நகர் நீங்கிய காலம்




(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெறும் மேலோடு படுத்துக் கிடந்தான். காரை பெயர்ந்து போன மாடியெங்கும் பாளம் பாளமாகப் பிளவுண்டிருந்தது. அறை. மாடிப்படிகள் சப்தமிட நான் ஏறி வந்தது தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்தான். சுவரோரமாக ஒண்டியபடி தூம்பு வாய்க்குக் கிட்டத்தில் முகம் புதையப் படுத்துக் கிடந்தபோது வெயில் ஏறிக் காலெல்லாம் அடித்துக்கொண்டிருந்தது.
வேம்பின் சருகுகள் நிறைந்த மாடி. தழைத்து வந்திருந்தது வேம்பு. காயப்போட்டு அள்ளிய வத்தல்களின் மீதம்… அங் கொன்றும் இங்கொன்றுமாக வத்தல்கள் கிடந்தன. சோடை வத்தல்கள் பழுப்பேறி, வேப்பிலைகளோடு சேர்ந்து போயி ருந்தன. சட்டை சுருட்டிக் கிடந்தது அருகில். அவனோடு வந்த சின்னப் பெண் எழுப்பினாள்.
“அண்ணே… உன்னப் பார்க்க யாரோ வந்திருக்காங்க… எந்திரி” அவன் தூக்கத்திலே ‘உம்’ கொட்டிக்கொண்டு முகத்தைச் சுருட்டிக்கொண்டான். அவள் உடம்பை அசைத்து எழுப்பினாள். அவன் முனங்கியபடியே எழுந்து கொண்டான். அவன் வயிற்றில், முதுகில் என வேப்பிலைகள் ஒட்டிப் போயிருந்தன. அவனை எழுப்பிய பெண் கீழே இறங்கிப் போன பின்பு, சுவரின் பக்கம் யாரும் இருக்கிறார்களா எனப் பார்த்துவிட்டு, தூம்புவாய் அருகில் உட்கார்ந்து ஒண்ணுக்கிருந்தான்.
வெயில் மூஞ்சியில் பட்டுக் கூச்சமாக்கியது அவனுக்கு…
எருமை மாடுகள் வெயில் தாங்காமல் கத்திக்கொண்டிருந்தன.
அவன் உள்ளே வந்தபோது நான் மரச் சேரில் உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். எட்டாம் வகுப்புப் பாடப் புத்தகங்கள். எப்பவோ வாங்கிய சில பத்திரிகைகள் கிடந்தன. பழைய கால மேஜை கிடந்தது. அவன் நிச்சயமாக நான் வருவதை எதிர்பார்த்திருக்க முடியாது. கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான். ஆள் ரொம்பவும் கறுத்து மெலிந்து போயிருந்தான்.
கிட்டத்தில் வந்து முதுகில் அடித்தான்.
“எப்படா வந்தே?”
புத்தகத்தை வைத்துவிட்டுப் பதில் பேசாமலிருந்தேன். அவன் ஜன்னல் வழியாகக் கீழே பார்த்தான். தெருவில் இரண்டு பையன்கள் விளையாண்டு கொண்டிருந்தார்கள். இங்கிருந்தே கத்திக் கேட்டேன்.
“டீக்கடை இருக்குதானு பாருடா சிதம்பரம்.”
ஒரு பையன் டயரை உருட்டியபடி வளைந்து வளைந்து ஓடினான். பின் அவன் சப்தம் கேட்டது.
“இல்லைண்ணே…”
அவன் என்னைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.
“இரு… கீழே போயி வீட்ல டீ போடச் சொல்றேன்.”அவன் அறையிலிருந்து வெளிப்பட்டு கீழே போன பின்பு நான் மொட்டை மாடிக்கு வந்து நின்று பார்த்தேன். ஊர் சுற்றுப்புற மெல்லாம் விரிந்து கிடந்தது. தூரத்தில் மஞ்சனத்தி மரங்களும், வயர் கம்பங்களும் தெரிந்தன. தெருவில் ஆட்களும் அதிகம் தெரியவில்லை. சில வயதானவர்களே தென்பட்டார்கள். அவன் திரும்பியபோது வெண்கல டம்ளரில் டீ கொண்டு வந்தான். கனமான வளைவு கொண்ட டம்ளர். டம்ளரைக் கொடுத்துவிட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். டம்ளர் நிறைய டீ இருந்தது. டீ குடித்தபடியே கேட்டான்.
