நிதானம்…




(2007ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு மணி பதினொன்றாகி இருபது நிமிடங்கள் ஓடியிருந்தன. தன்னந்தனியே அந்த உயரமான மாடி வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்துகொண்டு ஒரு கையில் சிகரெட்டும் மறுகையில் பீர் டின்னுமாக உச்சிமோட்டை வெறித்துக்கொண்டிருந்தான். கோவிந்தராஜு என்கின்ற கோவிந்தா.
கையிலிருந்த சிகரெட் சாகத் துடிப்பதையறிந்து அதற்கு மறுபடியும் புத்துயிர் கொடுக்கத் தனது தடித்த உதடுகளில் அடைக்கலம் கொடுத்து அண்ணாந்தான். சில வினாடிகளில் புகை வளையங்கள் அந்த குளிர் சாதன அறையில் அங்கும் இங்கும் ஓடிப் பிடித்து விளைாடத் தொடங்கின. கண்களில் சிகப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குடியேறிக் கொண்டிருந்தது.
உதடுகளில் ஒட்டியிருந்த சிகரெட் மறுபடியும் கையில் தாவிக் கொள்ள டின்னுக்குள் இந்த பீர் முழுவதும் அவன் இதழ்களை நனைத்துக் குடலில் அடங்கியது. காலிடின்னை வீசி எறிந்தான். மீண்டும் சிகரெட் அவன் உதடுகளுக்குள் புகுந்து கொண்டது.
முழுங்கால் வரையில் நீண்ட சிறுவார். திரண்டு கிடந்த உடம்பில் திமிராய் ஒட்டியிருந்த முண்டா பனியன். கட்டையாய் வெட்டிய கறுகறுத்த முடி. கடுமையான பார்வையைக் கண்கள் வெளிப்படுத்தினாலும் அதற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அப்பாவித்தனம். நல்ல நிறம். வாளிப்பான வாலிபத் தோற்றம் கோவிந்தராஜு என்ற கோவிந்தா இப்படித்தான் இருப்பான். சிகரெட் முடிந்தது. பீரும் காலியானது. கண்கள் மேசையைத் துழாவின. இரண்டு பிளாஸ்டிக் பொட்டலங்கள் இன்னும் எங்களைத் தொட மனமில்லையா உங்களுக்கு… கண்களில்பட முரட்டுத்தனமாய் கையை நீட்டி எடுத்தவன், பசிகொண்ட பூனையைப் போல் கிழிக்கிறான். கிழிபட்ட பொட்டலத்திலிருந்து உருளைக் கிழங்கு வறுவல் சிதறுகின்றது. வலது கையால் வாரி வாயில் போட்டுக் கொள்கிறான்.
மனசுக்குள் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது. நண்பர்கள் விசுவும் சாமியும் சேர்ந்துக் கொண்டு அவனைக் கேலி செய்தும் அந்தப் பெண் தேனி. அவர்களுடன் ஒட்டி உரசிக் கொண்டு நின்றவாறு அவனைப் பார்த்த பார்வையும்…
கோவிந்தா தன்னையே நொந்து கொள்கிறான். இந்த இருபத்தாறு வயதிலும் அப்பா அம்மா அண்ணி என்று எப்போதும் கைச் செலவுக்கு அவர்களின் கையையே எதிர்பார்த்து நிற்பதும், சாப்பாட்டுக்குக்கூட அவர்கள் கணக்காகக் கொடுத்துக் கணக்குக் கேட்பதும்..
தானும் ஒரு வேலை செய்து சுயமாகச் சம்பாதித்து நாலு காசை சேர்த்து தன் விருப்பம்போல் வாழ்ந்து தான் விரும்பியதை வாங்கி உண்டு. உடுத்தி செலவு செய்ய வேண்டும் என்று பல தடவைகள் அவன் முடிவு செய்தும், அத்தனை முடிவுகளுக்கும் நாய் போர்வை வாங்கிய கதையாகவே முடிந்து விட்ட நாட்களே அதிகம். அவன் வாயிலிருந்து வெளிவந்து கரைந்து போகும் புகை வளையங்களைப் போலவே கனவுகளும் கற்பனைகளும் கலைந்து காணாமல் போய்விடும்.
அவன் அடுக்கடுக்காய் புகை வளையங்களை விட்டு விளையாடி மகிழ தன் பதினான்கு வயதிலேயே பழகிவிட்டான். எப்போதாவது மலேசியாவிலிருந்து தனது மிக நவீன மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வரும் முனியாண்டி மாமா தான் அவனை இந்த தீவிர விளையாட்டுக்கு மகா குரு.
மாமா வந்து விட்டாலே கோவிந்தாவுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்து விடும். ஏட்டுப் படிப்பை எடுத்தெறிந்து விட்டுத் தன் முரட்டுத் தனத்தால் எடுபிடி வேலைகளை செய்து அப்படி இப்படி வாழ்வது. அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து தனது முப்பது வயதில் ஏதோ ஒரு நிலைக்கு வந்து நிற்பவன்தான் அவனது மாமா முனியாண்டி.
‘புத்தகத்தைப் படிச்சிட்டு நீ என்னடா மாப்ளே செய்யப்போறே.. உனக்கும் உன் படிப்புக்கும் எவன்டா வேலை கொடுக்கப் போறான். மத்த சாதிக்காரன் அதுக்காகவே பொறந்து வந்துட்டான். நீ பேசாம என்னோட வழியில வந்திடு. நான் உன்னை மனுஷனாக்கிடறேன்.’
தன் அக்கா பிள்ளைகள் இருவரில் இவனைத்தான் முனியாண்டிக்கு அதிகம் பிடிக்கும். அக்கா வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் அவனை அள்ளி அணைத்துக் கொண்டு கொஞ்சுவான். அழகான சட்டைகளையும் சப்பாத்துகளையும் வாங்கி வந்து போட்டு அழகு பார்ப்பான். விதவிதமாய் உடுத்தி விட்டு ரஜினி என்றும் கமல் என்றும் பாராட்டுவான்.
தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் சுற்றுவான். தன்னோடு கோப்பிக் கடைகளுக்கு அழைத்துப் போய் தான் போடும் தண்ணீரை அவனுக்கு ருசி காட்டுவான். ரஜினி என்னடா ஸ்டைல் காட்றான். இங்கே பாரு உன்னோட மாமாவை.. என்று எரியும் சிகரெட்டை வாய்க்குள் போட்டு சவடால் காட்டுவான். கோவிந்தாவுக்கு குஷி பொத்துக்கொண்டு கிளம்பும். மாமா ஊர் திரும்பிய பின்பும் அதே நினைப்பில் அரைத்தூக்கத்தில் தன் படுக்கையில் கிடப்பான். மாமா செய்தவற்றை எல்லாம் மறுபடியும் தன் மனக் கண்ணில் கொண்டுவந்து பார்ப்பான்.
பள்ளிப் பாடங்கள் பாகற்காயாய்க் கசந்தன. மாமா இல்லாத வீடு வேப்பங்காயாய்க் கசந்தது. அப்பாவும் அம்மாவும் வேண்டாதவர்களாகவே தெரிந்தார்கள். அவர்கள் முகத்தைப் பார்க்கவே அவனுக்கு வெறுப்பாக இருந்தது. இந்த நிலையில்தான் அவன் அண்ணன். அந்தக் குடும்பத்தின் மூத்த பிள்ளை சரவணன் வெளிநாட்டில் தனது படிப்பை முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பியிருந்தான்.
அவனது சுத்தமும் நேர்மையும் பணிவும் படிப்பின் அழகும் அக்கம் பக்கத்தார் மெச்சும்படியாக இருந்தன. யார் யாரோ வந்து அவனைப் பாராட்டிப் புகழ்ந்து விட்டுப் போகிறார்கள். அப்பா அம்மாவும் மனசு கொள்ளாது பூரித்துப்போனார்கள். அவர்களும் அவனை வாயாரப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள். வாய்க்கு ருசியாய் சமைத்துப் போட்டுச் சாப்பிடச் சொன்னார்கள். வந்துசேர்ந்த முப்பது நாளிலேயே முத்தான வேலையும் கிடைத்து விட்டது சரவணனுக்கு.
‘நம்ம பிள்ளைக்கு நாலாயிரம் வெள்ளி சம்பளமாம். நாம பட்ட கஷ்டமெல்லாம் போயிடுச்சுங்க. நம்ம கனவெல்லாம் நிறைவேறிடுச்சுங்க..’
அம்மாதான் தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையாய் பேசிக் கொண்டிருந்தாள். கோவிந்தா எங்கோ போய்விட்டுத் தன் சைக்கிளில் வந்து இறங்கினான். தலைமுடிகலைந்து ஆடைகள் அழுக்கேறி முகம் கறுத்துப்போய்க் கிடந்தது. சைக்கிளை ஒரு பக்கமாய்ச் சாத்திவிட்டு உள்ளே நுழைந்தவனைப் பார்க்க அம்மாவுக்குக் கவலையாய் இருந்தது. வேதனையோடு அவனைப் பார்க்கிறாள். மனதில் எழும் கேள்விகள் முகத்தில் தெரிகிறது. மூத்தவனைப் பார்த்து மகிழ்ந்த கண்கள் இளையவனைப் பார்த்து அழுகின்றன.
‘இப்ப அழுது என்னடி பண்றது. கழுதை தன்னோட இஷ்டத்துக்குப் போறேன்னு போய் இப்படி வந்து நிக்குது. எல்லாம் உன்னாலேயும் உன் தம்பியாலேயும் வந்ததுதானே.. சொன்னாக் கேட்டாயா… சொந்தம் சொந்தம்ன்னு அந்த தறுதலையை இந்த வீட்ல விட்டே. இப்ப இங்கே ஒரு தறுதலை வந்து நிக்குது…’
அப்பாவின் வார்த்தைகள அம்மாவின் கண்களில் நீரைக் கொட்ட வைத்தது. அவன் விசும்பத் தொடங்கினான். கோவிந்தாவுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவனுக்கு வயிற்றுப் பிரச்சனையே பெரிய கவலையாக இருந்தது. அடுப்படிக்குப் போனான். இருந்ததை எடுத்துப் போட்டுச் சாப்பிட்டான்.
‘தீனி மாடு அள்ளிப் போட்டு முழுங்குது பாரு… ஆக்கிப் போட நீ இருக்கே. அள்ளிக் கொட்டிக்க அவன் இருக்கான்.’
அப்பாதான் தொண்டை வலிக்கக் கத்திக்கொண்டிருந்தார். கோவிந்தா மௌனமாய்ச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் உடம்பில எங்கோ யாரோ பழுக்கக் காய்ச்சிய கம்பியினால் சூடு போட்ட மாதிரி சுரீர் என்று வலித்தது.
