நான் அவனில்லை




(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிக நிறுத்தங்கள் இல்லாமல் தம்பனீஸிலிருந்து ஈஷுனுக்கு விரைந்து செல்லும் பேருந்தில் ஏறினாள் மீனா. கவிதா பள்ளியிலிருந்து வந்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டே நின்றவளுக்கு அடுத்த நிறுத்தத்திலேயே உட்கார வாகாய் இடம் கிடைத்தது. அருகில் உட்கார்ந்திருந்த சீனர் ‘பீயர் குடித்திருந்தார் என்று அவளின் நுகர்புலன் பளிச்சென்று கிரகித்த செய்தியை மூளை சொன்னது. ஐந்து வருடங்களுக்கு முன்பென்றால், உட்காராமல் நின்று கொண்டே பயணித்திருப்பாள். சென்ற சில வருடங்களில் வீட்டிலேயே மேற்படி வாடைகள் வாடிக்கையானதில் அவளுக்கு பழகி வெறுப்பு விடை பெற்று விட்டிருந்ததோ. யோசிக்கும் போது ஆச்சரியமாகவும், ஏன் சிரிப்பாகவும் கூட இருந்தது.
திறந்த வெளிச் சாப்பாட்டுக் கடைகளில் கூட குடிக்கும் மற்ற இனத்தவர் பெரும்பாலும் கலாட்டாக்கள் செய்வது இல்லை. கடந்து செல்லும் போது சில இந்தியர்களின் ஆர்பாட்டங்களை கவனிக்க நேர்ந்தால், கூனிக் குறுகித் தான் போவாள் மீனா.
கைப்பையிலிருந்து செல் பேசியை எடுத்து வீட்டிற்குத் தொலைபேசினாள். பலமுறை அடித்த பிறகு தான் கவிதா,” ஹலோ, அம்மா, இப்ப தாம்மா வீட்டுக்குள்ள நொழஞ்சேன். உடனே நீங்க போன் அடிச்சிட்டீங்க”, என்றாள் உற்சாகமாய். “சாப்டியா? நாளைக்கி என்ன கணக்கா? ரூமுக்குப் போய் படிம்மா, ம், சரியா”, என்று சொல்லி முடித்துத் துண்டித்தாள். சாப்பாட்டின் நினைவு பசியை அதிகப் படுத்தியது.
அடடா, அப்பா வந்து விட்டாரா என்று கேட்க மறந்துப் போனோமே என்று தோன்றியது. வந்து தானிருக்கவேண்டும். பிற்பகலிலேயே மூக்கிலிருந்து ஒழுகும் அளவிற்குக் குடித்திருந்ததால், போதையில் தொலைபேசி அடித்தது எப்படிக் கேட்கும். வரவர சலிப்பு தான் மண்டியது.
போன ன செவ்வாயன்று பின் மாலையில் பேசிக் கொண்டிருந்த போது, “உங்க ‘ஹெல்த்’ கெட்டுப் போயிடும், இத விட்டுடுங்க டாடி”, என்று மகள் அருகில் அமர்ந்து கொஞ்சினாள். உடனே, “ஆமாடா கண்ணு, இனிமே அது கிட்டக் கூடப் கிட்டக் கூடப் போக மாட்டேன்!”, மீறுவதற்கென்றே செய்யும் அழுத்தமான சத்தியங்கள்.
பள்ளிப் பாடங்களில் படித்ததையும், அப்பாவுக்காகவே இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்களையும் வரிசையா ஒவ்வொன்றாய் விரித்து விளக்க ஆரம்பித்து விட்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் ‘குடிக்காதே, என்று மீனா சண்டை போடும் போது வாயை மூடிக் கொண்டிருந்து விட்டு”, மீனா, இனிமேல் அதத் தொட்டேன்னா கேளு”, என்று மனைவி மேலும், மகளின் மேலும் சத்தியம் செய்து விட்டு அடுத்த நாளே பாட்டில்களுடன் வந்ததைப் போலவே புதனன்றும் வந்தார்.
“எம்பொண்ணு பார்க்க தாண்டி அச்சு உன்னைய மாதிரியேயிருக்கா. ஆனா, கொணத்துல அவ எங்க அம்மாவே தான்”, என்று வாயுக்கு வாய் நெகிழ்ச்சியுடன் சொல்வார். ஒரே மகளைக் கொண்டாடுவதும் கூத்தடுவதும் போத்தலைத் திறக்கும் வரை தான்.
