தீவுக்கு ஒரு பயணம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 1,957 
 
 

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

அடுத்த நாள்

“முதல் நாளைப் போல அதிகம் ஓடாமல் கிட்ட இருக்கிற சிறிய டவுண் பக்கம் போவோம்”என்றாள் பூமலர். அவர்கள் சென்ற இடம் வூத்வில். விவசாயப் பண்ணைகளிற்கு மையமாக இப்படி ஒரு சந்தைகடை ( ஃபாம் மார்க்கட்), மற்றும் வேறு சில கடைகளும் சேர்ந்த தொகுதிகள் அங்காங்கே இருக்கின்றன.”நான் இந்த கடையிலே வந்து நல்ல காய்கறிகளை வாங்கிறேன் “என்றாள் பூமலர். அந்த மார்க்கட் கடையில் வீட்டிற்கு வேண்டிய சகலப் பொருட்களும் நிறைந்த பெரிய கடையாக இருக்கிறது. எல்லாம் மனித தயாரிப்புடைய பழமைச் சாயல். அவற்றை ரசனையோடு பார்த்தார்கள் லொப்ஸ்டர் இடுக்கிகள் தொங்கின்றன. நண்டு போன்ற (ஓடு) கோதுகளை உடைத்து சாப்பிடுவதற்கு உபயோகிக்கப்படுகிறது. இடுக்கிகளையும் வைக்கிறார்கள். இங்கே, உணவகங்களில் லொப்ஸ்டர் பேகர் சன்விச்கள் கூட விற்கப் படுவதாக கேள்வி.

பூமலர் சமைக்கிறதுக்கு வாங்கி விட்டு , ஐஸ்கிரீமையும் வாங்கினார்கள். பக்கத்தில் பூங்கா போல இருந்த இளைப்பாறும் இடத்தில் ஆடு ,மாடு , பறவைகளை கம்பிக் கூண்டில் வைத்திருக்கிறார்கள். அவற்றிற்கு போட உணவையும் மெசினில் டொலரைப் போட்டு எடுத்து சாப்பிட போடலாம். வங்கிகள் , மற்றும் ரொரொன்ரோவில் இருக்கிற மாதிரியான ஒரு கடையையும் கண்ணில் காணவில்லை. எங்கையும் ஓரிரண்டு இருக்கலாம். ஐரோப்பியர்கள் உணவை ரசித்து சாப்பிடுறவர்கள். உணவகங்கள் வழியே இருந்து சாப்பிடுறவர்கள் இல்லை. குறைந்த வாழ்க்கைச் செலவு. சிக்கனம் உள்ளவர்கள். சேவைப்பிரிவினரே கடையே தவம் என அலைபவர்கள். இங்கே ஒரு கிராமியமே முழுதாய் படர்ந்திருந்தது. வியாபாரம் இருந்தால் தானே கடைகள் பூக்கும். தவிர, மக்கள் தொகையும் கூடுதலாக இருக்க வேண்டும். இங்கே இரண்டும் இல்லை.

இன்னொரு நாள்

“வீட்டிற்கு கிட்டவாக சில கிலோ மீற்றர் நடந்து விட்டு வரலாமே” என்று கிளம்பினார்கள்.ரோஜா , அங்கே காட்டிலே தானாக வளர்கிற செடியாக இருக்கிறது. காட்டு ரோஜாவை பூமலர் காட்டினாள். அது பூ பூத்து தக்காளிப்பழம் போன்ற சிவப்புப் பழக்கொத்துடன் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. தில்லை இதுவரையில் இப்படி காய்த்தை, பூத்ததை பார்த்ததேயில்லை. ஜெயந்தி”நான் ஊரிலே பார்த்திருக்கிறேன்” என்றாள். ரொரொன்ரோவிலும் பழங்களுடன் இருக்கிறது தான் அவன் அதை ரோஜாசெடி என நினைத்திருக்கவில்லை, காட்டுச்செடியாக மல்பெரி, புளுபெரி கூட இருந்தன. அதை பறித்து வாயில் லபக் என போட்டுக் கொண்டான். சுவையாகத்தான் இருந்தது. வீதியில் இருந்தால் தூசி படர்ந்திருக்கும். இது பசுமைப் பூங்கா. நடக்கிற ‘ ட்ரெயில்’ பகுதி. அடிக்கடி பெயிற மழையால் கழுவி சுத்தமாகவே இருக்கும். நீர் தேங்கிய குளம் ஒன்றிருந்தது. அதற்கு வருகிற வாய்க்கால் மீது பாலம் அமைத்து ஒரு வளையமாக குளத்தை சுற்றி வரலாம் காலையில் நடை போடுறவர்கள். சிலர் எதிர்பட்டார்கள்.

சிரித்து”ஹலோ! குட்மொனிங்.”என்று விட்டு போனார்கள். பதிலுக்கு சிரித்து கை காட்டினார்கள். வழியில். வீதியை நோக்கி இருந்த பழைய வெயார்கவுஸின் ஒரு சுவரில் பழங்குடிமகனின் படம் வரைந்திருந்தது. சும்மா அதையும் ‘ கிளிக்’. “நான் இங்கே அடிக்கடி நடக்கிறேன்” என்கிறாள் பூமலர். வீட்டிற்கு வர மழை பிடித்துக் கொண்டது. சூடான தேனீருடன் அராலிக்கதை , குடும்பக்கதை என பலதைக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். இடி முழக்கத்துடன் மழையும் கொட்டியது.

கலிபஸ் துறைமுகம்

காலை விடிந்தது. பூமலர் தான் முதலில் எழும்பி விடுகிறவள். பூமலர்,வீட்டினுள் இருந்த சேதனக் குப்பையை போட்ட மூடியுடன் கிடக்கிற பச்சை பிளாஸ்டிக் வாளியை சரித்து இழுத்துக் கொண்டு போய் வீதி ஓரத்தில் வைத்தாள். முன்புறத்தில் புல் வெட்டப்பட்டிருந்தது. ஜேம்ஸ் அவர்கள் வீட்டு புல்லை வெட்டுற போது பூமலர் வீட்டுப் புல்லையும் வெட்டி விடுகிறான். அவற்றை கம்பி விளக்கு மாறால் கூட்டி அள்ளி எடுத்து புறோன் பையில் போட்டுக் கொண்டிருந்தாள். தில்லை, முகம் கழுவி விட்டு கீழே இறங்கி வந்தவன், ஜன்னலூடாகப் பார்த்து விட்டு வெளியில் வந்தான். “இண்டைக்கு பச்சை குப்பை எடுக்கிற நாள் எடுதிட்டு போய் விட்டார்கள். கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து பையில் போடுவேன். இனி அடுத்த கிழமை தான் எடுப்பார்கள்.அவசரப்படத் தேவையில்லை”என்றாள். “பெரிய வேலை தான்”என்றான்.”இங்கே எல்லோரும் தாங்களே புல்லை வெட்டிக் கொள்கிறவர்கள். எனக்கு ஜேம்ஸ் தான் வெட்டி விடுறவன். நான் ரொரொன்ரோவில் இருக்கிற போது தெரேசா வீட்டினர் வீட்டை நன்கு பார்த்துக் கொள்வினம். விமானத்தில் வார போது காரையும் கொண்டு வந்து தரிப்பிடத்தில் விட்டு விட்டு போய் விடுவினம். நான் எடுத்து கொண்டு வருவேன். போற போதும் தரிப்பிடத்தில் விடுவேன். அவர்கள் வந்து எடுத்து வந்து வீட்டிலே விடுவார்கள். ஜேம்ஸ் செய்யிற வேலைக்கு பணமும் கொஞ்சம் கொடுப்பேன். அவனும் சந்தோசப்படுவான்.”என்றாள்.

அந்த குடும்பம், எவ்வளவு உதவியாய் இருக்கிறது. “மீள்சுழற்சி குப்பையை எடுக்கிறதில்லையா?”என்று கேட்டான். இங்கே எல்லா வீடுகளில், அப்பார்ட்மெண்டுகளில் இரண்டு குப்பைகள் தான் இருக்கின்றன.”இல்லை. அது சேர, நாம் தாம் எடுத்துக் கொண்டு போய் அந்த மையத்தில் போட வேண்டும். கொஞ்சம் தூரத்தில் இருக்கிறது. அது சேர கன நாள் எடுக்கும்”. ரொரோன்ரோவில் இரண்டையும் நகரசபையே எடுக்கிறது. “இப்படி குறைத்ததாலே, இங்கே ( சோலை) வரியும் குறைவு “என்று சிரித்தாள். அவனும் உதவ விரும்பினான் “நான் என்ன செய்ய வேண்டும்”என்று கேட்டான்.”விளக்குமாறால் அழுத்திக் கூட்டாமல் மெதுவாகக் கூட்டு. புல்லு சேதம் அடைந்து விடும்”என்று தந்தாள். அவன் கூட்டி உருட்டி விட அவள் எடுத்துக் கொண்டு போய் பையில் போட்டு வந்தாள்.

அரைமணி நேரம் வரையில் செய்திருப்பார்கள்.”இன்றைக்கு இது போதும்”என்றாள்.

வடையும், தென்னம் சீனீ போட்டு தயாரித்த எள்ளுருண்டையையும், தேனீர்க் குடுவையில் தேனீரையும் நிரப்பி எடுத்துக் கொண்டு தயாரானார்கள். அந்த குறுகிய நேரத்திலும் தில்லை பொன்னியின் செல்வனில் ஒரு பக்கத்தை வாசித்து விடுகிறான். வந்திய தேவன் எப்பவும் வாய் சவாடல்காரன். முதலில் இவன் நீரில் குதித்த போது, நீச்சல் தெரிந்ததால் தான் குதிக்கிறான் என பூங்குழலி பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். இவன் நீரைக் குடித்து மேலே வரவே… பாய்ந்து அவன் முகத்திலே ஒரு குத்து போட்டு மயக்கமுற காப்பாற்றுவாள். வந்தியதேவன் மன்னார் செல்லும் கப்பலில் சென்று கொண்டிருக்கிறான். இளவரசன் சென்று கொண்டிருக்கிறான் என்று தவறாக நினைத்து ஏறி விட்டான். ரவிதாசன் தான் அதில் இருக்கிறான். அவன் இவனைக் கண்டு கட்டிப் போட்டு விடுகிறான். கப்பலுக்கும் தீ வைத்து விட்டு படகில் இறங்கி போய் விடுகிறான்.

பூங்குழலியுடன் வரும் இளவரசர், தீப்பற்றி எரியும் கப்பலிலிருந்து காப்பாற்ற கடலில் குதிப்பார். இவருக்கும் நீச்சல் தெரியாது. பூங்குழலி இருவரையும் காப்பாற்றுவாள். இப்படி கதை போகும். வந்தியதேவனை வீராதி வீரன் என்று நினைத்து விடாதீர்கள். கத்திச் சண்டையில் மல்யுத்தத்தில் வீரன் தான், ஆனால், கத்தியால் முதுகில் குத்து வாங்குவான், எக்கச் சக்கமாக எல்லாம் போய் மாட்டிக் கொள்வான். நம்பியோடு நெடுக கொளுவிக் கொண்டே இருப்பான். நம்பி, காப்பாற்றி , காப்பாற்றி விடுவார். இதற்கிடையிலே , வந்திக்கு குழலி மேலே ஒரு கண். அவள் ஒரு விளையாட்டு வீராங்கணை. அவளுக்கு இளவரசர் மேலே கண். நாவலில் வரும் பல பாத்திரங்களுக்கு வந்தி மேல் ஒரு பிடிப்பு. காப்பாற்றி, காப்பாற்றி விடுவார்கள். இப்படிப்பட்ட ஒரு தொடர் தான். இவன் பார்வையிலேயே சோழ இராட்சியத்தையேப் பார்த்து விடுகிறோம்.

வாகனத்தில் ஏறி, மாகாண கைவேக்கு சமாந்தரமாகச் செல்கிற ஒரு லோக்கல் கைவே 14 இலக்க வீதியில் செலுத்தினான். அது போக, வர ஒருலேனிலே ஓடுது. வேக எல்லை 70 ,80 ,90 என மாறிக்கொண்டிருந்தது. மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கொரு தடவை லேன் இரண்டாகி ஒரு கிலோ மீற்றர் ஓடும். அதில் விலத்த விரும்புறவர் விலத்திக் கொள்ளலாம். இவர்களுக்கு அவசரமில்லையே. பின்னாலே போய்க் கொண்டிருந்தார்கள். இருபுறங்களிலும் மரங்கள் உடையதாக, சமயங்களில் விவசாயப்பண்ணைகள் தென்பட சுமார் நூறு கிலோ மீற்றர் ஓடிச் சென்று மாகாணக் கைவே 103 இலே ஏறி, கிழக்குப் பக்க இரண்டாவது வெளியேறலில் வெளியேறி சாதாரண வீதியில் தெற்கு நோக்கி இறங்கி விட்டார்கள். பிறகு, அவ்வளவு தூரமில்லை. கலிபஸ் பெரிய துறைமுகம். வாகனத்தை தரிப்பில் நிறுத்தி விட்டு ( பணம் செலுத்த வேண்டும் ) சனநெரிசலே காணப்படுகிறது. போர்ட்வோக்கில் , மரத்தாலான பாதையில் கீழே தண்ணீர் அடிக்கிறதைப் பார்த்து நடந்தார்கள்

இந்த கடலுக்கு அண்மையில் தான் ,” பிரிட்டனின் பெரிய சுற்றுலாக் கப்பலான “டைடானிக் கப்பல்…( நியூபவுண்ட்லாண்டிலிருந்து இருநூறு மைல் தூரத்தில்) தாண்டது.