அண்ணனுக்கும். இவனுக்கும் இடையில் இருந்த மூன்று அக்காமார்களும் மணமுடித்து புகுந்த வீடு போய்விட்டதால் அந்த வீட்டில் அண்ணனும் இவனும்தான் பிள்ளைகள். அண்ணன் இவனைவிட பதினான்கு வயது மூத்தவன். அவன் வெளிநாட்டில் தங்கிப் படித்தாலும் தம்பியின்மேல் தனிப்பட்ட அன்பை வைத்திருந்தான். ஆனால் அது அவர்களை இணைக்கவில்லை. ஒரு பயமுறுத்தலையே தந்தது. எப்போதாவது வந்து பார்த்து விட்டுப் போகும் தாய் மாமாவிடம் இருந்த ஒட்டுதல் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அண்ணன் தம்பிகளிடையே இல்லை. படித்தவர்களோடு பழகிய சுபாவமே சரவணனிடம் மிகுந்திருந்தது. தம்பியைத் தன் வழிக்குக் கொண்டு வர சரவணன் தன் படிப்பைப் பயன்படுத்திப் பார்த்தான். ஆனால் அந்த முறை அவனை நெருங்கி வரச் செய்யாமல் தூரத்திலேயே நிறுத்தி வைத்தது. கோவிந்தனைப் பொறுத்தவரை அம்மா தேவைப்பட்டாள். அப்பா வேண்டப் படாதவராகிப் போனார். அண்ணன் மரியாதைக்கு உரியவனாகியிருந்தான்.
அவனுக்கு இருபத்தியோரு வயது வந்தபோது அவனது பிறந்தநாளை அண்ணன் கொண்டாடினான். அது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அந்த மகிழ்ச்சியை அதிகமாக்க அவனுக்கென்று ஓர் மோட்டார் சைக்கிளையும் அண்ணன் வாங்கித் தந்தான்.
‘இந்த மோட்டார் சைக்கிள்தான் இனி உனக்குப் புதிய நண்பன். இதை நல்ல விஷயத்திற்கே நீ பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நாளையிலிருந்து நீ தொழில் கல்விக்குப் போகப்போற… விட்டதைப் பத்திக் கவலைப் படாதே… புதுசா கத்துக்கிறதுக்கு நிறைய வழியிருக்கு.. நீ பெரியவனாயிட்டே.. ஒரு ஆண் பிள்ளையா லட்சணமா இரு..’ என்று தட்டிக் கொடுத்தான்.
கோவிந்தாவுக்கு. ஆனந்தம் பொங்கியது. கூடவே அழுகையும் பொங்கியது. அண்ணன் தன்மேல் வைத்திருக்கும் அன்பைக் கண்டு உருகிப்போனான். அந்த உண்மையான அன்புக்காக வேண்டியாவது தன்னை மாற்றிக் கொள்ள விரும்பினான். அதற்காக முதல் கட்டமாக சிகரெட் புகைப்பதை விட்டுவிட முடிவு செய்தான். தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்த சிகரெட்டையும். லைட்டரையும் வீசி எறிந்தான். புதிய சிந்தனைகளோடு புதிய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தன் நண்பர்களைப் பார்க்கப் போனான். நண்பர்களுக்கு அவன் பேச்சும் செயலும் ஆச்சரியமாகவும். வேடிக்கையாகவும் இருந்தன. அவனைக் கேலியாகப் பார்த்தார்கள்.
‘இந்த வயசில தாண்டா மச்சி ஜாலியாச் சுத்தணும்.. இப்ப எஞ்ஜாய் பண்ணாம வேறு எந்த வயசிலே பண்ணப்போறே.. நல்ல சான்சா வண்டி கெடச்சிருக்கு… நாளைக்கு ஒரு கையா கூட்டிக்கிட்டு சுத்துவியா..’
குத்திக் காட்டினார்கள். குதர்க்கம் பேசினார்கள். அவனுக்கு ஆத்திரம் வரும்வரையில் கேலி பேசினார்கள்.
இந்தக் காலத்துல ஒரு பொட்டச்சிகூட இப்படி வூட்டுக்குள்ளேயே அடங்கிக் கெடக்க மாட்டாடா மச்சி… நீ வீட்டுக்குப் போய்ப் பேசாம உங்க அம்மாவோட புடவைய எடுத்துக் கட்டிக்கோடா…
அவன் உச்சி மயிரைப் பிடித்து உலுக்கியது போன்றிருந்தது. விருட்டென்று எழுந்தான். மோட்டார் சைக்கிளை ஒரு மிதி மிதித்தான். அது அவன் கோபத்தைக் கண்டு அரண்டு ஓடியது. நேராக சீனன் கோப்பிக் கடைக்குப் போனான். கையிலிருந்த பணத்துக்கு எதை எதையோ வாங்கிக் கொண்டு வீட்டுக்கு விரைந்தான். பாதிவழியில் மனம் வீட்டுக்குச் செல்ல அடம் பிடித்தது. கால்களோ வேண்டாம் வேண்டாம் என்று அழுதன. முடிவாக அண்ணன் புதிய வீட்டை நோக்கி ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் வண்டி பறந்தது.
அப்பர் சாங்கி சாலையின் ஒதுக்குப் புறமான இடத்தில் ஓய்வுக்காக அண்ணன் அதை வாங்கிப் போட்டிருந்தாலும் பெரும்பாலும் அதில் அவன் வசிப்பதில்லை. அவனது மனைவி மல்லிகா தனது டெய்லரிங் தொழிலை ஒரு அறையில் நடத்திக் கொண்டிருந்தாள். பெரும்பாலும் கோவிந்தா ஓய்வாக அங்கு வந்து படுத்திருப்பான். அண்ணியின் சுத்தம் அவனுக்கு கொஞ்சம் பயமாக இருந்ததால் கூடிய மட்டும் அந்த வீட்டை அவனும் சுத்தமாகவே வைத்திருப்பான். ஆனால் இன்று அவனால் முடியாமல் போனது. குடித்து முடித்த பீர் டின்னும், புகைத்து முடித்த சிகரெட் துண்டுகளும் தரையில் சிதறிக் கிடக்க சோபாவில் உருளைக் கிழங்கு வறுவல்கள்…
தலைக்குமேல் வளையங்களாய் கரைந்து புகை மூட்டமாகிக் கொண்டிருக்க அதிலேயே கண்கள் நிலைத்திருந்தபோன அண்ணி கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
கையிலிருந்த பொருட்களை வைப்பதற்குக் குனிந்தவள் கண்கள் சோபாவில் கிடந்த கோவிந்தாவையும் சிதறிக் கிடந்த பொருட்களையும் உக்கிரமாய்ப் பார்த்தன. கோபம் தலைக்கேறியது. நிதானம் தவறியது. என்ன பேசுகிறோம் என்பதையும் மறந்தாள். ஒரு மூலையில் கிடந்த துடைப்பத்தை எடுத்தாள், அதன் தலைப் பாகத்தைப் பிடித்தவாறு அந்தக் கம்பினால் அவனது முழுங்காலில் வேகமாய் ஒரு அடி வைத்தாள்.
‘தடி ராஸ்கல்… நீ எப்பவுமே திருந்த மாட்டியா? உனக்கு புத்தியே வராதா…
அடிபட்டதும் கோவிந்தா பொறிகலங்கிப் போனான். மண்டையில் சுழன்று கொண்டிருந்த கேள்விகள் எல்லாம் காணாமல் போய், அந்த அவமானம் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்த வேளையில் அண்ணியின் தாக்குதல் அடிபட்ட வேங்கையாய்ச் சீறி எழ வைத்தது. ஆத்திரம் மட்டுமே அங்கே மேலோங்கி நிற்க எதிரே நிற்பது அண்ணி என்ற உணர்வும் மங்கி… அவள்மேல் பாய்ந்தான். அவனது தாக்குதலை சற்றும் எதிர்பாராத அண்ணி தடுமாறிப் போனாள்.
அவனது கையின் வேகமான வீச்சு அவளை நிலைகுலைய வைத்தது. புயலில் அடிபட்ட தென்னைபோல் சாய்ந்தாள். சாய்ந்தவளை அழகுக்காக வாங்கி நிறுத்தியிருந்த பளிங்கு மேசை தாங்கிக் கொண்டது. பிடரியில் விழுந்தாள் அடி ரத்தத்தைப் பீறிட்டு வரவைத்தது! அண்ணி துவண்டு விழுந்தாள், கோவிந்தாவை நிமிர வைத்தது. ரத்தத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். ஓடிப்போய் அண்ணியைத் தூக்கினான்.
அண்ணி… ! அண்ணி…! என்று அழுதான், அரற்றினான் ஆனால் அண்ணி பேசவே இல்லை.
கடுமையான பாலைவன வெப்பத்தில் குளிர்ந்த சுனை ஒன்று தென்பட்டதுபோல் அந்த வீட்டில் அவனுக்கு ஆறுதலாய் வந்தவள் அண்ணி மல்லிகா. அண்ணனின் அன்பைப் பால் என்று சொன்னால் அந்தப் பாலில் தேன் கலந்ததுபோல் கோவிந்தாவுக்கு அண்ணி அமைந்தாள்.
அண்ணிக்கு கோபமே வராது. அவள் அவன்மீது ஆத்திரப்படவே மாட்டாள். கோவிந்தா கெட்டுப்போனதற்கு அவனது பெற்றோர்களின் கவனிப்புக் குறைவே காரணம் என்று துணிந்து அவர்களிடம் சொல்வாள்.
சரவணன் படிக்க வேண்டும் என்பதிலும் படித்துக் கொண்டிருந்த பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க வேண்டுமே என்பதிலும் மனம் வைத்த தாயும் தந்தையும் கடைக்குட்டியாக கோவிந்தனைக் கவனிக்காமல் போனது உண்மைதான். அவன் தானாக வளர்ந்து விடுவான் என்ற நினைப்பில் அவனுக்குச் சாப்பாட்டை மட்டுமே கொடுத்து விட்டுத் தனது மற்ற வேலைகளில் நேரத்தைக் கழிக்கும் தாய். தனது சம்பாத்தியம மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்றும் என்பதால் சதாகாலமும் டாக்சியில் ஸ்டியரிங்காய் மாறி உழைக்கும் அப்பா.
அப்பாவுக்கு கிடைக்கின்ற பணத்தைக் கொண்டுவந்து மனைவியின் கையில் கொடுக்கத்தான் தெரியும். அவருக்கு வீட்டிலும் தனக்குக் கடமைகள் இருக்கின்றன என்ற நினைப்பே வராது. அம்மா தன் கணவன் கொண்டு வந்து கொடுக்கும் பணம் பத்தாக இருந்தாலும் நூறாக இருந்தாலும் சேமித்து வைத்து பிள்ளைகளின் படிப்புச் செலவு குடும்பத்தின் சமையல் செலவு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய பெண்களுக்கு நகைகள், புடவைகள் என்று எல்லாவற்றையும் சரி செய்து கொள்வாள். குழந்தைகளின் நல்லது கெட்டது எல்லாமே அவளை மட்டுமே சார்ந்திருந்தது. நல்ல நண்பர்கள் மூன்று பெண்களுக்கு முத்தான மாப்பிள்ளைகள் கிடைத்தார்கள். கழுத்தில் தாலிச் சரடு ஏறியதுமே பெண்கள் தங்கள் பிறந்த வீட்டை மறந்தார்கள். மாப்பிள்ளைகளும் தங்களது மனைவிமாரைக் கண்போல் காத்தார்கள். எவ்வித பிரச்னையும் இல்லாமல் காலம் ஓடியது. சரவணனின் மேல்படிப்பு ஒரு நிலைக்கு வந்தது. அவன் பட்டாதாரியாகி வேலையில் சேர்ந்ததும் ஒரு இரட்டை மாடிவீட்டை சன்செட் வேயில் வாங்கினான். பெற்றோர்களுக்குத் தனது நன்றிக்கடனாக அதைச் செய்தான். அதன்பின் நகர்ப்புறத்திற்கு அப்பால் அப்பா சாங்கி வட்டாரத்தில் ஒரு நான்கறை கொண்ட அப்பார்ட்மெண்ட்டையும் வாங்கினான். சரவணன் தனியாக வீடு வாங்கினான் என்பது மட்டுமே வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும். ஆனால் அதை தனது தம்பி பேரில் வாங்கி வைத்துள்ளான் என்று யாருக்கும் தெரியாது.
அந்த நவீன அப்பார்ட்மெண்டில்தான் மல்லிகா தனக்கொரு வருமானத்தைத் தேடிக் கொள்ளத் தான் கற்றிருந்த தையல் கலையைப் பயன்படுத்திக் கொண்டாள். அந்தப் பகுதியில் வசிக்கின்ற பெண்களில் பலர் அவளிடம் பயிற்சி பெற்று வந்தனர். பயிற்சி பெற்ற மாணவிகளைக் கொண்டே துணிகளைத் தைத்துக் கொடுத்து நல்ல வருமானத்தை ஈட்டி வந்தாள் மல்லிகா.
பெரும்பாலான நேரங்களில் கோவிந்தா மல்லிகாவுக்கு உதவியாக இருந்து வந்தான். மல்லிகா ஒரு தாயின் நிலையில் இருந்து அவனுடன் நேரத்தைப் போக்குவாள். அவனை வலிய அழைத்துத் தையல் பயிலச் சொல்வாள்.
அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டுறதுக்குப் பதிலா இந்த மோட்டாரை ஓட்டு, உன் மேல இருக்கின்ற பழியெல்லாம் போயிடும். பணம் வந்து தானா கையில் சேரும் என்பாள். அவனும் கொஞ்சம் முயல்வான். மனக்குரங்கு அவனை இயங்கவிடாது அலைய வைக்கும். தோற்றுப்போவான். தோல்வியை மறக்க… புகைக்கத் தொடங்குவான். அண்ணியிடம் மாட்டிக் கொண்டு விழிபிதுங்குவான். இவ்வளவு தப்பு பண்றேனே.. உங்களுக்கு கோபமே வராதா அண்ணி…
குழந்தைபோல் கேட்பான். மல்லிகா மல்லிகையாச் சிரிப்பாள்.
‘யார்தான் தப்பு பண்ணலே கோவிந்த்… சரித்திரத்தில் மகான்களா பேசப்பட்றவுங்களெல்லாம் இளமையில் எத்தனையோ தப்புகளைப் பண்ணிட்டுத்தான் திருந்தி வந்திருக்காங்க.. அவுங்களையெல்லாம் உலகம் தூக்கிப் போட்டுட வில்லையே… உன்னோட வாழ்க்கையில இன்னும் எவ்வளவோ காலம் இருக்கு கோவிந்த். நீ உன்னோட முரட்டுத் தனத்தை மாத்திக்கணும். கோபத்தை மறந்துடணும். ஆத்திரம் அறிவுக்கு சத்துருன்னு நீ கேட்டதில்லையா… அந்த ஆத்திரம் உன்னை அழிச்சு உன்னைச் சேர்ந்தவுங்களையும் அழித்துவிடும்’ என்பாள்.
கோவிந்தா சுற்றும் முற்றும் பார்க்கிறான். எதுவுமே புலப்பட மறுக்கின்றது. குளியறைக்குள் ஓடி கையில் தண்ணீரை அள்ளிவந்து அவள் முகத்தில் வீசி கைகளில் முகத்தை ஏந்தி அண்ணி! அண்ணி! என்று அழைக்கிறான்! அழுகிறான். அவள் கண்திறக்க மாட்டாளா என்று தவிக்கிறான்! ஆனால் அவளோ வெட்டிப் போட்ட வாழையைப் போல் கிடக்கிறாள். கோவிந்தா தனக்குத் தெரிந்த அவசர சிகிச்சைகளையெல்லாம் செய்து பார்க்கிறான். மல்லிகா என்ற பெண் இறந்துவிட்டாள் என்பது அவனுக்கு தெளிவாகிப் போனது. அப்படியே சுவரில் சாய்ந்து போனான் கோந்தா.
கையில் மறுபடியும் சிகரெட்டும் லைட்டரும் ஏறிக்கொள்கின்றன. நிஜமாகவே செத்துப் போய்விட்டாள். தன்தவறுகளையெல்லாம் மறந்து மன்னித்தவள் இறந்து விட்டாள்! அண்ணனுக்கு வலது கரமாகவும். தாய்க்குத் தாயாகவும் இருந்த அண்ணியைக் கொன்று விட்டேன். நான்தான் கொன்றேன்… என்னால்தான் செத்துப் போனாள்… ஒரு பாக்கெட்டன்ஹில் முடிந்து போனது. கோவிந்தா எழுந்து வந்தான். பால்கனியில் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். தூரத்தே கடலில் விளக்குகள் மின்னின. வரிசை பிடித்து நின்ற அப்பார்ட்மெண்டின் அறைகளில் பல தூங்கிப் போயிருந்தன. சிலவற்றில் விளக்குகள் தங்கள் வேலையை நீடித்துக்கொண்டிருந்தன. கீழே பார்த்தான். கார்கள் வருவதும் போவதுமாய் இருந்தன. அந்த அப்பார்ட்மெண்ட் வசதிபடைத்தவர்களின் சின்ன வீடுகள் தங்கியிருக்கும் இடமாகவும் இருந்ததால் வருகின்ற கார்களில் பல வெளிநாட்டுக் கார்களாகவே இருக்கும். அவை வரும்போது வேகமின்றியே வந்து போகும். மோட்டார் சைக்கிள்கள் குறைவாகவே இருக்கும். அந்த நேரத்தில் கூட ஓரிரு மோட்டார் சைக்கிள்கள் வந்து நின்றன.
கோவிந்தா வீடு முழுவதும் அலைந்தான். இப்போது என்ன செய்வது என்ற குழப்பமே அவனை அலைக்கழித்தது. அப்பாவுக்குத் தெரிந்தால் வேண்டுமென்றே அடித்துக் கொலை செய்து விட்டேன்! என்றுதான் சொல்வார். அம்மாவுக்கு அண்ணியின் இழப்பைத் தாங்கவே முடியாது. அதிர்ச்சியில் அவள் உயிரே போய்விடும்…?
கோவிந்தனால் அதைக் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. சோபாவில் நிமிர்ந்து உட்கார்ந்து யோசித்தான். மூளையில் எதுவுமே உதிக்கவில்லை. தலையில் இரண்டு கைகளாலும் பளீர் பளீர் என்று அடித்துக் கொண்டான்.
ஐயோ..கடவுளே…! எனக்கு எதுவுமே தோன்றவில்லையே…! உண்மையை ஒப்புக் கொண்டு அண்ணியைப் பற்றிச் சொன்னால் வரப்போகும் பிரச்னைகளை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கிறதே…! எனக்கு வழியே தெரியலியே கடவுளே…!
கைத்துடுப்பைக் கடலில் விட்ட படகோட்டி போல் தவித்தான். தலையை சோபாவின் கைப்பிடியில் முட்டிக் கொண்டு அழுதான். அழுது அழுது ஓய்ந்து போனான். தன்னையும் அறியாமல் தூங்கிப் போனவன் கனவுபோல் திடுக்கிட்டு எழுகிறான். பளிச்சென்று ஏதோ ஒன்று புலப்படுகிறது. அசுர வேகத்தில் செயல்படுகிறான். அடுத்த நிமிடம் அண்ணன் பயணப்பை தரைக்கு வருகின்றது. படுக்கை விரிப்பை எடுத்து விரிது அதில் உடம்பை வைத்துச் சுற்றிக் கட்டிக் தூக்கி அந்தப் பெரிய பெட்டிக்குள் வைத்து பூட்டுகிறான். தரையில் கிடந்த ரத்தத்தைத் துடைத்துச் சுத்தம் செய்கிறான்.
பரம்பரமாய்ச் சுழன்று அந்த அறையை ஒழுங்குபடுத்தி விட்டு பயணப் பெட்டியை அண்ணி துணி தைக்கும் அறைக்குள் வைத்துக் கதவை இழுத்து அடைக்கிறான். பூட்டை மாட்டிப் பூட்டி விட்டுக் குளியல் அறைக்குள் நுழைந்து தொட்டியில் விழுந்து அலுப்புத்தீரக் குளிக்கிறான். யாரோ வாசலில் மணியை அழுத்தும் சத்தம் கேட்கிறது. இடுப்பில் துண்டுடன் வந்து பார்க்கிறான். வாசலில் அண்ணன் நிற்பதைப் பார்த்தும் திக்கென்று மனம் பதைக்கின்றது!
‘இந்த நேரத்தில் என்னடா குளியல்… இரவுச் சாப்பாடு முடிஞ்சுதா இல்லையா…?’
அண்ணனின் அதட்டலிலும் கலந்து நின்ற பரிவு அவனை நெகிழ வைக்கின்றது.
‘உங்க அண்ணி இன்னும் வரலயா கோவிந்த… அவரச வேலையா? நான் ஜகார்த்தா போக வேண்டியிருக்கு. நானும் ரஷத்தும் இன்னும் கொஞ்ச நேரத்தில் புறப்படறோம். சாங்கி ஆகாய விமான தளம் போய், அதிகாலையில் ஜகார்த்தா போய்டுவோம். மூன்று நாள் மீட்டிங் இருக்கு.. அண்ணி வந்தா இதை அவகிட்ட கொடுத்துடு.. இந்தப் பணத்தை உன்னோட செலவுக்கு வெச்சுக்க… ராத்திரியிலே மோட்டார் சைக்கிளை எடுத்துக்கிட்டு வெளியே போகாதே…’
அவன் எதையுமே புரிந்து கொள்ள முடியாமல் பேயறைந்தது போல் நிற்க அண்ணன் சரவணன் கதவைத்தானே இழுத்துமூடிவிட்டு விடுவிடுவென்று கீழே இறங்கிப் போய்விட்டான். அண்ணன் போனதும் பால்கனியில் வந்து நின்று அவர் கார் போகும் வரை நின்று கார் கண்ணிலிருந்து மறைந்தபின் ஓடிவந்து படுக்கையில் விழுந்து அழுகிறான்.
அண்ணனுக்கு தான் செய்கின்ற கொடுமை தெரிந்தால் அவன் நிலை என்னவாகும். இப்படியா அப்பொழுது பேசுவான்… கொஞ்சம் நிதானமாய் இருந்திருந்தால் இப்படிப்பட்ட பிரச்னை வந்திருக்காதே… ஐயோ அண்ணி…! நான் என்ன செய்யப் போகிறேன்!
மனம் புலம்பி ஒரு பாதி பைத்தியமாகி நின்ற கோவிந்தா வரண்டு போன தொண்டையை நனைக்க குளிர்சாதன பெட்டியை திறந்து அதிலிருந்து நீரை எடுத்துப் பருகப் போனான். கண்கள் அங்கே நிலைக்கின்றன. பலவகை பழங்களைத் துண்டுகளாக வெட்டிப் பிளாஸ்டிக் பையில் போட்டு அவனுக்காக கட்டி வைத்திருந்தாள் மல்லிகா. அந்தப் பழங்களையும் சில சத்துள்ள பிஸ்கட்டுகளையும் வாங்குவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்தான் இருவரும் மோட்டார் சைக்கிளில் புது சூப்பர் மார்கெட்டிற்கு போய் வந்தார்கள்.
ஒவ்வொரு பொருளாய்த் தேடி இருவரும் பிளாஷ்டிக் பைகளில் அவற்றைச் சுமந்துக் கொண்டு வண்டி இருக்கும் இடத்திற்கு வந்தபோது அவனது கூட்டாளிகளின் பட்டாளம் வரிசையாய்ச் கூச்சலிட்டுக் கொண்டு அங்கே வந்து நின்றது. அவர்களின் கண்களில் கோவிந்தாவும் மல்லிகாவும் பட்டுவிட…
“என்னடா மச்சி… பிகரு எங்கே கெடைச்சது.. செம ஆளாத்தான் புடிக்சிருக்கே.. நம்ம எடத்துக்கு தள்ளிகிட்டு வராம இருந்தா எப்படி மச்சி…!’
அட்டாகாசச் சிரிப்பொலியும் அவங்க சேட்டைகளும் காட்டுக் கத்தலும். அவன் அவமானத்தினால் குறுகிப் போனான்.
“அடப் பாவிங்களா… என் அண்ணிடா இவுங்க.. அழுகையோடு கூறினான். நண்பர்கள் சிரிக்கிறார்கள். அவனது தோளை அனுதாபத்தோடு தட்டிக் கொடுத்தார்கள்.
“ஸாரிடா பிரதர்… இந்த ஒரு விஷயத்திற்காகவே உங்க அண்ணனை கூட்டாளியாக்கிக்கலாம் போல இருக்கே.”
கோவிந்தாவின் வண்டி அங்கிருந்து வேகமாய் விரைந்தது. வழி நெடுக அவனிடம் அண்ணி பேசவில்லை. மவுனமாகவே இருந்தாள். வீடு வந்தபின் அவனே அவளிடம் பேச முயன்றாள். ஆனால் அவளது மாணவிகள் இடை இடையே வந்து அந்த சந்தர்ப்பங்களை இழக்க வைத்தார்கள். எப்படியும் அவளிடம் மன்னிப்புக் கேட்டுவிடத் துடித்துக் கொண்டிருந்தான். ஆனால் அதற்குள் அவனது உயிர்த் துடிப்பே நின்று போய்விட்டது!
கையில் குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடித்து விட்டுத் தொலைபேசியில் ஏதோ சில எண்களைச் சுற்றினான். சில வார்த்தைகள் பேசிவிட்டு இன்னொரு சிறுபையில் தனக்காக சில உடைகளை எடுத்துப் போட்டு மூடினான். அதையும் பெரிய பெட்டியையும் எடுத்துக் கொண்டு கதவை நன்றாகப் பூட்டிவிட்டு வாசலில் வந்து நின்றான். யாரோ ஒருவன் வந்தான். அவனிடம் சிறிய பையைக் கொடுத்துவிட்டுப் பெரிய பெட்டியைத் தானே லிப்டுக்குள் தள்ளிப் போனான். கீழே போனதும் டாக்சியில் தானே அதைத் தூக்கி வைத்தான். டாக்சி டிரைவரிடமிருந்து சிறுபையை வாங்கிக் கொண்டு அமைதியாக வண்டியில் அமர்ந்தான். டாக்சி போக வேண்டிய இடத்தைச் சொன்னான். அது ஓடத் தொடங்கியது.
“நீ மட்டுந்தான் வருகிறாய். ஆனால் இரண்டு பேர்கள் போவது போல் தெரிகிறதே அந்தப் பேக்குள் என்ன வைத்திருக்கிறாய்… இவ்வளவு கனமாக இருக்கிறதே?
டாக்சி ஓட்டி அவனை ஆழமாய்ப் பார்த்துக் கொண்டே கேட்டான். அவனுக்கு ஆத்திரம் வந்தது. அடக்கிக் கொண்டான்.
அதில் இத்தனை வருடங்களாக நான் சேமித்து வைத்த புத்தகங்கள் இருக்கின்றன. நான் வேலை மாறிப் போகிறேன். சில கண்ணாடிப் பொருட்களும் இருக்கின்றன. அதை நான்தான் அடுக்கி இருக்கின்றேன். அவை பத்திரமாக நான் கொண்டு சேர்க்க வேண்டிய பொக்கிஷங்கள், கனமாக இருந்தால் பணத்தை வாங்கிக் கொள். அப்படி இப்படி ஆட்டி வீணாக்கிடாதே.
பொறுமையாகவும், கவலையுடனும் அவன் பேசியதில் டாக்சியோட்டிக்கு நம்பிக்கை வந்து அவனிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டான்.
‘அதோ.. அதுதான் என் சித்தப்பா வீடு… அங்கே நீ போக முடியாது… நான் நடந்து போய்க் கொள்கிறேன்’ என்று டாக்சியை நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டான். டாக்சி புறப்பட்டதும் அந்தப் பெட்டியைத் தள்ளிக் கொண்டே நடந்தான்.
அது அவனது தறுதலை நண்பர்கள் நள்ளிரவில் பொழுது போக்கும் இடம். வழக்கமாய் அங்கு வந்து நேரத்தை கழிக்கப் படகுகளை எடுத்துக்கொண்டு நேரம் போவது தெரியாமல் நண்பர்களோடு நீரில் விளையாடிய அனுபவம் அவனுக்கு நிறையவே இருந்தது. கோவிந்தா அந்த நள்ளிரவில் மெல்ல நடந்தான். சாங்கிக் கடற்கரை மணற்பரப்பில் நின்றிருந்த படகில் பெட்டியை ஏற்றினான். கைப்பையை தோளில் மாட்டிக் கொண்டு படகை மெல்ல மெல்லச் செலுத்தினான்.
நள்ளிரவில் அமைதியாய் தூங்கிக் கொண்டிருந்த கடலில் வெகுதூரம் வந்தபின் கடற்கரையை நோக்கிக் சுற்று முற்றும் பார்த்தான். கடற்படையினர் யாரும் தென்படவில்லை. படகிலிருந்த பெட்டியை நீரில் இறக்கினான். மீண்டும் கரையை நோக்கித் திரும்பினான். கடற்பரப்பில் இறக்கிவிட்ட அண்ணியை மனதில் நினைத்துக் கைகுவித்தான். சாலையை நோக்கி நடந்தான். நாய் ஒன்று ஓடிவந்து அவனைத் தொடர்ந்தது. குட்டியாக இருந்தபோது அவன் போட்ட ரொட்டித் துண்டுகள் அதற்கு நினைவிருக்க வேண்டும். அது அவனோடு நடந்தது.
அலுவலகத்தில் அலைமோதும் நண்பர்கள். சக ஊழியர்களிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்த சரவணனுக்கு பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. பரபரப்பு மிகுந்த வாழ்க்கையிலேயே ஓடிவிட்ட அவனது பயணத்தில் மிகப்பெரிய தடங்கல் விழுந்துவிட்ட சூன்யமான நிலை.
விபரம் புரியாதவனாக தம்பியையும். காணவில்லை, விவேகமும் புத்திசாலித்தனமும் நிறைந்த மனைவியையும் காணவில்லை என்றால் அவனால் என்ன முடிவை எடுக்க முடியும்!
அப்பாவும் அம்மாவும் அவனை துளைத்தெடுத்தார்கள். அவனுக்கும் மனைவிக்கும் ஏதேனும் தகராறு வந்து அவள் கோபித்துக் கொண்டு எங்காவது போயிருப்பாளோ என்று அவனையே வறுத்தெடுத்தார்கள். சரவணன் எந்தப் பதிலையும் சொல்லாமல் மௌனமாய் ஊஞ்சலில் அமர்ந்திருந்தான்.
எப்போதுமே உழைப்புக்கு முதலிடம் கொடுப்பவள் மல்லிகா. தேனீயைப் போன்று அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து நாலு காசைக் கொண்டு வருவதிலேயேக் குறிக்கோளாய் இருப்பாள். தையல் கலையைப் போன்றே சமையல் கலையும் அவளுக்குக் கை வந்த கலையாக இருந்தது.
மாமியார் வீட்டிலிருந்த அவள் தனித்து சாங்கி வட்டாராத்துக்கு குடிவந்ததே இந்த வருமானப் பெருக்கத்திற்காகத்தான். மல்லிகாவுக்கு அதிகமாய் இறைநம்பிக்கையும் உண்டு. அருகில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் தெய்வ வழிபாடுகளில் கலந்து கொள்வதிலும் தனது நேரங்களைச் செலவு செய்தாள். அவளது வேலைகளுக்கு கோவிந்தா உதவியாக இருந்தான். எப்போதும் புத்தகமும் அலுவலகமும் என்று அலையும் சரவணனுக்கு படுக்கையில்தான் மனைவியைச் சந்திக்க நேரம் இருக்கும். அப்போது கூட அவளது பனிமலர் போன்ற அழகில் தன்னை இழந்து விடியும் வரை அந்த நினைப்பிலேயே நேரம் கழிந்து விடும். அவள்மீது அவன் வைத்திருந்த அன்பைக் காட்டிலும் நம்பிக்கை அளவு கடந்ததாய் இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கைதான் இப்போது சிதறிக் கிடந்தது. தன்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் இவள் எங்கே போயிருப்பான் என்று குழம்பிக் கொண்டிருந்தான். இரண்டு பேரும் ஒரே இரவில் காணாமல் போனதுதான் அவனை வெகுவாகக் குழப்பியது.
வாசலில் வந்து நின்ற காவல்துறை வண்டியிலிருந்து சி.ஐ.டி. ராமகிருஷ்ணன் வந்தார். நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். தனது சந்தேகத்தைக் தீர்த்துக் கொள்ள வேண்டி அவர்களின் அப்பார்ட்மெண்டிற்கு போக வேண்டியது அவசியம் என்று கிருஷ்ணன் பார்வையில் பட்ட ஒவ்வொன்றும் அங்கே ஏதோ நடந்திருக்க வேண்டும் என்ற தகவல்களைத் தந்து கொண்டிருந்தது. போலீஸ் நாய் போன்று மோப்பம் பிடிக்கத் தொடங்கினார். அறை முழுவதும் நோட்டமிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன் கண்களில் படுக்கையறையில் இருந்த சிறு மேசையில் மேல் வைக்கப்பட்டிருந்த பிரேம் போடப்பட்ட படம் ஒன்று படுகின்றது. ஆர்வத்துடன் அதை எடுத்துக் கொண்டு சரவணனிடம் வருகிறார்.
“இவுங்க ரெண்டு பேரும் யாருன்னு” நான் தெரிஞ்சுக்கலாமா மிஸ்டர் சரவணன்.
கிருஷ்ணன் கேள்வியுடன் நீள்கின்ற பிரேமைப் பார்த்ததும் விரக்திச் சிரிப்புடன் அதை வாங்கிப் பார்க்கிறார் சரவணன்.
“இவுங்க ரெண்டு பேருந்தான் என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டவுங்க சார். இவதான் என்னோட மனைவி. இது என்னோட தம்பி. என் மனைவி மல்லிகா என் தம்பியை ரொம்ப பிரியமா பார்த்துக்குவா., அந்த நம்பிகையில்தான் அவனை அவகிட்டே ஒப்படைச்சசேன்” ஆனா அந்த நம்பிக்கையை அவுங்க ரெண்டு பேருமே வீணாக்கிட்டாங்க இல்லியா மிஸ்டர் சரவணன்.. குதர்க்கமான கேள்வியினால் உடம்பு சிலிர்த்துப் போய் வினாவுடன் அவரைப் பார்க்கிறார் சரவணன். அவரது அதிர்ச்சியான பார்வையும் மனதின் வருத்தமும் கிருஷ்ணனுக்குப் புலப்படாமல் இல்லை. அவர் அருகில் போய் அமர்கிறார். அவர் தோளில் கைவைத்து ஆறுதலாய் தட்டிக் கொடுக்கிறார்.
“ஆத்திரப்படாதீங்க சரணன். இந்த நாகரீக காலத்துல எது எப்படி நடக்குதுன்னு யாரும் கண்டுபிடிச்சு சொல்லிட முடியாது. உங்க தம்பியை உங்களுக்குத் தெரியும்… ஆனா அவுங்க ரெண்டுபேரோட மனசையும் உங்களுக்குத் தெரியுமா.. அதில இருக்கின்ற உணர்ச்சிகளைத்தான் உங்களுக்குத் தெரியுமா…”
சரவணன் முதுகில் பளீர் என்று யாரோ அறைந்தது போன்ற அதிர்ச்சி. கிருஷ்ணனைப் பார்த்து அதட்டலாய் கேட்கிறார்.
“என்ன சொல்ல வர்றீங்க ஸார்… உங்களோட கண்ணுல நல்ல விஷயமே படாதா.. யாரைப் பார்த்து என்ன சொல்றோமங்கிறதுக்கு அளவே கிடையாதா… அவுங்க ரெண்டு பேரும்..” சரவணன் முடிப்பதற்குள் கிருஷ்ணன் குறுக்கிடுகிறார்.
“அமைதியா இருங்க சரவணன். இந்த மாதிரி சூழ்நிலையிலதான் நாமெல்லாம் நிதானமா யோசிக்கணும். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு. ஆத்திரப்பட்டு அவரசப் பட்டதால உலகத்தில் எத்தனையோ இழப்புகள் நிகழ்ந்து போயிருக்கு. மனுஷனுக்கு கஷ்டகாலம் வர்றப்பதான் அவன் ரொம்பவும் சிந்திச்சு செயல்படணும். மனுஷனுக்கு இறைவன் பகுத்தறிவை வெச்சதே இதுக்குத்தானே!
சரவணன் முகம் இறுகிப் போகிறது. “இங்கே பாருங்க ஸார். கோவிந்த் ரொம்பவும் கோபக்காரன்; யார் பேச்சையும கேட்காத முரடன்: எதுக்குமே அடங்கிப் போகாதவன். அப்படிப் பட்டவன் மல்லிகாவோட வார்த்தைக்குப் பெட்டிப் பாம்பா அடங்கிக் கெடந்தான். என்னைவிட அம்மாவைவிட அவன் மல்லிகாவை ரொம்ப மதிச்சான். அந்த அன்பை தப்பா எடை போட்டுடாதீங்க ஸார்…”
மனதிலிருந்து வந்த வார்த்தைகள் கிருஷ்ணனையும் யோசிக்க வைத்தது. சிறிது நேரம் மௌனமாய் இருந்தனர். சரவணனைப் பார்க்கிறார்.
“உங்க தம்பிக்கு எத்தனை வயது மிஸ்டர் சரவணன்…?”
“இருபத்திரண்டு வயது ஸார்…
“உங்க மனைவிக்கு எத்தனை வயசிருக்கும்…?”
“முப்பது வயசு முடிஞ்சு ஆறு மாசமாவது”
“இந்தப் படம் எப்ப எடுத்த படமுன்னு ஞாபகம் இருக்குதா மிஸ்டர் சரவணன்”
“நல்லவே ஞாபகம் இருக்கு.. கோவிந்தாவோட பிறந்தநாள்ல நான்தான் எடுத்தேன்… போன வருஷம் ஏப்ரல்ல எடுத்த படம் இது..”
“இந்தப் படத்தை நீங்க ஒருதரம் நல்லா பாருங்க மிஸ்டர் சரவணன்…”
படத்தை சரவணனிடம் நீட்டுகிறார். கிருஷ்ணன். கையில்அதை வாங்கிப் பல நிமிடங்கள் அதையே உற்றுப் பார்த்த சரவணனின் கண்கள் தாரை தாரையாய் நீரைக் கொட்டுகின்றன! தன் உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியாமல் தேம்புகிறார். கிருஷ்ணன் அவரைச் சமாதானப் படுத்துகிறார். தனது அணுகுமுறை தவறாகிப் போய்விட்ட வருத்தம் அவருக்கு.
“மிஸ்டர் சரவணன், உங்கள் மனைவி தம்பிங்கிற உறவு முறையும் நீங்க அவுங்களோட வாழ்ந்து பழகிய உணர்ச்சிகளுக்கும் உங்களுக்கு அவுங்க மேலே வேறெ எந்த வகையான உணர்ச்சிகளையும் உண்டாக்க முடியாது. ஆனா என்னைப் போல வெளியாளுங்க… வேற்று மனிதர்கள் பார்க்கிறப்ப அதுல தெரியும் விஷயமே வேறெ.”
சரவணன் நிதானமாய் கிருஷ்ணனைப் பார்க்க… கிருஷ்ணன் தொடர்கிறார்.
“இந்தப் பையனோட உடம்பும் தோற்றமும் நிச்சயமாக இவனை இருபத்திரண்டு வயசுப் பையனாவா காட்டுது…! இந்த அம்மா இவனுக்கு அண்ணின்னு சொல்ற மாதிரியா இருக்காங்க?! கொஞ்சம் யோசனை பண்ணுங்க சரவணன்… ஒரே வழியில யோசிக்கிறதை விட்டுட்டு வேறெ வழியிலேயும் யோசனை பண்ணுங்க… உங்க தம்பி உங்களுக்கு நல்லவனாத் தெரியலாம். ஆனா எனக்கு அப்படித் தெரியல.. நீங்க இப்படிக் கவலைப்பட்டு நேரத்தை வீணாக்கிறதை விட்டுட்டு உடனடியா உங்க மனைவியோட பாஸ்போர்ட் பேங்க் புக்கெல்லாம் இருக்குதான்னு செக் பண்ணுங்க… சரவணன்.”
சரவணன் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தார். கடைசி வார்த்தையைக் கேட்டு விருட்டென்று எழுகிறார். விடுவிடுவென்று உள்ளே போகிறார். சில மணித்துளிகள் அறைக்குள் புகுந்து கொண்டு ஒவ்வொன்றாய்த் தேடிப் பார்க்கிறார். அலமாரியின் உள்ளிருந்த மல்லிகாவின் கைப்பையும் அதில் இருந்த வங்கிக் கணக்கு புத்தகங்களும், பயணப் பத்திரங்களும் அப்படியே இருக்க மன நிம்மதியுடன் அடுத்த அறைக்குள் புகுந்து வேறு ஏதேனும் காணாமல் போயிருக்கின்றதா என்று தேடியபோது பெரிய பயணப் பெட்டியை அங்கே காணவில்லை என்றதும் அவருக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. அவசர அவசரமாய் அங்கும் இங்கும் தேடுகிறார். தம்பியின் அலமாரியைத் திறந்து பார்க்கிறார். அவனது பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. அவனது பையைக் காணவில்லை. அவனது உடைகளும் இல்லாமல் இருந்தன. திடீரென்று ஒருவித பயம் வந்து மனதை உலுக்க ஆரம்பித்தது. அவரச அவரசமாய் அங்கும் இங்கும் தேடுகிறார். அதே நேரத்தில் வரவேற்பறையில் சோபாவில் சாய்த்நவாறு அந்த இடத்தையேக் கண்களால் அலசிக் கொண்டிருந்த சி.ஐ.டி. சிருஷ்ணன் விருட்டென்று எழுகிறார். மெல்லக் குனிந்து அந்தச் சலவைக்கல் மேசையை நோட்டமிடுகிறார். அதன் அடிப்பாகத்தில் திட்டாய் சிவப்பாய் உறைந்து காணப்பட்ட ஒன்று அவரின் பிளாஸ்டிக் பைக்குள் அடைக்கலமாகின்றது.
உற்சாகமாய் கிருஷ்ணன் சரவணன் இருக்கும் இடத்திற்கு வருகிறார். அலங்கோலமாய் கிடக்கும் அந்த அறையில் பேயறைந்தது போன்ற தோற்றத்தில் பித்துப் பிடித்தவராய் அலைந்து கொண்டிருக்கும் சரவணனைப் பார்க்கிறார். சரவணனின் தோற்றமும் தவிப்பும் எதையோ தெளிவு படுத்த “கவலைப் படாதீங்க சரவணன்.. நாம் நினைக்கிற மாதிரி எதும் எப்பவும் நடந்திட முடியாது. அதுக்குமாறாகவும் எதும் நடக்கலாம்னு இப்ப நான் தெரிஞ்சுகிட்டேன். நம்ம அலைச்சலுக்கும் குழப்பத்துக்கம் இப்ப எனக்கு ஒரு வழி கிடைச்சிருக்கு. இப்ப நான் உங்களை உங்க வீட்ல விட்டுட்டு என்னோட அதிகாரிகளைப் பார்த்தாகணும்.. வாங்க போகலாம்…”
இருவரும் வெளியேறுகின்றனர். இடையில் யாருமே பேசிக் கொள்ளவே இல்லை. சரவணனை தொடர்பு கொள்வதாய் சொல்லி கிருஷ்ணன் விடை பெறுகிறார்.
சி.ஐ.டி.கிருஷ்ணன் கொண்டுவந்த பிளாஸ்டிக் பையினுள் இருந்த பொருள் பரிசோதனைக்கு கொண்டு போகப்படுகின்றது. மருத்துவ நிபுணர்களின் சோதனைக்குப் பின் வந்த அறிக்கை கிருஷ்ணனை வியக்க வைக்கின்றது. தன்னுடைய அறையில் அமர்ந்து சரவணனுக்குப் போன் செய்கிறார். எதிர் முனையில் சரவணனின் குரல் தொய்வடைகிறது.
“தைரியமா இருங்க மிஸ்டர் சரவணன், உங்க தம்பிதான் இந்தக் கொலையைச் செய்திருப்பான்னு நாங்க உறுதிபடுத்தலே… ஆனா யாரோ எதுக்காகவோ உங்க மனைவியைக் கொலை பண்ணியிருக்காங்க, ஒரு வேளை அவங்களே உங்க தம்பியையும் கடத்திகிட்டுப் போயிருக்கலாமில்லியா… எப்படியும் நாங்க உங்க மனைவியோட உடம்பைத் தேடிக் கண்டு பிடிச்சிடுவோம்… ரெண்டு நாளைக்கு முன்னாலதான் இந்தக் கொலை நடந்திருக்கு… அதுவும் உங்க வீட்லதான் நடந்திருக்கு… நீங்க அமைதியா இருந்து எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தா எங்க வேலை சுலபமா முடிஞ்சிடும்.
கிருஷ்ணன் தொலைபேசியை வைக்கிறார். சரவணனின் மனம் இறுகி படபடக்கின்றது. மூன்று நாளைக்கு முன்பு தனது வெளியூர் பயணத்திற்காக மனைவியிடம் விடைபெற்றுச் சென்றபோது அங்கே அவள் இல்லாமல் இருந்ததும், அந்த ராத்திரியில் கோவிந்தா குளித்துக் கொண்டிருந்ததும்… கிருஷ்ணனுடன் அப்பார்ட்மெண்டுக்குப் போய் தேடியபோது, அங்கே மல்லிகாவின் உடமைகள் அப்படியே இருக்க.. கோவிந்தாவின் பொருட்கள் காணாமல் போயிருந்தும் ஒவ்வொன்றும் ஒரு புதிராய்த் தோன்றுகின்றன.
“கோவிந்தா நீயா உன்னோட அண்ணியைக் கொலை பண்ணினே…? எதுக்காக அவளை நீ கொலை பண்ணினே…? தாயைவிட மேலா.. என்னைவிட மேலா அவ உன்னை நேசிச்சாளேடா. அன்னமிட்ட கையையே வெட்டிப் போடுற அளவுக்குத் துணிஞ்சிருக்கியே…?
அவளைக் கொலை பண்ணினதால் உனக்கென்னடா கெடைச்சிடப் போவது…?”
உள்ளே தூங்கிக் கிடந்த இன்னொரு மனம் அழத் தொடங்கியது. அலை அலையாய் நினைவுகள் புரண்டு வர ஒரு அப்பாவிப் பையனைக் கொலைகாரனாக்கிய காரணம் என்னவாக இருக்கும் என்று தனக்குத் தானே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தார் சரவணன். அதே வேளையில் சி.ஐ.டி. கிருஷ்ணன் தமக்கு வந்த தொலைபேசி அழைப்பின் பேரில் கடற்கரைப் பகுதியில் மீன் பிடிப்படகினால் கரை சேர்க்கப் பட்ட பயணப் பெட்டியில்சுருட்டிக் கட்டப் பட்டு நாற்றமெடுத்த அழுகிய நிலையிலிருந்த பெண்ணின் பிரேதத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
மறுபடியும் பெட்டி மூடப்பட்டு காவல் நிலையத்துக்கும் கொண்டுவரப்பட்டு சரவணனுக்கு தொலைபேசி வழி செய்தி கூறப்படுகின்றது. பதறித் துடித்துப் பெற்றோரை அழைத்துக் கொண்டு புறப்பட்ட சரவணன் மறுபடியும் அலறிய தொலைபேசி திரும்பச் சொல்கிறது. ஓடிப் போய் எடுக்கிறார்.!
“கோவிந்தாவை யாரும் தேட வேணாம். அவன் இங்கே பத்திரமா இருக்கான். பெரிய ஹோட்டல்ல வேலை பார்க்கிறான். அவனைப் பத்தி யாரும் கவலைப் படவேண்டாம்”
எதிர்முனையில் ஒலித்த குரல் யாரென்று தெரியாத நிலையிலேயே காவல் நிலையத்துக்குப் பறந்தது சரவணனின் கார்.
கோவிந்தா குட்டி இந்தியா கடைத் தொகுதியில் அமைந்துள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அவனது சுறுசுறுப்பும் சுத்தமும் கடை முதலாளிக்கு அவன் மேல் நல்ல மதிப்பை உண்டு பண்ணியிருந்தது. யாராலும் கண்டுபிடித்துவிடமுடியாத அளவுக்கு கிருதாவைக் கூட எடுத்திருந்தான். ஒரு வடநாட்டு இந்தியனைப் போன்ற தோற்றமும். முற்றாகத் தமிழை மறைத்து விட்டான். ஆங்கிலம் மட்டுமே பேசினான்.
வாடிக்கையாளர்களிடம் பேசும் பாவனை கூட அழகாய் இருந்தது. இரவில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க வரும் பெண்களின் கண்களுக்கு அவனது கட்டான உடல் தோற்றம் ஒரு சிறப்பு விருந்தாகத் தெரிந்தது.
எந்த நேரமும் ஆட்கள் நிரம்பி வழியும், அந்த உணவு விடுதியில் வேலையை முடித்துக் கொண்டு அங்கேயே உறங்கியும் விடுவான். அவனுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தார் முதலாளி. கொடுத்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு கொஞ்சமும் அலுக்காமல் வேலைகளைச் செய்துகொண்டிருக்கும் அந்த இளைஞனை வெளியே விட அவருக்கும் விருப்பம் இல்லாமலிருந்தது.
இரவு நேரம், பணிகளை முடித்துக் கொண்டு குளித்து முடித்துவிட்டு ஓய்வாக மேல்மாடியில் இருக்கும் அவனது அறையின் சன்னல் வழியே வீதியில் கண்ணைப் பதித்திருந்தவனின் பார்வையில் யாரோ நான்கு பேர்கள் ஒரு இளம் இந்தியப் பெண்ணைத் துரத்திக் கொண்டு ஓடுவது படுகின்றது. பார்வையைக் கூர்மையாக்கிக் கொள்கிறான். அக்காட்சி நிஜமெனத் தெரிகிறது. சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு ஓடுகிறான். தெருமுனைக்கு ஓடி சந்தில் நுழைந்தபோது அப்பெண்ணை அந்நால்வரும் கீழே தள்ளி மானபங்கப் படுத்த முயன்று கொண்டிருந்தனர். ஓடிய வேகத்தில் அவர்களின் மீது வெறி கொண்ட வேங்கையாய் பாய்ந்து மூர்க்கமாய் அவர்களைத் தாக்குகிறான். எதிர்பாராத தாக்குதல்களினால் அவர்கள் நாலாபுறம் சிதறி ஓடுகிறார்கள். மயக்கமடையும் நிலையில் பீதியடைந்திருந்த அப்பெண்ணைத் தூக்கி விடுகிறான்.
அவளுக்குத் துணையாக அவளது வீடு வரைக்கும் செல்கிறான். அவனை அப்பெண் உள்ளே அழைக்கிறாள். தயக்கம் ஏதுமின்றி உள்ளே நுழைகிறான். அவனை அமரச் சொல்லிவிட்டு உள்ளே போய் உடைமாற்றி முகம் கழுவிக் கொண்டு இரு கோப்பைகளில் மதுவை நிரப்பி எடுத்துக் கொண்டு வந்து அவன் முன் வைக்கிறாள்.
சந்தோசம் ஏதுமின்றி எடுத்து ஒரு வாய் உறிஞ்சியவன்,
“நீங்க மட்டுந்தான் இருக்கீங்களா… வீட்ல யாரையும் காணவில்லையே…” என்று வினவுகிறான். அவளும் தன் கையில் மதுக் கோப்பையை எடுத்துக் கொள்கிறாள். சாவகாசமாய் மெல்ல மெல்ல சுவைக்கிறாள். குங்குமச் சிமிழ் போன்ற இதழ்களில் மதுவை நிரப்பியுள்ள கோப்பையின் விளிம்புகள் அழுத்தி நனைக்க அவள் மதுவை உறிஞ்சும் அழகை அவன் ரசிக்கிறான்.
அது முதன்முறையாக அவனுக்குக் கிடைத்துள்ள அனுபவம். வேலையில் சேர்ந்தபின் தன்னைப்பற்றிய கடந்த காலத்தை முழுமையாக மறக்க நினைத்து இரவு நேரங்களில் அவன் பலவகையான மதுவகைகளை ருசித்ததுண்டு. ஆனால் இப்படி ஒரு இளம் பெண்ணோடு தனிமையான நள்ளிரவில் அருகருகே அமர்ந்து குடித்த அனுபவம் இல்லை.
“நான் கேட்டது காதில விழலியா என்ன..?” அவளைக் கேள்வியால் உசுப்புகிறான். அவள் போதையாய்ச் சிரிக்கிறாள்.
“நான் எங்கே தனியாய் இருக்கேன். என்னோடத்தான் நீங்க இருக்கீங்களே..”
அவனும் சிரிக்கிறான். சிறிது நேரம் அமைதிக்குப் பின் அவள் சொன்னாள்.
“எனக்கு சொந்த ஊரு அக்கரைதானுங்க… எனக்கு வேலை வாங்கித் தர்றேன்னு என்னோட சிநேகிதி ஒருத்தி இங்கே வரச்சொன்னா.. வந்ததும் நல்ல வேலையும் வாங்கித் தந்தா… இருக்கிறதுக்கு இடமும் கெடைச்சது. ஆனா அவளோட உண்மையான நோக்கம் எனக்குத் தெரிஞ்சப்பதான் புலிக்கூண்டுல மாட்டிக்கிட்ட ஆட்டுக்குட்டி நெலையாயிடுச்சு…
நான் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் அவ வெச்சிருக்கிற சாப்பாட்டைத்தான் நான் சாப்பாட்டுத் தூக்குவேன். அப்படி நான் சாப்பிடற சாப்பாட்ல மயக்க மருந்தை போட்டு நான் அசந்து தூங்கியதும் அவள் நண்பர்களை என் பெண்மையைச் சீரழிச்சிருக்கிறா… விஷயம் தெரிஞ்சு நான் சத்தம் போட்டதும் சில புகைப்படங்கள் காட்டி மிரட்டினா. அதுக்கப்புறம் நான் எதையும்செய்ய முடியாமப் போயி… முடிவில நானே அந்தத் தொழிலை செய்ய ஆரம்பிச்சிட்டேன். ரெண்டு வருஷங்கூட ஆகலலே.. அப்பா அம்மாவுக்குப் பணம் அனுப்புவேன்…
இந்த வீட்டை முழுசா வாடகைகு எடுத்துக்கிட்டேன். தனிமைதான். எனக்குத் தொழிலே பெரிய மூலதனம்.”
அனுதாபத்தோடு பார்த்தான். அவள் பார்வைக்குத் தமிழ் பெண்ணாகவே தெரிந்தாள். ஆனால் நடையுடை பாவனையால் வேற்று மதப்பெண் போல் தோன்றினாள். அவளுடைய சூழ்நிலையை எண்ணிப்பார்க்கும் போது தானும் அவள் நிலையில் சீரழிந்து போயிருப்பது நன்றாகப் புலனாகியது.
வேலை செய்ய வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும். என்ற ஆசையில் தன்னையே அலங்கோலப்படுத்திக்கொண்டிருக்கும் இப்பெண் இந்த நிலைக்கு வந்து நிற்கக் காரணமானவர்கள் அவளது பெற்றோர்களே என்று அவன் மனம் அடித்துக் கொண்டது.
ஒரு வயதுப் பெண் வெளியூரில் வேலை பார்க்கிறாள்; என்றால். அவளது வருமானத்தைப்பற்றி மட்டுமே கணக்கு போடுகின்ற பெற்றோர்கள் அவளது வயதை. வாழ்க்கையைப்பற்றிக் கணக்குப் போட்டிருந்தால் இந்தப் பெண் இப்படி நிலைகுலைந்துபோயிருப்பாளா என்று தனக்குள் வருந்துகிறான்.
பெற்றோர்களின் சுமையைக் குறைக்க குடும்பத்தின் வறுமையைப் போக்கத் தங்களை விலைப் பொருளாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளில் பாதிபேர் இதைவிடவும் மோசமான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவளோடு பேசிக் கொண்டிருந்த சிலமணி நேரத்திலேயே புரிந்து கொண்டான்.
புத்தியும் திறமையும் உள்ள பெண்கள் தங்களின் அறிவைப் பயன்படுத்திக் தங்கள் குடும்பத்தோடு இருந்து பொருள் தேடி புகழோடும் பெருமையோடும் வாழ முடியும் என்பதைத் தனது அண்ணியின் மூலம் அறிந்தவன். இதுபோன்ற பெண்களை நினைத்துக் கவலைப் பட்டவாறே அவன் தன் அறைக்குத் திரும்பினான். கண்களை மூடிக் கட்டிலில் சாய்ந்தான். உடம்பு ஓய்ந்து கிடந்தாலும் உணர்வுகள் ஓயவில்லை. மூடிய கண்களில் அண்ணனின் கவலை தோய்ந்த முகம் வந்து மறைகிறது. தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதான்!
தன்னைவிட அதிகமாய்ப் படித்துப் பட்டம் பெற்ற பெரிய பதவியில் இருந்தும் அண்ணன் தன்மேல் வைத்திருந்த அன்பை நினைக்க அவனுக்கு அழுகை பெருகியதே தவிர அடங்கவே இல்லை. அந்த அண்ணன் மட்டும் வெளியூர் போகாமல் தன் கூடவே இருந்திருந்தால் படிப்பறிவில்லாத மாமா வந்து தன்னை இப்படித் தறுதலையாக்கி விட்டுப் போயிருக்க மாட்டாரே என்று தனக்குத் தானே வருந்தினான்.
உண்மையிலேயே அவனது அண்ணனின் அன்பு ஆரம்பத்திலேயே கிடைத்திருந்தால் அவன் நினைப்பது போல் அவன் நல்லவனாக வளர்ந்திருப்பானோ…?
எதற்கெடுத்தாலும் குறை சொல்லி அவனுக்கு உதவாக்கரை பட்டம் கொடுக்கும் அப்பா கொஞ்சம் அவனுக்காக நேரம் எடுத்து தனது கல்மனதைக் கரைத்துக்கொண்டு நிதானமாக செயல்பட்டிருந்தால் அவன் உருப்படியாக வளர்ந்திருப்பானோ…?
பிள்ளைக்குச் சாப்பாட்டை மட்டும் போட்டால் போதும் என்ற நினைப்போடு வகை வகையாய் உணவூட்டிய அம்மா அவனோடு சில மணித்துளிகள் உட்கார்ந்து பேசியிருந்தால் அவனும் நல்ல பிள்ளையாய் வளர்ந்திருப்பானோ…??
இவர்கள் எல்லாம் அவனை எடுப்பார் கைப்பிள்ளையாய் விட்டு விட்டதால் இப்படி இடம் மாறிப் போய் விழுந்த வான் மழையாகிப் போனானோ! வான்மழை விழுகின்ற இடத்தைக் கொண்டே வளம் பெறுவது போன்று கோவிந்தாவின் நிலை பரிதாபமாகிக் கிடந்தது. முனியாண்டி என்ற மாமன் அள்ளித்தந்த அர்த்தமில்லாத அன்பு அவனை காட்டுச் செடியாய் வளர்த்திருந்தது. ஊருணியில் விழுந்த மழைநீர் ஊருக்கெல்லாம் உதவியிருக்கும்.. ஆனால் அது சாக்கடையில் அல்லவா விழுந்து விட்டது. நாற்றமெடுத்துப் போகாமல் என்ன செய்யும்?
தூங்கிப் போனான் கோவிந்தா. கனவுகள் நிறைய வந்தன. வாய் உளறினான். படுக்கையில் புரண்டான். இரவு கழிந்தது. பொழுது விடிந்தது. வழக்கம்போல் வேலைக்குக் கிளம்பினான். உடம்பு அடித்துப் போட்டதுபோல் இருந்தது. முதல் நாள் ரவுடிகளாடு மோதிய வலி இன்னும் இருந்தது. நன்றாக ஷவரில் குளித்து சுத்தமாய் உடுத்திக் கொண்டு கீழே இறங்கினான்.
பரம்பமாய் சுழல்கிறான். மற்றப் பணியாளர்கள் முகத்தில் புன்னகை தவழ்கிறது. கட்டாகக் கிடந்த நாளிழ்களை அள்ளிவந்து மேசையில் போட்டுவிட்டு நகர்ந்தான். விசிறியாய் சறுக்கி விழுந்த தமிழ் முரசு பத்திரிக்கையை அள்ளி எடுத்து மறுபடியும் அழகாய் மடித்து வைக்கிறான். பளிச்சென்று ஒரு படம்! கொட்டை எழுத்தில் சில வார்த்தைகள்.
“தாயார் மரணப் படுக்கையில்… திரும்பி வா கோவிந்தா…”
ஒரு சில மணித்துளிகள் பார்த்துவிட்டு அதை அப்படியே மூடி மேசையில் வைத்து அங்கிருந்து நகர்கிறான். மனம் வம்பு செய்ய ஆரம்பிக்கின்றது. நடை பின்னுகின்றது. இதுவரை இருந்த குஷியும் சுறுசுறுப்பும் தடைபடுகின்றது. சுதாரித்துக் கொள்கிறான். மேனேஜர் எல்லோருக்கும் ஒரு அறிவிப்பைப் செய்கிறார்.
“இன்று மாலை நமது ரெஸ்டாரெண்டில் ஒரு திருமண விருந்து நடைபெற உள்ளது. உங்களது ஒத்துழைப்பினால்தான் அது சிறப்பாக அமைய முடியும். எல்லாப் பொறுப்புகளையும் நீங்கள்தான் கவனித்துச் செய்ய வேண்டும்…” என்ற அவரின் வேண்டுகோள் எல்லோரையும் விழிப்படைய வைக்கின்றது. அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து திட்டமிட்டு வேலைகளைக் கவனிக்கின்றனர். உணவுத் தயாரிப்பில் இருந்து கலை நிகழ்ச்சிவரை திறமையாய் செய்ய முடிவெடுக்கின்றனர்.
அழகான நட்சத்திர ஹோட்டலைப்போல அது மிகவும் நேர்த்தியான அலங்காரத்துடன் காட்சியளிக்கின்றது. விருந்தினர் இருக்கையில் அமர்ந்தபின் இசை நிகழ்ச்சியும் தொடங்குகின்றது.
மணமக்களின் பெற்றோர்கள் மேனேஜரைப் பாராட்டுகின்றனர். அவரும் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றனர். மணமக்கள் வந்து அமர்ந்தபின் விருந்து வைபவம் தொடங்குகின்றது.
பணியாள்கள் பம்பரமாய்ச் சுழல்கின்றனர். கோவிந்தாவும் பணிவோடும் கனிவோடும் தன் பணியைச் செய்கின்றான். மனம் முழுவதும் பத்திரிகையில் கண்ட அறிவிப்பே நிரம்பியிருக்கின்றது. மற்ற நினைவுகளைப் புகுத்தி அதை மறக்க முயன்றாலும் அது நகராமல் அடம்பிடித்து அலைக்கழித்துக் கொண்டிருந்தது. கையில் பழச்சாற்றுடன் மேசையை நெருங்கி பணிவுடன் குனிகிறான். பரீரென்று ஓர் மின்னல் அதிர்ச்சி நெளி நெளியாய் சுருண்ட முடியைக் கொண்டையாய் போட்டு வட்டக் குங்குமப் பொட்டு வைத்த மஞ்சள் முகம்!
அவன் வாய் திறந்து அம்மா என்று அழைப்பதற்குள் அந்தக் கண்கள் அவனை வலுவாய் கௌவிக் கொள்கின்றன.
திடீரென்ற நாற்காலியில் இருந்து எழுந்த நின்ற அம்மா.
“மகனே! கோவிந்த்…! கோவிந்த்…!” என்று கூவியழைக்கின்றாள். பக்கத்தில் இருந்த வயதான மனிதரும் எழுந்து நிற்கிறார். கோவிந்தா தன்னை நிதானப் படுத்திக்கொள்வதுடன் தன்னைத் தற்காத்தும் கொள்கிறான்.
தமிழ் தெரியாதவன் போல் இதுநாள் வரை அவன் நடித்துவந்த நாடகம் இப்போது உதவியது.
தன் உணர்ச்சிகளையெலாம் கட்டிப்போட்டு விட்டுக் கல்லாய் நின்றவனிடம் வந்த மானேஜர்.
“அந்தப் பையனுக்குத் தமிழ் தெரியாதுங்க.. ஹிந்திப் பையன் இங்கிலீஸ்தான் பேசுவான்.. பேர்கூட நீங்க சொன்ன பேரில்லே…”
அவர்கள் குழம்பிப் போய் இருக்கையில் அமர்கிறார்கள். கோவிந்தா அங்கிருந்து நகர்ந்து தனது பணியைத் தொடர்கிறான். மனம் அமைதியடைகிறது.
“அம்மாவுக்கு ஒன்றும் ஆபத்தில்லை. அவள் நலமுடன் இருக்கிறாள்” இது ஒன்றே அவனுக்குப் போதுமானதாய் இருந்தது. விருந்து முடித்த எல்லோரும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். மானேஜர் பரமசிவம் சற்று முன் கோவிந்தாவைத் தங்கள் பிள்ளை என்று அழைத்த அந்த வயதான தம்பதியாரைத் தேடினார். அவர்கள் மணமகளின் உறவினர் என்பதை விசாரித்து தெரிந்து கொண்டு அவர்கள் வழியாக தொலைபேசி எண்ணை மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டார்.
பணியாட்கள் இரவு உணவில் அமர்ந்தார்கள். எப்போதும் விளையாட்டும் சிரிப்புமாய் இருக்கும் கோவிந்த் இன்று அமைதியாய் இருப்பது அவர்களுக்கே வியப்பாய் இருந்தது.
“இதுக்கெல்லாம் அப்செட் ஆயிட்டா எப்படிப்பா. அன்னிக்கொரு நாளு அறுபது வயது பாட்டி ஒன்று என்னைப் பார்த்து மாமா. மாமான்னு கூப்பிட ஆரம்பிச்சுடுச்சு… அதுக்கே நான் பயப்படலே. கவலைப்படலே… நீ என்னன்னா இதுக்குப் போய் அலட்டிக்கிறியே…”
நண்பர்கள் அவனை உற்சாகப்படுத்தினார்கள். ஏதோ கொஞ்சம் சிரித்தான்… சிலவற்றை எடுத்துக் கொறித்தான். அப்புறம் தன்னுடைய அறைக்குப் போனான். கட்டிலில் படுத்தான். தூக்கம் வரவில்லை. எழுந்தான் குளித்தான். உடையைத் தேடி எடுத்துக் கொஞ்சம் அழகாய் உடுத்திக் கொண்டான். கதவைச் சாத்திவிட்டுக் கீழே இறங்கினான். கால்கள் சுகந்த மனம் தேடி நடை போட்டன. சில மணித்துளிப் பொழுதில் அவளது வீட்டுக் காலிங் பெல்லை அழுத்தினான். நாலைந்து தடவைக்குப்பின் அவள் வந்து கண்ணாடி வழியாகப் பார்த்துக் கண்களை அகல விரித்துக் கதவைத் திறந்தாள். அவன் கண்களில் தேங்கிக் கிடந்த சோகம் அவளை மின்னலாய் இயங்க வைத்தது. ஆரத் தழுவிக் கொண்டாள். அவன் கைகளைப் பற்றி அழைத்துப் போனாள். வழக்கம் போல் வரவேற்பறையில் சோபாவில் அமரச் சொல்லவில்லை. அவளின் படுக்கையறைக்கே அழைத்துப் போனாள். அவளது கட்டிலில் அமரச் சொன்னாள். அவன் மௌனமாய் அமர்ந்து அவளை விழிகளால் அளந்தான். மெல்லிய நைட்கவுனில் அங்க வளைவுகள் அப்பட்டமாய் தெரிந்தன. விழிகளால் சாடை காட்டி அவள் நகர்ந்தாள். அவன் அவளைப் போகவிடவில்லை. தாவிப் பிடித்து இழுத்து தன்மேல் போட்டுக் கொண்டான். அவனது உடம்பில் மேல் போர்வையாகிப் போனாள்.
முதல் அனுபவம்… ஓ பெண்ணின் ஸ்பரிசம்… உடம்பெல்லாம் நெருப்பாய்க் கொதிக்க.. வியர்வையால் மேனி தெப்பமாய் நனைய தன்னுடைய மார்பில் முகம் புதைத்துக் கிடந்தவளின் முகத்தை வெறியுடன் கையில் ஏந்தி அவளின் இதழோடு இதழ்களைப் பதிக்க எத்தனித்தவன் கண்களால் அம்முகத்தை ஆசையுடன் பார்க்கிறாள். உடம்பு நடுங்குகின்றது. ஓவென அலறிக் கொண்டு அவளைப் படுக்கையிலிருந்து உதறி எறிகிறான். அவள் மிரண்டு போய் விழுகிறாள்.
படுக்கையில் கிடந்தவனை நெருங்கி அவன் முதுகைத் தன் கையினால் மெல்ல நீவி விடுகிறாள். அவன் அமைதியானதும் முகத்தைத் திருப்புகிறாள். முழுவதுமாய் திரும்பிப் படுக்கிறான். அவனருகில் அமர்கிறாள். பரிவுடன் பார்க்கிறாள். அவனும் பார்க்கிறான். மறுபடியும் நிறம் நீலமாகி, விழிகள் பிதுங்க கோரமாய்ச் சிரிக்கும் பேய் முகம்… சாட்சாத் அண்ணி மல்லிகாவின் முகம்தான் அது.
கடைசியாக அவனைக் கம்பினால் அடிக்க வந்தாளே அதே கோபவடிவமான முகம். கோவிந்தா அலறுகிறான்.
“அண்ணி… அண்ணி என்னை ஒன்றும் செய்துடாதே… என்னைக் கொன்னுடாதே அண்ணி….”
கத்திக் கொண்டே எழுந்து அவள் கழுத்தை நெறிக்கப் பாய்கிறான். அவள் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறாள். அவனும் அவளை விடாமல் துரத்திப் பிடிக்கிறான். அவன் மனம் முழுவதும் கொலை வெறி மிகுந்து எதிரே நிற்பவளைக் கொன்றே தீர வேண்டும் என்ற நோக்கில் கழுத்தை நெறிக்கப் பாய்கிறான். அவள் பலங்கொண்ட மட்டிலும் அவனை எட்டி உதைத்து விட்டு வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு ஓடுகிறாள். அவனும் விடவில்லை. அவளின் சமையலறையில் புகுந்து கத்தி ஒன்றை தூக்கிக் கொண்டு அவளை விரட்டிக் கொண்டு வெளியே ஓடிவருகிறான்.
அவன் வருகைக்காகவே வெளியில் காத்திருந்த காவல் துறையினர் லபக்கென்று அவனைப் பிடித்துக் கொள்கின்றனர். சற்றும் எதிர்பாராமல் சிக்கிக் கொண்டவன் அந்த இருட்டில் தன்னைச் சுற்றி நிற்கும் நபர்களை நோட்டமிடுகிறான்.
அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அவனுக்கு எதிரே மேனேஜர் பரமசிவமும், அவருக்கு அருகே அண்ணன் சரவணனும், இன்னும் சில காவல் துறையினரும்…
“ரொம்ப தாங்க்ஸ் மிஸ்டர் பரமசிவம். உங்க உதவி இல்லைன்னா இன்றைக்கு இன்னொரு பெண்ணை இவன் கொலை பணணியிருப்பான். நலல நேரத்தில எங்களுக்குப் போன் செய்து வரவழைச்சீங்க. குற்றவாளிகளைத தேடி நாங்க சிரமப்படற போது பொதுமக்கள் உங்கமாதிரி ஒத்துழைப்பு கொடுத்தாத்தான் எங்களோட அலைச்சல் குறையும். குற்றவாளிகளையும் சீக்கிரம் பிடிக்க முடியும்.”
சி.ஐ.டி.கிருஷ்ணன் பரமசிவத்தைப் பாராட்டினார். பரமசிவம் கோவிந்தாவைப் பார்க்கிறார்.
“நீ வந்ததிலேந்து உன்னோட நடவடிக்கையை நான் கவனிச்சிக்கிட்டிருந்தேன் கோவி. த்… சராசரி மனுஷனா.நீ இல்லை… எரிமலை தன்னை மூடிக்கிட்டு மௌனமா இருக்கிற மாதிரி நீ உனக்குள்ளேயே நெறைய விஷயங்களை வெச்சிருக்கேன்னு எனக்குத் தெரிஞ்சுது.
உன்னோட பேரை நீ மாத்திக் கொடுத்தது. உன்னோட முகத்தோற்றத்தை மாத்தி வெச்சிருக்கிற விஷயமெல்லாம் இன்னிக்கு காலையில் வந்த பத்திரிக்கை செய்தியில தெரிஞ்சு போச்சு… எல்லாத்துக்கும் மேலா அதிர்ஷ்ட வசமா உங்க அம்மா அப்பா வந்து உன்னை அடையாளம் கண்டு கிட்டப்ப நீ எதுவும் தெரியாதது போல நின்னப்பவே உன்னோட சுயரூபம் தெரிஞ்சு போச்சு.
பெத்தவங்களை விட்டுட்டு நீ ஓடிவந்து ஒளிஞ்சிருக்கிறதா நெனைச்சு தான் உங்க வீட்டுக்கு நான் போன் பண்ணினேன். ஆனா அங்கே பேசினதுக்கப்புறந்தான் நீ இவ்வளவு பெரிய வேலையைப் பண்ணிட்டு வந்திருக்கிற விஷயம் தெரிய வந்துச்சு.
படிச்சிட்டு உத்தியோகம் பார்க்க வேண்டிய வயசில ஏண்டா இப்படிக் கெட்டுப் போய் நிக்கறே… உங்க அண்ணனைப் பாரு… பசு மாதிரி நிக்கிற அவருக்கு எம்பா இப்பயொரு பழியைத் செய்தே…”
பரமசிவம் அவனைத் திட்டுவதைப் பொறுக்காத சரவணன் அவரை அதிகம் பேசவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
“வேணாம் ஸார் என் தம்பி நிச்சயமா அந்த தப்பை செய்திருக்கவே மாட்டான். எனக்கு என்னோட தம்பியை நல்லாவே தெரியும்.”
சரவணன் சொல்லி முடிப்பதற்குள் கோவிந்தா ஓடிப்போய் அவரது கால்களைக் கட்டிக் கொண்டு தேம்பினான்!
“அண்ணே.. என்னை மன்னிச்சுடுங்க நான் வேணுமினே அண்ணியைக் கொலை செய்யலே… என் கூட்டாளிங்களால ஏற்கனவே அவமானப் பட்டுப் போய் ஆத்திரமா இருந்த என்னை நான் எதிர்பார்க்காத நேரத்தில் அண்ணி கட்டையினால் தாக்கியதும் நான் குடிபோதையிலே என்னை மறந்து ஆத்திரத்தோட அண்ணியைப் புடிச்சி தள்ளிட்டேன். அண்ணி தடுமாறி மேசையில் விழுந்ததும் உயிரு போயிருச்சுண்ணே… சத்தியமா நான் கொலை செய்ய லேண்ணே…”
கல்லும் கரைவது போல் அழுகிறான். தன் தம்பியைத் தட்டிக் கொடுத்து நிதானப் படுத்துகிறான் சரவணன்.
இது கொலையல்ல. அவர்களுக்கு வரும் சிறிது நேர கோப விளைாட்டின் எதிரொலி – மேசையில் விழுந்த மல்லிகா சோபாவில் விழுந்திருந்தால் நிச்சயம் இந்த மரணம் சம்பவித்திருக்காது. அப்போதும் பொறுமை காத்தவள் சற்று நிதானம் தவறியதால் நிகழ்ந்த அசம்பாவிதமே இது என் மனம் முடிவு செய்கிறது. மனிதர்கள் மன்னித்தாலும் சட்டம் என்று ஒன்று அவனை விட்டுவிட முடியாதே.. கோவிந்தா கையில் விலங்குடன் காவல் துறை வேனில் ஏற்றப்படுகிறான்,
விசாரணைக்குப் பின் நோக்கமில்லாத திட்டமிடாத கொலை என்று கோர்ட்டு கோவிந்தாவுக்கு ஐந்தாண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கின்றது.
தன் அருமைத் தம்பி அரிய கலைகள் பல கற்று உயர் பதவிகள் பெற்றுப் பெருமையாய் வாழாவிட்டாலும் நல்ல குண நலன்களோடு இருந்து கைத்தொழில் செய்தாவது முன்னுக்கு வரமாட்டானா என்று ஏங்கிய சரவணனின் எண்ணத்தை ஈடேற்றுவதுபோல் கோவிந்தா சிறையிலிருந்து வெளிவந்தபோது ஒரு அற்புதமான கலைஞனாக வெளிவந்தான்.
பட்டுப்போன மரத்துண்டுகள் அவன் கை பட்டு. பலவித கோயில் சிற்பங்களாகின. நவீன வீடுகளுக்கான மரவேலைப் பாடுகளை மிகவும் உன்னிப்பாக செய்தான். அவனது பெற்றோர்கள் மட்டுமன்று அண்ணன் கூட வித்தியாசமாய்ப் பார்த்தான்.
“உன்னால் எப்படி கோவிந்த் இவ்வளவு பொறுமையா இதையெல்லாம் செய்ய முடியுது? முன்பெல்லாம் ஒரு சிறு விஷயம்னாகூட நீ தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவியே… இப்ப இவ்வளவு நிதானமா… நின்று வேலை செய்யறியே… எப்படிப்பா..?”
தம்பியின் கைப்பட்டு கம்பீரமாய் நிற்கும் அந்த சாய்வு நாய்காலியில் சாய்ந்து கொண்டு கேட்கும் அண்ணன் அருகில் வந்து அமர்ந்து கொள்கிறான் கோவிந்த்.
“இதுல என்னண்ணா ஆச்சரியம் இருக்கு… எவ்வளவு புத்தகங்களை நிதானமாய்ப் படிச்சு கரை சேர்ந்திருக்கீங்க… அதே மாதிரிதான் இதுவும்.”
சாலையில் நிதானமாக ஓடுகிற வாகனம் தான் நெனச்ச இடத்துக்கு நேரா போய்ச் சேர முடியும். வானத்தில் பறக்கிற பறவையும் தண்ணீர்லே நீந்துற மீனும் கூட தனக்குன்னு ஒரு பாதையை வகுத்துகிட்டு அந்த வழியில் பயணம் செல்றப்ப மனுஷனான நான் மட்டும் ஏன் எனக்குன்னு ஒரு பாதையை வகுத்து அதுல பயணம் செய்யக் கூடாதென்று என்னுள் அசைபோட்டேனா…!
ஜெயில்ல நான் ரொம்ப படிச்சிட்டேனா.. ஒரு வினாடி என்னை இழந்ததாலத்தானே அன்பு அண்ணியை நான் இழந்தேன்! அதே தப்பு மறுபடியும் வராமப் பார்த்துக்கத்தான் என்னை நான் நிதானப் படுத்திக்கிட்டேன்… இனி மலை அசைஞ்சாலும் நான் அசையமாட்டேண்ணே” அவனின் உறுதி உண்மைக் கண்ணீராய் இறங்கி அன்பு அண்ணனின் பாதத்தை நனைத்தது.
– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.