே சொன்னேம்பாரு…..மிஸ்டர் பரமேஸ்வரன்…உங்க பையனை வீட்டோடவே வச்சிக்குங்கோ….கூடக் கூட்டிட்டு வராதீங்கோ…உங்க பேர் கெட்டுடும்…வியாபாரம் படுத்திரும்….என்று எச்சரித்தார்.
அன்றோடு நின்று போனது அவன் வருகை. இப்படி அசட்டுப் பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எப்படிக் கரையேற்றுவது? தனக்குப் பின் என்னவாகும் அவன் நிலைமை? பெரும் கவலை வாட்டியெடுத்தது அவரை.
அவனுக்குன்னு ஒருத்தியக் கட்டி வச்சா எல்லாம் சரியாகும்…இப்ப நீங்க இல்லையா…? உங்களோட நான் இத்தனை வருஷம் குப்பை கொட்டியிருக்கேனே…எப்டி சாத்தியமாச்சு? அது போலதான்… எல்லாம் பகவான் செயல்….இது கஸ்தூரி.
அந்தப் பகுதியிலிருந்து பரமேஸ்வரன் வெளியேறியபோது மணி ஒன்றைத் தாண்டியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் கலெக்டர் ஆபீஸ். அடுத்தாற்போல் அங்கு போயாக வேண்டும் அவர். முன்னைப்போல் சடசடவென்று தீருவதில்லை இப்போது. சொல்லி வைத்தாற்போல் எல்லா ஆபீஸ்களிலும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். இது எப்படி? மார்ச்சுவரி கிரவுண்டையும் போட்டு மூடி விட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை…முன்னைப்போல் ஆட் புழக்கம் அங்கே அதிகம் இருப்பதில்லை. கேட்டுக்கு வெளியே நின்று கூவிக் கூவி அழைத்தால் செக்யூரிட்டி வந்து விரட்டுகிறான். என்ன கொள்ளை வந்ததோ? கொள்ளை போன இடத்தில் நம் பிழைப்புக்குக் கொள்ளை வந்து விட்டதே இப்படி?
இத்தனைக்கும் விலையையும் கூட்டவில்லையே? அளவையும் குறைக்கவில்லையே? பின் என்ன வந்தது இவர்களுக்கு? வேறு யாரேனும் வியாபாரத்துக்குப் போட்டியாக வந்து விட்டார்களோ என்னவோ? இவர் பார்த்ததில்லை. வீட்டிலிருந்தே கொண்டு வந்து விடுகிறார்களோ? அல்லது செலவைச் சுருக்கி விட்டார்களா? சம்பளக் கமிஷன் உத்தரவு போட்டு சமீபத்தில்தானே எல்லோருக்கும் கணிசமாய்க் கூடியிருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள்? நிலுவைத் தொகைகள் இன்னும் கைக்கு வந்து சேரவில்லையோ என்னவோ? அவர்களுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி, அவர்கள் வார்த்தைகளே இவருக்குள்ளேயும் புழங்குவதை உணர்ந்து கொண்டார். எண்ணியவாறே நடந்து கொண்டிருந்தார். மனசிலிருந்த பாரம் கைபாரத்தை அதிகப்படுத்தியது. இரண்டு மணிக்குள் சென்றால்தான் கொஞ்சமாவது விற்பனை பார்க்க முடியும்.
கருணா நகருக்குப் போகாமல் நேரே கலெக்டர் ஆபீஸ் போக முடியாது. ஆபீஸ் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் அங்கு போய் நிற்பதும், அலுவலகம் அலுவலகமாய் நுழைவதையும் அங்கே யாரும் விரும்ப மாட்டார்கள். கலெக்டர் ஆபீஸ் சூழல் என்பதே தனி. அந்தப் பரபரப்பு மிகுந்த பதட்டமானது. பொது மக்கள், விவசாயிகள் என்று கூடி வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடக்கும் இடம் அதிகாரிகள் போவதும் வருவதுமாய் மனசைப் பதற வைக்கும். குறை தீர்க்கும் நாள் மனுக்கள் கொடுக்க நிற்கும் நீண்ட க்யூ அந்த அறையிலிருந்து தொடங்கி, வளாகத்தைத் தாண்டி, சாலையைத் தொட்டிருக்கும். இருபத்திநாலு மணி நேரத்தில் முடிக்கச் சொல்லியிருந்த பணிகள், நாற்பத்தெட்டு மணி நேரப் பணி, மூன்று தினங்களில் முடித்தாக வேண்டியவை என்று கால நிர்ணயம் தாண்டி தொங்கலில் இருப்பவற்றிற்கு ஆட்சியரிடம் திட்டு வாங்கும் அதிகாரிகளை வராண்டாவிலிருந்து ஒரு நாள் கவனித்த பரமேஸ்வரன் நடு நடுங்கிப்
போனார்.சாமி…இங்கெல்லாம் நின்னு வேடிக்கை பார்க்காதீங்க…கலெக்டர் சத்தம் போடுவாரு…அப்புறம் நாங்க பதில் சொல்ல முடியாது…அப்டிப் போங்க…என்று பியூன்கள் தள்ளித் தள்ளி விடுவார்கள்.
அதிகாரிகள் கண்ணில் படாமல் வியாபாரத்தைக் கவனிப்பதுதான் தன் சாமர்த்தியம் என்று அன்று முடிவு செய்து கொண்டவர்தான். எல்லாம் ஓய்ந்து மணி ஒன்றரை ரெண்டு என்று ஆகும் வேளையில்தான் உள்ளே நுழைவார். பதற்றம் ஓய்ந்த அந்த நேரம்தான் கொஞ்சமாவது சிரிப்பை அந்தப் பணியாளர்கள் முகத்தில் பார்க்க முடியும். வாய்விட்டு இது இருக்கு, அது இருக்கு என்று உரிமையோடு சொல்லவும் முடியும். சமீபகாலமாய் அதற்குமல்லவோ நோக்காடு வந்து விட்டது.
செக்ரட்டேரியட்டிலிருந்து இன்ஸ்பெக் ஷன் வர்றதா பேசிக்கிட்டாங்களே…ஒருவேளை அதுவா இருக்குமோ…? எல்லா மாடிலயும் பரபரப்பா இருக்காங்க…? போறதுக்கே பயமால்ல இருக்கு….எண்ணிக்கொண்டே வெளியேறி வழக்கமான அந்த வேப்பமரத்தடிக்கு வந்தார்.
அடிக்கும் வெயிலுக்கு கஸ்தூரி கொடுத்து விட்டிருந்த தயிர் சாதம் தேவாம்ருதமாய் இருந்தது. நேற்றுவரை மாவடு ஊறுகாய் மணத்தது. தீர்ந்து போயிற்று போலும். ஜாடியைக் கழுவி வைத்திருந்தது மனதில் வந்தது. போகும் வழிக்கு ஜம்புரோபுரம் மார்க்கெட்டில் இருந்தால் வாங்கிக் கொண்டு போக வேண்டும். தனியாக இரண்டு ஊறுகாய்ப் பாக்கெட் வைத்து விட்டிருந்தாள். ஏதோ சாமான்கள் வாங்கிய போது அது இலவசமாய் வந்தது என்று சொன்னாள். எதுவானாலும் இந்தப் பசுவனுக்குத்தான்.
கோலாட்ட ஜோத்திரை நடக்கும்போது ஆடி பதினெட்டன்று, ஆற்றோரத்தில் உள்ள அரச மரத்தடியில், மிஞ்சும் கலந்த சாதமெல்லாம் பசுவனாய்ப் பொதுவில் உட்கார்ந்திருக்கும் நபருக்குப் போய்ச் சேரும். சாப்பிட்டு முடியாது அவனால். வீட்டுக்குக் கொண்டு போனால் மூணு நாளைக்கு வரும் அந்தச் சாப்பாடு. மூன்று நாள் தாங்குமா? போதும்…போதும்…போதும்…என்று கையைக் குறுக்கே நீட்டி வேண்டாம் என்று மறுக்கும்போது அவர்கள் மனம் வருந்திப் போவார்கள். விசேட நாள் பிரசாதத்தை இப்டியா வேண்டாம்னு சொல்றது? வாங்கிக்குங்கோ….வச்சு சாப்பிடுங்கோ….ஆத்துல போய் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுங்கோ…என்று சொல்லிப் பாத்திரத்தில் போட்டுவிட்டுப் போய் விடுவார்கள். நானென்ன பகாசுரனா…இம்புட்டையும் திங்குறதுக்கு…? என்று அலுத்துக் கொண்டே பொய்ச்சிரிப்புச் சிரித்து அத்தனையையும் வாங்கிக் கொண்டாக வேண்டும். இல்லையென்றால் அடுத்த வருஷம் பசுவன் இடம் கைமாறி விடும் அபாயம்.
பஸ் ஸ்டாப்புக்கு வந்திருந்தார் பரமேஸ்வரன். அவர் குடியிருக்கும் பகுதிக்கு அரசு பஸ் நேரடியாகக் கிடையாது. இரண்டு பஸ் மாறியாக வேண்டும். இருக்கும் அசதியில் மார்க்கெட் எங்கே போவது? என்று அலுப்புத் தோன்றியது. சரக்கு முழுமையாக விற்காததில் சோர்வு ஏற்பட்டது. பாதிக்கு மேலாவது போயிருக்குமா? என்று சந்தேகம் வந்தது. மிஞ்சிப்போனால் அதை உடனே பக்குவப்படுத்தி மறுநாள் பகோடா போட்டுத் தருவாள் கஸ்தூரி. தூள் பகோடாவிற்கு ஆலாய்ப் பறந்தவர்கள்தான் இந்தக் கலெக்டர் ஆபீஸ் ஆசாமிகள். அது இருக்கா? என்று கூடக் கேட்கவில்லையே? சாயங்காலம் டீக்குமுன்னால் நொறுக்குத் தீனி அது. முடிந்தால் நாளை அதைத்தான் கொண்டு வந்து இவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். பழையபடி முடுக்கி விட வேண்டும்.. வாழ்க்கையின் ஜீவநாடியான இது கைவிட்டுப் போனால் தன் பாடு தாளம்தான். குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்.
தற்போது வீட்டு வாசலில் போட்டிருக்கும் கடையில் விற்பனை அவ்வளவு போதாதே….? அங்காவது ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் இருக்கிறது. நன்றாய்ப் போய்க் கொண்டிருக்கும் இவ்வியாபாரத்தை படுக்க விடலாமா?
எதிர்பார்த்துக் கொண்டிருந்த மினி பஸ் வந்து நின்றது. நல்லவேளை. ஒரே பஸ்ஸில் போய் இறங்கி விடலாம். ஆலமரம் ஸ்டாப்பிலிருந்து பக்கம்தான் வீடு. ஒரு டீயைக் குடித்துவிட்டு வந்த ஓட்டுநர் உடனே பஸ்ஸை எடுத்தது ஆச்சரியமாயிருந்தது. தகிக்கும் வெயிலில் காயக் காயப் பத்து நிமிஷம் போட்டு விடுவார்கள். உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு வியர்த்து ஊத்தும். இன்று என்ன வந்ததோ? கூடையையும், கூடைக்குள் வைத்த தூக்கினையும் அடுத்தவர்களுக்கு இடிக்காமல் அருகில் நகர்த்திக் கொண்டார் பரமேஸ்வரன். கண்டக்டர் கூடையையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, சட்டென்று ஒரு பேப்பர் துண்டை எடுத்து ஒரு வடையை வைத்து நீட்டினார். எவ்வளவு சாமி..? அவன் கேட்க….இருக்கட்டும் சாப்பிடுங்கோ….என்றார் இவர்.
அந்த மதிய வேளையில் கூட்டம் சற்றுக் குறைவாய் இருக்க, இருப்போருக்கு டிக்கெட் போட்டுவிட்ட அவன் தன் இருக்கையில் ஆற அமர உட்கார்ந்து வடையை ரசித்துச் சாப்பிடுவதைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்து கொண்டார் பரமேஸ்வரன்.
ருசிக்கு ஒன்றும் குறைவில்லைதான். தன் கைபாகம் மாறிவிடவில்லை. அதே பக்குவம்தான். அதே அளவுதான். அதே தரம்தான். தரம் என்றும் நிரந்தரம்.
நினைத்தவாறே ஸ்டாப் வந்து விட்டதை உணர்ந்து கீழே இறங்கினார். கண்டக்டர் கூடையை எடுத்துக் கொடுத்து உதவினார். இடது தோளில் கூடையும், வலது கையில் அந்தத் தூக்குமாய் நடையைக் கட்டினார் பரமேஸ்வரன். என்றுமே வீடு திரும்புகையில் இந்த வெயிட்டை அவர் உணர்ந்ததில்லை. சமீபமாய்த்தான் இது அவரால் உணரப்படுகிறது. இனி தயாரிப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டும். எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும். ரெண்டு பேருக்காவது தீர்ந்துடுத்தே…என்று சொன்னால்தான் வியாபாரத்துக்கு மதிப்பு.
என்ன யோசிச்சிண்டிருக்கேள்…புரியலியா? உங்களுக்கு ஒண்ணும் புரியாது…பரப்பிரும்மம்…ஜெகந்நாதம்னு பொம்மைக்குக் கீ கொடுத்த மாதிரிப் போயிண்டு வந்திண்டிருக்கேள்..அதுக்கும் கடவுளோட ஆசீர்வாதம் வேணுமே…! .நான் சொல்லட்டுமா…? அப்புறம் என்னை நீங்க கோவிச்சிக்கக் கூடாது…..
இதிலென்னடி கோவிக்கிறதுக்கு இருக்கு? குறைபாடைத் தெரிஞ்சிண்டா மாத்திக்கிறதுக்குத்தானே…? சரக்குல எதும் மிஸ்டேக்னா சரி பண்ண வேண்டிதானே…!
எல்லாம் கஸ்தூரி பார்த்துப்பான்னுதான் விட்டாச்சே…! கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதாய் காலம் போய்விட்டது…..ஆனால் அந்தச் சூட்டிகை அவளிடம் சாகாமல் உள்ளது.
மாத்திக்கிறதாவது…இதெல்லாம் மாத்திக்க முடியாது…அவ்வளவுதான்…கிடக்கட்டும்னு பொருட்படுத்தாம விட வேண்டிதான்…..நீங்க மீதம் கொண்டு வர ஆரம்பிச்ச நாள்லேர்ந்தே எனக்கு சம்சயம்…….யூகிச்சிட்டேன்..எது காரணமாயிருக்கும்னு…!.யாரையும் குத்தம் சொல்றதுக்கில்லே…!….
அப்டீன்னா….? – அப்டீன்னா அப்டித்தான்….
என்ன சொல்றே நீ…ஒரேயடியாப் புதிர் போடுறே….? கொஞ்சம் புரியும்படியாத்தான் சொல்லேன்…–அப்பாவியாய்க் கேட்டார்.
கஸ்தூரிக்கு அவரை நினைக்கப் பரிதாபமாயிருந்தது. புதிருமில்லே…குதிருமில்லே….இதுதான் அதோட காரணம்…உடையவாளுக்குப் பரவாயில்லே…மத்தவாளுக்கு? கொஞ்சமேனும் தயக்கம் இருக்குமோல்லியோ? மனசுல நினைக்கிறதை எப்படி வாய்விட்டுச் சொல்றதுன்னு நினைக்கலாம்….
-சொல்லியவாறே அவரருகில் வந்து கையைப் பிடித்துத் தூக்கி தோலை லேசாகக் கிள்ளி, சுரணை வேண்டாமா…அதுக்காகத்தான்…என்று நெடுகச் சுட்டிக் காட்டினாள் கஸ்தூரி.
ஒரு கணம் அதிர்ந்து போனார் பரமேஸ்வரன். கைகளில் வெள்ளை படர்ந்திருந்ததை அப்போதுதான் முதன் முறையாய்ப் பார்ப்பதுபோல் பார்த்தார். அது நாள் வரை அதை அவர் நினைத்ததேயில்லை பொருட்படுத்தியதுமில்லை. இப்போது சற்று அதிகமாகப் பரவியிருக்கிறதோ? இதையா நினைப்பாங்க…? யாரும் அப்படிக் குறிப்பாப் பார்த்ததுபோலக் கூடத் தெரிலயே? தோன்றியது. கஸ்தூரி சொன்னதுபோல் கைகளில் ப்ளாஸ்டிக் உறைகளை மாட்டிக் கொண்டார். பரவாயில்லையே…!..
அதுநாள் பழகியவரை ஊழியர்களை அன்புள்ளம் கொண்டவர்களாகத்தான் கண்டிருக்கிறார். எத்தனையோ சங்கடங்களோடு உலாவுபவர்கள் எனினும், காணும்போது அன்பைப் பொழிபவர்கள். தங்கள் மன உளைச்சல்களை நினையாதவர்கள். அதையும் மீறி அன்பு செலுத்துபவர்கள். ஆதரவு அளிப்பவர்கள். யாரையும் எதற்காகவும், எப்போதும் கைவிட்டு விடாதவர்கள். அவர்களுக்கு இது ஒரு பொருட்டேயல்ல….என்னவோ இப்படித்தான் நினைக்க வைத்தது. வியாபாரம் படுத்து விடுமோ? பயமும் வந்தது.
எப்பொழுதும்போல் அந்த அலுவலகத்திற்குள் நுழைகிறார் பரமேஸ்வரன். சாமி…வாங்க…வாங்க…என்ன ஆளைக் காணமேன்னு பார்த்தோம்….சொல்லிக் கொண்டே அவரவர் தேவைகளைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
ஆளே ஒரு மாதிரித் தெரியுது…? என்ன முகத்துல உற்சாகத்தையே காணோம்? நீங்களா எதாச்சும் நினைச்சு சுணங்கிட்டீங்களோன்னு தோணிப் போச்சு எங்களுக்கு. இது ஒண்ணும் வியாதி இல்ல…இதப் பத்தி நீங்க எதுவும் நினைக்க வேணாம். உடம்புல ஏற்படுற தோல் மாற்றம்தான்…மத்தப்படி வேறே ஒண்ணுமில்ல…எப்பயும் போல வந்திட்டுப் போயிட்டு இருங்க…உங்க சரக்குத்தான் எங்களுக்கு முக்கியம்…ருசிதான் பிரதானம்…வழக்கம்போல உங்க வியாபாரத்தப் பாருங்க….சொல்லியவாறே வந்து இடது கையைப் பிடித்துக் கொண்டார் ஒருவர். நெகிழ்ந்து போனார் பரமேஸ்வரன். கண்களில் நீர் முட்டியது.
முன் ஜாக்கிரதையா கைல உறை போட்டுட்டீங்க போல்ருக்கு…சூப்பர் – அலுவலக மேலாளரே எல்லோர் சார்பாகப் போல இப்படிச் சொன்னபோது…இவருக்கு ஆறுதலாக இருந்தது. அழுது விடுவோமோ என்று கசிந்து கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்.
அடுத்தடுத்த அலுவலகங்களையும் தொட்டுவிட்டு, கலெக்டர் ஆபீஸை நோக்கி நடை போட்டார் பரமேஸ்வரன். தோளில் ஏறியிருந்த சரக்குக் கூடை பாரம் இறங்கியிருந்ததை நன்றாகவே உணர முடிந்தது. மன பாரமும் குறைந்திருக்கிறதுதானே…!
நாம சராசரியா நினைச்சிடறாப்ல இல்ல மனுஷாள்……. மனிதர்களோட கருணையும், நேசமும் அப்டியொண்ணும் வத்திடாதுதான்….இவாளோடெல்லாம் பழகுற வாய்ப்பு கிடைச்சிருக்கே எனக்கு…அதுக்கு நான் ரொம்பக் கொடுத்து வச்சிருக்கணும்… என்னைக் கைவிட்டுட மாட்டா…என் பிழைப்புல மண் விழுந்திடாது….கடவுளா இவா துணையிருப்பா….நினைத்துக் கொண்டே மனம் விசும்ப அடிகளை எட்டிப் போட்டார் பரமேஸ்வரன்.