அதன் பிறகு, தேவனொருவன் சாத்தானாகிப் போனானோ என்றெண்ணும் படிதான் இருக்கும் தோற்றமும் செயலும். எப்போதும் மிடுக்காக உடுத்தியிருக்கும் காப்பீட்டு அலுவலக அதிகாரியா என்று வியக்கும் படி. உடை நழுவுவதும் தெரியாமல், கொளகொளவென்று நடந்து, தன்னிலை மறந்து, மங்கல் பார்வையோடு தடுமாறுவதைப் பார்த்தால், அந்நியன் யாரையோ பார்த்தது போலிருக்கும் அவளுக்கு ஒவ்வொரு முறையும்.
கவிதாவின் அப்பா குடித்து விட்டால், முன்னால் நிற்பது ஆணா, பெண்ணா, நாயா பூனையா என்று கூடத் தெரியாத படி மயங்குவார். நல்ல வேளை வீட்டோடு குடிக்கிறார் என்று ஒரு சின்ன நிம்மதி. அதற்கு மட்டும், “பொதுவிடத்துல போதைல என்ன செய்றேன்னு தெரியாது. எதுக்கு வீணான்னு தான் மீனா நா வீட்டுக்கு வந்து குடிக்கிறேன் தினமும்”, என்று பெருமையாகச் தினமும் “, என்று பெருமையாகச் சொல்ல வேண்டியது. குழந்தைக்குச் சொல்வதைப் போல பன்னிப் பன்னியும், கோபத்தில் பளேர் பளேரென்று அடிக்கும் வார்த்தைகளாலும் சொல்லிப் பார்த்தாகி விட்டது.
நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை சாலை விபத்தில் காலை உடைத்துக் கொண்டு, இரண்டு மாதங்கள் வீட்டிலிலேயே இருக்க வேண்டியிருந்தது. பாழாய்ப் போன குடிப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் வரப்போக இருந்த அவரின் ‘உற்ற நண்பன். குடித்து அழிந்தாலும் கவலைப்பட யாருமில்லாத தனிக் கட்டையான அவர் குற்றவுணர்வால், பின் வந்த நாட்களில் வீட்டுப் பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை.
கடந்த நாலைந்து வருடங்களில் நூறாயிரம் சண்டைகள், மீனா கவிதாவை இழுத்துக் கொண்டு பினாங்கில் இருக்கும் அம்மா வீட்டுக்கு போவது, அதற்குப் பிறகு தொலைபேசியில் மீனாவிடம் கெஞ்சுவதும், பிறகு தானே நேரில் வந்து கூட்டி வருவதும் நிறைய தடவைகள் நடந்தேறி விட்டன. ஒரே நாள் குடிக்காமல், குட்டிபோட்ட பூனையாக வீட்டிற்குள் வலம் வந்து, செய்வதறியாது விழித்து, அசடுவழியச் சிரித்து, இரவெல்லாம் தூங்க முடியவில்லையென்று புலம்பி விட்டு, மறு நாளே சேர்த்து வைத்துக் குடிக்க வேண்டியது.
சென்ற வருடம் மருத்துவரின் உதவியோடு ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தும் சிகிச்சையாகச் செய்து பார்த்தாயிற்று. விடாமல் குடித்த உடம்பு குடிக்காமல் பட்ட பலவித கஷ்டங்களைப் பார்த்ததும் தாயும் மகளும் அவர் இயல்பாய் தன்னிச்சையாய் குடியை விடட்டும் என்று கூட்டிக் கொண்டு வந்துவிட்டனர்.
கவிதாவுக்கு அவளின் அப்பாவுடனான உறவில் தேனித்திருக்க, நினைவில் நிலைத்துப் போயிருந்த நிகழ்வுகள் ஏராளம் இருந்தன. நூலகத்தில் வெகுநாட்களாகத் தேடிய புத்தகம் கிடைத்த மகிழ்ச்சி, இரவல் வாங்கிப் போட்டி போட்டுக் கொண்டு படித்தது, நீச்சல் குளத்தில் மறு கரையைத் தொடவென்று நீந்தியது என்று நீண்டு, தந்தையர் தினத்துக்கும் மகளின் பிறந்த நாளுக்கும் பரிசுகள் பரிமாறிக் கொண்டது என்று சின்னதும் பெரிதுமாக நிறைய. தகப்பனும் மகளுமாய் கட்சி கட்டிக் கொண்டு மீனாவைக் கிண்டலும் கேலியும் செய்த சந்தர்ப்பங்களும் அதில் அடக்கம்.
வழக்கத்தை விட சீக்கிரமே விரட்டிக் கொண்டு வந்து விட்டார் மலாய் ஓட்டுநர். வெயில் இன்னமும் கொளுத்திக் கொண்டிருந்தது. விடுவிடுவென்று நடந்து அடுக்ககத்தின் மின்தூக்கியில் ஏறி ஆறாம் மாடியை அடைந்து, வாயிற்கதவைச் சாவி போட்டுத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
உள்ளறையிலிருந்து, “அப்பா, ப்ளீஸ் அப்பா, என் காலு நசுங்குதுப்பா, நகருங்க. உங்க மீச குத்துது டாடி,.நகருங்க”, என்று கவிதா தீனமாய் முனகுவது கேட்டது. முரட்டுத்தனமாய் ஏதாவது விளையாடுகிறார்களோ என்று நினைத்தபடி அறைக்குள் எட்டிப் பார்த்தவள் வானமே என் தலையில் விழுந்தாற்போன்ற பேரதிர்ச்சியில் அப்படியே உறைந்தாள்!
ஒரு நொடி தான். பாய்ந்து சென்று கவிதாவின் மீது கவிழ்ந்து படுத்திருந்தவரைப் பிடித்து ஒரே தள்ளு தள்ளி விட்டதும் படுக்கையின் நடுப் பகுதியில் தொப்பென்று விழுந்து, சிறிதும் சலனமேயின்றி அப்படியே கிடந்தார். “அடப்பாவி மனுஷா, போச்சே புத்தி”, என்ற படி ஓங்கி ஒரு குத்து வைத்தாள்
முதுகில். இதற்கெல்லாம் அசைவேனா என்று கிடந்ததைப் பார்த்து ஆத்திரம் பொங்கியது. மீண்டும் தோளைப் பிடித்து உலுக்கி கோபமாகக் கத்திப் பார்த்தாள்.
ஒரு குடம் தண்ணீரைக் கொட்டினாலும் பலனிருக்காது என்று சலிப்புடன் அறையை விட்டு வெளியேறும் போது அங்கிருந்த மேசையில் அப்பாவியாய் நின்றிருந்த இரண்டு காலி பாட்டில்கள் கண்ணில் பட்டன. முதுகிற்குப் பின்னால், “மீயா, ஆய் மீயா, யாழு, யகள பண்ணழ்து”, என்ற முனகல் கேட்டது.
முட்டைக் கண்ணை விரித்துத் திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றிருந்த கவிதாவைக் கூட்டிக் கொண்டு கூடத்திற்கு வந்தபோது, “நான் மட்டும் இன்னும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால்,” என்ற எண்ணம் தோன்றியதுமே மீனாவினுள் நடந்திருக்கக் கூடியதை நினைத்து பயம் தலையோடு கால் சிலிர்த்து அடங்கியது.
கவிதாவின் முகத்தைப் பார்த்தாள். காலையில் பள்ளிக்குச் செல்லு முன் பின்னி விட்டிருந்த இரட்டைப் பின்னல்கள் சீரின்றிக் கலைந்திருந்தன. முகத்தில் எந்த விதமான பெரிய உணர்ச்சியும் இல்லாமல் நின்றாள். விபரீதம் புரியவில்லையோ ஒருவேளை.
வேலியே பயிரை என்றெல்லாம் தோன்றியது சரிதானா என்றே முதலில் புரியவில்லை. ஆனால், போதையில் நிதானம் இழக்கும் தகப்பன் உயிராய் இருக்கும் மகளுக்கே தீங்கிழைக்கவிருந்தார் என்பது மீனா சற்றும் எதிர் பார்க்காதது மட்டுமில்லாமல், கண்ணால் காட்சியை அவள் மனம் இன்னமும் ஏற்றுக் கொள்ளவும் நம்பவும் ஆரம்பிக்கவில்லை.