சிறுவர்களுக்கான திடல். ஐஸ்கிரிம், சொக்கிலேற் கடைகள் .”பாடியோ” மரத்தளங்களுடன் உணவகங்கள். பிரெஞ்சுக்காரர்கள் போல வைன், பியருடன் உணவை ரசித்து உண்ணும் கூட்டம். நடை தளத்தில் பாலம் போன்ற ஓரிடத்தில் கீழாலே நீர் அடிக்க மறுபுறத்தில் கற்குவியல் வரம்பு ஒன்று காணப்படுகிறது. துறைமுகத்தில் இரண்டொரு சிலைகளுடன் குறிப்பும் கிடக்கிறது. உடைந்த சுவரின் நிமிர்ந்து நிற்கிற சிதைவு பிறிம்பாகத் தெரிய, பக்கத்தில் கடை ஒன்றும் இருக்கிறது. இந்த துறைமுகம் இரண்டாம் உலகப் போரிற்கு முதல் ஒரு பெரும் துன்பியல் நிகழ்வை சந்தித்திருக்கிறது.

கொரோனாவிற்கு முதல் உரத்தை ஏற்றி வந்த ஒரு கப்பல் லெபனான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அது வெடித்து ஏறத்தாழ அரைவாசி துறைமுகமே அழிந்த்துடன் 200ற்கு மேலானவர்கள் இறந்து போனதை தொலைகாட்சித் திரைகளில் பார்த்திருக்கிறோம். இங்கே நடந்தது அதை விட பல மடங்கு பெரிய வெடி விபத்து. அன்று உடைந்த கற்சிதறல்களைச் சேர்த்து தான் ஞாபகர்த்ததுக்கு வரம்பிலே… வைத்திருகிறார்கள். இடிந்த சுவரும் அன்று எஞ்சியது தான். ஜேர்மனியர்களின் கறுப்புத் திமிங்கலம் என்கிற நீர்மூழ்கிகள் , கப்பல்களை மோசமாக வேட்டையாடிக் கொண்டிருந்த காலம்.நாஜிகளுக்கு உலகமே நடுங்கிக் கொண்டிருந்தது.

பிரான்ஸ் கப்பல் ( மொன்ட்) ஒன்று டன் கணக்கில் வெடிமருந்துகளை கலிபஸ் துறைக்கு வருகிறது. கரையை ஒட்டி நிற்கிறது. அதேசமயம் நோர்வேயின் சிறிய கப்பல்( இமோ) நியூயோர்க்கிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்ற போய்க் கொண்டிருக்கிறது துறைக்குள் வருகிறது. கொஞ்சம் நெரிசல் இருந்திருக்க வேண்டும். சென்றது பிரான்ஸ் கப்பலுடன் சிறிது உராய்ந்து விட்டது.கப்பலின் மேல் தளத்தில் இருந்த பரல்களில் ஒன்று உருண்டு விழ்ந்து தீ பிடிக்க ஒரு வெடிச் சத்தம். துறைமுகத்திற்கு அண்மையிலிருந்த ரிச்மெண்ட் வீதியில் இருந்த குடும்பத்தில் பார்பரா என்ற சிறுமி துறைமுகத்தை ஜன்னலினூடாக கவனித்துக் கொண்டிருந்தவள் “ஏதோ வெடி விபத்து “என்று இறங்கி வீதிக்கு ஓடி இருக்கிறாள். பத்து நிமிடத்திற்குப் பிறகு பெரும் வெடியில் துறைமுகமே அதிர்ந்து தகர்ந்து போய் விட்டது. சிறுமி நிலத்தில் வீழ்ந்து விட்டதால் தப்பினாள். அக்குடும்பமே இறந்து போய் விட்டது. தூர இருந்து ஜன்னலினூடாகப் பார்த்த சிலர் கண் பார்வையை முழுமையாகவே இழந்து போனார்கள். உடனடியாக அமெரிக்கா , தீயணைப்பு படையினரை, மருத்துவர்களை, நிவாரணப் பொருட்களை அனுப்பி தோள் கொடுத்தது. அந்த நன்றிக்காக நோவாகோர்ஸியா இன்றும் நியூயோர்க் மாநகரசபைக்கு கிரிஸ்மஸ் அன்று நிறுத்துவதற்கு பெரிய கிரிஸ்மஸ் மரம் ஒன்றை அலங்காரத்துடன் அன்பளிப்பு செய்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்குமிடையில்…. இப்படி பல நட்புக்கைகள் கிடக்கின்றன. நோர்வேக் கப்பலின் கப்டன் ஜேர்மனியர். எனவே சதியாய் இருக்குமோ? என்ற சந்தேகத்தில் பொலிஸ், கலிபஸிலே இருந்த ஜேர்மனியரைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டது. எட்டு நாள் விசாரணையின் பிறகே…. உண்மையை அறிந்து மன்னிப்புகோரி விடுவித்தது.

கலிபஸ் துறைமுகத்திலிருக்கிற பிரமாண்டமான மெரிட் டைம் மியூசியத்தில் இதை எல்லாம் அறியலாம். இவர்களுக்கு இங்கேயும் கொஞ்சம் அதிருஸ்டமும் இருக்கிறது. கொரோனா உபயத்தால் நுழைவு இலவசம். வக்சின் எடுத்ததை மட்டுமே செக் பண்ணினார்கள். கடலிருந்து சேகரிக்கப்பட்ட டைடானிக் சேகரிப்புக்கு என்று ஒரு தனிப்பிரிவையே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். டைடானிக்கை பற்றி முழுமையாக அறிய சிறு மாதிரிகளை கூடுதலாக செய்தும் வைத்திருக்கிறார்கள்.

துறைமுகத்திற்கு அண்மையில் இருந்த ஒருகிராமத்தில் பழங்குடியினர் இருந்தனர். முந்தி , மாகாணவரசு, அவர்களுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி எழுப்ப முயற்சித்து வந்திருக்கிறது. அவர்கள் மசிந்து கொடுத்திருக்கவில்லை. துறைமுகத்திலிருந்து எழுந்த சுனாமி அலை அக்குடியிருப்பு முழுதையும் வாரிக் கொண்டு சென்று விட்டது. இன்று ஒருத்தரும் தப்பவில்லை என்ற பதிவு இருக்கின்றது. ஆனால், ஒரு சிலர் தப்பியே இருக்கிறார்கள். அச்செய்தியை மறைத்து விட்டார்கள். அக்கிராமம் மீள கட்டி கொடுக்கப்படவில்லை. துறைமுகம் அப்பகுதியை எடுத்துக் கொண்டிருக்க லாம்.

