நம்பிக்கை வேர்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2025
பார்வையிட்டோர்: 192 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செண்டன் வேயில் உள்ள டி.பி.எஸ் வங்கிக் கட்டடத்தின் பதினெட்டாவது மாடியில் உள்ள பிரத்யேக அறையில் அவ்வங்கியின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஜெயசீலன் தன் இருக்கையில் சாய்ந்தவாறு சுவரில் ஆடிக் கொண்டிருக்கும் அந்த அழகிய மணிப்பொறியைப் பார்க் கிறார். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மனத்தில் ஒரு நெருடல்!

அவரது பணிக் காலத்தில் என்றைக்குமே இப்படி நேரம் தவறி வந்தது கிடையாது. இன்று அவர் உள்ளே நுழைந்த போதே மணி ஒன்பதைத் தாண்டி முப்பது மணித் துளி களாகி இருந்தன. இப்படியொரு சங்கடத்தை உண்டாக்கிய அந்தச் சம்பவம் மனக்கண்ணில் நிற்க… நெற்றியில் கை வைத்தவராய்ச் சிந்தனையில் ஆழ்ந்து போகிறார்.

வழக்கம்போல் ‘காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு, அலுவலகம் வந்த நேரம்! சரியாக எட்டு மணிக்கெல்லாம் ஆயர் ராஜா தீவு விரைவுச் சாலையில் வாகனங்கள் கிழக்கும் மேற்குமாய்ப் பறந்து கொண்டிருக்க, வானமோ தடுமன் பிடித்த மழலைபோல் சிணுங்கிக் கொண்டிருந்தது.

கிழக்கு நோக்கித் தன் பொன்வண்ண வோல்வோவை நிதானமாகச் செலுத்திக் கொண்டிருந்த ஜெயசீலன் தஞ்சோங் பகார் புகைவண்டி சந்திப்பு நிலையத்தின் அருகே உள்ள சமிக்கை விளக்கின் எச்சரிக்கை வண்ணம் கண்டு கார் பிரேக்கைப் போட்டார்.

அவரின் பின்னால் வந்து கொண்டிருந்த சிவப்பு நிற ஹொண்டா சிவிக் ஒன்று அவரை உரசுவதுபோல் வந்து அவருக்கு முன்னால் போக முயன்று தடுமாறித் திணறி நின்றது. ஜெயசீலன் சட்டென்று காரிலிருந்து இறங்கி நிறுத்தப்பட்டிருந்த காரினருகில் சென்றார். அதற்குள் அக்காரிலிருந்து இறங்கிய இந்திய இளமங்கை ஒருத்தி அவரைத் தன் கைகளால் கும்பிட்டு நின்றாள். கண்களில் நீர் தளும்பியது.

“என்னை மன்னிச்சிடுங்க அங்கிள்… அவசரத்தில் தவறு நடந்து போச்சு… உங்களுக்கு ஏதாச்சும் நஷ்டம் ஏற்பட்டிருந்தா அதை நான்…”

அழகானவளிடம் அவர் பேசுவதற்குள் பச்சை விளக்கு வந்துவிட எதிர்முனையில் வாகனங்கள் அலறத் தொடங்கின. ஜெயசீலன் தன் காருக்குத் திரும்புகிறார். அந்த நங்கையும் போய்விட்டாள்.

அந்த நிகழ்ச்சி அவரைத் தாமதமாக்கி வைக்க அவரது சேவைக் காலத்திலேயே இல்லாத விந்தையாக வங்கியில் அவர் நுழைய அவர் மேல் மற்றவர்களின் பார்வை படிய… அதுதான் இந்த மௌனப் போராட்டத்தின் கருவாய் அமைந்து போயிருந்தது. அவர் எவ்வளவோ மறக்க முயன்றாலும் அவள் முகம் மட்டும் அவரின் நினைவில் வந்து வந்து நின்றது.

“அந்தப் பார்வையும் பரிதவிப்பும்.”

“அடடா… கொஞ்சம் அவளோடு பேசியிருக்கலாமே… தன் தவற்றை உணர்ந்துவிட்டவளாயிற்றே. அவளை மன்னிக்கக் கிடைத்த வாய்ப்பும் கைநழுவிப் போய் விட்டதே!”

மனம் கவலைப்படத் தொடங்கியது. இயல்பாகவே தான் பிறந்துவிட்ட இனத்தின் இளையர்மேல் கொண்டிருந்த மனிதாபிமானத்தின் பிரதிபலிப்பு அது.