கொஞ்ச நேரத்தில், மீண்டும் இத்தகைய விபரீதம் வரு முன்னர் தடுக்க வேண்டியதன் அவசியம் மட்டும் புரிந்தது. எப்படி என்று தான் தெரியவில்லை. வேலையை விட்டு விட்டு வீட்டோடு மகளுக்குக் காவலிருப்பதா? குடிகாரனுக்கு அப்படியெல்லாம் மறைமுகமாக சௌகரியம் செய்து கொடுப்பதாவது? வெளியில் போகும் போதும் வரும் போதும் மீனா மகளின் பாதுகாப்பில் அக்கறை கொள்வது இயல்பு. வீட்டிலேயே என்றால்,.. நினைக்கும் போதே வேதனையும் கோபமும் மிகுந்தது. இப்படியொரு இக்கட்டு வருமென்று யார் தான் நினைத்திருப்பர்? குற்றம் சூழ்நிலையின் மேலேயே இருக்கட்டும். அத்தகைய சூழலை உருவாக்கும் குடியை விட்டால் தான் என்ன இந்த மனுஷனுக்கு?
“கவிதா, உடனே கிளம்பி பாட்டி வீட்டுக்குப் போயிடுவோம். எப்ப விஷயம் இவ்வளவு தூரம் வந்துடுச்சோ, அப்ப நாம இங்க இருக்கறது ஆபத்து. எப்படியும் உங்கப்பா குடிக்கறதையும் நிறுத்தப் போறதில்லை. நான் பினாங்குலயே ஒரு வேலையத் தேடிக்க வேண்டியது தான். உன்னையும் அங்கயே நல்லதா பார்த்து ஒரு பள்ளிக் கூடத்துல சேர்த்துடறேன்”.
பயணப்பையை அலமாரியின் மேல் தட்டிலிருந்து எடுத்து, அதன் வாயைப் பிளந்து, கையில் கிடைத்த துணிகளை ஒவ்வொன்றாய் எடுத்து அதனுள் போட்டாள். போடப் போட கவிதா அவற்றை எடுத்து எடுத்து வெளியே வைத்தாள். எரிச்சலுடன் கவிதாவின் முகத்தை ஏறிட்டாள். அப்போது தான் கவனித்தாள். தன்னுடைய சின்ன பொட்டை வைத்துக் கொள்ளாமல் அம்மாவின் பெரிய அடர்சிவப்புப் பொட்டை நெற்றியில் வைத்திருந்தாள்.
“ஏய், அதென்ன என்னோட பொட்ட வச்சிருக்க,..”
“ஹி ஹி, அதுவா, முகம் கழுவினதும் கண்ணாடியில உங்க பொட்டப் பார்த்தேனா, சும்மா வச்சிப் பார்ப்போம்னு தான் வச்சேன். நல்லா இருக்கில்ல, … ஏம்மா, எனக்கு எக்ஸாம்ஸ் வருது. இப்போ போயி பாட்டி வீட்டுக்கு போலாம்ங்கறீங்களே”
“அடியே, இப்ப நாங்கொஞ்ச லேட்டா வந்திருந்தா என்னா வாயிருக்குமோ,.. புரிஞ்சு தான் பேசறியா? இல்ல, உங்கப்பா மேல உனக்கிருக்கற அன்பும் நம்பிக்கையும் உன் புத்திய மழுங்கடிக்கிதா? இதுக்கு ஒரே வழி, இதான். கெஞ்சினாலும் மிரட்டினாலும் திரும்பி வர மாட்டேன். கிளம்புடி, சொல்றேன்.”
“அம்மா, நா கணக்குல ஒரு சந்தேகம் கேக்கலாம்னு அப்பாவோட அறைக்குள்ள போனேன். என்னப் பார்த்ததுமே சிரிச்சு கிட்டே மீனா, மீனான்னு திரும்பத் திரும்ப உங்க பேரச் சொன்னாரு. அப்பா என்னோட தலகாணி விளையாடத் தான் வரராக்கும்னு,..”
நிகழ்வின் தீவிரத்தைப் புரிந்து கொண்டதற்கான அடையாளங்கள் கவிதாவின் முகத்தில் கொஞ்சம் தென்பட்டன. பன்னிரண்டு வயதுக்கு கொஞ்சம் கூடப் புரியாமல் போகுமா என்ன. சில நிமிடங்கள் பேசாமல் தரையையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு நிமிர்ந்து அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே தயங்கித் தயங்கி, “குடிச்சாதாம்மா அப்பா கெட்டவரு. இல்லன்னா,..”