இன்று, கனடிய சிறைகளில் இருக்கிற கைதிகளில் முற்பது வீததிற்கு மேலானவர்கள் இப்பழங்குடியினர் என்று ஒர் கணிப்பு இருக்கிறது. அவர்களில் பலர் போதைப் பொருள் பாவிப்பு, குடியில் வீழ்ந்தவர்…என பலவீனமான நிலையில் சீரழிகிறார்கள். மத்தியரசில் ஒப்பந்தங்கள் மூலமாக சட்ட வரைபுகள் இருந்தாலும் மாகாண அரசுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுற போது சட்டவிரோதமாகப் பார்க்கப்படுகின்றன. இல்லாவிட்டால் எப்படி சிறைகளில் நிரம்பி வழிவார்கள். அகதி மக்களை விட கல்வி அறிவு..எல்லாவற்றிலும் தாழ் நிலையில் இருக்கிறவர்கள் ஒரு காலத்தில் சிறப்பான நாகரீகத்தைக் கொண்டிருந்த மக்கள் என்றால் நம்புவீர்களா?. இன்று வடக்கில் நிகழ்றதைப் பார்க்கிற போது…அரசின் பின்னணியிலே நடகின்றன என கூறி விடலாம். இவர்கள் உலகத்திற்கு வழங்கிய அறிவியல்கள் அனேகம். இன்று, எல்லாவற்றையுமே வர்த்தக நிறுவனங்கள் கைப்பற்றி விட்டன. இயற்கையை காப்பாற்ற முன்வைக்கிற விதிகள் அனைத்துமே இவர்கள் முன்பு கூறியவை தாம். மரங்களை நடுங்கள். பறவை. உயிரினங்களை பாதுகாக்குங்கள். சங்கரின் ,”எந்திரன் இரண்டை”இன்னொரு தடவையும் பார்க்க வேண்டும். இப்படி துணிச்சலாக படம் எடுத்திற்கு இயக்குநரைப் பாராட்டவே வேண்டும்.

அந்த விபத்தில் 3000 இற்கும் மேலானவர்கள் இறந்து போய் விட்டார்கள். 9/11 ஐ விட அதிகம்.9000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். துறைமுகத்தில் கரைத்தடுப்புகளாக இருந்த வளைக்க முடியாத இரும்புக் கிராதி, உருகி வழிந்து மொட்டையாகிய துண்டொன்றையும் வைத்திருக்கிறார்கள். அன்று, உடனே துப்பரவு படுத்த முடியாததால் தற்காலிகமாக நிலமட்டதோடு பென்னாம் பெரிய கோவில் மணிகளை அமைத்திருக்கிறார்கள். பல மைல் தூரத்தில் இருப்பவருக்கும் கேட்பதற்காக அமைத்திருக்க வேண்டும். அதை அப்படியே பாதுகாக்கிறார்கள்.”பார்பரா”என்ற அந்த சிறுமி 90 வயது வரையில் வாழ்ந்திருக்கிறார். இறக்கும் வரையில் ஒவ்வொரு வருசமும் தவறாது வந்திருக்கிறார். சில தகர்ந்த தேவாலயங்களை மீள அதே மாதிரியே கட்டி எழுப்பியும் இருக்கிறார்கள்.

இச் செய்திகளை அறிய இவர்களுக்கும் வருத்தமாக இருகிறது. இலங்கையிலும் நிகழந்த துன்பியல் நினைவுகளையும் நினைவு படுத்தி விடுகிறது. சூரிய அஸ்தமனம் பார்க்கும் பெகிமுனை சிறிது தூரத்தில் தான் இருக்கிறது.

பெகிமுனை, செல்கிறார்கள்.

ஐஸ்கிரீமையும் ஆளுக்கொன்று சாப்பிட்டு விட்டு வாகனத்தில் ஏறி , குறுக்கலான டவுண் வீதிகளில் ஓடியும், ஏறியும் பெகிமுனை என்கிற பாறைக் குவியலுக்கு வந்து சேர்ந்தார்கள். பென்னம் பெரிய குவியல் மலை. இப்படியான பகுதிகளில் தான் வெளிச்ச வீடுகளை வைப்பார்களோ? மலுங்கலான இந்த படுக்கைப் பாறைகள் எப்படி உருபெற்றிருக்கும்? தெரியவில்லை. அதற்கும் ஒரு புவியியல் வரலாறு இருக்கும். அங்கு சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறதுக்கு சனம் அள்ளுபடுகிறது. இதை ஒட்டி சிறிய துறையும் இருக்கிறது. அவற்றில் மீன் பிடிக்கிறவர்களுடைய படகுகள் காணப்படுகின்றன. அவ்விடத்தில் இருந்த இயற்கை உபாதை கழிக்கும் கழிநீர் கழிப்பிடத்திற்கு செல்கிறான். கீழே நீர் தெரிகிறது. அதற்கு முதல் நீல உப்பு சேர்க்கப்பட்டு வெளியேறுகிறது. இருந்தாலும் இப்படியேயா கடலில் கொட்டுவது ?.

சூராதி சூரர்களாக மலையுச்சிக்கு ஏறிய போது சனம் எந்த வித சிரமுமின்றி அவ்விடத்திற்கு வீதியிலிருந்து சரிவில் சுலபமாக வருகிற வழி இருக்கிறது தெரிகிறது. அந்தப் பாறையிலும் பங்களா கவுஸ் போல ஒர் உணவகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறது என்று பெரிய சமதள மரமேடை கிடக்கிறது.”இந்த வழி தெரியாமல் முந்தியும் சிரமப் பட்டு தான் வந்தோம்”என்கிறாள் பூமலர். சூரியன் விடை பெறுவதற்கு நிறைய நேரம் இருந்தது. அதுவரையில் சுற்றி வர, கலங்கரை விளக்கம் தெரிய பல கிளிகள். எல்லாருமே போஸ் கொடுத்துக் கொண்டு நிற்க, கத்தரி வெருளியாக அவன் நிற்கிறான். சூரியன், சிவப்புப் பந்தாக அழகாக கடலினுள் அமிழ்கிறான். பலர் மெல்ல, மெல்ல வீடியோ… எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஜெயந்தியின் ஒரு சின்ன ஆசை நிறைவேறுகிறது. மனிதருக்கு தான் எத்தனை சின்ன, சின்ன ஆசைகள். அவனைக் கேட்டால் நீர்ப்பரப்பில் படகில் நின்று ஈழப்பாட்டு பாட வேண்டும் என்பான். வீட்டிலே சொன்னால் அடிக்க வருவார்கள். ஆசையை அடக்கு, அடக்கு..!

இருண்டிட வீதியை முளித்து , முளித்துப் பார்த்து, பார்த்து வாகன வெளிச்சத்தில் ஓடி வீடு வந்தது ஒரு சாதனை தான். முளிகள் இரண்டும் வெளிய வந்து விட்டது.போங்கள்.

ஆடி அம்மாவாசை

பூமலருடன் படித்த சுந்தர் குடும்பம்,”ஆடி அம்மாவாசை தினத்தில், உங்கள் சகோததர் குடும்பத்தையும் கூட்டி வாருங்களன்”என அழைத்திருந்தது.அப்பாவை இழந்தவர் கடைப்பிடிக்கிற விரத நாள். சைவ சமயத்தோடு தொடர்பு பட்டது. அம்மாவை இழந்தவர் சித்திரா பெளர்ணமி அன்று விரதம் இருக்கிறார்கள். ஊரிலே, அம்மாட நாள் தெரியாது. அன்று உறவினர்களை ,நண்பர்களை அழைத்து விருந்தோம்பல் நடைபெறும். இங்கே உள்ளவர்கள் பொட்லக் பார்ட்டி போல ஒரு கறியோ, பலகாரமோ செய்து கொண்டு போய்…எல்லா நிகழ்வுகளையும் கடை பிடிக்க முயல்கிறார்கள். பூமலர், ரைஸ் புடிங்கை ஜெயந்தி சொல்ல, சொல்லத் தயாரித்தாள்.

