நீங்கதான் கடவுள் – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,364
புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அது ஷு கடை. மற்றவர்களின் ஷுக்களுக்குப் பாலிஷ் போட்டுச் சுயமாகச் சம்பாதிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஷு வாங்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை.
தீர்மானத்தோடு ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கினான். தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஷுவில் இருக்கும் லேஸ் கூட வாங்க முடியாது என்பதை உணர்ந்தவன், அந்தக் கடைகளையே ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தன் தோளில் யாரோ கைப்போட, திடுக்கென திரும்பிப் பார்த்தான். “இங்க என்ன பார்த்துக்கிட்டிருக்க?’ என்று கேட்டாள் பெண்மணி ஒருத்தி.
“அடுத்த மாசமாவது நிறைய காசு சம்பாதிச்சு, ஷு வாங்கணும்னு வேண்டிக்கிட்டு இருந்தேன்’ என்றான்.
அவன் சொன்ன அந்த வார்த்தைகளில் உண்மையும் இருப்பதை உணர்ந்தவர், நேரே தன் கடைக்குள் சென்று அந்த சிறுவனின் காலுக்கு ஏற்றவாறு அழகிய ஷு ஒன்றை அவனிடம் தந்தாள். அந்தச் சிறுவனுக்கோ ஒரே குஷியாகி விட்டது. அவன் கண்ணில் பட்ட சந்தோஷத்தைப் பார்த்த அந்த பெண்மணி, சிறுவனிடம், “நான் யார்னு தெரியுமா?’ என்று கேட்டாள்.
தான்தான் அந்தக் கடைக்கு முதலாளி என்று கண்டுபிடித்து விடுவான் என்று எதிர் பார்த்திருந்த சமயத்தில்…
சற்றும் சளைக்காமல், அடுத்த நொடியே வந்தது பதில், “நீங்கதான் கடவுள்’
– பி.கே. அருணா, திருச்சிராப்பள்ளி. (திசெம்பர் 2013)