“இல்லன்னா ரொம்ப நல்லவருன்ற. சரி, இருக்கட்டும். ஆனா, குடிக்காத நாளே இல்லயே,..”
“அம்மா, நானே அவர மாத்த ட்ரை பண்றேம்மா. ஒரே ஒரு சான்ஸ் கொடுங்கம்மா. இந்தத் தடவ அவரு குடிக்கறத நிறுத்தல்லன்னா நீங்க சொல்றத நாங்கேக்கறேன். ப்ளீஸ்மா எனக்கு அப்பா வேணும்மா”, என்ற சொல்லிக் கொண்டே மீனாவின் யோசிப்பில் இருந்த தீர்மானத்தை உணர்ந்தோ என்னவோ பெரிதாய் அழக் கிளம்பினாள்.
அவளைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. “கவிதா, அழதா,.
நடந்த அமர்க்களத்தில் பசி மந்தித்திருந்தது. ஒரு டம்ளர் மோர் மட்டும் குடித்து விட்டு, சிந்தனையிலும் உடலியக்கத்திலும் முனைப்பின்றி சோபாவில் சரிந்திருந்தாள். கவிதா கணக்குப் போடப் போய் விட்டிருந்தாள். குருட்டு யோசனை கோபம் தோய்ந்திருந்தது. இடையில் ஒரு முறை அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
உள்ளிறங்கிய சரக்கு வழக்கத்தை விட அதிகம் போலும். அசைவையே காணோம். அருகில் போய் உலுக்கி எழுப்பி சண்டை போடுவோமா என்று நினைத்து பின், தனது உடற் சோர்வை நினைத்து, மனதை மாற்றிக் கொண்டாள். நடுராத்திரியில் எழுந்து தானே சாப்பிட்டு விட்டு போட்டது போட்ட படி மறுபடியும் கொஞ்சம் சுருதி ஏற்றிக் கொண்டு படுத்தாகி விடும்.
அன்றிரவு கவிதாவின் அறையில் உள் பக்கம் தாளிட்டுக் கொண்டு உறங்கும் மகளையே பார்த்த படி, புரண்டு கொண்டேயிருந்தாள். மதியம் அடித்த வெயிலை ஈடு செய்ய, இடியோடு பெருந்தூறல் கிளம்பியிருந்தது.
தன் அப்பாவில் இருந்த குடிப் பழக்கத்தையும் தாண்டி கவிதாவுக்கு அவளின் அப்பாவிடம் இருந்த அபிமானம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. பளிங்கு போன்ற அவளின் வெள்ளை மனம் மீனாவுக்குள் சின்ன நிம்மதியைக் கொணர்ந்தது. அவளைப் அவளைப் போலத் தன்னால் யோசிக்க முடியவில்லையே என்று கூட ஏங்கினாள்.
ஏழாவது மாடியில் தினமும் அலாரம் வைத்தாற் போல அழும் ஒரு வயது வாண்டு அழவாரம்பித்தான். அவனின் அம்மா முதலில் காள் காள்ளென்று கத்தி விட்டு, களைப்பு மேலிட இறுதியாக வழக்கம் போல் முதுகில் தட்டிக் கொண்டே, “க்வாய், க்வாய்”, என்று சீனத்தில் சமாதானப் படுத்தினாள். கவிதாவின் அப்பா தினமும் குறித்த நேரத்தில் குடிப்பதைப் போல இவனின் அழும் படலம். அழுவதில் அவனுக்கு போதையோ !
தன் ஒரே மகளுக்கு ஏதும் நேர்ந்து விட்டிருந்தால் என்ற பயம் மட்டுப் பட்டு நடுநிலையுடன் யோசிக்க ஆரம்பித்தாள் மீனா. நாளை எழுந்ததும் தன் செயலை அறிந்தவுடன் கவிதாவின் அப்பா படப் போகும் அதிர்ச்சியும் அவமானமுமே அவருக்கு ஒரு பெரிய தண்டனையாகப் போகிறது. மகளின் மேலிருக்கும் பாசம் காரணமாய் குடிகாரனின் சத்தியமாக இல்லாமல், உண்மையிலேயே மனதில் உறுதியும் தீர்மானமும் பிறக்கலாம். பார்ப்போமே.
– பின் சீட் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, நிலா புக்ஸ்.