அங்கு சென்றார்கள். ஒவ்வொருவரும் ஒன்றை செய்து கொண்டு வந்திருந்தார்கள். ஜீவி , இரண்டு கறிகளை சமைத்து வந்தார். மாங்காயைப் போட்டு…என்னவோ சுப்பரானது. சுந்தர் , தன் கையாலே சமைக்க… பிடிவாதம் பிடித்து ஒரு நள மகராசனாகவே சமைத்திருக்கிறார். தில்லை சமைத்தால் அவன் மட்டுமே சாப்பிட முடியும். சமையல் என்பது ஒரு கலை. அது பள்ளிப் பாடமாக இருபாலருக்கும் சொல்லிக் கொடுக்கப் பட வேண்டிய ஒன்று. நாம் வீட்டிலேயும் கூட உரிமைகளை இழந்திருக்கிறோம். இதனால் தான் ராஜாஜி குலக்கல்வி முறையைப் பற்றியும் சிந்தித்திருக்கிறார் போல இருக்கிறது. படைத்து விட்டு வாழை இலையில், அப்பளப் பொறியலுடன் மரக்கறிச் சாப்பாடு அந்த மாதிரி இருந்தது. சிறிது நேரம் இளைப்பாறி விட்டு காலாற கடற்கரைப் பகுதியில் நடந்தார்கள்.

வழியில் பழைய பெண்டிகோஸ் தேவாலயம் தென்பட ஜீவி “கிருஸ்தவத்தில் ஆறு பிரிவுகள் இருக்கிறது”என்று ஜெயந்திக்கு கூறினாள்.”பிரதானமாக இருப்பவை இரண்டு. மற்றவை உப பிரிவுகளாக இருக்கலாம்”என்று தில்லை கூற,”இல்லை , எல்லாமே தனிப் பிரிவுகள். எனக்கே பலதைத் தெரியாது..”என்று கூறி சிரித்தாள்.”ஜீவி, தெரியாட்டியும்…தேடி, தேடி அறிந்து கொள்கிற புத்திசாலி”என்று பூமலர் தெரிவித்திருந்தது நினைவில் வந்தது. இவன் அறிந்ததை வைத்து அசை போடுறவன், சிந்திப்பவன். போற போக்கில் கிரகரிக்கிற ரகம். முகத்தில் மீசையுடைய சிறிய மிருகம் ஒன்று நீர்மட்டத்திற்கு மேலே எட்டிப் பார்த்து நீந்திக் கொண்டிருந்தது. இலங்கையில் காணாதவைகளை எல்லாம் இங்கே காணலாம். “நீர்ச் சிங்கம்”என்றார் சுந்தர். வோல்ரஸ், டொல்பின், திமிங்கலம்…என சுவாசப்பையுடைய கடல் உருப்படிககள் எல்லாம் இருக்கின்றன. சுறா, பயங்கரவாதியாய் பார்க்கப் படுகிறது. இதற்குப் போய் இந்த பெயரை வைக்கிறார்கள்.

‘முதலை’ டைனோசாருக்கு முற்பட்டது என்றால் நம்புவீர்களா?. கடலில் என்னென்னவோ எல்லாம் இருக்கின்றன. இயற்கை ஓர் பேரதிசயம். கரையிலிருந்து நீரிற்குள் நீட்டப்பட்டு கட்டப்பட்ட பழுதடைந்த சில கொட்டேஜ் வீடுகள் இருந்தன.”நீரும் நிலப்பரப்பாக கருதப்பட்டு மலிந்த விலைக்கு விற்கப்படுகின்றன”என்றார் சுந்தர்.”இங்கே , அமெரிக்கர் பலர் எயர் பி. என் பி.. என்கிற புதிய வாடகை முறையில் கொட்டேஜ்களில், வீடுகளில் இருந்து விட்டு அவற்றை வாங்கியும் விட்டிருக்கிறார்கள்”என்கிறார். நியூயோர்க்கிற்கும் நோவாகோர்ஸியாவிற்கும் கடல் வழியில் சொந்த படகுகளில் பயணிக்கிறார்கள். அத்திலாந்திக்கடல், புயல் பயம்…பற்றி அக்கறைப்படுறதில்லை. ஒருவேளை எல்லைச் சோதனைகள் இல்லையோ?.

மீள திரும்பி அவர்களுடைய கொட்டேஜ் வீட்டிற்கு வந்திருந்தார்கள். இவர்களுக்கருகில் பெரிய வெயர்கவுஸ் போன்ற வாடிக் கொட்டில் ஒன்று கை விடப்பட்டிருக்கிறது. அந்த வீதியிலும் சிறிது நடந்தார்கள். வீட்டை வாங்கிய போது முள்செடிகள் என இவர் வளவை வெட்டி தள்ளி சுத்தப்படுத்தியிருக்கிறார். அயலில் இருந்தவர்,”வெட்டாதே இது காட்டு ரோசா செடி “என தடுத்ததில் இன்று பூத்து அழகாக இருக்கிறது. ஒரு அப்பிள் மரமும் காய்த்திருந்தது. பச்சைக்காய்களை பிடுங்கி கொறித்தார்கள். ஒரு பழைய கொட்டிலும் இருந்தது.”அதை ( அவருடைய )நண்பர் ஒரே நாளில் திருத்திக் கொடுத்தார்”என்கிறார்.

“நேற்று நீங்கள் சென்ற பெகிமுனை, அதோ…வெளிச்சவீடு தெரிகிறதே, அது தான்!”என்று சுட்டிக் காட்டினார். நீலக்கலரில் குட்டித் தோற்றத்தில் தெரிகிறது. தேனீரையும் குடித்து விட்டு அவருடைய அப்பாவின் ஆசியையும் பெற்றுக் கொண்டு திரும்பினார்கள்.

மகோன் ‘பே’ போகிறார்கள்.

மகோன்பே’ க்குப் போய் லுனன்பேர்க்கிற்கு போகப் போகிறார்கள்.”இரண்டுமே யுனெஸ்கோவினால் குறிப்பிடப்படும் பழைய துறைமுகங்கள் “என்கிறாள் பூமலர். பரவாயில்லை. நம்ம குட்டித் தங்கச்சி பெரிய சுற்றுலா வழிகாட்டியாய் மாறி விட்டிருக்கிறாள். ‘ லுனன் ‘ என்ற ஜேர்மன் சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லை.”பேர்க்’ என்றால் மலை என்று அர்த்தம். ஜேர்மனியில் இருந்த உறவினர் பலபேர்கள் இங்கே இருக்கிறார்கள். அத்தியம்பேர் ( அக்காவின் கணவர் ) தான் கூறினார். கலிபஸிற்கு சென்ற அதே லோக்கல் கைவேயில் ( 14ம் இலக்கம்) சென்று , 103 மாகாண கைவேயில் ஏறி இம்முறை மேற்கு திசையை எடுத்து 5 , 6 வது இல் வெளியேறி அதே போல தெற்கு லோக்கல் வீதியை எடுக்க, வளைந்து, வளைந்து ஓடுகிறது. மலைப்பாங்கான நில அமைப்பு. சிறுபிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிறது போல, ‘ மலைகள் எல்லாம் தீவுகளில் நடுப்பகுதியில் இருப்பதில்லை ‘. யாழ்ப்பாணத்தில் கூட கீரிமலை, திருவடி முழுதும் காலை கிழிக்கும் கூர் கல்லாக கடற்கரையில் கிடக்கிறது. இந்தியாவின் நிலம் கடல்கோளலால் துண்டுபட ஏற்பட்டது. அங்கே எரிமலை கிடையாது. இது எரிமலை வெடித்து ஏற்படுத்திய தீவு. ஆனால் எரிமலை ஒன்றும் கிட்டடியில் எங்குமே இல்லை. மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்….இருந்தது எல்லாமே வெடித்து சம பூமியாகி போய் விட்டிருக்கிறது போல இருக்கிறது. ஆனால், தென் அமெரிக்காவில் எரிமலைகள் கிடக்கின்றன. இருக்கிறதா?.

மகோன் பே,சிறிய நகரம். இங்கே வாகன தரிப்பிற்கு பணம் அறவிடுகிறார்கள். கோவிட் ஏற்பட்டு மீள்கிற தளர்வால் அற விடப்படவில்லை. நிறுத்தி விட்டு அவ்விடத்து இருக்கை ஒன்றில் இருந்து தேனீருடன் எள்ளுருண்டையை சாப்பிட்டார்கள். ‘ மகோன் பே இலே தில்லையிற்கு , வாகனங்கள் முன்பக்க இலக்கத் தகடு இல்லாது ஓடித்திரியிறது கண்ணில் படுகிறது. பின் இலக்கக்தகட்டில் ‘நோவா’ குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பூமலரின் வாகனத்திற்கும் கூட கிடையாது. எங்கே கவனித்தான்?. இங்குள்ள வீடுகள் பிரத்தியேகமான உள்ளே பழமைச் சாயல் கொண்ட பொருட்களின் பாவனைக் கொண்டவை. வந்த முதல் நாளே அதை கவனித்திருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவு மிக குறைந்த மாகாணம். சிக்கனமாக அரசியலையும் வைத்திருக்கிறார்கள். இலங்கையை நினைத்துப் பார்த்தான். அங்கே மத்திய அரசு இருக்கிறது. மாகாண அரசு இருக்கிறது. அதை விட அரச நிர்வாக அமைப்பு ஜி.எ / எ.ஜி.எ / ஜி.எஸ்…என பெரிய கட்டமைப்பே கிடக்கிறது. அதுக்கு சிக்கனம் என்பது என்ன என்றே தெரியாது. புதிதாக தெரிவாகிற சிங்கள அரசியல்வாதிகள் , ஈழத்தமிழர் மாகாண அரசின் உரிமைகளை பற்றி பேசினால்”பிரிவினை பேசுகிறார்கள்”என்கிறார்கள். நகரக்காவலர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பிடித்து சிறையிலே வேறு அடைக்கிற அநாகரீகம் தொடர்கிறது. அதனால் தான் பிச்சைக்கார நாடாகக் கிடக்கிறது புரிய மனசு வலிக்கிறது.

மற்றைய மாகாண , அமெரிக்க வாகனங்களுக்கு இருபுறமும் இலக்கத் தகடுகள் கிடக்கின்றன.”அழகி”பட்டத்தை நோவாவேயே தட்டிக் கொள்கிறது. இது பரவாய்யில்லையே! இல்லாத போது தான் வாகனங்களின் வடிவும் தூக்கலாகத் தெரிகிறது. சொல்ல , ஜெயந்தி,”உனக்கு ரொரொன்ரோவை விட மற்றறைய இடத்திலிருக்கிற எல்லாமே அழகு தான்”என்று கேலி பண்ணுகிறாள். அவளுக்கு இடங்களைப் பார்ப்பதில் விருப்பம். கரை நகரத்தை வேடிக்கை பார்க்க வீதியில் இறங்கி நடந்தார்கள். பழைய வீடுகள். சில உப்பரிகைகளுடன் கூடியவை. அந்தக் கால மர வேலைப்பாட்டை இன்று யார் செய்வார்கள். தூக்கலாகவேத் தெரிகின்றன. தூரத்தில் நிறுத்தி வைத்திருக்கிற படகுகளை பூமலர் காட்டி”இப்படித் தள்ளி தான் நிறுத்தி விடுகிறார்கள். கரைக்கு வர சிறிய மிதவைகளைப் பயன்படுத்துகிறார்கள்”என்றாள். வீடு போன்ற கொட்டில் ஒன்றும் மிதந்து கொண்டிருந்தது. அதன் குட்டி வாராண்டாவில் இருந்து மனிதர் ஹாய்யாக சுருட்டு புகைக்க விரும்புகிறார் போல இருக்கிறது. கரையில் ஏற்றப்பட்ட படகு ஒன்றையும் பார்த்தான்.

சுக்கானில் வெட்டப்பட்ட மரச்சட்டம் போன்ற சிறிய பகுதி தான் ஓட்டத்தை தீர்மானிக்கிறதா? போலவே இருக்கிறது. விமானங்களிலும் விரிந்த செட்டையில் இப்படி….சிறிய பகுதிகள் இருப்பதைப் பார்த்திருக்கிறான். பறக்க அவை உதவுகின்றன போலும். கப்பல், விமானம் பற்றிய அறிவு எம்மவர்களுக்கு எவ்வளவு தூரம் இருக்கும்? அறிவைக் கூட்ட சாதியும் தடையாய் இருக்கிறது

கரையிலிருந்து கடலுக்கு செல்லும் ஒரு அகண்ட மரப்பாதைத் தளம். பிறகு இதனுடனே யே தொடர்பு பட்ட பல மைய மிதவைகள் , இருபுறங்களும் நீட்டல்கள், அவற்றில் மிதவைகளை கொண்டு வந்து கட்டி விட்டு, பிடிக்கிறவையையும் இப்படி தான் கொண்டு கரைக்கு வருகிறார்களோ? கடலைப்பார்த்து நீரின் மேல் பாடியோ தளங்களைக் கொண்டிருக்கும் உணவகங்கள். அதில் ஒன்றில் நுழைந்து கடலுணவு போட்ட ( சவுடார்) சூப்புகளை எடுத்தார்கள். கடலுணவு எப்பவும் சுவையானது தான். சாப்பிட்ட பிறகு வீதியில் இறங்கி மேலும் நடந்தார்கள் இரண்டொரு தேவாலயங்கள் பக்கத்திலும் நின்று “கிளிக்”கள். சந்தியிலும் பூங்கா போன்ற அமைப்பு இருந்தது. காட்டு ரோசாகள் பூத்துக் கிடந்தன. அதிலிருந்தும் காட்சிகளோடு படம் பிடித்துக் கொண்டார்கள். கார் நிறுத்ததிற்கு வந்து ஏறி லுனன்பேர்க் நோக்கி விரைகிறார்கள்.

லுனன்பேர்க்

“இதோ கிட்ட…வருகிறது”என்றாள் பூமலர். ஆனால் வீதி நீள, நீள ஓடிக் கொண்டிருந்தது. ஒரு மாதிரியாக துறைமுகத்தை அடைந்தார்கள். வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு ( இங்கும் கட்டணம் இல்லை ) வீதியிலிருந்த உணவகத்தில் ஏறி தேனீருடன் கேக்கையும் சாப்பிடுகிறார்கள். வேடிக்கை பார்த்து நடக்க பெரிய தேவாலயத்தின் உச்சி ஒன்று தெரிகிறது உயரமான பகுதியில் இருக்கிறது.”ஐயோ நான் வரவில்லை”என்றஜெயந்தி மெல்ல , மெல்ல நடந்து வருகிறாள். ஏற்ற, இறக்கம் அவளுக்கு காலை நோக வைக்கும். அந்த ஏற்றம் தில்லையையே மூச்சிறைக்க வைத்தது. ஏன், சாமிகளை மலையிலே கொண்டு போய் வைக்கிறார்கள். மலையிலே கட்டுவதே சிரமம். தாமும் கஸ்டப்பட்டு மற்றவர்களையும் சிரமப்பட வைக்கிறார்கள். ஒருவேளை மேலே இருந்து கீழே பார்க்கிற அழகிலே கிறங்கிப் போய் விட்டார்களோ?. அவனுக்கு எந்த உயரமும் ஒ.கே. தான். பூமலரும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

தேவாலயத்தைக் கண்டு விட்டு இறங்கி வார போதே படிக்கட்டுகளுடன் இலகு வழியும் வைத்திருக்கிறது தெரிய வர பத்திக் கொண்டு வருகிறது, அந்த நகரத்தின் வரைபடத்தை முதலில் பெற்றிருக்க வேண்டும்.எங்கே கிடைக்கும்?. தெரியவில்லை. வழி தானே தெரிந்து விட்டது. அதில் இருந்த இருக்கை ஒன்றில் இருந்து வேடிக்கை பார்த்தார்கள். ஒரு பெரிய குடும்பம் சிறுவர், சிறுமிகளின் தமிழ்க்கலவைக்குரல்களுடன் இறங்கி வந்து கொண்டிருந்தது. காதிலே தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது.

பாய்க்கப்பல்கள் அகலமான ஆழமற்றக் கிடங்கைக் கொண்டது. கல்லுக்குள் துறுத்திக் கொண்டிருக்கும் பாறை கூர், ஓரங்களை, பனிப்பாறைகளை கருத்தில் கொண்டு, அன்றைய மனிதனின் மேலான கண்டுபிடிப்பாக இருக்கவேண்டும். பாய் காற்றில் வேகமாக ஓட்டியது…ஆழக்கடலுக்குள்ளும் இழுத்துச் சென்றது, புயல்கள், மேலும் தள்ளிச் சென்று பல தீவுகளை, கடல் நிலங்களை கண்டறிய வைத்திருக்கிறது. பிறகு , போர்க்கப்பலாக வடிவம் எடுத்ததிருக்கிறது. லுனன்பேர்க்கில் , ஜேர்மன் சகோதரர்கள் கப்பல்கட்டும் தொழிற்சாலை ஒன்றை ஏற்படுத்தி பல பாய்க்கப்பல்களை கட்டியிருக்கிறார்கள். பல பாய்க்கப்பல்கள் வெளியேறி இருக்கின்றன.

ஜேர்மனியரே கப்பல்களை கட்டுவதில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் போலவும் படுகிறது. ஆங்கிலேயர் சோழச் சுவடிகளை எரிக்கிற போது, ஜேர்மனியர் பொறுக்கி எடுத்து சோழ தொழிற்நுட்பங்களை அறிந்து பயன்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள் போலவும் படுகிறது. நிலவளவையிலும்…இவர்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். அது சோழர்களுடைய முறையாக கூட இருக்கலாம் என படுகிறது. ஆங்கிலேயர் , ஒருமுறை லுனன்பேர்க்கில் சிறைக்கைதியாக வைத்திருந்த ஒர் ஜேர்மனியரை கப்பல் கட்டுவதில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். முடிப்புக்கு முன்னால் அவரது தண்டனைக் காலம் முடிந்து விட்டது. நீதிமன்றம் அவரை ஜேர்மனிக்கே செல்லும்படி உத்தரவிட்டு விட்டது. அவருக்கு குறையில்…விட்டுச் செல்ல விருப்பமில்லை.”கப்பலைக் கட்டி விட்டே போகிறேன்”என்று கேட்டிருக்கிறார். அனுமதி வழங்கப்படவில்லை. அவருக்கு கோபம் ஏற்பட்டு விடுகிறது. அன்று, நோவாகோர்ஸியாவில் சிறைக்கூடம் என்று பெரிய மதில் சுவர்களுடன் இருக்கவில்லை. மரியாதைக்குரியவர்கள் , திறமைசாலிகளுக்கு அறைகள் கொட்டேல் அறையில் இருப்பது போல வசதி செய்து வேறு கொடுக்கப்பட்டிருக்கிறது. துறைமுகப்பகுதியிலும் , நகரத்திலும் திரியவும் அனுமதிக்கப்படுவது வழக்கம். “நீ கட்டுற கப்பலை ஆசை தீர பார்த்து விட்டுப் போ”என்று விட்டு விட்டார்கள். ஆங்கில நண்பருடன் லுனன்பேர்க் நகரத்தில் நடந்து கொண்டிருந்தார். எப்படி குறை வேலையை முடிக்க வேண்டும் என்று பல தடவைகள் அவருக்கு படம் போட்டு எல்லாம் விளங்கப்படுத்தி விட்டிருந்தார். கவனரின் வீட்டிற்கு எதிரில் வந்தார்கள். அப்ப தான் அவருள் இருந்த நாகேஸ் வெளியே வந்து குதித்தான். நண்பரைப் பார்த்து…. முகத்தில் ஒரு சிரிப்பு. வீதியில் இருந்த கல் ஒன்றை எடுத்தார். கவனர் வீட்டு ஜன்னலை நோக்கி எறிந்து விட்டார். கண்ணாடி உடைந்தது. நகரக்காவலர் வந்து பிடிக்க”நான் தான் எறிந்தேன்”எனக் கூற குற்றம் பதியப் பட்டது. கொல்லும் நோக்கத்துடன் இல்லை என்பதால் அவருக்கு நீதிமன்றம் சிலநாள்கள் சிறைவாசத்தை நீடித்தது., கப்பலைக் கட்டி முடித்த போது மேயர் வந்து கை குலுக்கி அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். கடலில் இறக்கி ஓடுவதையும் பார்த்து விட்டே சிதம்பரம் சென்றார். எப்படி இருக்கிறது இந்தக் கதை?. இப்படி… ஏதாவது நடந்தால் தான் நம் ஈழப்பிரச்சனையும் தீரும் போல இருக்கிறது.

அன்று ‘ மகோன் பே ‘ இலே கப்பல் ஓட்டப்பந்தயம் விமர்சிகையாக நடைபெற்று வந்தது. போட்டிக்கு வந்த கப்பல்கள் கலிபஸிலும், லுனன்பேர்க்கேயிலும் தரித்து நின்றன. நீலமூக்கு என புகழப்படும் பாய்மரக்கப்பல் லுனன்பேர்க்கிலே கட்டப்பட்டது. அக்கப்பலே பந்தயத்தில் சம்பியன் அடித்து கொண்டிருந்தது. கண்னூறு பட்டது போல பந்தயமற்றக் காலத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த போது புயலில் சிக்குண்டு கடலில் தாழ்ண்டு போய் விட்டது. அவர்களுடைய இராசாத்தியை இழந்ததில் பெரும் சோகத்தில் இருந்தார்கள். அதே மாதிரி இன்னொரு கப்பலையும் ( சிறிது மேம்படுத்திக் ) கட்டி நீலமூக்கு இரண்டு என பெயரிட்டு ஓட விடப்பட்டது. அதுவும் முதல் தடவை வென்றது. அவசரமாக கட்டியதாலோ என்னவோ…அடுத்த பந்தயத்தில் அமெரிக்க பாய்கப்பல் வென்று விட்டது. பெருமையை அது தங்க வைக்கவில்லை. கப்பலுக்கும் கூட ராசி இருக்கலாம். வெற்றி, தோல்விகள் மாறி, மாறி வரத் தொடங்கி விட்டன. கனடிய பத்து சததிற்கு பின்னால் முதல் நீலமூக்கு, பாய்கள் பட படக்க பயணிக்கிறதை நீங்கள் பார்க்கலாம்.

கப்பல்கள் கட்டிற போது பீரங்கி பொறுத்துற ஏற்பாட்டை சேர்த்து கட்டுவதை ஒரு விதியாகவும் கடை பிடிக்கப்பட்டிருக்கிறது போல இருக்கிறது. பில்டிங் கோட் போல, கப்பல் கோட். அதனால், போர்க்காலத்தில் இலகுவாக அனைத்துமே போர்க்கப்பலாக மாற்றப்பட்டன. இல்லாத போது பீரங்கிகளைக் கழற்றி விட்டு வெறும் வர்த்தகக் கப்பல்களாக ஓடின. இந்த புத்திசாலித்தனம் பல வெற்றிகளை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதனாலேயும் நோவாகோர்ஸியாவை வெற்றி கொண்டிருக்கிறார்கள். உலோக நீராவிக்கப்பல் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு பாய்கள் மகிமையை இழந்து விட்டன. ஆனாலும், இன்றும் பாய்களை வைத்து கப்பல்களை செலுத்துவது அமெரிக்க, கனடிய ஏரிகளில் நடைமுறையில் உள்ளன. எரிபொருள் உயர்ந்து தொடர்ந்து பயமுறுத்துற போது பாய்கள் தோள் கொடுக்கின்றன. பழமையின் தேவை என்றும் இருந்து கொண்டே இருக்கிறது. முட்டாள்களால் உலகம் அழிந்து கொண்டிருந்தாலும் தமிழர், சோழசுவடிகளை தட்டிப் பார்த்து கப்பல்களை எல்லாம் கடலில் இறக்கி தாராளமாக விடலாம். தமிழகம் கடல்புறாவையும் கட்டி கடலில் விட வேண்டும். ஈழத்தமிழரும் சாதியைத் தூக்கி கடலில் போட்டு விட்டு கடலில் கண்டதையும் இறக்க வேண்டும்…..நம் படகுகளில், கப்பல்களில், வள்ளங்களில் நெஞ்சங்களை நிமிர்த்திக் கொண்டு நின்று ஈழப்பாடல்கள் பாடி வரல் வேண்டும்.

கலிபஸ் துறைமுகத்தில் பழைய மீன் தொழிற்சாலை ஒன்றை மாற்றி கப்பல்களின் ஃபிசரி மியூசியமாக்கி இருக்கிறார்கள். திறந்திருந்தது. வழக்கமாக கட்டணம் இருக்கிறது. அன்று அனுமதி இலவசம்.உள்ளே சென்று பார்த்தார்கள். அங்கே நீலமூக்கைப் பற்றி விபரமாக அறியலாம். பழங்குடியினர் மீன் பிடிப்பதிலிருந்து இன்று வரையிலான மீன் பிடிக்கும் முறைகளையும்…அறியலாம். ஒருநாள் முழுதும் நின்று பார்க்க…வேண்டிய சமாச்சாரம்.

“நீல மூக்கு பாய்க்கப்பல்”, பார்வையிடுவதற்காக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மூன்று மணி வரையில் தான் பார்க்கும் நேரம் இருந்தது. திமிங்கலம் பார்வையிடும் டூரும் மூன்று மணியோட முடிகிறது. இவர்கள் தேவனைப் பார்த்து விட்டு படிகளில் இறங்கி வந்த போது, நீல மூக்கை பார்ப்பதா மியூசியத்தைப் பார்ப்பதா? என்று யோசித்துப் பார்த்திருந்தார்கள்.

கடைசி நாள்

“போட்ட உடுப்புகளை தோய்க்கலாமே”என்று பூமலர் சொல்ல, “அங்கே போய் தோய்ப்போம்”என்று விட்டு ஜெயந்தி எல்லாவற்றையும் சூட்கேசினுள் அடைகிறாள். பிறகு நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். நாளை, ரொரொன்ரோவிலே நிற்கப் போறார்கள். பிறகு பழைய பல்லவி தான். இன்னம் கொஞ்ச நாள் நின்று விட்டுப் போகலாம் என்றிருக்கிறது.ரொரொன்ரோவில் இறங்கின போது பூமலரிடமிருந்து குறும் செய்தி ஒன்று வருகிறது “திரும்பவும் தீவுக்கு வருக”. இனியொரு சந்தர்ப்பம் வருமா?, பெருமூச்சு வருகிறது.

(ஜெயமோகன் எழுதிய புல்வெளிதேசத்தை வாசித்த பிறகு, அப்படி ஒரு பயணத் தொடரை எழுதிப் பார்க்க வேண்டும் என்று எண்ணம் எழுந்தது. அண்ணர் “யோசிக்காமல் எழுது”என்றார்… எழுதுறது ஒரு போராட்டமாகவே இருந்தது. மரதன் ஓட்டம் போல ஓடி ஒரு மாதிரி கோட்டைக் கடந்து விட்டேன். – கடல்புத்திரன்).

(முற்றும்)

– அக்டோபர் 2022 – ஜனவரி 2023, பதிவுகள்.காம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *