தொட்டில் பழக்கம்
தாத்தாவின் பெட்டியின் முன்னே உட்கார்ந்திருந்த அப்பாவைப் பார்த்து ஆர்வத்தோடு ஓடி வந்து அருகே அமர்ந்து கொண்டான் சதீஷ்.

ஏன் பாதில ஓடி வந்துட்டே? போய் விளையாடு என்றார்.
நா இந்த பாக்ஸைப் பார்க்கணும்…-சொல்லிக்கொண்டே அப்பாவின் பக்கம் நெருங்கி உட்கார்ந்து கொண்டான். அந்தத் தேக்குப் பெட்டியின் நிறமே இவனுக்குப் பிடிக்கும். மேல் மூடியில் நான்கு புறங்களிலும் அழகான டிசைனில் கீல்கள் பொருத்தப்பட்டு, நடுவே ஒரு பூ டிசைனில் தகடு வேயப்பட்டிருக்கும்.
எப்பொழுதாவது அதை விஸ்வநாதன் எடுத்து வைத்துக் கொண்டு அமர்கிறார் என்றால், செலவு கணக்கு எழுதப் போகிறார் என்று அர்த்தம். தன் அப்பாவிடமிருந்து அவர் கற்றுக் கொண்ட பழக்கம் அது. ஒரு ரூபாயானாலும், செலவா அல்லது மிச்சமா என்பதைக் குறித்து விடுவார். இந்தக் காலத்துல இப்டி எழுதி முடியுமா? சியாமளா சிணுங்குவாள். எழுதினால்தான் விஸ்வத்திற்கு மனம் சமாதானம் ஆகும்.
பெட்டியைப் பார்க்கணும் என்று சொன்ன சதீஷூக்கு அப்பா பக்கத்தில் உட்கார்ந்த வழக்கத்தில் கணக்கெழுதுவதையும் படிக்கும் பழக்கம் வந்திருந்தது. விஸ்வம் அவனை ஒன்றும் சொல்வதில்லை. படிக்கட்டும் என்று விட்டு விட்டார். அப்பொழுதுதான் காசைக் கருத்தாகச் செலவு செய்யணும் என்கிற அக்கறையும், சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் படியும் என்று நினைத்தார். எதுக்குப்பா இப்டி எழுதறே? என்றான் சதீஷ்.
அப்பத்தான் என்னென்ன செலவு செய்தோம்ங்கிறது தெரியும். நியாயமான செலவுகள்தானாங்கிறதைப் புரிஞ்சிக்க முடியும். வீட்டுக்கு அரிசி, பருப்பு, சாமான்கள் வாங்கிறோமில்ல..அதெல்லாம் விலை குறைஞ்சிருக்கா, ஏறியிருக்காங்கிறதைச் தெரிஞ்சிக்க முடியும்…அதுக்கேத்த மாதிரி சிலதைக் கூட்டிக்கலாம், குறைச்சுக்கலாம். வேண்டாம்னா நிறுத்திக்கலாம். ஓரளவுக்காவது சேவிங்ஸ் இருக்கணுங்கிறதை நிர்ணயம் பண்ணிக்கலாம். உன் படிப்புக்கோ, அம்மாவுக்கோ, வீட்டுக்கோ, தேவையானதைச் செய்யலாம். அவசர காலங்கள்ல உதவும். முக்கியமா, கடன் வாங்காம இருக்கலாம். சொல்லி விட்டுப் பெரிதாகச் சிரித்தார்.
சேவிங்க்ஸ் எங்கப்பா செய்யணும்? வீட்டுலயே அம்மாட்டக் கொடுத்து வைக்கணுமா?- மூன்றாம் வகுப்புப் படிக்கும் சிறுவன்தானே, கேட்டதில் என்ன தப்பு? வங்கி சேமிப்பு பற்றி சுருக்கமாய்ச் சொன்னார் விஸ்வம். சேமிப்பின் அவசியத்தை சொல்லிக் கொடுத்தார். வைத்த கண் வாங்காமல் கேட்டுக் கொண்டான் சுதிர். ஆனாலும் அப்பா எப்பொழுது அந்தப் பெட்டியைத் திறப்பார் என்பதிலேயே அவன் கவனம் இருந்தது.
அந்தப் பெட்டியின் மேலே நோட்டை வைத்துக் கணக்கு எழுதுவார். அதுதான் அவருக்கு வசதி. நிறுத்தி அழகாக அச்சுக்குண்டாக அப்பா எழுதியிருப்பது சதீஷூக்குப் பிடிக்கும். சமயங்களில் அதைத் திறந்தும் பார்த்துக் கொண்டிருப்பார். அன்று எப்படியும் அப்பா அதைத் திறப்பார் என்று காத்திருந்தான் சதீஷ். பாட்டி இருந்தபோது அவனைப் பார்க்க விட்டதில்லை. எதையாவது எடுத்து விளையாட்டுப் போக்காய் எங்கேயாவது தொலைத்து விடுவான் என்று திட்டி விரட்டி விடுவாள். இப்பொழுதுதான் பாட்டி இல்லையே…!
அதற்குப்பின் ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறான். எதையும் தொட்டதில்லை. அப்பாவும் விட்டதில்லை. இன்று உள்ளே இருப்பவைகளைக் கையில் எடுத்துப் பார்த்து விடுவது என்று மனதில் உறுதி செய்து கொண்டான். அவ்வளவு ஆசை அவனைப் பிடுங்கித் தின்றது. அதிலும் குறிப்பாகப் பெட்டியினுள் இருக்கும் அந்த யானைப் பல்தான் அவனை அதிசயிக்க வைத்தது. அது எப்படி இங்கே வந்தது. ஒன்று அதை விலைக்கு வாங்கியிருக்க வேண்டும். இல்லையெனில் யாராவது கொடுத்திருக்க வேண்டும். அப்படியானால் ஒரு யானை செத்துப் போயிருந்தால்தானே அந்தப் பல் கிடைத்திருக்கும்? தானாகவே இறந்ததா? அல்லது கொன்றார்களா? எந்த ஊரில், எந்தக் காட்டில் இறந்ததாக இருக்கும்? இந்தக் கதையெல்லாம் பாட்டிக்குத் தெரிந்திருக்குமா? எப்படி இந்த வீட்டுக்கு வந்தது? யார் கொடுத்திருப்பார்கள்?
விஸ்வம் கணக்கெழுதி முடித்து பெட்டியை எடுத்து வைக்கப் போனார். அப்பா…அப்பா….அப்பா….ப்ளீஸ்…ப்ளீஸ்….நா பார்க்கணும்ப்பா…..அவர் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு விட்டான் சதீஷ். குழந்தையின் பிடிவாதம் என்று நினைத்து பெரிதாகச் சிரித்தார் விஸ்வம். அப்பாவைத் தொந்தரவு பண்ணக் கூடாது…விடு….என்றவாறே வந்து, தான் எடுத்து வைக்கப் போனாள் சியாமளா. இதுதான் சமயமென்று பெட்டியின் மேல் தலை குப்புறப் படுத்துக் கொண்டான் சதீஷ். இன்று பார்த்தே தீருவது என்று, நா ஒண்ணும் செய்ய மாட்டேன். எல்லாத்தையும் பார்த்திட்டு அப்டி அப்டியே வச்சிடுறேன்…..
தரையிலிருந்து உயரமாய் பெட்டியின் மேல் நீளக்கப் படுத்துக் கொண்டு அவன் கையையும், காலையும் நீச்சல் அடிப்பதுபோல் பண்ணியது இருவரையும் பலமாய்ச் சிரிக்க வைத்தது.
சரி, சரி, விடு….பார்த்திட்டுப் போறான் என்றவாறே திறந்தார் விஸ்வம். உள்ளேயிருந்து முதலில் அந்த யானைப் பல்லைத்தான் எடுத்தான் சதீஷ். பெரிய மஞ்சள் கல் போலிருந்தது. இவன் கைக்குள் அது அடங்கவில்லை.
இதப் போல ரெண்டு பங்கு பெரிசா இருந்ததாக்கும். உரைச்சு உரைச்சு சின்னதாப் போச்சு….உரைச்சுன்னா…? என்றான் இவன்.
யாருக்காச்சும் கடுமையான தலைவலி இருந்ததுன்னா, உங்க பாட்டி இந்தப் பல்லைத் தரையிலே கொஞ்சம் தண்ணியைத் தெளிச்சு தேய்ச்சுத் தேய்ச்சு வர்ற களிம்பை வழிச்சு நெற்றியிலே பற்றுப் போடுவாங்க…அதுதான் மருந்து அதுக்கு….இப்ப மாதிரி மாத்திரையெல்லாம் சாப்பிடுறதில்லை. உங்க பாட்டிக்கு அடிக்கடி தலைவலி போடு போடுன்னு போடும். அதுவும் ஒற்றைத் தலைவலி. ஒரு பக்கமா இடி இடின்னு இடிக்கும். நாங்கள்லாம் பிடிச்சுப் பிடிச்சு விடுவோம். இதமா இருக்குமே தவிர, போகாது. இதுதான் மாமருந்து. சதீஷூக்குப் பாட்டியின் மேல் பரிதாபம் ஏற்பட்டது. பாட்டி அதை வெளியே எடுத்துக் கொண்டு போவதையும் அவன் பார்த்திருக்கிறான். தெருவில் பல வீடுகளில் இந்தத் தலைவலி உபத்திரவம் இருப்பவர்களுக்குப் பற்றுப் போடுவாள் பாட்டி என்று அப்பா சொல்லியிருப்பது நினைவுக்கு வந்தது. அப்படித்தான் சின்னதாய்விட்டது போலிருக்கிறது.
கையில வைத்து ஆசையாய் உருட்டிக் கொண்டேயிருந்தான். இந்தப் பல்லுனால என்னவெல்லாம் சாப்டிருக்கும் அந்த யானை என்ற நினைப்பு வந்தது. நம்மள மாதிரி தெனமும் பல்லு தேய்க்குமா? அதால முடியாதே…அப்ப என்ன செய்யும்? வாயெல்லாம் நாறிட்டு இருக்குமா? என்று நினைத்தபோது சிரிப்பு வந்தது. முகர்ந்து பார்த்தான். எந்த மணமும் இல்லை. கீழே போட்டால் உடையுமா?
சரி, பார்த்தாச்சுல்ல…வச்சுடு…என்றார் அப்பா. பெட்டியில் வைக்காமல் மடியில் வைத்துக் கொண்டான் சதீஷ். இன்னும் என்னென்ன இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தான். மைக்கூடு ஒன்று இருந்தது. அதைத் தொட்டுத் தொட்டு எழுத ஒரு நீண்ட ஒல்லியான பேனா இருந்தது. அதன் நிப் அழகாகக் கூர்மையாக நீட்டிக் கொண்டிருந்தது.
அப்பாப்பா…இதப் பொட்டி மேல வச்சிக் காட்டுப்பா என்றான். பார்த்தியா ஆரம்பிச்சிட்டேல்ல….எனக்கு நிறைய வேலை இருக்கு…என்றார் விஸ்வம். சொல்லிக் கொண்டே பெட்டியை மூடி அதில் வலது மூலையில் சதுரமாய் இருந்த அளவான பள்ளத்தில் அந்த மைக்கூடு பாட்டிலைப் பொருத்தினார். சக்கென்று கச்சிதமாய் உட்கார்ந்து கொண்டது. அருகே நீளத்திற்கு இருந்த அளவான குழியில் எழுதும் பேனாவைப் படுக்க வைத்தார். இடது பக்கம் ஒரு சதுரம் இருந்தது. அது எதுக்கு என்றான் சதீஷ்.
அந்தக் காலத்துல சிவப்பு மை, நீல மைன்னு ரெண்டு வச்சிட்டு, ரெண்டு பேனாவால தொட்டுத் தொட்டு பேரேடுக் கணக்கு எழுதுவாங்க….வியாபாரக் கடைலதான் இந்த மாதிரிப் பெட்டிகளே இருக்கும்….பெட்டிக்குள்ளே எத்தனை அடுக்கு இருக்கு பார்த்தியா? தனித் தனி அறைகள். எல்லாத்துக்கும் உள்ளே கண்ணுக்குத் தெரியாமப் பணம் வச்சிருப்பாங்க… என்று விட்டுக் கையில் வைத்திருந்த சாவியால் பூட்டிக் காண்பித்தார் விஸ்வம். பெட்டியின் அளவுக்குப் பெரிதாகத் தெரிந்தது சாவி.
திரும்பவும் திறந்தார்.
ஆசை ஆசையாய் இன்னும் என்னென்னதான் இருக்கிறது என்று துளாவ ஆரம்பித்தான் சதீஷ். சுதந்திரமாய் விட்டு விட்டார் விஸ்வம். ஒன்று மட்டும் கவனமாய்ச் சொன்னார். எதையெதை எங்கெங்கேயிருந்து எடுத்தியோ. அங்கங்க கரெக்டா வச்சிடணும். என்றார்.
நல்லாயிருக்கு நீங்க பண்றது…. கைல கிய்ல குத்திக்கிட்டுக் காயமாக்கிக்கப் போறான்….என்றாள் சியாமளா.
சதீஷ் ஒன்றொன்றாய் மெதுவாய் எடுக்க ஆரம்பித்தான். நிறையச் சோழிகள் இருந்தன. பகடைக்காய் இருந்தது. அதை எடுத்து உருட்டினான். கணீர் சத்தம் இவனை ஈர்த்தது. திரும்பத் திரும்ப உருட்டிப் பார்த்தான். மடித்து வைக்கப்பட்ட பரமபத சோபானப் படம் இருந்தது. பார்த்ததும் முதலில் பயமாய் இருந்தது. நீள நீளப் பாம்புகள்…! ஏன் இப்படி? இடையிடையில் சிறிதும் பெரிதுமாய் ஏணிகள். இதுவரை இந்தப் படம் வெளியே வந்ததேயில்லை. பாட்டி இருக்கும்போது கூட. என்னப்பா இது? என்றான் அதைத் தரையில் விரித்தவாறே….
நீ வச்சிக்கோ….அந்தப் பகடையையும் எடுத்துக்கோ…அப்புறம் சொல்லித் தரேன்…என்றார் விஸ்வம். இருந்தமேனிக்கே மடித்து வைத்துக் கொண்டான் சதீஷ்.
கிரிக்கெட் ஆடுற பையனுக்கு பரமபதமா? நல்லாருக்கு…என்றாள் சியாமளா.
. இப்படியெல்லாமா விளையாட்டு இருக்கும்? என்றிருந்தது இவனுக்கு.
இன்னும் என்னென்ன பொருட்கள் என்று நோண்டினான். காசிக் கயிறு வந்தது. இரண்டு மூன்று கடுக்காய்கள் கிடந்தன. வாயில் வைத்துக் கடிக்கப் போனான். துப்பு, துப்பு…கசக்குமாக்கும்…தடுத்தார் விஸ்வம். நிறைய குட்டிப் பென்சில்கள். ரப்பர் இருந்தது. பழைய பேனாக்கள், அரக்கு, சீல், மெழுகுவர்த்தி, ரப்பர் ஸ்டாம்ப், சந்தனம், குங்குமம், சீப்பு, பழைய நாணயங்கள், கோயிலுக்கு முடி போட்ட காசுகள்….என்று பெட்டியே மணத்தது. இதெல்லாம் என்னப்பா? என்றான்.
உங்க தாத்தா வருஷா வருஷம் குல தெய்வம் கோயிலுக்குப் போயி நமக்காகக் கும்பிட்டுட்டு வருவார். போயிட்டு வந்து மீதிப் பிரசாதங்களை போட்டு வைப்பார். ….இந்த ஏடு பார்த்தியா? எடுத்துக் கொடுத்தார் விஸ்வம். அவருக்கே உற்சாகம் வந்திருந்தது.
சுற்றியிருந்த கறுப்புக் கயிற்றைப் பிரிக்க ஆரம்பித்தான் சதீஷ். மெதுவா…மெதுவா…ஏடு கலைஞ்சிடக் கூடாது. அழுத்திப் பிடிச்சேன்னு வச்சிக்கோ உடைஞ்சு போயிடும். ரொம்பப் பழசில்லையா…என்றவாறே வாங்கி மெதுவாய்ப் பிரித்தார். இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையால் அப்பா அதைப் பிரிப்பதைப் பார்த்த போது பள்ளியில் இருக்கும் திருவள்ளுவர் படம் ஞாபகம் வர சதீஷூக்கு ஒரே சந்தோஷம். எதிர்வரும் பள்ளி ஆண்டு விழாவில் மாறுவேடப் போட்டி நடக்கவிருந்தது. அதில் நண்பன் கதிர் திருவள்ளுவர் வேடமிடுவதாய் முடிவாகியிருந்தது. அதற்கு இந்த ஏடைக் கையில் கொடுத்தால் மிகப் பொருத்தமாய் இருக்குமே என்று தோன்றியது. அவனுக்கு உதவி செய்தது போலாகுமே என்று. சமயம் பார்த்து அப்பாவிடம் இதைக் கேட்டுப் பெற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். இதோ பார்த்தியா, இதான் எழுத்தாணின்னு சொல்றது. இத வச்சித்தான் இந்த ஓலைல எழுதுவாங்க… – சதீஷ் அதை வாங்கினான். அவன் சின்னஞ்சிறு கையில் பிடிக்கவே பொருந்தவில்லை அது.கனமாயிருந்தது. இப்போ எழுதாதே…ஓலை உடைஞ்சு போயிடும். எல்லாம் இத்துப் போச்சில்ல…? என்றவாறே எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தார்.
இதுல நம்ம குலதெய்வ வழிபாட்டுப் பதிகம் எழுதியிருக்கு. தாத்தா இதைக் கைல வச்சிண்டு சந்நிதில ராகமாப் பாடுவார். ஒரு மணி நேரம் ஆகும் இது முடியறதுக்கு. சொக்கிப் போய் நிற்பாங்க எல்லாரும். கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணுவாங்க…தொட்டுக் கும்பிட்டுக்கோ என்றார் விஸ்வம். கண்களில் ஒத்திக் கொண்டபோது இத்தனை மதிப்புள்ள இது மாறுவேடப் போட்டிக்குக் கிடைக்குமா என்ற சந்தேகம் வந்தது. தாத்தாவின் மூக்குக் கண்ணாடிக் கூடைப் பிரித்துப் பார்த்தான். …அது சோடாபாட்டில் கண்ணாடி. கண் கலங்கிப் போயிடும் என்றார் விஸ்வம்.
இந்தக் கண்ணாடியைப் போட்டுண்டுதான் சதா எதாச்சும் படிச்சிண்டே இருப்பார் தாத்தா. இந்த லென்சைப் பாரு….என்று அந்த ஏட்டில் உள்ள எழுத்துக்களின் மேல் வைத்துக் காண்பித்தார். எல்லாம் பெரிதாகத் தெரிந்தன. அய்ய்ய்…என்னப்பா இது? என்று பிடுங்கினான் சதீஷ். கண்ணுக்கு முன்னாடி வைத்து அப்பா முகத்தைப் பார்த்தான். ஒரு
கணம் பயந்து விட்டான். மனசு கலங்கிப் போனது. அப்பா மூஞ்சியே பூதமாய்ப் பெரிதாகித் தன்னை முட்ட வருவதுபோலிருந்தது. பயத்தில் பட்டென்று எடுத்து விட்டு அப்பா முகத்தைத் திரும்பப் பார்த்தான்.
இத வச்சிண்டுதான் புத்தகமாப் படிச்சுத் தள்ளுவார் உங்க தாத்தா. படிக்கிறதுல அவ்வளவு இஷ்டம். மாடில லைப்ரரி இருக்குல்ல…அது பூராவும் அவர் படிச்ச புத்தகங்கள்தான். உனக்குத்தான் தெரியுமே… நீயும் அவரமாதிரி நிறையப் படிக்கணும்…சரியா? பிரமிப்பில் இருந்து மீளாத சதீஷ் அநிச்சையாய்த் தலையாட்டினான். எல்லாம் பார்த்தாயிற்று. இன்னும் ஒன்றுதான் பாக்கி. அது பெட்டிக்கடியில் கையை உள்ளேவிட்டு எடுக்க வேண்டும். மேல் அறைகள் மறைத்திருந்தன. அப்பாவாய் அதை எடுப்பார் என்று காத்திருந்தான். ஒரு வேளை மறந்துவிட்டாரோ?
அப்பா எனக்கு அது வேணும்….என்றான் சதீஷ். எது? என்றார் விஸ்வம். அதாம்ப்பா…அந்தோ நீட்டிட்டிருக்கே… என்றவாறே விரலால் சுட்டினான். ஓ…! அதுவா….அது வேண்டாமே…ரொம்பப் பழசாச்சே….தாத்தா கடைசி வரைக்கும் வச்சிருந்த பொக்கிஷம். அது இதுலயே இருக்கட்டுமே…? என்றார். இல்ல வேணும்….தாத்தாதான் இல்லையே…எனக்குக் கொடேன்….சொல்லிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அதை விருட்டென்று எடுத்துக் கொண்டு ஓடினான் சதீஷ். டே…டேய்… வெளில கொண்டு போகாதே……. கத்தினார் விஸ்வம். திண்ணையில் சென்று உட்கார்ந்து கொண்டான் சதீஷ். அது என்னவோ மாய விளக்குப் போலிருந்தது இவனுக்கு. பள்ளியில் டீச்சர் சொன்ன கதை போல ஒரு வேளை தேய்த்தால் பூதம் வந்து விடுமோ? எதற்காக அதை இப்படி அன்னப்பறவை போல டிசைன் செய்திருக்கிறார்கள்? பள்ளியில் இதே மாதிரி விளக்குப் பார்த்திருக்கிறான் அவன். நடு வயிற்றுப் பகுதி பெருத்திருந்தது. ஒரு அங்குலத்திற்குத் துளை. லேசாகக் குலுக்கினான். சத்தமேயில்லை. ஒருதுணியை எடுத்து நன்றாகத் துடைத்தான். சுத்தமானது. அம்மாட்டக் கொடுத்து நல்லாத் தண்ணி விட்டுத் தேய்ச்சுக் கழுவினா என்ன? என்று நினைத்தான். பார்த்தால் என்ன சொல்வாளோ? பிடுங்கிவைத்துவிட்டால்?
அன்றிரவு படுக்கையில் விழுந்தபோது அதைக் கூடவே வைத்துக் கொண்டான் சதீஷ். . அப்பா வந்தார். எங்கே அந்த உண்டியலைக் காட்டு என்றார். சந்தேகத்துடனேயே நீட்டினான். திறந்து உள்ளே நன்றாகத் துடைத்தார். நல்ல மணம் வந்தது. இந்தா, அம்பது ரூபா….என்னோட முதல் பங்கு…உண்டியலில் பணத்தைப் போட்டார். .அப்பப்போ நீயும் போடுவியா? என்றார். பள்ளியில் சாக்லேட், கேக், முறுக்கு என்று இடைவேளையில் வாங்கித் தின்னும் பண்டங்களை இனிக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் சதீஷ். நண்பன் கதிர், அதல்லாம் சாப்பிடாதடா…வயித்துக்குக் கெடுதல்….என்று ஒரு நாள் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.. உண்டியல் கிடைத்த மகிழ்ச்சியில் அப்படியே உறங்கிப் போனான். அன்றிரவு அவனுக்கு ஒரு கனவு வந்தது. உண்டியல் நிறைந்து போய், அத்தனை பணத்தையும் எடுத்து அப்பாவிடம் கொடுக்கிறான். அந்தக் காசில் அவர்கள் மூவரும் திருப்பதி செல்கிறார்கள். கோயிலில் இருந்த ஆளுயர உண்டியலைப் பார்த்துப் பிரமிக்கிறான். அப்பா இவனைத் தூக்கிக் கொள்ள, அந்த உண்டியலில் பணம் போடுகிறான் சதீஷ். பொழுது விடிந்தவுடன், விருட்டென்று துள்ளி எழுந்த சதீஷூக்கு இரவு கண்ட கனவு ஞாபகம் வந்தது. அருகில் அந்த உண்டியல் இருக்கிறதா என்று பார்த்தான். முதல் வேலையாக அதைக் கையில் எடுத்துக் கொண்டு நேரே அம்மாவிடம் ஓடினான்.
அம்மா, நீ காசு போடு…என்றான். ராத்திரியே அவன் உறங்கும்போது அவனைக் கொஞ்சி முத்தமிட்டுவிட்டு உண்டியலில் பணம் போட்டிருந்தாள் அவள். அப்பொழுது அவன் கேட்டானே என்று ஒரு பத்து ரூபாயை அதில் திணித்தாள்.
என்னம்மா, பத்து தானா? அப்பா அம்பது போட்டாரு…என்றான் சதீஷ். நானும் ராத்திரியே போட்டுட்டேனே….திறந்து பாரு என்றாள் சியாமளா. அப்டியா? என்றவாறே சந்தோஷத்தில் குதித்துக் கொண்டு ஓடி அதைச் சாமி படத்தின் முன்னால் வைத்தான் சதீஷ். வெளில வைக்கக் கூடாது. இந்தக் கப்போர்டுல வை. வேணுங்கிறபோது எடுத்துப் போட்டுக்கிடுவோம்…சரியா…என்றாள் சியாமளா. அம்மா அப்படிச் சொன்னபோது கடந்த மாதம் பள்ளி நுழைவாயிலின் இடது புறம் இருக்கும் பிள்ளையார் கோயில் தகர உண்டியல் பணத்தோடுதிருடு போனது இவனுக்கு நினைவுக்கு வர, உண்டியலைப் பீரோல வச்சிடும்மா…என்ற சதீஷை அதிசயமாய்ப் பார்த்தாள் சியாமளா.