“எப்பிடி வந்தே…நடந்தா?”
“ரோட்ல இருந்து கொஞ்ச தூரம் நடந்து வந்தேன். அப்புறம் ஒருத்தர் சைக்கிளில் வந்தேன்”.
“ஆள் எப்படியிருந்தாரு?”
“மீசைக்காரரு. உயரமா…”
“சொந்தக்காரருதான்… உங்கிட்ட விசாரிப்பாரே…”
“ம்..”
“டீயைக் குடி…”
திகட்டியது டீ. பாதிக்கு மேல் குடிக்க முடியவில்லை. அவன் குடித்துவிட்டு மேஜையில் சிகரெட் தேடினான். இல்லாததால் கீழேயிறங்கிப் போனான். வீட்டுக்கு வெளியே ஒரு பெண் குரலும் அவன் சப்தமும் கேட்டன.
“என்ன செஞ்சு வச்சிருக்கே… அப்ப… காலைல சோத்தையா திங்கிறது?”
“எனக்கு என்னடா தெரியும், யாரு வருவாங்கன்னு?”
“முட்டை வாங்கிப் பொரி அப்ப.”
“அய்யா இல்லேல…’
“கடைல சொல்லி வாங்கிட்டு வரச் சொல்லு… பிறகு காசு குடுக்கலாம்.”
அவன் சப்தம் ஓய்ந்துபோனது. மேலேறி வந்தான்.உடம் பெல்லாம் வியர்த்து வழிந்தது அவனுக்கு. துண்டைக் கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்தான். சுருண்டு கிடந்த சட்டையை உதறிப் போட்டுக்கொண்டு சொன்னான்.
“கைலி மாத்திக்க. அப்பிடியே போயிட்டு வருவோம்.’ கைலியை மாற்றிய பின்பு, இருவரும் கீழே இறங்கி வரும்போது, ஒரு வயதான பெண் சின்னப் பெண்ணுக்கு படியில் உட்கார்ந்து தலை சீவிவிட்டுக் கொண்டிருந்தாள். ஓரமாக சைக்கிள் நிறுத்தி யிருந்தார்கள். சைக்கிள் மேல் பாவாடை காய்ந்து கொண்டி ருந்தது. அவன் செருப்பைத் தேடி எடுத்தபோது அந்தப் பெண் ஒதுங்கி வழிவிட்டாள்.
தெருவில் நடந்தபோது சில வீடுகளில் பெண்கள் தீப்பெட்டி ஒட்டிக்கொண்டிருந்தார்கள். வீடுகள் பழைய வீடுகளாக இருந்தன. சந்து சந்துகளாகப் பிரிந்தது தெரு. ஒரு சந்தின் ஊடே போனபோது காலை நீட்டி உட்கார்ந்து பெட்டி ஒட்டிக் கொண்டிருந்த பெண் சேலையை இழுத்து விட்டுக்கொண்டாள். கருங்கற்கள் பதிந்துபோன சந்து. வீடு போல இருந்த பெட்டிக் கடையில் வயதானவர் இருந்தார்.
உள்ளே காலி சிகரெட் பாக்கெட்கள் கடை கொள்ளாமல் அடுக்கப்பட்டிருந்தன. பாண்டி மார்க் கலர் பாட்டில்கள் வெயில் பட்டுக் காய்ந்துகொண்டிருந்தன. மிட்டாய்ப் பொட்டலங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. கம்பி வளையம் நிறைய முறுக்கு கள். அவன் என்னைப் பார்த்துக் கேட்டான்.
“சிசர்ஸ்தான் இருக்கும்.”
“ரெண்டு வாங்கு.”
ரெண்டு சிகரெட், பீடி வாங்கிக்கொண்டு, ஒரு சைடும் நாலைந்து தீக்குச்சிகளும் பொறுக்கி சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். ஊரில் நிறைய வேம்பு படர்ந்து போயிருந்தது. வேம்பு பூக்கும் காலமிது. வீடு முற்றமெல்லாம் உதிர்ந்து போயிருந்தன பூக்கள்.
ஊர் தாண்டிய பின்பு அவன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். எங்கும் கரிசல்வெளி பரந்திருந்தது. வேலிப் புதர்களுக்குள் பூனைகள் அலைந்தபடி இருந்தன. கடக்கக் கடக்க வெயில் ஏறியபடியிருந்தது. கருவேல மரங்கள் தெரிந்தன. மொட்டை, மொட்டையாகக் கிணறுகள். பழைய கோவில் சரிந்துபோயிருந்தது.
எல்லாப் பக்கங்களிலும் ஆள் அரவமற்றுப் போய் ஒரு நிசப்தம் கவிழ்ந்து கொண்டது போல ஆனது. நான் அவனிடம் கேட்டேன்.
“அந்தப் பக்கமெல்லாம் வந்தா என்னடா?”
“வரணும்… இன்னும் காலேஜில இருந்து சர்டிபிகேட் கூட வாங்கல…”
“வந்து வாங்க வேண்டியதுதானே…”
“எங்கயும் போகப் பிடிக்கலை… என்ன செய்றே நீ?”
“டூடோரியல்ல இருக்கேன்.”
“கலா ரெண்டு லெட்டர் போட்டிருந்தா… பதில் போடல… ஒரு வருஷமிருக்கும். ”
அருகருகே பேசிக்கொள்வது கூட ஏதோ பாதாளத்துக்குள் பேசுவது போலக் கேட்டது. வறண்டுபோன காடுகளில் எந்த உயிர்ப்பும் இல்லை. பறவைகள் இல்லாத வெளி… வெயில் காய்ந்தது. கண்மாய்க் கரைக்கு வந்து நின்றபோது ஊர் தூரத்தில் வெயில் எல்லா பக்கங்களிலும் அலைவதை நன்றாகப் பார்க்க முடிந்தது. கம்மாயில் தண்ணீரில்லை. உள்ளே இறங்கி அவன் போய்க்கொண்டிருந்தான். நான் கரையிலே இருந்தேன்.
கண்மாயின் ஓரத்தில் பெரிய கிணறு தெரிந்தது.
எல்லாமும் முங்கிப் போய்விட்டது போலத் தோன்றியது. காற்றின் சப்தம் மிகத் துல்லியமாகக் கேட்டது. அவன் திரும்பி வந்தபோது வெயில் ஏறிக்கொண்டிருந்தது. தூரத்தில் எருமை களை ஓட்டியபடி யாரோ போய்க்கொண்டிருந்தார்கள். மேக்கரை வரியாக நடந்து இறங்கியவுடன் தென்னந்தோப்பு தெரிந்தது.
பெரிய தோப்பு. தென்னை நிறைந்து போயிருந்தது. வெயில் படாத இடம். அற்ப ஜீவராசிகள் மரத்தோடு ஒண்டிக்கொண்டி ருந்தன. பம்ப் செட் பூட்டியிருந்தது. பாசி படர்ந்த தொட்டியில் தண்ணீர் இருந்தது. அவன் பம்ப் செட் முன்னாலிருந்த சிமெண்ட் தளத்தில் படுத்துக்கொண்டான். நான் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டேன்.
அவன் பீடியைப் பற்ற வைத்தவாறே பேசினான்.
“இங்க இருக்கவே முடியாம போயிருச்சுடா… தாங்க முடியாம இருக்கு…”
”என்ன சொல்றாங்க…”
“தெரியலே… எல்லாப் பக்கமும் அரூபமான ஆட்கள் கழுத்தை அறுப்பது போல இருக்கு… யாரோடையும் சுமுகமாகப் பேச முடியலே.”
“ம்.”
“ரெண்டு வருஷமா… தினம் இன்னைக்கு எவனோட சண்டை போடப் போறேன்னு நெனைச்சுகிட்டு இருக்க வேண்டியிருக்கு.”
பீடியை அணைத்துவிட்டுச் சொன்னான்.
”படிச்சது ரொம்ப தப்பாப் போச்சுடா. பேசாம படிக்காம மில்லுக்குப் போயிருக்கலாம்.”
கண்ணை மூடிக்கொண்டான். தென்னை மரத்துக்குப் பக்கத்தி லிருந்த வளையிலிருந்து ஒரு எலி வெளியே வருவதும், தண்ணீரை நோக்கி ஓடி, பின் திரும்புவதுமாயிருந்தது.அவன் பேசினான் தொடர்ந்து.
“அய்யாவோட சண்டை… ஒரு தடவை அடிச்சு வேற போட் டேன். தெரிஞ்ச ஆட்கள் முகத்தைப் பார்க்கவே முடியலே… பிரேதத்தை பார்க்கிறதப் போலவே பாக்கிறாங்களோன்னு தோணுது.”
“அப்ப வீட்ல என்ன செய்றே…”
“தோட்டத்துக்குப் போவேன்… இல்லேன்னா வீட்ல இருப்பேன்.எப்பவாது இங்க வருவேன்.”
“பயங்கர நிசப்தமால்ல இருக்கு. ”
“இப்படிப் படுத்துக் கிடந்தா… மெல்ல சப்தம் விநோதமான இடத்துக்கு போயிரும்… கடல் சப்தம் கேட்க ஆரம்பிச்சிரும்… வெயில் இறங்கி வரும் பேரிரைச்சல், மண் முக்கி முனங்குவது கூடக் கேட்கும்.”
அவன் முகத்தைப் பார்த்தபடியே இருந்தேன். காட்டுவாக்கில் அலைந்த நாய் ஒன்று லொங்கியபடியே நிழலில் ஒதுங்கிக் கொண்டது. அதன் மூச்சிரைப்பு தாங்க முடியாமலிருந்தது.
“இங்க படுத்துக் கிடக்கும்போது வெயில் பட்டு ஊரே தலைகீழா போற மாதிரி இருக்கும். சுபாவம் பிடிபடாத ஆட்கள் திரிவார்கள்.”
பசியெடுக்க ஆரம்பித்தது. அவன் மிச்சமிருந்த பீடியைப் பற்ற வைத்துக்கொண்டான்.
“எப்பவாவது புத்தகத்தை எடுத்துக்கிட்டு இங்க படிக்க வந்தா தெரியும். நிசப்தம் தன் ஊற்றைத் திறந்து காட்ற மாதிரி இருக்கும். சில தடவை ராத்திரி கூட இங்கேயே படுத்துக் கிடந்திருக்கேன். தாங்க முடியாத உணர்ச்சிகள். வானம் விலகுவதும், பிரிவதுமாக… எழுந்து ராத்திரில கத்தியபடியே காட்டு வெளியே ஓடினேன்.
தனியாக இருக்கும் மதியங்களில் ஆடு மேய்க்கும் பொம்பளைய ஏதாவது செய்திருவேனோன்னு தோணும்… அந்த பொம்பளை கிட்ட வந்து பளீர்னு சிரிக்கும்போதும்… கறுத்த உடம்போடு எதிர் நிக்கும்போதும் தாங்க முடியலே…”
யாரோ வருவது போலத் தெரிந்தது சைக்கிளில். வரும் நபர் அவர்களை நோக்கித்தான் வருவது போலப் பட்டது. வந்த நபர் அவனிடம் சொன்னான்.
“அய்யா வந்துட்டாரு… சாப்பிட வரச் சொன்னாரு.”
”போ… வாரேன்”
இருவரும் எழுந்து திரும்பிப் பனை தாண்டியபோது எதிர்ப்பட்ட காட்டைக் காட்டிச் சொன்னான்.
“இந்தக் காட்டில எங்க தாத்தாவைப் புதைச்சிருக்கோம்… கறுப்பு மண் பிளவுண்டு அவர் உடம்பாக ஆகிப் போனதாயிருக்கும்… சோளம் போட்டா கதிர் அசைவு மூச்சு சப்தம் போலக் கேட்கும்.” வெயில் ஏறியிருந்தது. நடக்க நடக்க தூரத்தில் கடல் சப்தம் போலக் கேட்க ஆரம்பித்தது. காற்று சுழலும் சப்தம். நிச்சயமாக அது கடல் சப்தம் போலவே இருந்தது. வீடு வந்து சேரும்வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை இருவரும்.
வீட்டின் உள்ளே பருத்திச் சாக்குகள் அடங்கிக் கிடந்தன. புழுக்கமாக இருந்தது. சமையற்கட்டு உள் ஒடுங்கிப் போயிருந்தது. உயரமான திண்டில் தண்ணீர்ப் பானைகள் இருந்தன. தட்டு நிறைய சோறு போட்டுக் குழம்பு ஊத்தினார்கள். முட்டையை மஞ்சள் போட்டுப் பொரித்திருந்தார்கள். எதிரே உட்கார்ந்துகொண்டு அவன் அம்மா கேட்டாள்.
“எங்க வேல பாக்குறீங்க தம்பி”
“டுடோரியல் காலேஜ்…”
“இவன்தான் இங்கய கிடக்கான்… யாரு சொல்றதையும் கேக்க மாட்டேங்கான்… வர வர சகவாசமும் சரியில்லே. நாள் தவறாம சண்டைதான் மிஞ்சுது. அங்க ஏதாவது வேலையிருந்தா சொல்றதுதான…”
“சொல்றேங்க’
“பெத்தவங்க கிட்டயே இப்பிடி சண்டை போடுறான் தம்பி. நினைச்சா உசிரோட இருக்க முடியலே. பொம்பளைப் பிள்ளை களுக்காக இருக்க வேண்டிக் கிடக்கு… அதுக போயி சம்பாரிச்சுட்டு வருதுக. படிக்க வச்ச பின்னாடி நாங்க என்ன செய்றது சொல்லு.”
‘சும்மா புலம்பாதே. பேசாம சாப்பிட விடு” என்றான். அவள் அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.
“நான் உங்கிட்ட எதுவும் பேசலைப்பா…”
“அப்ப சும்மா இருக்க வேண்டியதுதானே…”
உள்ளேயிருந்து வேறு ஒரு பெண் குரல் கேட்டது.
“அய்யோ… சும்மா ஏம்மா அதையே பேசுற. வந்தவங்கள சாப்பிட விடம்மா…”
“நான் எதுவும் பேசலை… உசிரோட இருந்தாதான… பேச… நான் எதுக்கு இருக்க…” உக்கார்ந்த இடத்திலே அழுதாள். அவன் பாதி சாப்பாட்டிலே எழுந்துகொண்டான். அழுதபடியே அந்தப் பெண் உள்ளே போய்விட்டாள். சாப்பிட்டு எழுந்தபோது அவனைக் காணோம். அவனுடைய அய்யா தெரிந்தார். நாற்காலியை இழுத்துப் போட்டு உக்காரச் சொன்னார்.
“யாரும் எதுவும் பேச முடியலை தம்பி. இங்க இருந்தா அதுக்குன்னு சில விஷயங்கள் இருக்கு. அவன் இஷ்டத்துக்கு இருந்தா எப்பிடி. எங்கயாவது போயி தொலைக்கலாம்ல… இங்க இருந்து என்ன செய்யப் போறானாம்…?”
அவன் திரும்பியபோது சிகரெட் வாடையடித்தது. அவன் யாரையும் பார்க்காமல் மேலேறிப் போனான். மேலே போனபோது ஏதோ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்துச் சொன்னான்.
“யாராவது வந்துட்டா இப்பிடி பொலம்ப ஆரம்பிச்சுருறாங்க… இப்ப…”
“அது அவங்க தப்புன்னு சொல்றயா?”
”இல்லை. அதுக்காக என்ன செய்யறது… டவுனுக்கு வந்து மட்டும் என்ன செய்றது?”
”அதுக்காக?”
“வேற தெரியலே…”
சாயங்காலம் வரை அவன் புத்தகம் படித்தபடி இருந்தான். இருட்டியதும் இருவரும் கிளம்பி ரோட்டுக்கு வர நடந்தோம். தூக்குவாளிகள் அலைபட தீப்பெட்டி ஆபீஸ் விட்டுப் பெண்கள் வந்துகொண்டிருந்தார்கள். ஆடுகளின் சப்தம் புதைந்த காற்று. இரவுப் பூச்சிகள் சப்தம். ரோட்டுக்கு வரும்போது நன்றாக இருட்டியிருந்தது. ரோட்டில் இரண்டு பெட்டிக் கடைகள் இருந்தன.
இறக்கத்தில் சாராயக் கடை இருந்தது. இருட்டில் கிடந்த கல்லில் உட்கார்ந்துகொண்டு பேசினான். உருவமற்றுப் போய் அவன் குரல் மட்டும் கேட்டது.
“பயமா இருக்குடா… பிடிச்சமானவங்ககிட்டதான் இப்ப பேச முடியாமப் போகுது. யாரும் தேடி வந்தாக்கூட பேசாம அனுப்பிருவோம்ன்னு தோணுது. வீட்ல அக்கா கூட மட்டும் தான் பேசுறது. அவள முழுசா பாத்துப் பேச முடியாது. வயது இருபத்தெட்டு ஆச்சுடா. எல்லாரையும் விட்டுட்டு எங்கயும் போக முடியாதுன்னே படுது. இப்பிடி சாப்பிட்டுக்கிட்டு பயத்தை மறைக்க சண்டை போட்டுக்கிட்டு இருக்க வேண்டி யிருக்கு. ரெண்டு பக்கமும் போக முடியாம அலைய வேண்டிக் கிடக்கு.”
இருள் பூச்சிகள் விட்டு விட்டுக் கத்தின.
“எவனுக்கும் லெட்டர் போடக் கூட முடியலே… எல்லா லெட்டருக்கும் ஏண்டா பதில் எதிர்பாக்குறீங்க…”
பேசாமலிருந்துவிட்டு பின் திடீரெனக் கேட்டான்.
“நீ எதுக்கு என்னய பாக்க வந்தே…?”
“சும்மாதான்…’
“எனக்கு தெரியும்டா. நீ சொல்ல மாட்டே… உனக்கும் எங்கிட்ட இருக்க அதே பிரச்னைதான். மறைக்க நீ… இப்ப வீட்ல இல்லையா நீ…”
நான் எதுவும் பேசவில்லை.
“ஏண்டா எல்லோரும் இப்படியாயிட்டோம்.இப்ப எங்க இருக்கே?”
பஸ் வரும்வரை எதுவும் பேசவில்லை. பஸ் வந்து திரும்பி நிற்கும்போது அவன் இரண்டு சிகரெட் வாங்கிக் கொடுத்துவிட்டு நின்றுகொண்டான்.
கூட்டமேயில்லாத பஸ். டிக்கெட் கேட்டு வாங்கும்போது மணியைப் பார்த்தேன். ஒன்பதைத் தாண்டியிருந்தது. மதியம் சரியாகச் சாப்பிடாததால் பசியெடுத்தது. போக எப்படியும் மணி பதினொன்றைத் தாண்டிவிடும். வீட்டுக்குத்தான் போக வேண்டுமா எனத் தெரியாமலிருந்தது.
உறங்குவதற்கு இடமற்றுப்போன நகரவெளி. காவலர்கள் சந்தேகங்கள். யோசிக்கவே முடியவில்லை.
எங்காவது படுத்து நன்றாக உறங்க வேண்டும் போல் இருந்தது. வரும்போது நகரம் தாண்டியதும் எதிர்ப்பட்ட அய்யனார் கோவில் ஞாபகத்தில் முட்டியது.
பஸ் காட்டு வெளியில் போனபடியிருந்தது. இரண்டு சிகரெட்டு களும் தீப்பெட்டியுமிருந்தன என்னிடம்.
நகரம் வரும்முன் உள்ள விலக்கில் இறங்கிக்கொண்டேன். பருத்த அய்யனார் சிலை உறைந்துபோயிருந்தது. பொறி பறக்கும் அருவாளோடு உறைந்த சாமி. கல்குதிரைகள்.
உள்ளே போக முடியாமல் நெடி. திண்டு போலக் கிடந்ததில் படுத்துக்கொண்டேன். கையைப் பிடித்தபடி அப்பா ஸ்கூலில் சேர்க்கக் கூட்டிப்போன நாளின் நினைவு வந்தது.
சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன். உறங்குவதற்கு முன்பு ஈரத்துக்கும் வெக்கைக்கும் இடையில் ஓடியபடியிருந்த எலி ஞாபகத்தில் வந்தபடியேயிருந்தது பல முறை.
– ஆகஸ்ட் 1991
– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.