மந்திரம் – ஒரு பக்க கதை






ராமு தன் மனைவி ரதியிடம் கோபித்துக் கொண்டதால் முதல் முறையாக அவள் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட, அவனுக்கு வீட்டில் உள்ள பொருட்கள் எது எங்கே இருக்குன்னு தெரியாமல்
படாத பாடு பட்டுவிட்டான்.
சட்டை எடுக்க பீரோவைத் திறக்க, முன்னாடி வந்து விழுந்தது ரதியின் டைரி. எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.
“அலுவலகம் செல்ல அவசரக் குளியல் போட்டு கிளம்பும் உன்னை, தலை முதுகு தேய்த்து, குளிப்பாட்டி, உன் தலையை என் முந்தானையால் துவட்டும் என் கடமையைச் செய்ய நேரம் இல்லையே என்ற வருத்தமடா எனக்கு.’
“என்னடி…ன்னு நீ என்னை கூப்பிடும்போது என் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் புதிதாய்ப் பிறந்தது போன்ற உணர்வு எனக்குள்.’
“மாமான்னு நான் கூப்பிடும்போது சிலிர்க்கும் உன் கண்களையும் மலரும் உன் முகத்தையும் பார்க்க கோடி கண்கள் வேண்டுமடா.’
“எனது கோபமோ உனது கோபமோ நீர்க்குமிழி மாதிரி சிறிது நேரத்தில் முடிந்துவிடும். அதனால் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு மட்டும் போகக்கூடாது என்று நினைத்துக் கொள்வேன். ஏன்னா நான் இல்லாமல் நீ சிரமப்படக்கூடாது என்றுதான்டா.’
ராமுவுக்கு ரதியின் அன்பு கலந்த வரிகளைப் படித்ததும் சாட்டையால் அடித்தாற்போல உணர்ந்தான். உடனே கிளம்பினான், அலுவலகம் அல்ல அந்த தேவதையின் அம்மா வீட்டுக்கு… தேவதையை அழைத்து வர….
– மே 2011