“தொலைபேசி அடிக்கிறது. வங்கி வெளியிட்ட பத்திரிகையுடன் திரளாக இளையவர்கள் வரிசையாக இருக்கையில் உட்கார்ந்திருக்காங்க ஸார்…” உதவியாளர் குமாரி சரஸ்வதி கூறிமுடிப்பதற்குள்..

“மே ஐ கம் இன்… ஸார்..!” குளிர்சாதனம் நிரம்பிய அந்த அறைக்குள் குயிலின் குரல் ஒன்று ஒலிக்க –

“யெஸ் கம் இன்…” என்ற பதிலோடு பார்வையைக் கதவில் பதித்தார். குப்பென்று மயிர்க்கால்கள் உடம்பெங்கும் எழுந்து நிற்க வந்து கொண்டிருந்த பாவை மேல் உணர்வுகள் நிலை குத்தி நின்றன.

அவளுக்கும் அதே நிலை..!

பல அலுவலகங்களில் ஏறி இறங்கி இறுதியாக இங்கு நேர் காணலுக்கு வாய்ப்புக் கிட்டி. அதற்கான தகுதிகள் அனைத்தும் தனக்குக் குறைவின்றி இருந்ததால் இன்று நிச்சயம் தனக்கு வெற்றி கிட்டும் என்ற முழு நம்பிக்கையுடன் உள்ளே முதல் ஆளாக நுழைந்தவளின் உடல் மேலதிகாரியாய் அமர்ந்திருக்கும் அந்த நபரின் முகத்தைப் பார்த்ததுமே அதிர்ச்சியில் நாவறண்டு போய் உள்நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளப் ஒட்டிக்கொள்ளப் பயத்தால் உடம்பு தெப்பமாகி முகத்தில் வியர்வை முத்துகள் சிரித்தன.

“குட்மார்னிங் ஸார்..” தட்டுத் தடுமாறி வார்த்தைகள் விழ, கீழே விழுந்து விடாத குறையாய் அவள் நின்றாள்.

ஜெயசீலன் நிதானமாய் அவளைப் பார்க்கிறார். இதழ்களில் இளநகை ஒன்று நெளிய “உட்காரும்மா..” என்று எதிரே கிடந்த இருக்கையைக் காட்டுகிறார். அமைதியாய் அமர்கிறாள் அவள்.

“உன் பெயர்._?”

“நிவேதிதா.!”

“ஒண்டர்புல் நேம்… இவ்வளவு விவேகமான பேரை வைச்சிகிட்டா..இப்படி நிதானமில்லாமல் நடந்துகிட்டே?”

“என்னை மன்னிச்சுடுங்க ஸார்… இன்டர்வியூவிற்குப் போக நேரமாயிடுமோன்னு அச்சத்தில அப்படி அவசரப்பட்டுத் தப்புப் பண்ணிட்டேன்.. இனிமே அப்படி எல்லாம் நடந்துக்க மாட்டேன்”

சொல்லிக் கொண்டே மேசையில் அவள் வைத்த கோப்பைக் கையிலெடுக்கிறார் ஜெயசீலன். அத்தனையும் அவளைப் பற்றிய குறிப்புகள்! நல்ல கல்வித்திறன் அவளிடம் இருந்தது. துணைப் பாடங்கள், மற்றும் தற்காப்புக் கலை, விளையாட்டுத் திறம்… பொதுச் சேவை என்று நிறைய நற்சான்றிதழ்களை அடுக்கியிருந்தாள். பொதுவாக அவள் எதிர்பார்த்து வந்த வேலைக்குப் போதுமான தகுதிகள் அனைத்தும் அவளிடம் குறைவின்றி அமைந்திருந்தன.

ஐந்தாண்டுக் கால வேலை அனுபவத்தில் ஐந்தாறு இடங்களில் வேலை பார்த்திருந்தாள். எல்லா இடங் களிலும் நல்லவிதமான அபிப்பிராயங்களையே பெற்றிருந் தாள். ஆனால், எங்குமே நிரந்தரமாய் அவள் வேலை செய்திருக்கவில்லை. அவர் ஆச்சரியமாய் அவளைப் பார்த்தார்.

“இது நீங்க வேலை செய்ய வந்திருக்கிற ஏழாவது இடமுன்னு நெனைக்கிறேன்… இங்கே வேலை கொடுத்தா எவ்வளவு நாளைக்கு நீங்க வேலை பார்ப்பீங்க.?”

அவள் சட்டென்று நிமிர்ந்தாள். முகத்தில் அச்சம் பரவியது. உதடுகள் மெல்லப் பிரிகின்றன.

“ஸார்… நீங்க…” தடுமாறுகிறாள். ஆமாம்மா… உங்க ளோட நற்சான்றிதழ்களையும் கல்வித் தகுதியையும் பார்த்தா எங்கள் வங்கிக்குப் பொருத்தமான நபரா நீங்க இருக்கீங்க. உங்களுக்கு இந்தப் பதவியை நான் தாராளமா கொடுக்கலாம் ஆனா… உங்களோட வேலை விலகல் விளையாட்டு இங்கேயும் தொடருமோங்கிற பயம் எனக்கு வந்து இந்தக் கேள்வியை உங்கிட்டே கேட்கச் சொல்லுது..!

நிதானமாய்ப் பேசும் அவரை நேராகப் பார்க்க அவளுக்குத் துணிவின்றிப் போனது. இருந்தும் சமாளித்தாள்.

“ஸார்… நான் வேணுமின்னே அந்தத் தவற்றைச் செய்யலே.. ஒவ்வோர் இடத்திலேயும் ஒவ்வொரு பிரச்சினை..! சில இடங்கள்ல மொழிப் பிரச்சினன… சில இடங்கள்ல ஒப்பந்தத்தில் இல்லாத வேலைகளைச் செய்யணும்கிற கெடுபிடி… சின இடங்களில் அதிக வேலை, குறைவான சம்பளம். பொறுப்பற்ற நிர்வாகிகள்… எப்படி ஸார் வேலை செய்யறது..?

தெளிவாகப் பேசும் அவளைப் புன்னகையுடன் பார்த்தார் ஜெயசீலன்.

“அதற்காக இப்படி மோசம் செய்யறது நன்றி கெட்ட தனமும் கையாலாகத்தனமும் இல்லையா?”

“ஸார்…” அவள் துடித்துப் போனாள்.

‘ஆமாம்மா… நீங்க செய்திருக்கிறது ஒரு மோசமான காரியம்னு உங்களுக்குத் தெரியலையா… நல்லா நெனைச்சுப் பாருங்க… நீங்க புதுசா வேலைக்குப் போறப்ப உங்க படிப்புத் தகுதியோடத்தான் போய்ச் சேருவீங்க… அப்புறம் வேலை ஆரம்பிச்சதும் தான் உங்களுக்கு வேலை அனுபவம் தொடரும்..பள்ளிப் படிப்பைவிட அனுபவப் படிப்பு உங்க தகுதியை இன்னும் அதிகமாக்கும்.

“உங்களுக்குத் தேவையான சம்பளமும் மற்றைய தேவைகளையும் கொடுத்து வேலைப் பயிற்சியையும் கொடுத்து உங்க தகுதியை மேம்படுத்துற நிர்வாகத்தைக் கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாம தூக்கி எறிஞ்சிட்டு இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைங்கிற மாதிரி தாவித் தாவிப் போகிறது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான வேலை. உங்களை வளர்த்து ஆளாக்கிவிட்ட உங்க பெற்றோர்களை நெனைக்கிற நீங்க, உங்க குடும்பத்தை… நெனைக்கிற நீங்க… அதே மாதிரி உங்களை வளர்த்து அனுபவ சாலியாக்கிவிட்ட அந்த நிறுவனங்களை நெனைச்சிப் பார்க்க மறந்துடுறீங்களே.. இது நன்றிகெட்டதனம் தானே…?

“ஸார்…” அவள் திணறிப் போனாள்.

“ஒவ்வோர் ஊழியனும் வேலைக்கு வர்றப்ப சாதார ணமா தன்னோட படிப்பை மட்டுந்தான் வெச்சிகிட்டு உள்ளே வர்றாங்க… வந்ததும் தெரிஞ்சுக்கிற அனுபவம் எவ்வளவு விலை கொடுத்தாலும் கெடைக்க முடியாதது… இந்த டி.பி.எஸ். வங்கி 1968-ம் ஆண்டில் தொடங்கியபோது நான் வந்து சேர்ந்தப்ப எனக்கு உங்க வயசிருக்கும். அப்போ அறிவும் திறமையும் வேறே… அதுக்குக் கிடைச்ச வருமானமும் வேறே…ஆனா இன்றைக்கு நான் உட்கார்ந்திருக்கிற இந்த நாற்காலிக்கு விலை அதிகம்… அதாவது மரியாதையும் மதிப்பும் அதிகம்… அது தானாக வரலே… என்னோட பொறுமை… எதையும் தெரிஞ்சுக்கணும் கத்துக்கணும்கிற ஆர்வம்… என்னை வளர்த்துவிட்ட இந்த நிறுவனத்தின் மேல எனக்கிருந்த நம்பிக்கை, என் தொழில் மேல எனக்கிருந்த பக்தி… இதுதான் இந்த நாற்காலிக்கு நான் கொடுத்த வேலை…

“என்னோட மற்ற இனத்து ஆள்களும் நிறைய இருக்காங்க..அவுங்களோட போட்டி போட்டுதான் நான் இதிலே உட்கார்ந்தேன். ஆரம்பத்தில் இரண்டு மொழி மட்டுமே பேசத் தெரிஞ்ச நான் இப்ப ஐந்து மொழி படிச்சி வெச்சிருக்கேன். இந்தச் சின்னஞ் சிறிய சிங்கப்பூர்ல படிக்கிறதும்… வேலையில உயர்றதும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கிறதும் அவ்வளவு சிரமமான காரியமில்லையே… மனசு வெச்சா மார்க்கமுண்டுன்னு உனக்குத் தெரியாதா என்ன?”

மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது. நிவேதிதாவுக்கு. ஆனால் அதுவே வானம் பார்த்துக் கிடந்த வறண்ட பூமியில் விழுந்தமழையாய் அவளுக்குக் குளிர்வித்தது.

“நிவேதிதா… உன் பெற்றோர்கள் உனக்கு எவ்வளவு அழகான பேரை வெச்சிருக்காங்கன்னா அவுங்க நிச்சயம் உன்னால் இந்த மண்ணுக்கு எதிர்காலத்துல ஏதோ ஒரு நன்மை நடக்கும்கிற நம்பிக்கைதான். பிள்ளைகள்தானே பெற்றோர்களின் எதிர்கால நம்பிக்கை. அந்த நம்பிக்கை வேர்களா நீங்கள்லாம் உறுதியா இருந்தாதானே வீடும், நாடும் நலமும் வளமும் பெறமுடியும்.”

நிவேதிதா எழுந்துநின்று கைகளைக் குவித்து அவரை வணங்கினாள்.

“என்னை நான் உணர்ந்துட்டேன். என் கண்களைத் திறந்து உண்மையை எனக்குக் காட்டினதுக்கு நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியாம, தடுமாறி நிற்கிறேன் ஸார். இதுவரைக்கும் என் அறியாமையினாலேயும், அறிவில்லாத் தன்மையினாலேயும் நான் தெரியாமல் செய்த தவற்றை மன்னிச்சிட்டு எனக்கு இந்த வங்கியில ஒரு வேலைக்குச் சிபாரிசு பண்ணுங்க ஸார்..!

ஜெயசீலன் புன்முறுவல் பூத்தார். கவலைப்படா தேம்மா… உன்னை மாதிரி அறிவார்த்தமான இளை யோர்கள் கிடைக்கிறது ரொம்ப அபூர்வம். மண்ணுக்குள் புதைஞ்சு மறைஞ்சு கிடக்கிற தங்கம் வைரம் மாதிரி நீங்க… மண்ணுல கிடைக்கிற தங்கத்தையும் வைரத்தையும் தேடி எடுத்து வெட்டி பட்டை தீட்டிப் புடம் போடற மாதிரி உங்களை எல்லாம் பலனுள்ளவர்களா மாற்ற வேண்டியது என் போன்றவர்களின் கடமை. நீ சந்தோஷமா புறப்படலாம். உனக்கு வேலைக்கான கடிதம் விரைவில் வீடு தேடிவரும். தொடர்ந்து நல்ல வெற்றிகள் உன்னை வந்தடைய எனது இனிய வாழ்த்துகள்…!”

நிவேதிதா மகிழ்வுடன் கிளம்பினாள். உள்ளத்தில் உற்சாகம் கரைபுரண்டது. கீழ்த்தளத்திற்கு வந்து தனது சிவப்பு நிற வாகனத்தை எழுப்புகிறாள். அமைதியாய்ச் சாலையில் நகர்ந்தபோது அந்த நாலு சக்கர வாகனம் கூட அவளின் நிதானம் பொறுமை அமைதி தன்னம்பிக்கை கண்டு அதிசயித்தது.

– தமிழ் முரசு 24-3-96

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *