தூக்கம் – ஒரு பக்கக் கதை





‘கேர் ஆஃப்’ நடைமேடை அவன். உழைப்பாளி. எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். கடுமையாக, உண்மையாக உழைப்பான்.

துண்டால் பிளாட்பாரத்தில் தட்டிவிட்டுப் படுப்பான். அடித்துப்போட்டாற்போல் தூங்குவான்.
ஒரு தொழிலதிபர் அவனைப் பார்த்தார்.
“நீங்க… இன்னார் மகன்தானே…?” அறிமுகம் செய்துகொண்டார்.
“என் இன்றைய நிலைக்குக் காரணம் உங்க அப்பாதான். என்னுடன் வா…” என்று அழைத்துச் சென்றார்.
தொழிலதிபரின் பங்களா, பஞ்சு மெத்தையில் படுத்தான், தூக்கம் வரவில்லை… எழுந்து உலாத்தினான்.
ஒரு அறையில் அந்தத் தொழிலதிபர் தூங்கம் வராமல் ஆந்தை போல முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான்.
என் இன்றைய நிலைக்குக் காரணம் உன் அப்பாதான் என்றாரே, அதனால் அவர் மகனான என்னைப் பழி வாங்குகிறாரோ… எனப்பட்டது உழைப்பாளிக்கு.
சொல்லாமல் கொள்ளாமல் பிளாட்பாரத்துக்கே ஓடினான்.
– கதிர்ஸ் – 1.15 ஜூலை 2022